மீடியாக்களில் வேலை செய்யும் பெண்களைப் பற்றி முகநூலில் மோசமாக பதிவிட்டார் என்பதுதான் எஸ்.வீ.சேகர் மீது போலீசில் அளிக்கப்பட்ட புகார். "அந்த புகாரில் என்னை கைது செய்யக்கூடாது' என சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகினார் எஸ்.வீ.சேகர். சென்னை உயர்நீதிமன்றம் அவரது முன்ஜாமீன் மனுவை டிஸ்மிஸ் செய்தது.
டிஸ்மிஸ் ஆன இரண்டாவது நாளே ஒரு பத்திரிகையாளரின் பிறந்தநாள் விழாவுக்கு வந்து அவருக்கு சால்வை போட்டுவிட்டு பறந்தார் எஸ்.வீ.சேகர். இது எப்படி நடந்தது என அந்த விழாவில் கலந்து கொண்டவர்களை கேட்டோம். ""விண் டி.வி.யின் உரிமையாளர் தேவநாதன். இவர் பா.ஜ.க. தலைவர்களுக்கு மிக நெருக்கமானவர். இவரது பிறந்தநாள் விழா சென்னை தி.நகர் பாண்டிபஜாரில் உள்ள அவரது வீட்டில் நடந்தது. காலை 11 மணி இருக்கும் அவரது வீட்டிற்கு எஸ்.வீ.சேகர் வந்தார். உயர்நீதிமன்றத்தால் கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ள எஸ்.வீ.சேகருக்கு முக்கியமான பா.ஜ.க. பிரமுகர்கள் அனைவருக்கும் வழங்கப்படும் துப்பாக்கியுடன் கூடிய காவலர்கள் பாதுகாப்பு உண்டு. அந்த பாதுகாவலர்களுடன்தான் டி.வி. ஷோக்களுக்கே சேகர் வருவார். காலை 11 மணிக்கு தேவநாதன் வீட்டிற்கு வரும்போதும் காவலர்கள் பாதுகாப்பிற்கு இருந்தார்கள். அவர்கள் கையில் துப்பாக்கி இல்லை, ஆனால் போலீஸ் புடைசூழ வந்தார். அவர் வந்தபோது தேவநாதன் தரைத்தளத்தில் இருந்தார். அங்கேயே சால்வை போட்டுவிட்டு சிரித்தபடி சென்றுவிட்டார்'' என்றார்கள். இதுபற்றி தேவநாதன் யாதவிடமே கேட்டோம். ""ஆமாம் சகோதரா, எஸ்.வீ.சேகர் வந்தார். என்னை வாழ்த்தினார். அவ்வளவுதான்'' என முடித்துக் கொண்டார்.
எஸ்.வீ.சேகர் முகநூலில் பெண் பத்திரிகையாளர்களை பற்றி தவறான கருத்துகளை பதிவு செய்தார் என மாற்றத்துக்கான ஊடகவியலாளர்கள் மன்றம், தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் சங்கம், பத்திரிகையாளர் லட்சுமி சுப்ரமணியம், பத்திரிகையாளர் பாதுகாப்பு நல சங்கம் என பலதரப்பிலும் புகார் தரப்பட்டது. தலைமைச் செயலாளரும் எஸ்.வீ.சேகரும் நெருங்கிய உறவினர்கள் என குறிப்பிட்டு பத்திரிகையாளர் கவின்மலர் உள்ளிட்ட ஏராளமானோர் எஸ்.வீ.சேகர் மேல் புகார் கொடுத்திருந்தனர். அதைக் கண்டுகொள்ளாமல் விட்டிருந்த காவல்துறை, எஸ்.வீ.சேகர் வீட்டு முன்பு பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியவுடன் கல்வீச்சைக் காரணம் காட்டி, அவர்களில் 30 பேரை கைது செய்து சிறைக்கு அனுப்ப ஏற்பாடு செய்தது. அதை மு.க.ஸ்டாலின், கனிமொழி, திருமாவளவன், வேல்முருகன் ஆகியோர் கண்டித்தனர். சுதாரித்துக் கொண்ட காவல்துறை எஸ்.வீ.சேகர் மீது வழக்கு பதிவு செய்தது.
உள்நோக்கத்தோடு இழிவுபடுத்துதல் (504), பெண்களை இழிவுபடுத்துதல் (509), பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் (பிரிவு 8), ஒரு பிரிவினரை வன்முறைக்கு தூண்டி விடுதல் (505(1) சி.சி.) ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை எதிர்த்துதான் எஸ்.வீ.சேகர் முன்ஜாமீன் கோரினார். அதை எதிர்த்து நக்கீரன் உள்பட பதினைந்து பத்திரிகையாளர்கள் கோர்ட்டில் ஆஜர் ஆனார்கள். உயர்நீதிமன்ற நீதிபதி ராமதிலகம் எஸ்.வீ.சேகருக்கு முன்ஜாமீன் வழங்க முடியாது என நீண்ட உத்தரவை பிறப்பித்தார்.
இந்நிலையில், "சென்னையில் சுற்றித் திரியும் எஸ்.வீ.சேகரை கைது செய்ய என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்' என அவரை கைது செய்யத் தேடி அலைவதாக சொல்லப்படும் சென்னை மாநகர காவல்துறை ஆய்வாளர் அன்பரசனை 95000 51690 என்ற அவரது எண்ணில் தொடர்பு கொண்டு கேட்டோம். அவர், ""எங்களுக்கு மேலதிகாரிகள் எஸ்.வீ.சேகரை கைது செய்ய எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை'' என்றார்.
எஸ்.வீ.சேகருக்காக முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வாதாடிய வழக்கறிஞர் மல்லை சத்யா, ""எஸ்.வீ.சேகருக்கு மட்டும் நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்காதது அரிதிலும் அரிதான விஷயம்'' என்கிறார். அவரது முன்ஜாமீன் மனுவை டிஸ்மிஸ் செய்த நீதிபதி ராமதிலகம், ""எஸ்.வீ.சேகர் ஒட்டுமொத்த பெண்கள் சமூகத்தையே தனது முகநூல் பதிவு மூலம் அவமானப்படுத்தியிருக்கிறார். இந்த முகநூல் பதிவு வேறொருவருடையது என்றும் அதனை அவர் பகிர்ந்ததாகவும் சொல்கிறார். இவ்வளவு மோசமான பதிவை பகிர்வதற்கு முன் படிக்காமல் இருக்க எஸ்.வீ.சேகர் என்ன எழுத படிக்கத் தெரியாதவரா? சாதாரண மனிதர்கள் தவறுகள் செய்யும் போது காவல்துறை நடவடிக்கை எடுக்கிறது. அதுபோல எஸ்.வீ.சேகர் மீதும் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என உத்தரவிட்டார்.
அதையெல்லாம் மதிக்காமல் எஸ்.வீ.சேகர் சென்னையில் போலீஸ் பாதுகாப்புடன் சுற்றித் திரிகிறார், இது எப்படி சாத்தியம் என பத்திரிகையாளரான கவிதா முரளிதரனிடம் கேட்டோம். ""எஸ்.வீ.சேகர் போட்ட பதிவு வேலைக்கு போகும் பெண்களுக்கு எதிரான பதிவு. இது பெண்களுக்கு எதிரான தாக்குதல். அவரை இன்னமும் கைது செய்ய முடியாமல் இருப்பது மிகப்பெரிய இழுக்கு'' என்றார். சன் டி.வி.யைச் சேர்ந்த ஜெயபாதுரியோ, ""இந்த விஷயத்தில் பத்திரிகையாளர்களை கைது செய்ய அரசு துடித்தது. ஆனால் எஸ்.வீ.சேகரை கைது செய்யாமல் வேடிக்கை பார்க்கிறது'' என்கிறார்.
தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனின் நெருங்கிய உறவினர் என்பதால் எஸ்.வீ.சேகருக்கு நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு அரசே பாதுகாப்பு கொடுத்து, கைது நடவடிக்கையில் இருந்து காப்பாற்றி வருகிறது.