சென்னை பத்திரிகையாளர் மன்றத்திற்கு 25 ஆண்டுகள் கழித்து, டிசம்பர் 15ஆம் தேதி தேர்தல் நடந்தது. அதில், மொத்தமுள்ள 1,371 வாக்காளர்களில் 91.27% பேர் வாக்களித்தார்கள். 1999ஆம் ஆண்டு, நடைபெற்ற கடைசித் தேர்தலைவிட இந்தத் தேர்தலில் மிக அதிகமான வாக்குகள் பதிவாகின. காலை 10 மணி முதல் 5 மணி வரை நடைபெற்ற இந்தத் தேர்தலில், ஒரு தலைவர், இரண்டு துணைத்தலைவர்கள், ஒரு பொதுச்செயலாளர், ஒரு பொருளாளர், ஒரு இணைச் செயலாளர் மற்றும் 5 கமிட்டி உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 44 வேட்பாளர்கள் களத்தில் இருந்தார்கள்.

CPC

வெற்றி பெற்றவர்களுடன் நீதிபதி பாரதிதாசன் குழுவினர் மற்றும் "இந்து' என்.ராம் தலைமையிலான வழிகாட்டும் குழுவினர்

Advertisment

இந்த பத்திரிகையாளர் மன்றத்தின் தேர்தலை வி.பாரதிதாசன் என்கிற ஓய்வுபெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தேர்தல் அதிகாரியாக இருந்து, பத்திரிகையாளர் மன்றத்தின் சிறப்பு வழிகாட்டுதல் குழுவின் உதவியுடன் நடத்தினார். அவருக்கு உதவியாக, பி.இ.பாண்டியராஜன், லட்சுமிப்ரியா, முத்துராம லிங்கம் ஆகியோர் உதவி தேர்தல் அதிகாரி களாகப் பணியாற்றினர். பத்திரிகையாளர் மன்றத்தின் மூத்த உறுப்பினர் 95 வயதான பி.என்.சுவாமி மதுரையிலிருந்து வந்து தனது வாக்கை செலுத்தினார்.

பத்திரிகையாளர் மன்றத் தேர்தலுக்கு வழிவகுத்த சிறப்பு வழிகாட்டுதல் குழுவைச் சேர்ந்த இந்து என்.ராம், நக்கீரன் கோபால், டி.சுரேஷ்குமார், சாவித்திரி கண்ணன், கவிதா முரளிதரன், பகவான்சிங், நூருல்லா உட்பட அனைவரும் தேர்தல் நடத்தும் அதிகாரியான நீதியரசர் பாரதிதாசனை சந்தித்து, தேர்தல் நடத்தும் விதம் தொடர்பாகத் தங்களது ஆலோசனைகளைத் தந்தனர். சென்னை நகர போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவின்பேரில் ஒரு சிறப்பு போலீஸ் படை, பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்தது. வேட்பாளர்கள் ஷாமியானா அமைத்து, வாக்களிக்க வந்த வாக்காளர்களிடம் வாக்குகளை சேகரித்தனர்.

காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங் கோவன் மறைவு, பரபரப்பாக நடந்த அ.தி.மு.க. பொதுக்குழுக் கூட்டம் போன்ற பெரிய நிகழ்வு களைத் தாண்டி, தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்ற பத்திரிகையாளர்கள் பாய்ந்தோடி வந்தனர். ஒருசில பத்திரிகையாளர்கள் மட்டும் வருவார்கள், வாக்களிப்பார்கள் என்கிற எதிர்பார்ப்புகளைத் தாண்டி, 90% சதவிகித வாக்காளர்கள் அணி வகுத்தது இந்த பத்திரிகையாளர் மன்றப் பகுதியையே திருவிழாக்கோலத்தில் ஆழ்த்தியது. பத்திரிகையாளர் மன்றத்துக்கு எதிரே இருந்த சேப்பாக்கம் கிரிக்கெட் ஸ்டேடியம் வாசலில் அணிவகுத்த வாகனங்களால் போக்குவரத்தே திணறியது. கடும் போட்டியில் நடைபெற்ற இந்தத் தேர்தலை நடைபெறாமல் தடுக்க பெரும் முயற்சி எடுக்கப்பட்டது. இரண்டு வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் நடத்துவதற்கு எதிராகப் பதிவு செய்யப்பட்டது. இரண்டு வழக்குகளையும் தமிழக அரசின் வழக்கறிஞர் வில்சன், அவரது மகன் ரிச்சர்ட் துணையுடன், தேர்தலை நடத்திய என்.ராம், நக்கீரன் கோபால் அடங்கிய சிறப்பு வழிகாட்டுதல் குழு முறியடித்தது.

Advertisment

தேர்தல் நடத்தத் தடையில்லை என உயர்நீதிமன்றம் தீர்ப்புகள் அளித்தது. அதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட் செல்லவும் முயற்சிகள் நடந்தன. இனி தேர்தல் நடத்தத் தடை வாங்க முடியாது என்கிற நிலை வந்ததும், வேறு வழி யில்லாமல் 25 வருடம் தேர்தலை நடத்தாதவர்கள் களத்திற்கு வந்தார்கள். முதுபெரும் பத்திரிகை யாளர்கள், நடுத்தர வயதினர், சமீபத்தில் வேலைக்கு வந்த இளம் பத்திரிகையாளர்கள் என அனைவரும் உற்சாகத்தோடு பங்கெடுத்த இந்தத் தேர்தலில், நீதிக்கான அணி என்ற பெயரில் போட்டியிட்ட சுரேஷ் வேதநாயகம் தலைவராக வும், அசீப் பொதுச்செயலாளராகவும், ஜே.மதன் மற்றும் கே.சுந்தரபாரதி துணைத்தலைவர்களாக வும், மணிகண்டன் பொருளாளராகவும், நெல்சன் சேவியர் இணைச் செயலாளராகவும், அகிலா ஈஸ்வரன், பழனிவேல், விஜயகோபால், பி.ஸ்டா லின் ஆகியோர் நிர்வாகக்குழு உறுப்பினர்களாகவும், நீதிக்கான அணியிலிருந்து வெற்றிபெற்றார்கள். ஒற்றுமை அணி என்ற பெயரில் போட்டியிட்ட அணியிலிருந்து எம்.கவாஸ்கர் நிர்வாகக்குழு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

புதிதாக வெற்றி பெற்றவர்கள், தேர்தலை நடத்திய நீதிபதி பாரதிதாசன் மற்றும் சிறப்பு வழிகாட்டுதல் குழுவுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள். 25 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த இந்தத் தேர்தல், தமிழக பத்திரிகை வரலாற்றிலேயே மிகமுக்கியமான திருப்பமாகப் பார்க்கப்படுகிறது. 25 ஆண்டு காலம் தேர்தலை நடத்தாமல் இருந்ததைக் கண்டித்துப் போராடிய பத்திரிகையாளர்களுக்கு தலைமை தாங்கிய மறைந்த மோகனின் புகைப்படம் வெற்றிக் கொண்டாட்டங்களின்போது உயர்த்திப் பிடிக்கப்பட்டது. "பத்திரிகையாளர்கள் ஒற்றுமை வாழ்க! பத்திரிகையாளர்கள் உரிமைக்காகப் போராடுவோம்!' என்கிற கோஷங்கள், தாரை தப்பட்டைகள், பட்டாசு வெடிச்சத்தங்கள், குதிரை ஊர்வலம், மாலை மரியாதைகள் என நள்ளிரவுவரை கொண்டாட்டங்கள் நீடித்தன.

ஒட்டுமொத்தமாக, "இதுபோன்ற ஒரு தேர்தலை நாங்கள் பார்த்ததில்லை. தமிழகத்தில் நடக்கும் பல நிகழ்வுகளை விளக்கிக் கூறி, தமிழகத்தின் திசை வழியை வகுக்கும் செய்தியாளர் கள் முதல்முறையாக தங்கள் அமைப்புக்கு விதியெழுதும் வாய்ப்பைப் பெற்றார்கள். இத்தேர்தலை, சட்டமன்றத் தேர்தலைவிடப் பரபரப்பான தேர்தலாக பிரச்சாரங்கள், வியூகங்கள், பங்களிப்புகள், இறுதியில் வாழ்த்துகள் என ஒரு ஜனநாயகத் திருவிழாவாகவே வழிகாட்டும் குழு நடத்தி முடித்தது. இது, தமிழகம் முழுவதும் பத்திரிகையாளர்களுக்கு அதன் அமைப்புகளுக்கு அங்கீகாரத்தை பெற்றுத்தரும் ஒரு பெரிய பேரலையையே உருவாக்கும்'' என்கிறார்கள் மூத்த பத்திரிகையாளர்கள்.