இப்படியும் நடக்குமா? என்று அதிர்ந்துபோயிருக்கிறார்கள் ஏரியாவாசிகள்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் இருக் கிறது கரையப்பட்டி கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த குட்டியப்பன் -வீராயி தம்பதியின் மகன் மோகன் பல வருடங்களாக வெளிநாட்டில் வேலை செய்து சம்பாதித்தார். அவருக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு நம்பூரணிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் திருமணம் நடந்தது. எனினும் சில மாதங்களி லேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டு கர்ப்பிணியாக இருந்த பெண் அவரது தாயார் வீட்டிற்குச் சென்றுவிட்டார்.
இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்துவருகிறது. இந்த முதல் திருமண வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், ஒரு வருடத்திற்கு முன்பு உறவினர்கள் சம்மதத்துடன் வைரிவயல் கிராமத்தைச் சேர்ந்த செண்பகவள்ளியை, தாலி கட்டாமல் தன் வீட்டிற்கு அழைத்து வந்து மோகன் அவருடன் குடும்பம் நடத்திவந்தார்.
இவர்களுக்கு கடந்த 35 நாட்களுக்கு முன்பு அழகான ஆண்குழந்தை பிறந்தது. கடந்த 12 ஆம் தேதி மதியம் குட்டியப்பன் -வீராயி இருவரும் அவர்களின் மகளுக்கு பொங்கல் சீர் கொடுக்கச் சென்றிருந்த நேரத்தில், மோகனும் செண்பகவள்ளியும் மட்டுமே வீட்டில் தங்கள் குழந்தையுடன் இருந்துள்ளனர்.
இந்த நேரத்தில், திடீரெனக் குழந்தையைக் காணவில்லை என்று, அக்கம்பக்கத்தினரிடம் பதறியிருக்கிறார்கள்.
இருவரும் குழந்தையைத் தேடிக் கொண்டிருந்த நேரத்தில் அந்தக் குழந்தை உடுத்தியிருந்த துணிகள் வீட்டு ஓரம் கிடந் துள்ளது. இதைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தினரும் சேர்ந்து பரபரப்பாகத் தேடினார்கள். சிறிது நேரத்தில் மொட்டை மாடியில், மூடியிருந்த தண்ணீர்த் தொட்டியில் தேடியபோது, அங்கே அந்தக் குழந்தை கிடந்துள்ளது.
பதறிப்போனவர்கள், பேச்சு மூச்சின்றிக் கிடந்த குழந்தையை அருகில் உள்ள ஒரு மருத்துவரிடம் காட்ட, குழந்தை உயிரிழந்து விட்டதாக அவர் கூறியிருக்கிறார்.
மலர்க்கொத்து போன்ற பச்சிளம் குழந்தை, தண்ணீர் தொட்டியில் சடலமாக மீட்கப்பட்ட தகவல் காட்டுத்தீயாக பரவிய நிலையில் ஊரே கூடிவிட்டது. கே.புதுப்பட்டி போலீசாரும் வந்து குழந்தையின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக புதுக் கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணையை மேற் கொண்டனர்.
குழந்தை எப்படி இறந்தது? அதை மாடிக்குத் தூக்கிப்போனது யார்? வீட்டிற்குள் மோகனும் செண்பகமும் இருந்த நிலையில், யார் உள்ளே நுழைந்து குழந்தையைத் தூக்கி இருப்பார்கள்? மொட்டை மாடியில் உள்ள தண்ணீர்த் தொட்டிக்குள் அந்த பச்சிளம் சிசுவை வீசிய கொடூர கொலையாளி யார்? என்றெல்லாம் போலீசார் தீவிரமாக விசாரிக்கத் தொடங்கினர். அப்போதுதான் உண்மை வெளியே வந்தது.
குழந்தையின் தாய் தந்தையரான மோகன் - செண்பகவள்ளி ஆகியோரிடம் தீவிர விசாரணை நடத்தியபோது...அவர்கள் சொன்ன தைக் கேட்டு விசாரித்த காவலர்களே அதிர்ச்சியடைந்துள்ளனர்.
என்ன நடந்தது என்று நம்மிடம் விவரித்த விசாரணை டீமில் இருந்த அந்த காவலர் ”"மோகனின் முதல் மனைவி தொடர்பான விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடந்துவரும் நிலையில், மோகனுக்கும் செண்பகத்துக்கும் குழந்தை பிறந்தது தெரிந்தால், அவனுக்கு நீதிமன்றம் தண்டனை கொடுக்கும் என்று யாரோ சொன்னார்களாம். இதை நம்பிய மோகன், அந்தக் கைக்குழந்தையைக் கொல்லத் துணிந்திருக்கிறான். கைது விவகாரம் என்று மோகன் சொன்னதால் அவன் மனைவி செண்பகமும், குழந்தையைக் கொல்ல சம்மதித்தாளாம். செண்பகம் எங்களிடம், அந்தக் குழந்தை 8 மாதத்திலே பிறந்துவிட்டது. குறைப்பிரசவக் குழந்தை என்பதால், அதன் வளர்ச்சி சரியாக இருக்காது என்றும் பலரும் சொன்னார்கள், இந்த நேரத்தில் என் கணவர் வழக்கு பற்றிச் சொன்னதால் அதைக் கொல்லச் சம்மதித்தேன். என் மாமனார் மாமியார் இருவரும் அவர்களின் மகள் வீட்டுக்குப் போன நேரத்தில், என் கணவர் மோகன் குழந்தையின் கழுத்தை நெரித்துக் கொன்றார். அவரே தண்ணீர்த் தொட்டியில் குழந்தையை வீசிவிட்டு வந்தார். வந்த பிறகு இருவரும் குழந்தையைக் காணோம் என்று பொய்யாகப் பதறி நடித்தோம் என்று சொன்னாள். பெற்றவர்களே கல்நெஞ்சக் காரர்களாக மாறி, இந்த சிசுவைக் கொன்றிருப் பது தெரிந்ததால், அவர்களை உடனடியாகக் கைது செய்து, சிறையில் அடைத்தோம்''’என்றார் ஆதங்கமாய்.
உலகம் அறியாத அப்பாவி சிசுவுக்கு பெற்றோர்களாலேயே நேர்ந்த கொடூரம், பலரையும் கலங்க வைத்திருக்கிறது.