வாக்குப்பதிவுக்கும் எண்ணிக்கைக்கும் இத்தனை நாள் வித்தியாசம் இருக்கிறதே..? தங்களுக்குச் சாதகமாக வாக்குப்பெட்டிகளை மாற்றிவிடுமோ ஆளும் அரசு..?'' -இந்தக் கேள்வி ஒவ்வொரு வாக்காளர்களின் மனதிலும் இருக்கின்றது. அதற்கான விடையை இன்றுவரை பகிரவில்லை தேர்தல் ஆணையம். எனினும், மக்களின் எண்ணத்தை மெய்ப்பிக்கும் வண்ணம் ஆங்காங்கே சம்பவங்கள் நடந்தேறி வருகின்றன.

c

இத்தகைய ஆபத்து எதுவும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக வாக்கு எண்ணிக்கை முடிந்த ஏப்ரல் 6-ந் தேதி மாலையிலேயே, நமது தேர்தல் பணி தொடர்கிறது என அறிக்கை வெளியிட்ட தி.மு.க. தலைவர் ஸ்டாலின் ""வாக்குச்சாவடிகளில் இருந்து மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக மையங்களில் கொண்டுவந்து வைக்கப்பட்ட பிறகு, அவற்றை காவல்துறையும் - தேர்தல் அதிகாரிகளும் பாதுகாத்துக் கொள்ளட்டும் என்று நம் வேட் பாளர்கள் இருந்திடலாகாது. ஏற்கனவே நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் - மதுரை மக்களவைத் தொகுதியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு அறைக்குள் அதிகாரிகள் சிலர் அனுமதியின்றி நுழைந்ததை நாம் இந்த நேரத்தில் மறந்து விடக்கூடாது. வாக்குப் பதிவிற்கும், வாக்கு எண்ணிக்கைக்கும் உள்ள இடைப்பட்ட காலத்தில், மிகுந்த விழிப்புணர்வுடன் “டர்ன் டியூட்டி அடிப்படையில்’’ அமர்ந்து கண்காணித்திட வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். தேர்தல் பணி என்பது தொடரவே செய்கிறது என்பதை மனதில் வைத்து அனைவரும் எச்சரிக்கை உணர்வுடன் செயல்படக் கேட்டுக்கொள்கிறேன்'' எனத் தெரிவித்திருந்தார்

தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சியின் தலைவர்களும் இதே எச்சரிக்கை உணர்வை தங்கள் தொண்டர்களுக்குத் தெரிவித்திருந்தனர். அதுபோக, அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர்-இணை ஒருங்கிணைப் பாளர்களான ஓ.பி.எஸ்-இ.பி.எஸ். ஆகியோரும் இதேபோன்ற எச்சரிக்கை உணர்வுடன் தங்கள் தொண்டர்களுக்கு அறிக்கை வெளியிட்டு ஆச்சரியப்படுத்தினர். எனினும், அதனையும் தாண்டி, அதிகாரிகள் துணையுடன் "வாக்குப்பெட்டியை' குறிவைத்த பகீர் சம்பவம் தூத்துக்குடியில் அரங்கேறியுள்ளது.

Advertisment

cc

மாவட்டத்திலுள்ள தூத்துக்குடி, கோவில்பட்டி, விளாத்திக் குளம், ஒட்டப்பிடாரம், ஸ்ரீவைகுண்டம் மற்றும் திருச்செந்தூர் உள்ளிட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு முடிந்ததும் சேகரிக்கப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை, அந்தந்த வாக்குப்பதிவிட மைய அலுவலர் மற்றும் போலீசாருடன் இணைந்து வாக்கு எண்ணும் மையமான வ.உ.சி. அரசு என்ஜினீயரிங் கல்லூரிக்கு கொண்டுவரப்பட்டு, பாதுகாப்பாக வைக்கும் பணி நடந்தது. இதில் 7-ம் தேதி அதிகாலை 01.40 அளவில், இருட்டில், வழக்கத்திற்கு மாறான பாதையில், 5 லாரிகளில் 20 அடி நீளமுள்ள மூடப்பட்ட கண்டெய்னர், என்ஜினீயரிங் கல்லூரி முகப்பின் வழியாக உள்நுழைந்து சென்றது. இதைக் கவனித்துவிட்ட அங்கேயிருந்த தி.மு.க.வினர் அந்தக் கண்டெய்னரைத் தடுத்து நிறுத்தியபோது, பிரச்சினை ஏற்பட்டது. மூடிய கண்டெய்னரை திறந்ததில், அதில் முழுக்க விவிபாட்டுடன் இணைந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் என்பது தெரியவர மிரட்சிக்குள்ளானார்கள் அங்கிருந்தவர்கள்.

""தொடக்கத்திலிருந்தே எங்களைத் திசை திருப்புவதற்கான முயற்சியில் ஈடுப்பட்டனர் அதிகாரிகள். தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியினைப் பொறுத்தவரை, மொத்தமுள்ள 405 பூத்களும் 85 மையங்களில் அடங்கியுள்ளது. இதனை மண்டலத்துக்கு ஒரு அலுவலர் வீதம் 26 மண்டலமாகப் பிரித்து அதற்கு தலைமை அதிகாரியாக சிம்ரன்ஜீத்சிங் சிலோன் எனும் வடக்கத்திய ஐ.ஏ.எஸ். அலுவலரை நியமனம் செய்திருந்தாங்க. வாக்குப்பதிவுக்கான நேரம் முடிந்ததும் அங்கு வந்து பூத் ஏஜெண்ட்கள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைச் சரி பார்த்து அவற்றை வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு அனுப்பிவைப்பது மண்டல அலுவலரோட வேலை. ஆனால் அன்றைய தினத்தில் வாக்குப் பதிவு மையங்களுக்கு அதிகாரிகள் வரவேயில்லை.

Advertisment

cc

ஏதோ தப்பு நடக்குதுன்னு தெரியவர, நானே ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு வாட்ஸப்பில் மெஸேஜ் போட்டேன். அதற்கடுத்த சிலமணி நேரங்களில் வந்தவங்க, இயந்திரத்தை அனுப்புவதிலேயே குறியாய் இருந்தாங்க. ஆனால் அத்தனை பேரும் பதட்டத்தோடு இருந்தது மட்டும் நிஜம். அங்கிருந்து 10 மணிக்கு மேல் புறப்பட்ட லாரிகள் நேராக, வழக்கமாக உள்ள பாதை தவிர்த்து புதிதாக போடப் பட்ட கணேஷ் நகர் பாதை வழியாக வாக்கு எண்ணிக்கை நடைபெறும் வ.உ.சி. அரசு என்ஜினீயரிங் கல்லூரிக்கு வந்தது. உள்ளூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்தும், மாவட்ட முழுமைக்குமுள்ள பூத்களிலும் உள்ள அனைத்து இயந்திரங்களும் அங்கு வந்துசேர நேரம் 01.30 ஆனது.

இவ்வேளையில், தேர்தல் பணி அல்லது தேர்தல் அவசரம் என்கின்ற எவ்விதக் குறிப்பும் ஒட்டப்படாமல், 20 அடி நீள கண்டெய்னர்களுடன் 5 லாரிகள் வழக்கமான பிரையண்ட் நகர் 6-வது வீதி பாதையைப் பயன்படுத்தி வந்தன. இது சந்தேகத்தைக் கிளப்ப, லாரியினை நிறுத்தினோம். உள்ளே இருந்தது அத்தனையும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களே. இதுகுறித்து கேள்வி எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், மாவட்ட ஆட்சியரின் வேண்டு கோளின்படி அங்கேயே நிற்க வைத்து, மறுநாள் புதுக்கோட்டை யிலுள்ள யூனியன் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அசந்து மறந்து இருந்தால் இங்குள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களுக்குப் பதில் கண்டெய்னரில் கொண்டு வரப்பட்ட இயந்திரங்கள் மாற்றப்பட்டிருக்குமோ என்கின்ற சந்தேகம் உள்ளது'' என்கிறார் தி.மு.க.வின் மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளரும், தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி முதன்மை முகவருமான வழக்கறிஞர் சுபேந்திரன்.

முகம் காட்ட மறுத்த தேர்தல் அலுவலர் ஒருவரோ, ""அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு ஆசுவாசப்படுத்திய அதே வேளையில், ஒன்றன்பின் ஒன்றாக மூடிய கண்டெய்னர்களைக் கொண்ட 5 லாரிகள் உள்ளே வந்தது. தடுத்து நிறுத்தி கேட்கையில், ஆரம்பத்தில் உள்ளே இருப்பது குப்பை என்றார்கள். அருகிலிருந்த கன்மேனும் ஏதும் பதில் சொல்லாமல் உம்மென்றிருந்தார். இது அங்கிருந்த கட்சிக்காரர்களுக்குத் தெரியவர... அத்தனை லாரிகளின் குறுக்கே நின்று மடக்கிப் பிடித்து ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். முதலில் அங்கிருந்த போலீஸ் எஸ்.ஐ. அங்கிருந்தோர்களை அதட்டி நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர முயன்றார். அது பலனளிக்காமல் போகவே, திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதியின் தேர்தல் அலுவலர் பேசிப் பார்த்தார். பலனில்லை.

cc

இந்நிலையில், 2 மணிக்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க, கண்டெய்னரில் இருப்பது என்ன..? என்ற கேள்வியை ஆக்ரோஷமாகக் கேட்டனர் தி.மு.க உள்ளிட்ட அரசியல் கட்சியினர். அப் பொழுது அனைவரின் முன்னிலையில் கண்டெய்னர் திறக்கப்பட 5 லாரிகளிலும் சேர்த்து மொத்தமாக 100க்கும் அதிகமான விவிபாட்டுடன் இணைந்த மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் இருந்தது தெரியவந்தது.

மிரட்சியான ஆட்சியரோ மெல்லச் சமாளித்து, ""வாக்குச் சாவடியிலுள்ள இயந்திரங்கள் பழுதானால் அதற்கு மாற்றாக இன்னொரு இயந்திரம் இருக்கும். அது தான் இது.! கண்டெய்னரிலுள்ள அனைத்து இயந்திரங்களும் புதுக் கோட்டை யூனியன் அலுவல கத்திற்கு செல்ல வேண்டியது. நாளை அங்கு சென்றுவிடும்'' என்றவர், நேரடியாக புதுக் கோட்டைக்குச் செல்லவேண் டிய இயந்திரங்கள் இங்கு கொண்டுவரப்பட்டது குறித்து இறுதிவரை வாய் திறக்க வில்லை. அந்த லாரிகளை இங்கு கொண்டுவரவேண்டிய அவசியம் என்ன..? இதையெல் லாம் பார்க்கும்போது பெட்டி மாத்துவாங்கன்னு சொல் வாங்களே அதுபோல் இருக் கின்றது'' என்றார் அவர்.

மறு நாள் மதியம் 1 மணிவரை கட்சிக்காரர்களால் பாதுகாக்கப்பட்ட 5 லாரிகளும் புதுக்கோட்டைக்குக் கொண்டு செல்லப்பட்டன. எனினும் மக்களின் சந்தேகம் மட்டும் நாளுக்கு நாள் வலுத்துக் கொண்டே உள்ளது என்பது மட்டுமே நிதர்சனமான உண்மை.

படங்கள்: விவேக்