மிழகத்தின் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க சாட்டையை சுழற்றும் முதல்வர் ஸ்டாலின், முதல் கட்டமாக ஐ.பி.எஸ். அதிகாரிகள் 18 பேரை அதிரடியாக மாற்றியிருக்கிறார்.

சமீபகாலமாக அதிகாரிகள் மீதான நம்பிக்கை முதல்வருக்குச் சற்று குறைந்திருப்பதால் தான் இந்த அதிரடி நடவடிக்கை. உயரதிகாரிகள் மாற்றத்தோடு இந்த ஆக்சன் நின்று விடப் போவதில்லை. அதையும் தாண்டி சில அதிரடிகள் வரப் போகிறது என்கிறார்கள்.

பகுஜன் சமாஜ் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவம் தமிழகத்தையும் கடந்து தேசிய அளவில் அதிர்வுகளை உருவாக்கிய நிலையில், தமிழகத்தில் சட்டம் ஒழுங்குக்கு எதிரான குரல்களை, எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாமல் தி.மு.க. கூட்டணிக் கட்சிகளும்கூட எதிரொலிக்கச் செய்தன.

cm

Advertisment

சி.பி.ஐ. விசாரணை தேவை என மாயாவதி, திருமாவளவன் உட்பட பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இதனால் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு குறித்து தமிழக கவர்னர் ரவியிடம் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா ரிப்போர்ட் கேட்டிருக்கிறார். அந்த ரிப்போர்ட்டை தயாரிப் பதில் கவனம் செலுத்தி வருகிறது ராஜ்பவன். இதற்காக ஒன்றிய உளவுத்துறையினரின் தகவல்களும் ஆராயப்பட்டுள்ளன.

இந்த நிலையில்தான், சென்னை மாநகர காவல்துறை ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் மாற்றப்பட்டு, புதிய கமிஷனராக அருண் மற்றும் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி.யாக உளவுத்துறையின் முன்னாள் உயரதிகாரி டேவிட்சன் தேவாசிர்வாதம் ஆகியோரை நியமித்தார் முதல்வர் ஸ்டாலின்.

உயரதிகாரிகளின் மாற்றம் மட்டுமே சட்டம் ஒழுங்கை சரி செய்யுமா என்கிற விவாதங்கள் ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் தரப்பிலும், சோசியல் மீடியாக்களிலும் பரவலாக முணுமுணுக்கப்பட்ட நிலையில், சட்டம் ஒழுங்கு நிலைமையை ஆராய உயரதிகாரிகளுடன் கடந்த 9-ந்தேதி அவசர ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார் ஸ்டாலின்.

Advertisment

இதில் தலைமைச்செயலாளர் சிவ்தாஸ் மீனா, உள்துறை செயலாளர் அமுதா, முதல்வரின் செயலாளர் முருகானந்தம், டி.ஜி.பி. சங்கர் ஜூவால், சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி. டேவிட்சன் தேவாசிர்வாதம், உளவுத்துறை ஐ.ஜி. செந்தில்வேலன், சென்னை போலீஸ் கமிஷனர் அருண், தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இது பற்றி விசாரித்தபோது, "மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக நடந்துவரும் குற்றச்செயல்களை குறிப்பிட்டு ஆதங்கத்துடன் பேசியிருக்கும் முதல்வர் ஸ்டாலின், குற்றச் செயல்களை தடுப்பதில் போலீசிடம் கவனம் போதவில்லை எனச் சொல்ல, அதற்கு அதிகாரிகள் சில விளக்கம் தந்துள்ளனர்.

ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் கூடுதல் தகவல்கள் என்ன இருக்கிறது என்பதையும் கேட்டறிந்தார் முதல்வர். தொடர்ந்து நடந்த ஆலோசனையில் போதைப்பொருள் நட மாட்டத்தை தடுப்பது, கொலைக்குற்றவாளிகளை நீதிமன்றத்தில் நிறுத்தி விரைந்து தண்டனை பெற்றுத் தருவது, சட்டம் ஒழுங்குக்கு சவால் விடும் குற்றவாளிகளை பாரபட்சமின்றி கைது செய்வது, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பது, குடும்ப வன்முறையாளர்களுக்கு கடுமையான தண்ட னையைப் பெற்றுத்தருவது உள்ளிட்ட பிரச்சனைகள் ஆராயப்பட்டன.

இத்தகைய க்ரைம்களில் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்; சமரசத்திற்கு இடமளிக்கக் கூடாது என உத்தரவிட்டார் ஸ்டாலின். போலீசின் ஆக்சன் குற்றவாளிகளுக்கு பயத்தை ஏற்படுத்த வேண்டும்; குற்றம் செய்ய கனவில்கூட அவர்கள் யோசிக்கக்கூடாது என்கிற பாணியில் முதல்வரின் உத்தரவுகள் இருந்தன''’ என்கிறார்கள்.

ஆலோசனையின் முடிவில், காவல்துறை உயரதிகாரிகள் மாற்றப்பட வேண்டும் என ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தரப்பிலிருந்து ஏற்கனவே தம்மிடம் கொடுக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் சிலவற்றை குறிப்பிட்டு பேசியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். ஆலோசனைக் கூட்டம் முடிந்ததும், போலீஸ் உயரதிகாரிகள் கிளம்பிச் சென்றனர். இதனை யடுத்து, சில மணி நேரம் கடந்த நிலையில், ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாற்றம் குறித்த ஒரு பட்டியல் முதல்வரிடம் கொடுக்கப்பட , அதனை ஆராய்ந்து டிக் அடித்தார்.

அதன்படி, சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ், க்ரைம் பிராஞ்ச் சி.ஐ.டி. பிரிவின் ஏ.டி.ஜி.பி. வெங்கட் ராமன், சென்னை சைபர் க்ரைம் பிராஞ்சின் ஏ.டி.ஜி.பி. சஞ்சய்குமார், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பிரிவின் ஏ.டி.ஜி.பி. தமிழ்ச்சந்திரன், தென்சென்னை சட்டம் ஒழுங்கு கூடுதல் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்ஹா, வடசென்னை சட்டம் ஒழுங்கு கூடுதல் கமிஷனர் அஸ்ராகார்க் உள்பட 18 ஐ.பி.எஸ். அதிகாரிகள் உடனடியாக மாற்றப்பட்டனர்.

இந்த நிலையில், சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் போலீஸ் உயரதிகாரிகளுக்கு மேலும் சுதந்திரம் தரப்பட்டிருப்பதால் அவர் களிடம் புதிய உற்சாகம் தெரிகிறது. இதனால் சில அதிரடிகளுக்குத் திட்டமிடப்படுவதாக தகவல்கள் வருகின்றன.

இதுகுறித்து விசாரித்தபோது, "சென்னையின் புதிய கமிஷனராக பொறுப்பேற்ற அருண், ரவுடிகளுக்கு அவர்களது மொழியிலேயே பதிலடி தரப்படும் எனச் சொல்லியிருக்கிறார். இதற்கு பல அர்த்தங்கள் உண்டு. இந்த நிலையில், தமிழகத்தில் ரௌடிகளை கண்காணிக்கவும், ஒழிக்கவும் சிறப்பு கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கிறார்கள்.

இதற்காக தமிழகம் முழுவதும் கூலிப் படையினர், அவர்களுக்கு வேலை கொடுக்கும் ரௌடிகள், அவர்களுக்கு உதவும் உள்ளூர் ரௌடிகள், தலைமறைவாக இருக்கும் கொலைக்குற்றவாளிகள், சிறையில் இருக்கும் பிரபல ரௌடிகள் என பல்வேறு வகையான ரௌடிகளின் பட்டியலை சேகரிக்கத் தொடங்கியிருக்கிறார் டேவிட்சன் தேவாசிர்வாதம். குற்றங்களின் தன்மைக்கேற்ப ரௌடிகளை தரம் பிரித்து ஹிட் லிஸ்ட் தயாரிக்கப்படுகிறது. இனி போலீசாரின் அதிரடி வேறு பாணியில் இருக்கும்''’என்கிறார்கள்.

ரௌடிகளுக்கு எதிரான வேட்டையை துவக்க போலீஸ் திட்டமிடுவதால் இனி என்கவுண்டர் சம்பவங்கள் நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிற தகவல்கள் கிடைக்கின்றன.