சிவகங்கையில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ""அரசு அமைத்த ஆய்வுக் குழுவின் பரிந்துரையின் பேரில், ஏழு உட்பிரிவுகளைக் கொண்ட சாதிகளை இனி "தேவேந்திர குலவேளாளர்' எனப் பொதுப் பெயரிட, மத்திய அரசுக்கு, மாநில அரசு பரிந்துரை செய்யும். ஏழு உட்பிரிவினரின் சமூக பொருளாதார நிலையைக் கருத்தில்கொண்டு, இப்பிரிவினர் தொடர்ந்து பட்டியல் இனத்தில் இருக்கவும் குழு பரிந்துரைத்துள்ளது''’என்று பேசினார்.
முதல்வர் எடப்பாடியின் இந்த அறிவிப்புக்கு பதிலடியாக, விருதுநகர் எம்.ஜி.ஆர். சிலை அருகில் அவருக்கு எதிரான கண்டன முழக்கங்களை எழுப்பி, சாலை மறியலில் ஈடுபட்டு, அவரது உருவபொம்மையை எரித்த வெள்ளாளர் முன்னேற்ற கழகத்தினர் 28 பேர் கைது செய்யப்பட்டு, திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், ‘"எடப்பாடியார் வாழ்க! ஓ.பி.எஸ். வாழ்க! மாவீரன் கே.டி.ஆர். வாழ்க! தி.மு.க. குண்டர்களைக் கைது செய்...'’ என்று கோஷம் எழுப்பி, அ.தி.மு.க. பிரமுகர்கள் நயினார் முகமது, கண்ணன், தர்மலிங்கம், சாந்தி மாரியப்பன், கோகுலம் தங்கராஜ், கதிரவன் உள் ளிட்ட ஆளும்கட்சியினர், ஆவேசமாக திருமண மண்டபத்துக்குச் சென்று முற்றுகையிட்டு கல்வீசி, காவல்துறையினருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மண்டபத்தின் கதவை உடைக்க முயற்சித்து, தாக்குதல் நடத்தவும் ஆயத்தமானார் கள். கைதானவர்களை ரிமாண்ட் செய்ய வலி யுறுத்தி, மண்டபம் முன்பாக சாலையில் அமர்ந்தனர்.
எரிக்கப்பட்டது முதல்வரின் உருவபொம்மை என்பதாலும், எரித்தவர்களுக்கு எதிராக காவல் துறை யினர் கண்முன்னே ஆளும்கட்சியினர் வன்முறையில் இறங்கியதாலும், பாதுகாப்பு கருதி கைது செய்யப்பட்டவர்களை, ஆயுதப்படை மைதானத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். அந்த மண்டபத்தில் தங்களை நெட்டித் தள்ளியது ஆளும்கட்சியினர் என்பதால், காவல்துறையினரால் வேடிக்கை மட் டுமே பார்க்க முடிந்தது. ""இதற்குமுன், எத்தனையோ உருவபொம்மை எரிப்பு சம்பவங்கள் அ.தி.மு.க.வினராலேயே நடத்தப்பட்டுள்ளது. அப்போதெல்லாம், சம்பந்தப்பட்டவர்கள் யாரும் இந்த அளவுக்கு ‘ரியாக்ட்’ பண்ணியதில்லை. ‘நடப்பது அ.தி.மு.க. ஆட்சி. சட்டம் தன் கடமையைச் செய்யும்..’ என்ற நம்பிக்கை ஆளும்கட்சியினருக்கு ஏன் இல்லாமல் போனது? காவல்துறையினரின் ஆசியோடு, கல்லெறிதல் போன்ற வன்முறையை விருதுநகர் மாவட்டத்தில் ஆளும்கட்சியினரால் நிகழ்த்த முடிந்திருக்கிறது என்றால், நிச்சயம் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியின் வழிகாட்டுதல் இல்லாமல் இருக்காது''’என்று தி.மு.க.வினர் குற்றம்சாட்டுகின்றனர்.
சாதி கலவரத்துக்குப் பேர்போன விருதுநகர் மாவட்டத்தில், சாதிகள் சம்பந்தப்பட்ட விவகாரத் தில், ஆளும்கட்சியினர் வன்முறையைக் கையி லெடுத்திருப்பது, ஆபத்தின் அறிகுறி.
-ராம்கி