ஒரு சொத்து குறித்த வழக்கு பல்வேறு திருப்பங்களைக் கண்டு, கடைசியில் பலரையும் திகைக்க வைத்திருக்கிறது. அது என்ன? விரிவாகவே பார்ப்போம்.
சென்னை நெற்குன்றம் பகுதியில் இருக்கிறது திருவல்லீஸ்வரர் கோயில். இந்தக் கோயிலை அறநிலையத்துறை தங்களுக்குச் சொந்தம் என்று சொல்ல, இல்லையில்லை, அது எங்கள் குடும்பத் துக்குத்தான் சொந்தம் என்று காசிவிஸ்வநாதன் என்பவர் உரிமை கொண்டாடினார். எனவே, 1978-ஆம் ஆண்டு, அறநிலையத் துறையின் இணை ஆணையர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இதை விசாரித்த நீதிமன்றம், அந்த இடம், அறநிலையத் துறைக்குச் சொந்தமானது என்று கூறி வழக்கைத் தள்ளுபடி செய்தது.
வழக்கைத் தொடுத்த காசிவிஸ்வநாதன் இறந்துபோன நிலையில், அவரது மனைவி பொன்னம்மாள், மேல்முறையீடு செய்ய, அதுவும் தள்ளுபடி ஆனது. கூடவே அந்தக் கோயிலுக்கு ஒரு தக்காரையும் நியமித்தது. இந்த சூழ்நிலையில், பூந்தமல்லி சப்-கோர்ட்டில் வழக்கு தொடுத்து, அறநிலையத் துறை ஆணையரோ, இணை ஆணையரோ தங்களது நிர்வாகத்தில் தலையிடக்கூடாது எனக்கூறி தடை உத்தரவை பொன் னம்மாள் தரப்பு பெற்றுள்ளது.
இந்த நிலையில், சென்னை மாநகரப் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க மெட்ரோ ரயில் திட்டம் 2007-ல் உருவாக்கப்பட்டது. இதற்காக நிலம் எடுக்கும் வேலைகள் தொடங் கியது. அந்த நேரத்தில், மெட்ரோ ரயில்களை நிறுத்திவைக்கவும், அதன் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள வும் இடம் வேண்டும் என்று அந்தப் பிரச்சினைக்குரிய கோயில் இடத்தை மெட்ரோ நிர்வாகம், அறநிலையத் துறையிடம் கேட்டது. அப்போதைய ஆணையர் சம்பத்தும் அதற்கான ஒப்புதலை வழங்கி இருக்கிறார்.
இதையடுத்து அந்தப் பகுதியில் மெட்ரோ வேலைகள் தொடங்கிய நிலையில், வழக்குப் போட்ட பொன் னம்மாளின் வாரிசான சண்முகவேல் என்பவர், "எங்களுக்குச் சொந்தமான இடத்தை அறநிலையத் துறை எப்படி மெட்ரோவுக்குக் கொடுக்கலாம்?''’எனச் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கைத் தொடுத்தார். இதை விசாரித்த உயர்நீதிமன்றம், அந்தக் கோயில் இடம் மெட்ரோ பணிக்காகக் கொடுக்கப்பட்டதில் எந்தத் தவறும் இல்லை என்று சொன்னதோடு, அந்த இடத்துக்கான விலையை மாவட்ட ஆட்சியர் நிர்ணயம் செய்யவேண்டுமென்றும் கூறியது. மேலும், அந்தத் தொகையை மெட்ரோ ரயில் நிர்வாகம், பூந்தமல்லி சப்-கோர்ட்டில் டெபாசிட் செய்யவேண்டுமென்றும், வழக்கு யாருக்கு சாதகமாக முடிகிறதோ, அவர்கள் அந்தப் பணத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தியது.
இதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர், சதுர அடிக்கு ரூ.1500 என்று மதிப்பிட்டு, அந்த இடத்துக்கு ரூ.46 கோடி என்று மதிப்பிட்டார். அந்தத் தொகையை மெட்ரோ7 டெபாசிட் செய் யத் தயாராகவேண்டிய நிலை உருவானது. இந்த நிலையில்தான் இன்னொரு ஆச்சர்யத் தகவல் அனைவருக்கும் தெரியவந்தது.
மெட்ரோ ரயில் பணிகளுக்கான நில ஒதுக்கீட்டில், இதற்கும் முன்பாக மெட்ரோ ஸ்டேசனுக்கான நில ஒதுக்கீட்டில் சுமார் 7 ஏக்கர் நிலம் தற்போது விவகாரம் செய்துவரும் பொன்னம்மாள் கணவர் காசிவிஸ்வநாதன் தரப்புக்குச் சொந்தமானது என்றும், அந்த நிலத்துக்கு ஏற்கெனவே மெட்ரோ நிறுவனமும், அரசும், நிலத்துக்கான அன்றைய அரசு மதீப்பீட்டின்படி, சதுர அடிக்கு 400 ரூபாய் என்ற விகிதத்தில், 7 ஏக்கர் நிலத்திற்கு ரூ.17 கோடியை அரசு அவர்களுக்கு வழங்கியுள்ளது என்றும் தெரியவந்தது.
இந்நிலையில், கோவில் நிலத்துக்காக சதுர அடிக்கு ரூ.1500 என்ற மதிப்பீட்டில் இழப்பீடு ஒதுக்கப்பட்டதைப் பார்த்த பொன்னம்மாள் தரப்பு, ஏற்கெனவே இழப்பீடு நிர்ணயிக்கப்பட்ட 7 ஏக்கர் நிலத்துக்கும் இழப்பீட்டுத்தொகையை தற்போதைய மதிப்பீட்டின்படி உயர்த்தி வழங்க வேண்டுமென்று வழக்கைத் தாக்கல் செய்தது. அதை விசாரித்த பூந்தமல்லி நீதிமன்றம் 7 ஏக்கருக்கு மொத்தம் 350 கோடியை வழங்க வேண்டுமென்று தீர்ப்பு வழங்கியது. இதைக்கண்டு அதிர்ந்துபோன அறநிலையத்துறை அதிகாரிகள், மேல்முறையீடு செய்தனர். இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்திற்கு கடந்த 8-ஆம் தேதி வந்தது.
அப்போது, சென்னையின் மையப்பகுதியான கோயம்பேட்டில் இவ்வளவு ஏக்கர் நிலம் உங்களுக்கு எப்படி வந்தது? என்ற கேள்வியை அரசு தரப்பு பொன்னம்மாள் தரப்பிடம் கேட்டது. பொன்னம்மாள் தரப்போ, அவருடைய அப்பா நீலமேகம் பிள்ளைக்கு அவருடைய மாமனார் 1941ஆம் ஆண்டு எழுதிக் கொடுத்த சொத்து இது என்று தெரிவித்தது. அதைப்போலவே பத்திரத்தி லும் இருந்தது. இத்தருணத்தில்தான், ஏற்கனவே கோயில் இடத்திற்கு உபரித்தொகை கேட்டு பொன்னம்மாள் தரப்பு தொடர்ந்த வழக்கு, பூந்தமல்லி சப்-கோர்ட்டில் இருப்பது உயர்நீதி மன்றத்தின் கவனத்துக்கு வந்தது.
கோயில் இடம் எப்படி இவருக்கு சொந்தமாகும்? என அடுத்தடுத்த சந்தேகம் எழவே, விசாரணை தொடர்ந்தது. மூலப்பத்திரங்களைத் துருவியபோது, பொன் இருளப்பன் என்பவர் பெயரிலான சர்வே எண் 2, தொடங்கி 30 வரையிலும் மொத்தமாக 48 ஏக்கர் நிலத்தை 1941-ல் நீலமேகம் பிள்ளை என்பவருக்கு விற்பனை செய்ததாக அவர் பெயரில் பத்திரப்பதிவு செய்துள்ளனர். அதேபோல 1920 டாக்குமெண்ட் படி, நெற்குன்றம் திருவல்லீஸ்வரர் கோயில் இடத்தை, பொன் இருளப்பன் பிள்ளையிடம் இருந்து வாங்கியதைப் போலவே பதிவு செய் துள்ளனர். இது சைதாப்பேட்டை சப்-ரிஜிஸ்ட்ரர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தது. அங்கே விசாரித்தபோது, அதுபோன்ற எந்த டாக்குமெண்டும் பதிவு செய்யப்படவில்லை என்ற உண்மை தெரியவந்தது.
இதனிடையே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருக்கும் ரிசர்வே செட்டில் மெண்ட் ரிஜிஸ்ட்டர் டாக்குமெண்ட் எண் 1911-ன் படி, மணவாளசாமி நாயுடு என்பவரின் பெயரில் பதிவாகியுள்ளது. மணவாளசாமி நாயுடு, பொன் இருளப்ப பிள்ளைக்கு எழுதிக் கொடுத்ததாக எந்தப் பத்திரமும் இல்லை. இந்நிலையில், இவர் களாகவே அட்டு பத்திரம் தயார் செய்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. இதற்கு பொன்னம்மாள் தரப்பு பதில் சொல்ல முடியாமல் தவித்தது. இந்த விவகாரம் குறித்து காசிவிஸ்வநாதன், பொன்னம்மாள் தம்பதிகளின் மகன்களிடம் கேட்டபோது "வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் எதையும் எங்களால் இப்போது சொல்ல முடியாது''” என்றனர்.
போலிப் பத்திரத்தை வைத்து அரசிடமே 17 கோடி ரூபாய்க்கு கோயில் நிலத்தை விற்ற தில்லாலங்கடி வேலைகள் இப்போது அம்பலமாகி, பலத்த அதிர்வலைகளை உருவாக்கி வருகிறது.