நீட் தேர்வு விலக்கு சட்டமசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க மறுக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசையும், நீட் தேர்வு குறித்து திமிராகப் பேசிவரும் கவர்னர் ரவியை கண்டித்தும் தமிழகத்தில் மதுரை நீங்கலாக அனைத்து மாவட்ட தலைநகரிலும் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தியது தி.மு.க.
சென்னையில் நடந்த போராட்டத்தின் முடிவில் தி.மு.க. இளைஞரணிச் செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பேசிய வார்த்தைகள் ஒவ்வொன்றும் அணுகுண்டு ரகம்!
மைக் பிடித்த உதயநிதி, "என்னைப் பொறுத்தவரை, நீட் தேர்வுக்காக 21 உயிர்களை பலி கொடுத்திருக்கிறோம். அந்த வலியை விட உண்ணாவிரதம் பெரிய வலியல்ல. நீட் தேர்வுக்காக 21 பேர் தற்கொலை செய்திருக்கிறார்கள். அது தற்கொலை அல்ல; அவை ஒவ்வொன்றும் கொலை. அதைச் செய்தது ஒன்றிய அரசு. அந்த கொலைகளுக்கு துணை நின்றது அடிமை அ.தி.மு.க.
நீங்கள் அமைச்சராக இருப்பதால் போராட்டத்தில் கலந்துகொள்ளக்கூடாது. சட்டச் சிக்கல் வரும் என சொன்னார்கள். அமைச்சர் பதவி பற்றியெல்லாம் எனக்கு கவலை இல்லை; போனால் போகட்டும் என சொல்லிவிட்டுத்தான் இந்த போராட்டத்தில் கலந்துகொள்ள வந்தேன். எங்களுக்கு, எங்கள் மாணவர்களின் கல்வி முக்கியம். அதற்காக எந்த இழப்பு வந்தாலும் சந்திக்கத் தயாராக இருக்கிறேன்.
கவர்னரிடம் ஒருவர், "நீட் தேர்வை ரத்து செய்யுங்கள்' என கேட்கிறார். அதற்கு கவர்னர், "ஐ வில் நெவெர் எவர்' என்கிறார். அவரை பார்த்துக் கேட்கிறேன்... ஆளுநர் அவர்களே, "ஹூ ஆர் யூ? ஆர் யூ பீப்பிள்ஸ் ரெப்பரெசன் டேட்டிவ்? யூ ஆர் ஜஸ்ட் போஸ்ட்மேன். எங்கள் முதல்வர் கொடுப்பதை ஒன்றிய அரசிடம் கொடுப்பதுதான் உங்கள் வேலை. நீங்கள் ஒரு தபால்காரர். அவர் ஆர்.என்.ரவி அல்ல; ஆர்.எஸ்.எஸ் .ரவி.
ஆளுநர் அவர்களே உங்க ளுக்கு ஒரு சவால் விடுகிறேன். எல்லா உரிமையும் உங்களுக்கு இருப்பது போல பேசுகிறீர்களே. உங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது. மக்களிடம் வாக்குகள் பெற்றா பதவிக்கு வந்தீர்கள்? இல்லையே! நீங்கள் உங்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டு, தமிழகத்தில் ஏதேனும் ஒரு தொகுதியில் நில்லுங்கள். உங்களை எதிர்த்து அடிமட்ட தொண்டனை நிறுத்துகிறோம். மக்களிடம் உங்கள் சித்தாந்தத்தைச் சொல்லி ஓட்டுக் கேளுங்கள். செருப்பால் அடிப்பார்கள்'' என்று உணர்ச்சிபொங்க, கவர்னரை சரமாரியாகப் விமர்சித்துப் பேசினார் உதயநிதி.
உதயநிதியின் ஆவேசத்தை மத்திய-மாநில உளவுத்துறையினர் குறிப்பெடுத்துக் கொண்டனர். உதயநிதியின் ஆவேசம், தி.மு.க.வில் மட்டுமல்ல அ.தி.மு.க., பா.ஜ.க. வட்டாரங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.