(89) மைசூர் டூ மதுரை!
"மந்திரிகுமாரி' படம் பார்த்தவர்களால்... மறக்கவே முடியாது எஸ்.ஏ.நடராஜன் அவர்களை.
அரசாங்கத்தின் ராஜகுருவாக எம்.என்.நம்பியாரும், அவரின் மகன் பார்த்திபன் என்கிற கொள்ளைக்காரனாக எஸ்.ஏ.நடராஜனும் நடித்திருப்பார்கள். இந்தப் படத்தின் வசனத்தை கலைஞர் மு.கருணாநிதி எழுதியிருந்தார். பார்த்திபன் கொள்ளைக்காரன் என்பதை தளபதி வீரமோகன் (எம்.ஜி.ஆர்.) கண்டுபிடித்து கைது செய்வார். மரணதண்டனை விதிக்கப்படும் பார்த்திபனுக்கு. அதிலிருந்து மகனைக் காப்பாற்றத் துடிக்கும் ராஜகுரு... ‘கொள்ளையடிப்பதை விட்டுவிடும்படி’ சொல்லுவார்.
ராஜகுரு -அந்த தொழிலையே விட்டுவிடலாம் பார்த்திபா...
கொள் -நல்ல கதை. தொழிலா அது? என் கலையப்பா கலை. அந்தக் கலையை நான் விடமுடியாது.
ராஜகுரு -ஏன்? கொள்ளையடிக்காமல் இருக்க முடியாதா? இருக்கக் கூடாதா?
கொள் -இருக்கலாம். புலி ஆட்டைக் கொல்லாமலிருந்தால்... கொக்கு மீனை கொத்தாமல் இருந்தால்... பாம்பு தவளையை விழுங்காமல் இருந்தால் நானும் கொள்ளையடிக்காமல் இருக்கலாம்.
-"கொள்ளையடிப்பது கலை' என எஸ்.ஏ.நடராஜன் வசனம் பேசும் விதமும், அவரின் அலட்சியமான நடிப்பும் பிரமாதமாக இருக்கும். இந்த நீண்ட வசனக்காட்சியில் படம் பார்க்கும் ரசிகர்களின் விசிலும், கைதட்டலும் அடங்க வெகுநேரமாகும்.
ஏற்கனவே "கன்னியின் காதலி' படத்தில் ஹீரோவாக எஸ்.ஏ.நடராஜனும், அஞ்சலிதேவி, மாதுரிதேவி உள்ளிட்டோரும் நடித்திருந்தனர். மேலும் சில படங்களில் சிறு சிறு வேஷங்களில் நடித்துவந்தபோதுதான் மாடர்ன் தியேட்டர்ஸி லிருந்து "மந்திரிகுமாரி' படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. இந்தப் படத்தில் ஹீரோ எம்.ஜி.ஆர். என்றாலும், வில்லனாக நடித்த எஸ்.ஏ.நடராஜனுக்கு படத்தில் அதிக வாய்ப்பு தரப்பட்டிருந்தது.
"உலவும் தென்றல் காற்றினிலே'’ மற்றும் "வாராய் நீ வாராய்... போகுமிடம் வெகு தூர மில்லை' என இரண்டு பாடல் காட்சியும் அவருக்குத் தரப்பட்டது.
"மந்திரிகுமாரி' வெற்றியால்... எங்கு சென்றாலும் எஸ்.ஏ.நடராஜனின் புகழ்பாடுவார்கள். இதனால் அவருக்கு ஒரு ஆசை பிறந்தது.
"நமக்குத்தான் நல்ல பேரும்-புகழும் கிடைத்துவிட்டதே... இனி நாமே ஒரு படம் தயாரிக்கலாம்... ஹீரோவாக நடிக்கலாம்... டைரக்ஷனும் பண்ணலாம்'' என முடிவுசெய்தார். தன் நண்பரான பிரபல கேமராமேன் ஜே.ஜி.விஜ யன் அவர்களையும் படத் தயாரிப்பில் பங்குதாரராக சேர்த்துக்கொண்டார். இருவரும் ஏ.பி.நாகராஜன் அவர்களிடம் "நல்லதங்கை' படத் திற்கான கதை-வசனத்தை எழுதி வாங்கினார்கள். எஸ்.ஏ.நடராஜன், எம்.என்.நம்பியார்... ஆகிய இரண்டு ஹீரோக்கள், கதாநாயகிகளாக ராஜசுலோச்சனாவும், மாதுரிதேவியும் நடித்தார்கள். படம் வெளியாகி, வெற்றிபெற்றது.
இந்த வெற்றியின் போதை நடராஜனை அளவுக்கு மீறி ஆட்டிப்படைத்தது. அடுத்த படத்தை கே.ஜி.விஜயனுடன் இணைந்து தொடங்கினார். பிரபல எழுத்தாளர் எஸ்.டி.சுந்தரம் அவர்களிடம் கதை, வசனம் மற்றும் பாடல் எழுதி வாங்கிக்கொண்டார்கள். படத்திற்குப் பெயர் "கோகிலவாணி' தமிழ் மற்றும் கன்னடம் என இரு மொழிகளில் எடுக்க முடிவானது. ஹீரோ நடராஜன். தமிழ்ப்பதிப்பில் ஹீரோயினாக... சிவாஜி கணேசன் அவர்களின் நாடகங்களில் நடித்துவந்த தாம்பரம் லலிதாவைவும், கன்னடத்தில் புதுமுக நடிகையான சரோஜாதேவியையும் நடிக்கவைத்தனர். இந்தப் படத்தின் இரு மொழி பதிப்புகளிலும் நான் நடித்தேன்.
நடராஜனை எனக்கு எப்படி தெரியுமென் றால்... சினிமாவில் நடிக்கும் ஆசையோடு... பிரபல பாடலாசிரியரும், "பராசக்தி' படத்தில் பூசாரியாக நடித்தவருமான எனது ஒன்றுவிட்ட அண்ணன் கவி.கே.பி.காமாட்சி அவர்களின் வீட்டில் தங்கியிருந்தேன். "நல்லதங்கை' படத்திற்காக இரண்டு பாடல்களை அண்ணனிடம் எழுதி வாங்கிய நடராஜன்... ""கவிஞர்கிட்ட சொல்லி பாட்டுக்கான சம்பளத்தை கொஞ்சம் குறைச்சுக்கச் சொல்லு'' என என்னிடம் நடராஜன் சொன்னார். நானும் அண்ணனிடம் சொல்லி, சம்பளத்தை குறைத்துக்கொள்ளச் செய்தேன். அந்த வகையில் நடராஜனுடன் எனக்குப் பழக்கம். அதனடிப்படை யில் "கோகிலவாணி' படத்தில் நடிக்கச் சென்றேன்.
நட்டுவனார், ரௌடி, மேனேஜர், திருடன், போலீஸ்காரன், கண்தெரியாத பாடகன்... இன்னொரு வேஷம் ஞாபகமில்லை... ஆக அந்தப் படத்தில் ஏழு வேஷத்தில் வந்தேன். எல்லாமே ஒவ்வொரு ஸீன்தான். அதாவது... ஏழு துணை நடிகர்கள் நடிக்க வேண்டிய இடத்தில் என்னையே நடிக்கவைத்தார்கள் சிக்கனமாக. எனக்கு சம்பளம் கிடையாது. சோறு மட்டும் போட்டார்கள். முழுக்க மைசூரில் படப்பிடிப்பு நடந்து முடிந்தது. படம் வெளியானது. இருமொழிகளிலுமே படம் படுதோல்வியானது. நான் மைசூரிலிருந்து மதுரை வந்து, எங்கள் ஊரான எழுமலை செல்லத் திட்டமிட்டு... டிக்கெட்டிற்காக பணம் கேட்டேன்.
""உனக்கு சோறுபோட்டதே பெரிய விஷயம்... கோயம்புத்தூருக்கு ஒரு விஷயமா என்னோட கார் போகுது... அதுல போய் அங்க இறங்கிக்க. கோவைலருந்து நிறைய லாரி மதுரைக்குப் போகும். ஏதாவது ஒரு லாரியில ஏறிப்போ'' என்று... படம் தோற்ற கடுப்பில் கடுங்கோபத்தோடு கத்தினார் நடராஜன்.
அங்கிருந்து கிளம்பினால் போதும் என்று... அவருடைய காரில் கோவை வந்தேன். அங்கிருந்து கெஞ்சோ கெஞ்சென்று கெஞ்சி... ஒரு லாரியில் மதுரை போனேன். மதுரையிலிருந்து எங்கள் ஊரான எழுமலைக்கு தனியார் பஸ் கண்டக்டரிடம் கடன் சொல்லி, ஊருக்கு வந்தேன்.
வீட்டுக்குப் போனேன்.
நான் "அம்போ' என்று வந்ததையும், துணை நடிகனாக நான் நடித்த "கோகிலவாணி' படம் தோல்வியடைந்ததையும் அறிந்து, என் குடும்பத் தினர் என்னை "சாப்பிடு' என்றுகூட சொல்ல வில்லை. "கூத்தாடிப் பொழப்பு வேணாம்னு பலதடவை சொல்லியும் கேட்கல. எக்கேடும் கெட்டுப் போகட்டும்' என்று வசை மொழியை வாரி இறைத்துக்கொண்டேயிருந்தார்கள். தனிமை யில் தவியாய்த் தவித்தேன். (என் துயரங்களை என்னால் எழுதமுடியும்... ஆனால் அதை எழுத எழுத்துக்களைக் காணவில்லையே)
என்னால் அழுகையை அடக்கமுடியவில்லை. தலைகுனிந்து அழுதுகொண்டேயிருந்தேன். "ஏன் அழுகிற?' என்று யாரும் கேட்கவில்லை.
இரவு வந்தது. என் அண்ணன் கிருஷ்ண சாமிக்கு இரக்கமும் பிறந்தது. அவர்தானே என்னை நாடகத்தில் நடிக்க ஏற்பாடு செய்தார்... என்னை நடிகனாக்கவேண்டும் என்று பாடுபட்டார்... நாட கத்தில் நான் வில்லனாக நடித்தபோது ஹீரோவாக நடிக்க யாரும் கிடைக் காதபோது, அவர் தானே ஹீரோவாக நடித்தார்... எனது நடிப்புத் திறமையை வெற்றிபெறச் செய்தார்.
அண்ணனுக்கு என்மேல் நம்பிக்கை இருந்தது.
""பாலு... அடுத்து நீ என்னடா செய்யப் போற?''’’
""எனக்கு கார் டிரைவிங் லைசென்ஸ் எடுத்துக்குடு... நான் மெட்ராஸ்ல டிரைவர் வேலை பார்த்துக்கிட்டே... நடிக்க முயற்சி செய்றேன்.''’
""லைசென்ஸ் எடுக்க எவ்வளவு பணம் தேவைப்படும்?''’
""அறுபது ரூபா இருந்தா... மதுரைல ஒரு இடத்துல கத்துத் தர்றாங்க.''’
""என்கிட்ட அவ்வளவு பணம் இல்லை யேடா...'' என புலம்பிக் குழம்பிய அண்ணன்... ""சரி... வா... மாமாகிட்ட கேட்போம்''’ என மதுரைக்கு அழைத்துச் சென்றார்.
எங்கள் தங்கையின் கணவரான எங்கள் மாமா... அந்தக் காலகட்டத்தில் மதுரை டிஸ்ட்ரிக் போர்டு வைஸ் பிரசிடெண்ட்டாக இருந்தார். அதாவது... கலெக்டர் அந்தஸ்து.
மாமாவிடம் விஷயத்தைச் சொன்னார் அண்ணன். என் முகத்தைப் பார்க்கவே மாமாவுக்கு இஷ்டமில்லை. (பிற்காலத்தில் நான் "மிருதங்க சக்கரவர்த்தி' படம் எடுக்கும்போது என்னை மாமா வானளாவ பாராட்டி மகிழ்ந்தார்)
மாமா அறுபது ரூபாய் கொடுத்தார். லைசென்ஸ் எடுத்துக்கொண்டேன்.
என் அண்ணனும், தங்கையும் டிக்கெட்டுக்கு பணம் கொடுத்து சென்னைக்கு ஏற்றிவிட்டபோது... கண்ணைக்கட்டி காட்டில் விட்டதுபோல என்பார்களே... அப்படித்தான் இருந்தது.
சென்னை வந்தேன். நேற்று எடுத்த டிரைவிங் லைசென்ஸிற்கு இன்று யார் கார் ஓட்டும் வேலை கொடுப்பார்கள்? ஒளியில்லாத வழியிலே போய்க் கொண்டிருந்தேன்.
சில நாட்களிலேயே... "கோகிலவாணி' படத்தின் புரொடக்ஷன் மேனேஜர் ராகவனைப் பார்த்துவிட்டேன். அவரிடம் என் நிலைமையைச் சொன்னேன்.
""நீ ஒண்ணும் கவலப்படாத... எஸ்.ஏ.நட ராஜன் இப்போ ஓல்டு உட்லண்ட்ஸ் ஓட்டல்ல தங்கியிருக்கார். அவ ருக்கு சம்பளம் இல்லாத டிரைவர்தான் தேவை'' எனச் சொல்லிவிட்டு சிரித்தாரே ஒரு பேய்ச் சிரிப்பு...
என்னை அங்கே அழைத்துச் சென்றார்.
ஹோட்டல் அறைக்கு வெளியே என்னை இருக்கச் சொல்லிவிட்டு உள்ளே போன ராகவன்... ""சார்... நம்ம பாலகிருஷ்ணன் டிரைவிங் லைசென்ஸ் வாங்கிட்டானாம். கார் ஓட்டத் தெரியுமாம். உங்களுக்கு கார் கழுவ அப்படி ஒருத்தன் தேவைதானே... அவனை அழைச்சிட்டு வந்திருக்கேன்...'' எனச் சொல்லியிருக்கிறார்.
""அங்கேயே இருக்கச் சொல்லு'' என நடராஜன் சொல்ல... வெளியே வந்த ராகவன் ""உன்னைப்பத்தி சொல்லீட்டேன். வெய்ட் பண்ணச் சொல்லீருக்கார். நான் வேற கம்பெனிக்கு வேலைக்குப் போகணும்'' எனச் சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார்.
(சரோஜாதேவி அவர்களும், அவரின் தாயார் அவர்களும் வந்தார்கள். அவர்களைப் பார்த்த தும் நான் அங்கேயே ஓரிடத்தில் தலைமறை வானேன்.
ஏன்?
சரோஜாதேவியின் தாயார் எஸ்.ஏ.நடராஜனுக்கு சாபம் விட்டார். ஏன்?
"கேரக்டர்' தொடர் குறித்து என்னிடம் பேச விரும்புபவர்கள் மாலை 5 மணிக்கு மேல் 96770 61186 என்ற எண்ணில் பேசலாம்.
-கலைஞானம்