அமர்க்களமான விழா அது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வும் அமைச்சரு மான ராஜலட்சுமியின் மகள் ஹரிணி மற்றும் அவரது மருமகள் அனுசுயா ஆகியோரின் பூப்புனித நன்னீராட்டு விழா டிசம்பர் 23 அன்று சங்கரன்கோவிலில் நடைபெற்றது.
2016ல் பிரச்சாரத்திற்காக சங்கரன்கோவில் வந்த ’ஜெ.வுக்கு சங்கரன்கோவில்- சுரண்டை சாலையில் சுமார் 25 ஆயிரம் பேர் அமரக்கூடிய வகையில் மெகா பந்தல் அமைக்கப்பட்டது. அதேபோன்று பிரம்மாண்டமான விழா பந்தல் அமைப்புகள் அதே இடத்தில் தற்போது அமைக்கப்பட்டது. அப்போது ஜெ. இப்போது இ.பி.எஸ்-ஓ.பி.எஸ்.
அவர்கள் வரும் பாதையான கச்சேரி ரோடு, கீழரத வீதி, தெற்குரத வீதி ஆகிய பகுதிகளின் கடைகளை அடைக்குமாறு கடைக்காரர்கள், வியாபாரிகளை காவல்துறையினர் வற்புறுத்தியது வர்த்தக அமைப்பில் கடும் விவாதமானது. கடையடைப்பு நோட்டீஸ்கள் விநியோகிக்கப்பட்டன.
நகரின் 30 வார்டுகளில் ஒவ்வொரு வார்டுகளிலு முள்ள அ.தி.மு.க.வினரின் மகளிர் பூத் கமிட்டி மெம்பர்களுடன் 25 பேரைத் திரட்டவேண்டும். நபர் ஒன்றுக்கு 200 ரூபாய், சிக்கன், மட்டன் பிரியாணி நிகழ்ச்சி முடிந்து கிளம்பும்போது ஒவ்வொருவருக்கும் கிப்ட் பேக் ஒன்று, கிராமங்களின் மகளிர் குழுக்கள், அந்தப் பகுதியிலுள்ள 100 நாள் வேலை திட்டப் பெண்களுக்கு அங்கீகார அடையாள அட்டை என்று கவர்ச்சியாகப் பேசி கூட்டத்தைக் கூட்டுவதற்கான வேலைகள் நடந்தேறின.
டிச. 18 அன்று மதுரையில் மினி கிளினிக்கைத் திறந்துவைத்த கூட்டுறவுத்துறையின் அமைச்சரான செல்லுர்ராஜு பத்திரிகையாளர் சந்திப்பில், குறிப்பிட்ட ஒரு சமூகத்தை விமர்சித்துப் பேச, டிச. 19 அன்று சங்கரன்கோவிலில் திரண்ட அந்த சமூக வாலிபர்கள் அமைச்சர் செல்லூர் ராஜுவின் படத்தை தீவைத்து எரித்தனர். விழாவின்போது சலசலப்பு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக நிகழ்ச்சியின்போது தென்மண்டல ஐ.ஜி.யான முருகன் தலைமையில் சுமார் 1500 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
விழா நிகழ்ச்சி மேடைக்கு வந்த எடப்பாடி பழனிசாமிக்கு கும்ப மரியாதை தரப்பட்டது. சிறுமிகளை வாழ்த்திப் பேசிய எடப்பாடி பழனிசாமி, “ஜெ. வழியில், கல்வி, நீர் மேலாண்மையில் புரட்சி, தொழிலில் புரட்சி என அரசு பலதுறைகளிலும் புரட்சிசெய்து வருகிறது என்றார்.
எடப்பாடி கிளம்பிச்சென்றதையடுத்து சரியாகப் பத்து நிமிடங்கள் கழித்துவந்த அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரான துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். சிறுமிகளை வாழ்த்தினார். புட்டு சுத்தும் விழாவுக்கா இத்தனை அமர்க்களம் என்றனர் ஊர்மக்கள்.
பரமசிவன்
படங்கள் : ப.இராம்குமார்