முதல்வர் ஸ்டாலின் வெளிநாடுகளுக்கு செல்லும்போதெல்லாம் சிகிச்சைக்காக செல்கிறார் என செய்திகள் றெக்க கட்டிப் பறக்கும். இப்பொழுது, வருகிற 27ஆம் தேதி அவர் அமெரிக்காவுக்கு செல்கிறார். அவருக்கு உடலில் பிரச்சினை இருக்கிறது, அதனால்தான் அவர் அமெரிக்கா செல்கிறார் என வந்த வதந்திகளுக்குப் பதிலடியாக, கலைஞர் நினைவு தினம் அன்று ஓமந்தூரார் அரசினர் தோட்டத்திலிருந்து கலைஞர் சமாதிவரை மூன்று கிலோமீட்டர் நடந்து சென்று ‘நான் ஃபிட்டாக இருக்கிறேன்’ என காண்பித்திருக்கிறார் முதல்வர். அத்துடன் அமெரிக்கா போவதற்கு முன்பே அமைச்சரவை யில் மாற்றங்களையும் நடத்த திட்டமிட்டி ருக்கிறார். இதுபற்றி தி.மு.க. வட்டாரங்களில் நாம் பேசினோம்...

cm stalin

"முதல்வர் எப்போதும் நடைப்பயிற்சியை விரும்புபவர். அவரால் நடக்காமல் இருக்கவே முடியாது. ‘கோவிட்’ நோயால் பாதிக்கப்பட்டு காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தபோது கூட அந்த மருத்துவமனையின் மொட்டை மாடிக்குப் போய் நடைப்பயிற்சி மேற்கொண்டவர் அவர். நடைப் பயிற்சிக்காக தனியாக ஏற்பாடுகள் செய்து தந்தது காவேரி மருத்துவமனை. அவருக்கு இதயத்தில் ஒரு சிறு பிரச்னை வந்தது. அதற்கான சிகிச்சைகளை அவர் எடுத்துக் கொண்டார். அவருக்கு ‘பார்கின்சன்’ என்கிற நரம்புத்தளர்ச்சி நோய் இருக்கிறது, அதற்காகத்தான் அவர் அமெரிக்கா செல்கிறார் எனச் சொன்னார்கள். அந்த நோய் இருப்பவர்கள் இத்தனை கிலோமீட்டர் நடக்கவே முடியாது. தினமும் வீட்டில் நீச்சல் பயிற்சி எடுத்துக் கொள்கிறார் முதல்வர். ஆகவே, நடப்பதில் எந்தப் பிரச்னையும் இல்லை. தினமும் நாலு கிலோமீட்டர் உடற்பயிற்சி எந்திரங்களில் நடந்து பயிற்சி பெறுபவர் அவர்.

அவருக்கு கோவிட் வந்ததினால் உலகம் முழுவதும் பலருக்கும் ஏற்பட்ட எலும்பு தொடர்பான பிரச்னைகள்தான் இருக்கிறது. உட்காரும் பொழுது அவருக்கு வலி ஏற்படுகிறது. அதனால்தான் அவருடைய நிகழ்ச்சிகளில் பெரும்பாலும் அவர் நின்றுகொண்டே இருக்கிறார். இந்த கோவிட் தொடர்பான பிரச்னைகளுக்கு இந்தியாவிலேயே சிறப்பான சிகிச்சை செய்யும் மருத்துவமனைகள் உள்ளன. இதற்காக அவர் ஏன் வெளிநாடு செல்ல வேண்டும்'' என எதிர்க் கேள்வி கேட்கின்றன அவருக்கு நெருக்கமான மருத்துவத் துறை வட்டாரங்கள்.

Advertisment

ஒன்றிய பா.ஜ.க.வின் மோடி அரசு அமைந்தபிறகு வெளிநாட்டிலிருந்து வரும் அந்நிய நேரடி முதலீடுகள் எல்லாம் உத்தரப்பிரதேசம், குஜராத், மகராஷ்டிரா ஆகிய மாநிலங்களுக்கு திருப்பிவிடப்படுகிறது. தமிழகத்திற்கு அந்நிய நேரடி முதலீடுகள் எதுவும் வரவில்லை. அதனால் தொழில் வளர்ச்சியில் தமிழகம் பின்தங்கி உள்ளது என்ற இமேஜ் பெரிதாக எழும்பி வந்தது. அதை முறியடிக்கத்தான் முதல்வர் அமெரிக்கா செல்கிறார். இது முதலீடுகளை செய்யும் உலகின் மிகப் பெரிய கம்பெனிகளை சந்தித்துப் பேசுவதற்கான ஒரு ஏற்பாடு. இதற்காக தமிழகத்தைச் சேர்ந்த அதிகாரிகள், அமைச்சர்கள் அடங்கிய குழு அந்தக் கம்பெனி அதிபர்களிடம் முன்கூட்டியே பேச்சுவார்த்தை நடத்தி, முதல்வரின் பயணத்தில் நடைபெறும் நிகழ்வுகளை இறுதி செய்துள்ளது.

ஆனால், வெளிநாடு போவதற்கு முன்பு அமைச்சரவை மாற்றத்தை செய்ய வேண்டும் என முதல்வர் முடிவு செய்திருக்கிறார். அதில் முக்கியமானது, உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சர் ஆக்குவது. அத்துடன் கட்சிக்கு துரோகம் செய்த சில அமைச்சர்களின் இலாகாக்களை மாற்றுவது என்பதுதான். இந்த அமைச்சரவை மாற்றம், செந்தில் பாலாஜி விடுதலையாகி வருவார் என்பதற்காக தள்ளிப்போடப்பட்டு இருந்தது. அது நடக்கவில்லை என்பதால் செந்தில் பாலாஜியே ‘எனக்காக நீங்கள் காத்திருக்க வேண்டாம்’ என முதல்வருக்கு சிறையிலிருந்து செய்தி அனுப்பி விட்டார். எனவே அமைச்சரவை மாற்றம் வேகம் பெற்றுள்ளது. தி.மு.க.வில் சீனியர் அமைச்சர்களாக இருப்பவர்கள் தங்களது சுய நலத்திற்காக, அரசியல் நோக்கங்களுக்காக தேவையில்லாமல் தி.மு.க.வுக்கு எதிரான செய்திகளை சில சமூக விரோதிகளிடம் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்த விவரங்கள் தி.மு.க. தலைமையை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

பத்து வருடங்கள் ஆட்சியே இல்லை. ஆனால் தி.மு.க. தொண்டன் தலைமைக்கு விசுவாசமாக இருந்தான். இன்றும் நாற்பது பாராளுமன்றத் தொகுதிகளிலும் தி.மு.க.வை வெற்றி பெற வைக்கிறான். பதவி மற்றும் சுகபோகங்களை ஆட்சியால் அனுபவிக்கும் அமைச்சர்கள் சிலர் கட்சிக்கு துரோகம் செய்யும் விதமாக பேசி வருவதற்கு ஒரு முடிவு கட்டவேண்டும் என தி.மு.க. தலைமை முடிவு செய்திருக்கிறது. அதனால் அமைச்சரவை மாற்றம் முழுவதுமாக இருக்கும். பல சீனியர்களின் பதவிகள் பறிக்கப்படும். ஆவடி நாசர் போன்ற பதவி பறிக்கப்பட்ட சீனியர்களுக்கு மறுபடியும் பதவி வழங்கப்படும். இவை அனைத்தும் விரைவில் செய்து முடிக்கப்படும்.

Advertisment

சமீபத்தில் உள்துறைச் செயலாளர் பதவி பறிக்கப்பட்ட அமுதா ஐ.ஏ.எஸ்.ஸுக்கு முதல்வர் அலுவலகத்தில் சிறப்பு முக்கியத்துவம் தரப்படுகிறது. போலீஸ் மற்றும் ஐ.ஏ.எஸ். வட்டாரங்களில் உதயநிதியின் உத்தரவுகள் இப்பொழுதே முதல்வரின் உத்தரவுக்கு சமமான உத்தரவுகளாக மதிக்கப்படுகிறது. உதயநிதி முழு அதிகாரத்துடன் இனி கட்சியையும் ஆட்சியையும் நடத்திச் செல்வதில் முதல்வருடன் இணைந்து செயல்படுவார் என்பதற்கான அறிகுறிகள் இப்பொழுதே தெரிய ஆரம்பித்துவிட்டன. முதல்வரின் வெளிநாட்டுப் பயணத்தில் உதயநிதி இடம்பெற மாட்டார். அவர் இங்கி ருந்தே துணை முதல்வராக முதல்வரின் உத்தரவுகளை நிறைவேற்றுவார்” என்கின்றன தி.மு.க. வட்டாரங்கள்.