அமைச்சரவையை மாற்றியமைக்கும்படி முதல்வர் எடப்பாடியை வலியுறுத்தி வருகிறார் கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன். உடுமலைக்காக களத்தில் குதித்துள்ளது ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் லாபி.
தமிழக வீட்டு வசதித்துறை அமைச்ச ராக ஜெயலலிதா ஆட்சியில் நியமிக்கப்பட்டவர் உடுமலை ராதாகிருஷ்ணன். எடப்பாடி முதல்வரானபோதும் வீ.வ.துறை மந்திரியாகவே நீடித்தார். இந்த நிலையில், அ.தி.மு.க.விலிருந்து பிரிந்த ஓ.பி.எஸ். மீண்டும் அ.தி.மு.க.வில் இணைந்த போது, துணைமுதல்வர் அந்தஸ்துடன் ஜெயக்குமாரிடமிருந்த நிதித்துறையையும், ராதாகிருஷ்ணனிடமிருந்த வீட்டு வசதித் துறையையும் பறித்து ஓ.பி.எஸ்.சுக்கு ஒதுக்கினார் எடப்பாடி.
அதற்கு முன்பு ராதாகிருஷ்ணனை அழைத்துப்பேசிய எடப்பாடி, ""டெல்லியின் வலியுறுத்தல்கள் அதிகமாக இருக்கிறது. வீ.வ.துறையை விட்டுக்கொடுங்கள். சில மாதங்கள் கடந்ததும் அமைச்சரவையை மாற்றியமைப்போம். அப்போது, வருவாய் மிகுந்த ஒரு துறையை ஒதுக்குகிறேன். இப்போதைக்கு கால்நடையை ஏற்றுக் கொள்ளுங்கள்''’என அழுத்தம் கொடுக்க, அதனை தவிர்க்க முடியாமல் விட்டுக் கொடுத்தார் ராதாகிருஷ்ணன்.
இந்த நிலையில், ’’ஓ.பி.எஸ். இணைந்து 10 மாதங்கள் கடந்து விட்டபோதும் அமைச்சரவையை மாற்றியமைக்கவில்லை முதல்வர். மாற்றவேண்டுமென எடப் பாடியிடம் ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியபோதும், அவர் அக்கறை காட்டாததால், கொடுத்த வாக்கை மீறுகிறார் என எடப்பாடி மீது ஏக அதிருப்தியில் இருக்கிறார் உடுமலை. இப்படிப்பட்ட சூழலில், டெல்லியின் சொல்லுக்கு மட்டுமே எடப்பாடி கட்டுப்படுகிற நிலை இருப்பதால், பிரதமர் அலுவலக அதிகாரிகளிடமும், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவிடமும் நட்புடன் இருக்கும் தமிழக ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் சிலர், உடுமலைக்காக காய்களை நகர்த்தி வருகின்றனர்''’என்கிறது கோட்டை வட்டாரம்.
மேலும் நாம் விசாரித்தபோது, ""கூவத்தூரில் எம்.எல்.ஏ.க்களை அடைத்து வைத்து எடப்பாடியை முதல்வராக ஏற்க வேண்டுமென சசிகலா வலியுறுத்தியதை அப்போது ஏற்றுக்கொண்டனர். இதற்காக, தங்க நகைகள், கோடிகளில் பணம் என 99 சதவீத எம்.எல்.ஏ.க்களுக்கு கொடுக்கப்பட்டது. பணத்துக்கு முதல்வர் பொறுப்பேற்க, அப்போது சுமார் 110 கோடியை எடப்பாடிக்காக உடுமலை திரட்டித்தர, "இதனை கடனாகத்தான் வாங்குறேன். திருப்பித் தந்துவிடுகிறேன்' என சொல்லியிருக்கிறார் எடப்பாடி. அதில் பாதி தொகைதான் திருப்பித் தரப்பட்டுள்ளது. "எடப்பாடிக்காக அன்றைக்கு நான் உதவினேன்; ஆனா, எனக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்ற மறுக்கிறார்' என நெருங்கிய தொடர்புகளிலெல்லாம் ஆதங்கப்பட்டு வருகிறார் உடுமலை. இந்த நிலையில் தான் "உடுமலை ராதாகிருஷ்ணனுக்காக குதித்துள்ளது ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் லாபி'’ என்கிறார்கள் அதிகாரிகள்.''
-இளையர்