தி.மு.க.வின் முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம், கடந்த 2012ஆம் ஆண்டு மார்ச் 29-ம் தேதி அதிகாலை நடைப்பயிற்சியின்போது கொல்லப்பட்ட விவகாரத் தில், கடந்த 10 ஆண்டு களுக்கும் மேலாக குற்ற வாளிகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை. மீண்டும் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு, நீதிமன்ற உத்தரவுப் படி சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து விசாரிக்க உத்தரவிட்டது. எஸ்.பி. ஜெயக்குமார், டி.எஸ்.பி. மதன், இன்ஸ்பெக்டர் ஞானவேல் ஆகியோர் அடங்கிய சிறப்பு தனிப் படை புலனாய்வுக் குழுவினர் தீவிரமாக விசாரித்து வந்தனர்.
ராமஜெயத்தை கொன்றவர்கள் யார் என்பது குறித்து பழைய தடயங்களையும், விசாரணை அறிக்கைகளையும் ஆய்வுசெய்த புலனாய்வுக்குழு, இதே முறையில் வேறு எங்கெல்லாம் கொலை நடந்துள்ளது, அதில் சம்பந்தப்பட்டிருந்த பழைய கொலையாளிகள் யார் என்பதையெல்லாம் கணக்கெடுத்து, முக்கியமாக, பாலன் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் என சிறையில் இருந்த ரவுடிகள், கைதிகள், குற்ற வழக்கில் ஈடுபட்டு வெளியிலுள்ள ரவுடிகள், கூலிப்படையினரின் பெயர் விபரங்களைச் சேகரித்தனர். மேலும், ராமஜெயம் கடத்தப்பட்ட இடத்திலிருந்து செல்போனில் பேசியவர்கள் என 1,400-க்கும் மேற்பட்ட நபர்களையும், அதே நேரத்தில் அந்தப் பகுதியில் சுற்றிய வாகனங்கள் பற்றியும் தகவல் திரட்டி, அவர்களிடமும் போலீசார் விசாரணை நடத் தினர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி, குடவாசல் பகுதியில் ஒரு குழுவினர் முகாமிட்டு தி.மு.க. பிரமுகர்கள் சிலரது நடமாட்டத்தைக் கண்காணித்து, ஒரு ஊராட்சி மன்றத் தலைவரையும் தூக்கி வந்து விசாரித்தனர்.
இறுதியில், கடந்த 21ஆம் தேதி, 20 பேர் அடங்கிய பட்டியலை சிறப்பு புலனாய்வுக் குழுவினர் தயார் செய்தனர். 22ஆம் தேதி டி.ஜி.பி. ஷகீல் அக்தர், 20 நபர்களிடமும் விசாரணை செய்தார். இதையடுத்து, அந்த 20 பேரில், சந்தேகத்துக்குரிய 13 பேர் கொண்ட பட்டியலை சிறப்பு புலனாய்வுக் குழு வெளி யிட்டது. தமிழகத்தின் பிரபல ரவுடிகள் திண்டுக்கல் மோகன்ராம், திருச்சி சாமிரவி, நரைமுடி கணேசன், சீர்காழி சத்தியராஜ், மாரிமுத்து, தினேஷ், திலீப் என்கிற லட்சுமி நாராயணன், தென்கோவன் என்கிற சண்முகம், ராஜ்குமார், சிவகுணசேகரன், சுரேந்தர், கலைவாணன், புதுக்கோட்டை வடகாட்டுப்பட்டி லெப்ட் செந்தில் ஆகிய 13 பேர் அப்பட்டியலில் இருந்தனர். இவர்களில் பலரது செல்போன் எண்கள் குடவாசல் பகுதியிலும், பிறகு காரைக்கால் பகுதியிலும் ஒன்றாக இருந்ததும், ராமஜெயம் கொல்லப்பட்ட நாளில் சம்பவம் நடந்த பகுதியில் இருந்ததும் உறுதிசெய்யப்பட்டது. பலகட்ட விசாரணைக்குப்பின் செல்போன்கள் எங்க ளுடையது தானென்றும், ஆனால் நாங்கள் வரவில்லையென்றும் கூறிவருகின்றனர்.
இந்நிலையில், சிறப்பு புலனாய்வு பிரிவினர், குறிப்பிடப்பட்ட 13 பேரிடமும் உண்மை அறியும் சோதனை நடத்துவதற்கு திருச்சி நீதிமன்றத்தில் அனுமதி கேட்டு மனுத்தாக்கல் செய்துள்ளனர். அதில் கேட்டுக்கொண்டபடி, 13 பேருக்கும் நீதிமன்றம் மூலம் சம்மன் அனுப்பப்பட்டது. உண்மைத்தன்மை கண்டறியும் சோதனை என்பது ஒரு மனித உரிமை மீறல் என்பதால், இதற்கான சிறப்பு அனுமதி டெல்லி தலைமையிடமிருந்து பெறப்பட்டு, அதன்பிறகு 13 பேருக்கும் சோதனை நடத்தப்படும் என்றும், அதற்குமுன் 13 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராகி தங்களுடைய சுய விருப்பத்தைத் தெரிவிக்க வேண்டும் எனவும்கூறி, 01.11.2022 அன்று 13 பேரோடு, சிறப்பு புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளும் திருச்சி 6வது குற்றவியல் நீதி மன்ற நீதிபதி சிவகுமார் முன்பு ஆஜரானார்கள்.
ரவுடி மோகன்ராம் சார்பில் ஆஜரான சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் அலெக்ஸ். 'ராமஜெயம் கொலை வழக்கில் 13 ரவுடிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்துவதற்கு முறையான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை. சிறப்பு புலனாய்வுக் குழு சமர்ப்பித்த மனுவில் ராமஜெயத்தின் உறவினர்களோ அல்லது அவரது மனைவியோ 13 நபர்களிடம் உண்மை கண்டறிய சோதனை நடத்தக்கோரியிருக்க வேண்டும். ஆனால் அப்படியெதுவும் இல்லை. உண்மை கண்டறியும் சோதனை நடத்துவதற்கு சிறப்பு புலனாய்வுக் குழு எஸ்.பி. ஜெயக்குமார் மனுத்தாக்கல் செய்யாமல், விசாரணை அதிகாரி டி.எஸ்.பி. மதன் தாக்கல் செய்திருக்கிறார்' என்று வாதிட்டார். சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகள் தாக்கல் செய்த மனுவில் முறையான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வில்லை என்றும், வழக்கின் விசாரணை குறித்து வருகிற 7-ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப் படும் என்றும் நீதிபதி சிவக்குமார் தெரிவித்தார்.
பின்னர், சென்னை உயர்நீதி மன்ற வழக்கறிஞர் அலெக்ஸ் செய்தியாளர்களிடம்... "முக்கியமாக, ராமஜெயம் மது குடிக்கும் பழக்கம் உள்ளவர் என்று அவர் உறவினர்கள் குறிப்பிடவில்லை. உடற்கூறு ஆய்வில் அவர் மது குடிப்பவர் என்று மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதேபோல, அமைச்சர் நேரு குடும்பத்தினரை ஏன் விசாரிக்க வில்லை?'' என்றும் கேள்வி யெழுப்பியவர், "உண்மை கண்டறியும் சோதனை நடத்தும் பொழுது தங்களது தரப்பில் ஒரு மருத்துவரையும் வழக்கறிஞரையும் அனுமதிக்க வேண்டுமெனத் தெரிவித்துள்ளோம். 13 பேரிடம் இந்த சோதனை நடத்துவதற்கு ராமஜெயத்தின் மனைவியோ அல்லது அவரது உறவினர்களோ கோரிக்கை வைத்ததாக சிறப்பு புலனாய்வுக் குழுவின் மனுவில் குறிப்பிடப்படவில்லை. நீதிமன்றம் அனுமதியளிக்கும் பட்சத்தில், அதற்கு முழு ஒத்துழைப்பை வழங்குவோம்'' எனவும் தெரிவித்தார்.
இதுகுறித்து விசாரணை அதிகாரிகள் கூறும்போது, "அமைச்சர் நேரு குடும்பத்தினரிடம் முழுமையாக விசாரணை செய்யப்பட்டுள்ளது. பாலன் கொலை எப்படி நடந்ததோ அதே பாணியில்தான் ராமஜெயம் கொலையும் நடந்துள்ளது. சம்பவத்தன்று, 13 பேரில் சிலர் ராமஜெயம் நடைப்பயிற்சி செல்லும்போது அவரது தலையில் துண்டைப் போட்டு மூடி காருக்குள் தள்ளி இழுத்துச்சென்று கொலை செய்திருக்கிறார்கள். மோதிரம், ஷூ, செல்போனை எடுத்துச் சென்றுள்ளனர். குறிப்பிட்ட சிலரது செல்போன் சிக்னல்கள் சம்பவம் நடப்பதற்கு முன்னர், 25-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை காரைக்காலில் ஒன்றாக இருந்துள்ளது. சம்பவம் நடந்த 29-ம் தேதி, சம்பவம் நடந்த பகுதியில் இருந்துள்ளது தெரியவந்துள்ளது.
மேலும், இந்த பட்டியலில் உள்ளவர்கள் திண்டுக்கல் ஜாபர், நரிக்குடி பன்னீர், ஆராயி முருகேசன், பசுபதி பாண்டியன், மண்டையூர் நாகு, கடலூர் தாதா மணிகண்டன் தம்பி ஆறுமுகம், பூம்புகாரில் 2 கொலை, காரைக்கால் நாராயணன் ஆகியோர் கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்டும், சிக்காமல் தப்பியுள்ளனர். முறையான விசாரணைக்குப் பிறகே முதற்கட்டமாக 13 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனைக்குக் கேட்டிருக்கிறோம். சோதனைக்குப் பிறகே யாருக்காக இந்த கொலையைச் செய்தார்கள் என்பது தெரிய வரும். ஆனால் அதற்குள் சில ரவுடிகளிடமிருந்து விசாரணை அதிகாரிகளுக்கு மிரட்டல்கள் வரத் தொடங்கியுள்ளன'' என்றனர்.
மீண்டும் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது ராமஜெயம் கொலை வழக்கு.