தமிழகத்தில் ஒரு பக்கம் டாஸ்மாக்கில் ஆயிரம் கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளதாக பரபரப்பாகப் பேசப்பட்டுவரும் நிலையில், அதற்கடுத்ததாக எடப்பாடிக்கும், செங்கோட்டையனுக்குமான மோதல் பரபரப்பாகப் பார்க்கப்படுகிறது. கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு பெரிய அளவில் முகங்காட்டாத செங்கோட்டையன், கடந்த சில வாரங்களில் மட்டும் தமிழகத்தின் ஹாட் டாப்பிக்காக மாறியிருக்கிறார்.
முதன்முதலாக அவினாசி -அத்திக்கடவு திட்டத்திற்கு நன்றி தெரிவித்த மாநாட்டில் எடப்பாடிக்கு எதிராகத் தன்னுடைய எதிர்ப்பை பதிவு செய்தவர், அடுத்தடுத்த கட்சி நிகழ்ச்சிகள், மாநில அளவிலான கூட்டங்கள் என்று தன்னுடைய நிலைப்பாட்டை எடப்பாடிக்கு எதிராக வெளிப்படுத்தியபடி வருகிறார். சமீபத்தில் முன்னாள் அமைச்சர் வேலுமணி மகனின் திருமணத்தில் எடப்பாடி வருவதற்கு முன்பாகவே வந்து, மணமக்களை வாழ்த்திவிட்டு சென்றுவிட்டார். அதேபோல் தற்போதைய தமிழக பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்பாக எதிர்க்கட்சித் தலைவர்கள் ஒன்றிணைந்து நடத்திய கூட்டத்தில் கலந்துகொள்வதை திட்டமிட்டுத் தவிர்த்துள்ளார். இப்படித் தொடர்ந்து எடப்பாடிக்கு எதிரான செங்கோட்டையனின் நிலைப்பாடு தான் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.
அதே சமயத்தில், திருச்சியில் நடந்த அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட அக்கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் பேசுகையில், "தி.மு.க.வை எதிர்க்கும் எந்தவொரு அணியும் எங்க ளுடைய தேசிய ஜனநாயகக் கூட்டணியில் வந்து சேரலாம். எங்களுடன் கைகோர்த்து தி.மு.க.வை எதிர்க்க எடப்பாடி இல்லாத அ.தி.மு.க.வோ, எடப்பாடியுடனான அ.தி. மு.க.வோ வந்தால் நாங்கள் அணி சேருவோம்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு முன்புவரை எடப்பாடி துரோகி என்றும், ஒருபோதும் அவருடன் நாங்கள் கூட்டணி வைக்க மாட்டோம் என்றும் கூறிய டி.டி.வி., தற்போது அ.தி.மு.க.வை கூட்டணியில் சேர்க்கலாம் என்ற இடத்திற்கு வந்துள்ளார். அதேபோல் அரசியலில் எல்லா மாற்றங்களுக் கான வாய்ப்புகளும் உண்டு என்று கூறினார்.
இந்நிலையில், பட்ஜெட் கூட்டத் தொடருக்காக தலைமைச் செயலகத்துக்கு வந்த செங்கோட்டையன், முதல்வர் கார் நிறுத்தும் போர்டிகோ அருகே இருக்கும் மூன்றாம் நுழைவாயில் வழியாக உள்ளே சென்றார். அதற்கு முன்னதாகவே அந்த வழியாக ஓ.பி.எஸ். உள்ளே சென்ற நிலையில், இருவரும் தனித்தனியாக சபாநாயகர் அப்பாவு அறைக்கு சென்று அவரிடம் சில நிமிடங்கள் பேசிவிட்டு, அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடக்கும் போதே செங்கோட்டையனும், ஓ.பி.எஸ்.ஸும் சட்டமன்றத்துக்குள் நுழைந்தனர். சட்டமன்றக் கூட்டத்தொடரில் பட்ஜெட் உரையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வாசிக்க ஆரம்பித்ததுமே எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி எழுந்து, "டாஸ்மாக் ஊழல் பற்றிய அமலாக்கத் துறையின் அறிக்கைக்கு அரசின் பதில் என்ன? இந்த அரசு ராஜினாமா செய்ய வேண்டும்'' என்றார். அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் எழுந்து சத்தமிட்டனர்.
எதிர்க்கட்சித் துணைத்தலைவர் உதயகுமாரும் எழுந்து, "சபாநாயகர் மீது நான் கொடுத்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை இன்றே எடுத்துக்கொள்ள வேண்டும்'' என்றார். ஆனால் சபாநாயகர் அதை நிராகரித்தார். இதையடுத்து எடப்பாடி பழனிசாமி வெளி நடப்பு செய்தார். ஆனால் செங்கோட்டையன் உடனடியாக வெளிநடப்பு செய்யவில்லை. சில நிமிடங்கள் கழித்து ஓ.பி.எஸ். வெளிநடப்பு செய்த நிலையில்... அவர் பின்னாலேயே செங்கோட்டையனும் சென்றார்.
இந்நிலையில், சட்டப்பேரவையில் சனிக்கிழமை வேளாண் பட்ஜெட் தாக்கலானபோது, சட்டப் பேரவைக்குள்ளேயே செங்கோட்டையன் அருகே அமர்ந்து சமாதானம் பேசும் முயற்சியில் முன் னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம், கடம்பூர் ராஜு, கே.பி.அன்பழகன், எஸ்.பி.வேலுமணி, காமராஜ் ஆகியோர் ஈடுபட்டனர்.
இவ்விவகாரம் குறித்து பத்திரிகையாளர்களிடம் செங்கோட்டையனும், எடப்பாடியும் கருத்து தெரிவிக்க மறுத்து விட்டனர்.
ஏற்கெனவே ஓ.பி.எஸ்., சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோர் இணைந்த ஒருங்கிணைந்த அ.தி.மு.க. வாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார் செங் கோட்டையன். "நான் தெளி வாக இருக்கிறேன். தன்னலம் கருதாது, இயக்கம் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகப் பாடுபடக்கூடியவன் நான். என்னை சோதிக்காதீர்கள். அதுதான் நான் விடுக்கும் வேண்டுகோள்'' என்று கடந்த மாதமே கூறியிருந்தார். இந்நிலையில் சட்டமன்றத்திலேயே எடப்பாடியைப் புறக்கணித்து, அவருக்கு எதிர்ப்பைக் காட்டியிருக்கிறார் செங்கோட்டையன்.
அ.தி.மு.க.வை கலைக்க பா.ஜ.க. மிகச் சிறப்பாகத் தன்னுடைய பணியைச் செய்து வருகிறது. அவர்களின் பணியை செங்கோட்டை யனை வைத்து முடிக்கத் திட்டமிட்டு, சரியான தருணத்தில் செங்கோட்டையன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களைக் கொண்டு கட்சியை இரண்டாக உடைத்து, ஒரு புதிய கூட்டணிக் கான அத்தியாயத்தை தொடங்கியுள்ளது. அதன் காரணமாகத்தான் சபாநாயகரை செங் கோட்டையன் தனியாகச் சந்தித்துப் பேசியிருப்பதாகத் தெரிகிறது. விரைவில் அடுத்த அணி அ.தி.மு.க.வில் கிளம்பக்கூடும் எனக் கணிக்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.