நிலவின் தென்துருவத்தில் சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர் வெற்றிகரமாக இறங்கியதன் மூலம் உலகின் விழிகளை ஆச்சர்யத்தில் விரிய வைத்திருக்கிறது இந்தியா. சந்திரயான் -3-ல் மட்டுமல்லாது சந்திரயான் 1, 2-லும் தமிழர்கள் இடம்பெற்று நிலவு குறித்த விண்வெளி ஆராய்ச்சிப் பயணத்தில் தம் பங்களிப்பை அளித்துள்ளது தமிழர்களுக்குப் பெருமைசேர்த்துள்ளது.
வெகுகாலமாக நிலவு மனிதனின் கவிதையிலும் கனவிலும் மட்டுமே இருந்த நிலையில், இரண்டாம் உலகப் போருக்குப் பின் விண்வெளி ஆராய்ச்சி கள் வேகம்பெறத் தொடங்கின. இதில் வல்லரசுகளான ரஷ்யாவும் அமெரிக் காவும் ஆர்வம்காட்டிய நிலையில், நிலவுக்கு முதன்முதலில் விண்கலத்தை அனுப்பிய பெருமையை ரஷ்யா தட்டிச்செல்ல, நிலவில் முதலில் காலடிவைத்த மனிதனாக அமெரிக் காவின் நீல் ஆர்ம்ஸ்ட்ராங் பெய ர்பெற்றார்.
இந்த நிலையில்தான் இந்தியா சுதந்திரத்துக்குப் பின் விண்வெளி குறித்த தேடல்களைத் தொடங்கியது. சுதந்திரத்துக்குப் பின் இந்தியாவை அறிவியலின் பாதையில் நடத்தவேண்டுமென்று கனவுகண்ட முதல் பிரதமர் நேரு அதற்கு முக்கியக் காரணமானார். 1969-ல் ஆரம்பிக்கப்பட்ட இஸ்ரோ, 1988-ல் தனது முதல் செயற்கைக் கோளை விண்ணில் ஏவி, நாங்களும் ஆட்டத்தில் இருக்கிறோம் என உலகுக்குச் சொன்னது.
ஆனாலும் நிலவுக்கு விண்கலத்தை அனுப்புவது என்ற நிலைக்கு வந்துசேர மேலும் இருபதாண்டுகள் பிடித்தது. ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து 2008, அக்டோபர் 22-ல் அனுப்பப்பட்ட சந்திரயான் 1 திட்டத்தின் தலைவராக மயில்சாமி அண்ணாதுரை இருந்தார். கோடிக்கணக்கான டாலர்களை விண்வெளித் திட்டத்தில் கொட்டும் வல்லரசு நாடுகளுக்கு நடுவில், இந்தியா இத்திட்டத்துக்கு செலவிட்ட தொகை வெறும் 386 கோடிதான். கிட்டத்தட்ட ஓராண்டுக் காலம் சந்திரயான் 1 நிலவின் தென்முனையைப் படம்பிடித்து நிலவைக் குறித்த தகவல்களை விஞ்ஞானிகளுக்கு அனுப்பிவிட்டு தனது இயக்கத்தை நிறுத்திக்கொண்டது.
கிட்டத்தட்ட 11 ஆண்டு இடைவெளிக்குப் பின் சந்திரயான்-2, 2019 -ஜூலை 22-ல் விண்ணுக்கு ஏவப்பட்டது. சந்திரயான்-1 வடிவமைப்பில் வேறுபல நாடுகளைச் சேர்ந்த விண்வெளி அமைப்புகளின் உதவிகள் இருந்த நிலையில், சந்திரயான் -2-ன் லேண்டர், ஆய்வுசெய்யும் ரோவர் உள்ளிட்டவை முழுக்க முழுக்க இந்திய தயாரிப்பு என்பது இதன் சிறப்பாகும். சந்திரயான் 2-ஐ வடிவமைத்த பொறியாளர்களுள் ஒருவரான முத்தையா வனிதா, சந்திரயான் 2-வின் திட்ட இயக்குநர்களில் ஒருவராகப் பணியாற்றி பெருமைசேர்த்தார். இத்திட்டத்துக்கு ஆன செலவு ரூ.978 கோடி ஆகும். எனினும் சந்திரயான் 2 நிலவில் தரையிறங்கும்போது ஏற்பட்ட சிறுமோதலால் திட்டமிட்ட பணிகளை அதனால் முழுமையாக மேற்கொள்ள இயலவில்லை. ஆனால் அதன் ஆர்பிட்டர் இன்றும் நிலவின் சுற்றுப்பாதையில் வலம்வந்துகொண்டிருக்கிறது.
சந்திரயான் 2-லிருந்து பெற்ற பாடத்திலிருந்து, கற்றுக்கொண்ட அறிவியலாளர்கள் சந்திரயான் 3-க்குத் திட்டமிட்டனர். கிட்டத்தட்ட ரூ.615 கோடி செலவில் உருவாக்கப்பட்ட விண்கலம் 2023, ஜூலை 14-ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ்தவான் விண்வெளி மையத்திலிருந்து விண்ணில் ஏவப்பட்டது. 5 கட்டங்களாகத் திட்ட மிடப்பட்ட சந்திரயான் 3, முதலில் புவியின் சுற்றுவட்டப் பாதையை எட்டியது. பின் அங்கிருந்து நிலவை நோக்கிப் பயணம்செய்து, கடைசியில் நிலவின் தென்துருவத்தில் இறங்குவது என திட்டங்கள் வகுக்கப்பட்டிருந்தன.
பூமியின் சுற்றுப்பாதையிலிருந்து விண்கலம் உயர்த்தப் பட்டு கடந்த ஆகஸ்ட் 1-ஆம் தேதி நிலவின் சுற்றுவட்டப் பாதையை எட்டியது. பின் அங்கிருந்து அதன் உயரத்தை விஞ்ஞானிகள் குறைத்துக்கொண்டே வந்தனர். பின் ஆகஸ்ட் 23-ஆம் தேதி பெங்களூருவிலுள்ள கட்டுப்பாட்டு மையத்திலிருந்து விண்கலத்துக்கு சிக்னல் அளித்து மெல்ல மெல்ல சந்திரயான் 3-ஐ இறக்கினர். கிட்டத்தட்ட 1750 கிலோ எடைகொண்ட லேண்டர், வினாடிக்கு 1.6 கிலோமீட்டர் வேகத்தில் தரையிறக்கப்பட்டு மாலை 6.04-க்கு வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.
இதனையடுத்து லேண்டருக்கும் கட்டுப்பாட்டு மையத்துக்குமான தொடர்பு உருவாக்கப்பட, விஞ் ஞானிகள் ஆனந்தக்கண்ணீருடன் ஒருவரையொருவர் கட்டித் தழுவிக் கொண்டனர்.
தென்ஆப்பிரிக்காவிலிருந்து இதனைக் கண்டுகளித்த பிரதமர் மோடி, கைதட்டியும், தேசியக் கொடியை அசைத்தும் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
சந்திரயான் 1, 2-ஐப் போலவே, சந்திரயான்-3 திட்டத்திலும் தமிழர் களின் பங்களிப்பு உண்டு. சந்திரயான் 3 திட்டத்தில் திட்ட இயக்குநராக விழுப்புரத்தைச் சேர்ந்த வீரமுத்துவேல் தனது பங்களிப்பை அளித்து தாய்நாட்டுக்கு பெருமை சேர்த்தார்.
நிலவின் தென்துருவத்தில் சந்திரயான் -3ஐ வெற்றிகரமாக தரையிறக்க, அதேபோன்ற மண்ணைக் கொண்ட நாமக்கல்லி-ருந்து சுமார் 50 டன் மண், இஸ்ரோ தலைமையகத் துக்கு அனுப்பப்பட்டு அதில் விக்ரம் லேண்டரை தரையிறக்கி சோதனை யெல்லாம் மேற்கொண்டிருக்கிறார்கள். தமிழர்களுக்கு மட்டுமின்றி, தமிழ் மண்ணுக்கும் பங்குண்டு என்பது நாமெல்லாம் பெருமைப்படத்தக்க விஷயமாகும்.
சந்திரயான்-3, நிலவில் நீர், பனிக்கட்டி, கனிமங்கள், மண் மாதிரிகள், அதன் வளிமண்டலத்தை ஆய்வுசெய்து பெறப்பட்ட தகவல்களை நமக்கு அனுப்பும் எனவும், அதைக் கொண்டு எதிர்கால ஆய்வுகள் விரிவு படுத்தப்படும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போதைக்கு நிலவில் நான்கே நாடுகள்தான் கால்பதித்துள்ளன. ரஷ்யா, அமெரிக்கா, சீனா வரிசையில் இந்தியாவும் இணைந்ததன்மூலம் உலக நாடுகள் மத்தியில் இந்தியாவின் அந்தஸ்து உயர்ந்துள்ளது.