பொதுமக்கள் பலர் தந்த புகார்களை மொட்டைக் கடிதம் எனச் சொல்லி ராணிப்பேட்டை நிர்வாகம் புறக்கணிப்பதால் நொந்துபோயுள்ளனர் மக்கள்.
இதுபற்றி ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு நகரம் 12-வது வார்டு கவுன்சிலர் லோகேஷ் நம்மிடம், “10 வருடங்களுக்கு முன்பு எம்பெருமாள் தெருவிலுள்ள கம்சலாம்மாள் திருமண மண்டபத்தினர் (சமுதாயக்கூடம்) சாலையை ஆக்ரமித்து சுமார் 8 அடி உயரத்தில் 60 அடி நீளத்துக்கு காம்பவுண்ட் சுவர் எழுப்பிவிட்டனர். இந்த எம்பெருமாள் தெரு வழியாகத்தான் தாசிபுரம், பூபதிபுரம், களர் போன்ற பகுதிகளுக்கும் செல்லமுடியும். சாலையை ஆக்ரமித்து சுவர் எழுப்பியபோது அன்று பொதுமக்கள் யாரும் கேட்கவில்லை, அதற்கான தேவையும் இல்லாமல் இருந்தது.
இப்போது போக்குவரத்து அதிகரித்து இந்தச் சாலை வழியாக வாகனங்கள் செல்வதில் சிரமமாக உள்ளது, முகூர்த்த நாட்களில் இன்னும் சிரமம். அதோடு, காம்பவுண்ட் சுவருக்கு உட்புறம் கழிவுநீர்க் கால்வாய் செல்கிறது, அதனை சுத்தம் செய்யமுடியாததால் கழிவுநீர் தேங்கி தெருவே நாற்றமடிக்கிறது. நான் உள்ளாட்சி தேர்தலில் நின்றபோது இப்பகுதி மக்கள் என்னிடம் வைத்த கோரிக்கைகளில் முக்கியமானது, ஆக்ரமிப்பை அகற்றவேண்டும் என்பதே. நானும் தேர்தலில் வெற்றிபெற்று கவுன்சிலரானது முதல் ஆக்ரமிப்பை அகற்றுங் கள் என நகர்மன்றக் கூட்டத்தில் பேசிவருகிறேன். எனது வார்டு பொதுமக்கள் நேரடியாக நகர்மன்ற தலைவர் தேவி பென்ஸ்பாண்டியன், நகராட்சி ஆணையாளரைச் சந்தித்து மனு தந்தார்கள். சேர்மனின் கணவர் பென்ஸ் பாண்டியன், நகராட்சி அலுவலகத்தில் என்னிடம் உன் வார்டில் ஆக்ரமிப்புன்னு மொட்டை பெட்டிஷன் வந்திருக்குன்னு மக்கள் தந்த புகாரை நக்கலடிச்சார்.
அந்த திருமண மண்டபம் கம்சலாம்மாள்- சண்முகம் தம்பதிகளுடையது. அவர்களுக்கு வாரிசுகள் இல்லாததால் 1989-ல் தங்களது சொத்துக்களை ஒரு டிரஸ்ட் உருவாக்கி, இந்த சொத்துக்களிலிருந்து வரும் வருமானத்தை வைத்து மூன்று கோவில்களுக்கு அன்னதானம் செய்யவேண்டும் என உயில் எழுதிவைத்துவிட்டு இறந்துவிட்டனர். இந்த ட்ரஸ்டின் தலைவராக ஈஸ்வரப்ப நாயகர், பொருளாளராக ஜோதி இருக்கிறார்கள். தலைவராகவுள்ள ஈஸ்வரப்பன், பென்ஸ் பாண்டியன் சித்தப்பா, பொருளாளர் ஜோதி பெரும் பைனான்ஸியர். இவர் ஆற்காடு எம்.எல்.ஏ. ஈஸ்வரப்பன், பென்ஸ்பாண்டியன் போன்றவர்களுக்கு பைனான்ஸ் செய்கிறார்.
இதனால் இவர்களை வைத்துக்கொண்டு மண்டபத்தின் ஆக்ரமிப்பை இடிக்கவிடாமல் தடுக்கும் ஜோதி எங்களுக்கு நெருங்கிய உறவினர்தான். அதற்காக ஆக்ரமிப்பை அகற்றக் கூடாதா என்ன? கடந்த மூன்று தேர்தல்களாக பா.ம.க. வெற்றிபெற்ற வார்டில் தி.மு.க.வைச் சேர்ந்த நான் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றிபெற்றிருக்கிறேன். மக்கள் என் மீது வைத்துள்ள நம் பிக்கைக்கு எதிராக எப்படி செயல்படமுடியும்? ஆக்ர மிப்பை அகற்றுங்கள் என தொடர்ச்சியாக கேட்பதால் என்மீது வஞ்சம் வைத்துக்கொண்டு பேருந்து நிலையத்தின் அருகிலுள்ள எங்கள் பூர்வீக இடத்திற்கு அருகிலுள்ள நகராட்சி இடத்தை ஆக்ரமித்து விட்டோம் என சிக்கல் எழுப்பினார் சேர்மன் கணவர். அதிகாரிகள் வந்து இடத்தை அளந்து கல் நட்டார்கள். மண்டபத்தின் ஆக்ரமிப்பை அகற்ற வேண்டும் என நான் குரல்கொடுத்தாலே எங்கள் இடத்தை அளக் கிறார்கள். இதுவரை 3 முறை அளந்துவிட்டார்கள். என்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கி மண்டபத்தின் ஆக்கிரமிப்பு விவகாரத்தில் தலையிடாமல் செய்ய நினைக்கிறார்கள். இன்னும் 30 முறைகூட எங்கள் இடத்தை அளக்கட்டும் பயமில்லை'' என்றார்.
குற்றச்சாட்டுகள் குறித்து ஆற்காடு நகராட்சியின் ஆக்டிங் சேர்மனாக வலம் வரும் நகர்மன்ற தலைவர் தேவியின் கணவர் பென்ஸ் பாண்டியனிடம் கேட்டபோது, "ஜோதி செட்டியார் வயதானவர். கவுன்சிலர் தேர்தலின் போது அந்த வார்டில் அவர் மற்றொருவருக்கு ஆதரவு தெரிவித்தார், அந்த கோபத்தில் லோகேஷ் இப்படி செய்கிறார். இன்று நேற்றல்ல, பல ஆண்டுகளுக்கு முன்பு சுவர் கட்டப்பட்டுள்ளது. ஆக்ரமிப்பு என புகார் தந்து அதிகாரிகளை அழைத்துச் சென்று கவுன்சிலர் அளக்கிறார், இவர் ஏன் அங்கே செல்லவேண்டும்?, தர்ம காரியம் செய்யும் டிரஸ்ட்டை ஏன் தொந்தரவு செய்யவேண்டும்? நகரத்தில் பல இடங்களில் ஆக்ரமிப்பு உள்ளது, இடிக்கப்போனால் கோர்ட்டுக்குப் போகிறார்கள். குற்றம்சாட்டும் கவுன்சிலரே ஆக்ரமிப்பு செய்திருந்தார், அளந்து கல் போட்டுள்ளோம். அவரை நாங்கள் டார்ச்சர் செய்யவில்லை, ஆக்ரமிப்பை எடு என அவர்தான் அதிகாரிகளை டார்ச்சர் செய்கிறார். நானும், எம்.எல்.ஏ.வும் ஜோதிக்கு ஆதரவாக இருக்கிறோம் எனச்சொல்வது பொய். எம்.எல்.ஏ., நகராட்சிக்கு நிதி வாங்கித் தருவதோடு சரி, வேறு எந்த விவகாரத்திலும் தலையிடுவதில்லை''” என மறுத்தார்.
ஆற்காடு நகராட்சியின் சார்பில் பழைய பேருந்துநிலையத்தை இடித்துவிட்டு புதிய பேருந்துநிலையம் கட்டப்படுகிறது. பேருந்து நிலையம் அருகே மசூதி உள்ளது. அதனை இடிக்க நகராட்சி நிர்வாகம் முயன்றது. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்திலுள்ள நிலையில், இந்துத்துவ மனப்பான்மையோடு நகராட்சி சேர்மன் தரப்பு தலையிடுவதாக இஸ்லாமியர்களிடையே கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல் ஆற்காடு சேர்மனின் கணவர் மீது ஆளும்கட்சி கவுன்சிலர்களே பல புகார்களை தலைமைக்கு அனுப்பியுள்ளனர்.