சத்தீஷ்கர் மாநிலத்தில் புத்தாண்டு தினத்தன்று காணாமல் போன பத்திரிகையாளர் முகேஷ் சந்திராகர், அரசு ஒப்பந்ததாரர் வீட்டு செப்டிக் டேங்கில் பிணமாகக் கண்டெடுக்கப் பட்டது இந்தியாவையே அதிர வைத்திருக்கிறது.
சத்தீஷ்கர் மாநிலத்தின் பீஜாப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ப்ரீலான்ஸ் பத்திரிகையாளரான முகேஷ் சந்திராகர். இவர் பஸ்தார் ஜங்ஷன் எனும் யூ டியூப் சேனலை நடத்திவந்தார். 2021-ல் கோப்ரா காவல்படை கமாண்டோ வான ராகேஷ்வர்சிங் மன்காஸ், மாவோயிஸ்ட் பிடியில் சிக்கிய போது, மாவோயிஸ்ட்டு களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அவரை மீட்டு வந்ததில் முகேஷ் சந்திராக ரின் பங்கு குறிப்பிடத் தக்கது.
அரசு ஒப்பந்த தாரரும் முகேஷின் உறவினருமான சுரேஷ் சந்திராக ரின் ஒப்பந்தப் பணிகளில் நடைபெற்று வந்த ஊழலை முகேஷ் கடந்த டிசம்பர் 25-ஆம் தேதி அம்பலப்படுத்தியிருந்தார். இதையடுத்து இதுகுறித்து விசாரிக்க முதல்வர் உத்தரவிட்டி ருந்தார். இதில் இருவருக்கும் முன்பகை இருந்ததுவந்தது. இந்த நிலையில் ஜனவரி 1-ஆம் தேதி இரவு 8 மணியளவில் முகேஷும் சுரேஷும் போனில் பேசியிருக்கின்றனர். சுரேஷ் பேசுவதற்காக முகேஷை அழைத்திருக்கிறார். தனது இடத்தில் வைத்து பேசியபோது, தங்க ளது ஒப்பந்தப் பணிகளில் முகேஷ் தலை யிடுவதாக சுரேஷ் குற்றம்சாட்டியிருக்கிறார். அத்தோடு சுரேஷோடு இருந்த ரிதேஷும் ராம்தேகியும் முகேஷை இரும்புக்கம்பியால் முரட்டுத்தனமாகத் தாக்கியிருக்கின்றனர்.
அதில் முகேஷ் உயிரிழந்த நிலையில், அவரது உடலை செப்டிக் டேங்கில் போட்டு மூடி, ஆதாரங்களை எப்படி அழிப்பது என திட்டமிட்டிருக்கின்றனர். முக்கியமாக, முகேஷைத் தாக்கிய கம்பியையும், முகேஷின் செல்போனையும் மறைக்கத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. செப்டிக் டேங்க் மீது புதிய ஸ்லாப் ஒன்றை வைத்து மூடிவிட்டு ராய்ப்பூருக்குச் செல்லும்படி ரிதேஷ், தினேஷுக்கு உத்தரவிட்டிருக்கிறார்.
முகேஷின் சகோதரர் யுகேஷ் புத்தாண்டன்று இரவு தனது சகோதர ரைக் காணவில்லை என காவல்துறையில் புகாரளித்திருக்கிறார். காவல்துறை முகேஷின் செல்போனில் கடைசியாகப் பேசியபோது எங்கிருந்தார் என்பதை வைத்து சுரேஷின் வீட்டை அடையாளம் கண்டு அங்கு சோதனை நடத்தியதில்தான் முகேஷின் சடலம் கிடைத்திருக்கிறது.
முகேஷின் உடலில் நெற்றி, நெஞ்சு, வயிறு, முதுகு என அனைத்து இடத்திலும் முரட்டுத்தனமாகத் தாக்கப்பட்டதற்கான அடையாளங் கள் கண்டறியப்பட்டுள்ளன. இதையடுத்து சுரேஷ், ரிதேஷ் உள்ளிட்டோரின் மீது கொலை வழக்கு, அடையாளங்களை அழிக்க முயற்சி செய்தல் உள்ளிட்ட வழக்குகள் பதியப்பட்டுள்ளது.
ரிதேஷ், தினேஷ், ராம்தேகி மூவரும் தப்பியோட முயலும்போது விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட நிலையில், சுரேஷ் மட்டும் தப்பியோடி விட்டதாக காவல்துறை தெரிவிக்கிறது. சுரேஷை தேடும்பணி முடுக்கிவிடப்பட்டிருக்கிறது. 11 பேரைக் கொண்டு சிறப்பு தேடுதல் படை சுரேஷைக் கண்டறிவதற்காக அமைக்கப் பட்டுள்ளது.
இது ஒருபுறமிருக்க முகேஷும், சுரேஷும் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்ற விவாதம் பா.ஜ.க. -காங்கிரஸிடையே வலுத்துள்ளது. பிரதான குற்றவாளியான சுரேஷ் சந்திராகர் காங்கிரஸைச் சேர்ந்தவர் என சத்தீஷ்கர் முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் குற்றம் சுமத்த ஆரம்பித்துள்ளனர். “"நாங்கள் முக்கிய குற்றவாளிகள் மூவரை கைது செய்துவிட்டோம். சுரேஷின் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக சுரேஷ் ஆக்கிர மித்திருந்த நிலம் மீட்கப்பட்டுள்ளது'' என்கிறார் சத்தீஷ்கர் முதல்வர். துணை முதல்வர் விஜய்ஷர்மாவோ, “"காங்கிரஸ் ஆட்சியிலிருந்தபோதே, ஊடக சுதந்திரத்தை தடைசெய்து வந்தது. இப்போது பதவியி லில்லாதபோதும் அதையே செய்கிறது''’என குற்றம்சாட்டுகிறார்.
பதிலுக்கு காங்கிரஸோ, “"சுரேஷ், காங்கிரஸிலிருந்து விலகி கடந்த ஆண்டே பா.ஜ.க.வில் சேர்ந்துவிட்டார். அதனால்தான் அவரது ஊழல்கள் ஆளுங்கட்சியால் கண்டுகொள்ளாமல் விடப்பட்டன. தவிரவும் பீஜாப்பூரின் முக்கிய பா.ஜ.க. பிரமுகர்களுட னும், பீஜாப்பூர் பா.ஜ.க. தலைவருடனும் சுரேஷ் இருக்கும் புகைப்படங்கள் இருக் கின்றன. கடந்த 10 நாட்களுக்கு முன்புதான் சத்தீஷ்கர் முதல்வர் அலுவலகத்துக்கு சுரேஷ் சென்றிருந்தார். தைரியமிருந்தால் முதல்வர் அந்த சி.சி.டி.வி. காட்சிகளை வெளியிடுவாரா?''’என கேள்வியெழுப்பியுள்ளது.
இந்தியாவில் பத்திரிகையாளர்கள் மரணம் சாதாரணமாகி வருகிறது. 2022-ல் பீகார் மாநிலத்தில் சட்டவிரோத மணல் கடத்தலை வெளிக்கொண்டுவந்த சுபாஷ்குமார் மகாட்டோ, கடத்தல்காரர்களால் குரூரமாக சுட்டுக் கொல்லப்பட்டார். இதுவரை முகேஷ் சந்திராகருடன் சேர்த்து 63 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டிருப்பதாக ஒரு பட்டியல் தெரிவிக்கிறது.
நாடெங்குமுள்ள பத்திரிகையாளர்கள், முகேஷ் சந்திராகர் கொலை தொடர்பாக கண்டனக் குரல் எழுப்பிவருகின்றனர்.
பிரஸ் கிளப் ஆப் இந்தியா உள்ளிட்ட பல்வேறு பத்திரிகையாளர் அமைப்புகள் இக்கொலையைக் கண்டித்துள்ளன. தமிழகத்திலும் சென்னை பத்திரிகையாளர் மன்றம் இக்கொலையை வன்மையாகக் கண்டித்திருப்பதுடன், முகேஷ் மரணத் திற்கு காரணமானவர்கள் உடனடியாகக் கைதுசெய்யப்பட்டு நீதியின்முன் நிறுத்தப்படவேண்டும். பத்திரிகையாளர்கள் பாதுகாப்பை அரசு உறுதி செய்யவேண்டும் என்று தெரிவித்துள்ளது.