ஏழைகளுக்கு குறைந்த விலையில் வீடு கட்டித்தருவதாகக் கூறி இந்தியா முழுக்க பொதுமக்களிடமிருந்து பணத்தைத் திரட்டியது பி.ஏ.சி.எல். என்ற நிறுவனம். சுமார் 6 கோடி மக்களிடமிருந்து 50,000 கோடி ரூபாய் வசூலித்திருந்தனர். இதன்மூலம் இந்தியா முழுக்க 3 லட்சம் ஏக்கருக்கு அதிகமான நிலங்கள் வாங்கப்பட்டன. தமிழகத்தில் மட்டும் 1 லட்சம் ஏக்கர் நிலங்களை அந்த நிறுவனம் வாங்கியிருந்தது. ஆனால், சொன்னபடி பொதுமக்களுக்கு நிலத்தையும் தராமல், வீடுகளைக் கட்டியும் தராமல் மோசடி செய்தது பி.ஏ.சி.எல். நிறுவன விவகாரத்தைக் கண்காணித்து வந்த வரதராஜன், இதுகுறித்து சி.பி.ஐ.யிடம் புகார் கொடுத்திருக்கிறார். இதனையடுத்து, இந்த மோசடி வில்லங்கங்கள் மீண்டும் சூடு பிடித்திருக்கிறது.
வரதராஜனிடம் இதுகுறித்து நாம் விசாரித்த போது,”"இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின் (செபி) விதிகள் மீறப்பட்டிருப்பதாக செபி குற்றம்சாட்டியது. அதனையடுத்து, பி.ஏ.சி.எல். நிறுவனம் தொடர்புடைய அனைத்து இடங்களில் இந்தியா முழுவதும் 2012-ல் அதிரடி சோதனை நடத்தியது சி.பி.ஐ.
பி.ஏ.சி.எல். நிறுவனத்தின் சேர்மன், நிர்மல்சிங்பங்க், இயக்குநர்கள் சுப்ரோட் டா பட்டாச்சார்யா, குருமீந்திரசிங், பிரதீப்குமார் உள்ளிட்ட 8 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இதில் பிரதீப்குமார் மட்டும் 2,000 கோடி ரூபாயுடன் அப்போதே வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டார். மற்ற 7 பேரும் உடனடியாக கைது செய்யப்பட்டு திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டனர். இப்போதும் திகார் ஜெயிலில்தான் இருக்கின்றனர். வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட், பி.ஏ.சி.எல். நிலங்களை கையகப்படுத்தி பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு வழங்குவதற்காக லோதா கமிட்டியை அமைத்தார்.
நிலத்தை கையகப்படுத்தும் முதல் நடவடிக்கையாக, சம்பந்தப்பட்ட நிலத்தின் மூலப்பத்திரத்தின் மீது, ‘நாட் ஃபார் சேல்’ (விற்பனைக்கு அல்ல) என்று முத்திரையிட்டு அனைத்து மாநில அரசுக்கும், பத்திரப்பதிவுத்துறை தலைவருக்கும் கடந்த 2015-லேயே 800 பக்கம் கொண்ட கடிதத்தை அனுப்பியதோடு, குறிப்பிட்ட சர்வே எண்கள் கொண்ட நிலத்தை பத்திரப்பதிவு செய்யக்கூடாது எனவும் எச்சரித்திருந்தார் லோதா.
இந்த நிலங்களை யாரும் வாங்கவோ விற்கவோ கூடாது என்றும், அந்த நிலங்களை விற்கும் அதிகாரம் லோதா கமிட்டிக்கு மட்டுமே இருக்கிறது என்றும் உச்சநீதிமன்றமும் உத்தர விட்டது. லோதா கமிட்டியால் முத்திரையிடப் பட்ட தமிழக நிலங்கள் மட்டும் 1 லட்சம் ஏக்கர். இவை சென்னை, திருச்சி, மதுரை, தூத்துக்குடி, விருதுநகர், நெல்லை உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய மாவட்டங்களில் பரவிக் கிடக்கின்றன.
பத்திரப்பதிவு செய்யக்கூடாது என எச்சரிக்கை செய்யப்பட்ட நிலையில், அந்த உத்தரவை மதிக்காமல், குறிப்பிடப்பட்ட 1 லட்சம் ஏக்கர் நிலங்களில் சுமார் 6,300 ஏக்கர் நிலங்களை போலி பத்திரப்பதிவு செய்து பலருக்கும் தாரை வார்த்திருக்கிறார்கள் தமிழக பத்திரப்பதிவு அதிகாரிகள்.
2016 முதல் இந்த மோசடி நடந்துள்ளது. அப்படி பத்திரப்பதிவு செய்யப்பட்ட அந்த நிலங்களின் அன்றைய வழிகாட்டும் மதிப்பு ரூ.500 கோடி; சந்தை மதிப்பு ரூ.1000 கோடி. இன்றைக்கு இதன் சந்தை மதிப்பு இன்னும் கூடுதலாக இருக்கும்.
இந்த முறைகேட்டில், பத்திரப்பதிவுத்துறை யின் உயரதிகாரியான கூடுதல் பதிவுத்துறை தலைவர் சீனிவாசன் தொடங்கி மாவட்ட பதிவாளர்கள், சார்பதிவாளர்கள் என ஒரு பெரிய மாஃபியா கும்பலே கூட்டுச் சதி செய்து நிலங்களை பதிவு செய்து கொடுத் துள்ளனர். இதற்காக, சுமார் 300 கோடி ரூபாய் வரை அதிகாரிகளுக்கு சப்ளையாகியிருக்கிறது.
உதாரணத்திற்கு, மதுரை சாமநத்தம் கிராமத்தில் 38.26 ஏக்கர் நிலம் பி.ஏ.சி.எல்.லுக்கு சொந்தமானது. ஓ.பி.எஸ்.ஸுக்கு நெருக்கமான ரவிச்சந்திரன் என்பவர் உயரதிகாரி சீனிவாசனை சந்திக்கிறார். உடனே, மதுரை தெற்கு ஜாயின்ட்-1 சார்பதிவாளருக்கு, பத்திரத்தை பதிவு செய்ய சீனிவாசன் உத்தரவு பிறப்பிக்க, பத்திரப்பதிவும் கச்சிதமாக நடந்துமுடிகிறது. இப்படித்தான் தமிழகம் முழுவதுமுள்ள 6,300 ஏக்கர் நிலங்களும் முறைகேடாக பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த முறைகேடுகள் பற்றி எடப்பாடி ஆட்சியின் போது அரசுக்கு ஆதாரப்பூர்வமாக புகார் அனுப்பினேன். நடவடிக்கை இல்லை. தி.மு.க. ஆட்சியிலும் பத்திரப் பதிவுத்துறை அதிகாரிகளால் லோதா கமிட்டியின் எச்சரிக்கைகள் மீறப்பட்டு பத்திரப்பதிவுகளும் தொடர்ந்தன. இதனால், சி.பி.ஐ. தலைமைக்கும் தி.மு.க. அரசுக்கும் புகார் அனுப்பினேன். எனது புகார் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. என்னை அழைத்து விசாரித் தார்கள். விவரங்களைக் கேட்டறிந்தபிறகு, இது குறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக அரசுக்கு ரிப்போர்ட் தந்துள்ளது லஞ்ச ஒழிப்புத்துறை. ஆனால், சார்பதிவாளர்கள் சிலர் மட்டும் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்களே தவிர, உயரதிகாரிகளான ஐ.ஏ.எஸ்.கள் மீது நடவடிக்கை இல்லை. அதனால் மீண்டும் சி.பி.ஐ. க்கும் லோதா கமிட்டிக்கும் புகார் அனுப்பியுள்ளேன்'' என்கிறார் மிக அழுத்தமாக.
சஸ்பெண்ட் செய்யப்பட்ட சார்பதிவாளர்கள் சிலரிடம் நாம் விசாரித்தபோது,’"பி.ஏ.சி.எல். நிலத்தை பதிவு செய்யக்கூடாதுங்கிறது எங்களுக்குத் தெரியாது. ஆனா, துறையின் உயரதிகாரிகள் சொல்வதை தட்டமுடியாத தால் பதிவு செய்யவேண்டியிருந்தது. இந்த வில்லங்கங்களை மீண்டும் சி.பி.ஐ. தோண்ட விருப்பதாலும், அறப்போர் இயக்கம் இந்த முறைகேடுகளை அம்பலப்படுத்தியதாலும் எங்களை பலிகடாவாக்கியுள்ளனர். இதில் உயரதிகாரியின் சாதிப்பாகுபாடான பார்வையும் உள்ளது''‘என்று குமுறுகிறார்கள்.
இந்த நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் இரண்டாவது விமான நிலையம் அமைப்பதற்கான நில எடுப்பு விவகாரத்தில், அரசுக்கு 165 கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்திய உயரதிகாரி சீனிவாசனை சஸ்பெண்ட் செய்துள்ளது தி.மு.க. அரசு.
பரந்தூர் விவகாரத்தை அம்பலப் படுத்தியிருக்கும் அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசனிடம் பேசியபோது, "சென்னையின் இரண்டாவது விமானநிலையம் அமையவிருக்கும் பரந்தூர் மற் றும் நெல்வாய் கிராமத்தில் பிரகாஷ் சில்க்ஸ் அண்ட் சாரீஸ் நிறுவனத்தைச் சேர்ந்தவர் களுக்கு 73 ஏக்கர் நிலம் இருக்கிறது. அரசு வழிகாட்டு மதிப்பின்படி இங்கு ஒரு ஏக்கர் நிலம் 8 லட்சத்து 71 ஆயிரம் ரூபாய். ஆனால், 1 ஏக்கர் நிலத்தை சிறிய சிறிய பகுதிகளாகப் பிரித்து சதுர அடியில் விலை நிர்ணயித்து 1 ஏக்கர் நிலத்தை 65 லட்சத்து 45 ஆயிரத்து 455 ரூபாய்க்கு பதிவு செய்ய முயற்சிக்கிறது அந்த நிறுவனம். ஆனால், காஞ்சிபுரம் ஜாயிண்ட்-2 சார்பதி வாளரான பிரகாஷ் மறுத்து விடுகிறார். அவருக்கு கடிதம் மூலமாக உத்தரவிடுகிறார் துறையின் கூடுதல் பதிவுத்துறை தலைவர் சீனிவாசன். அவர் மறுத்ததால், இடமாற்றம் செய்துவிட்டு, ராஜதுரை என்பவரை நியமித்து அவர் மூலம் ஜூலை 29, 2020-ல் பதிவு செய்கிறார் சீனிவாசன்.
பரந்தூர் விமானநிலையத்துக்கு நில எடுப்புப் பணிகள் நடக்கும்போது, அரசிடமிருந்து அதிகப்படியான இழப்பீட்டுத் தொகையைப் பெறலாம் என்கிற திட்டத்தில் இது நடந்திருக் கிறது. அதன்படி, 73 ஏக்கர் நிலத்தையும் மதிப்பிடும்போது, அரசின் வழிகாட்டுதல் மதிப்பின்படி கணக்கிட்டால் 165 கோடியே 69 லட்சத்து 40 ஆயிரத்து 860 ரூபாய் கூடுதலாக அரசு கொடுக்க வேண்டியதிருக்கும். அதன் உண்மையான மதிப்புடன் ஒப்பிடும்போது, 165 கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு. சீனிவாசன், ராஜதுரை, பிரகாஷ் சில்க்ஸ் நிறுவனத்தின் கூட்டுச் சதியில் இது நடந்திருக்கிறது. இது பற்றி துறையின் அமைச்சர் மூர்த்தி, தலைமைச் செயலாளர் இறையன்பு ஆகியோருக்கு புகார் அனுப்பினோம். தற்போது சீனிவாசனை சஸ்பெண்ட் செய்திருக்கிறது அரசு.
பி.ஏ.சி.எல். நில விவகாரத்திலும் ஏகத்துக்கும் விளையாடி யிருக்கிறார் இதே சீனிவாசன். அதேபோல, நெல்லை மாவட்டத்தின் உதவி பதிவுத்துறைத் தலைவராக கவிதாராணி இருந்த போதுதான் பி.ஏ. சி.எல். நிலங்கள் அதிகமாக பதிவு செய்யப்பட்டன. ஆனால், கவிதாராணி மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் நெல்லை மண்டலத்தின் துணை பதிவுத்துறை தலைவராக (டி.ஐ.ஜி.) ப்ரோமோஷன் கொடுத்துள்ளனர்.
குற்றச்சாட்டுகள் வரும்போதெல்லாம், சின்ன மீன்களான சார்பதிவாளர்களை தண்டிக்கிற அரசாங்கம், பெரிய திமிங்கலங்களான ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை தண்டிப்பதே இல்லை. தவறு செய்கிற ஐ.ஏ.எஸ்.கள் தண்டிக்கப்படாதவரை அரசு நிர்வாகம் சுத்தமாகாது; தி.மு.க. அரசுக்கும் கெட்டபெயரை உருவாக்கும்''’என்கிறார் அதிரடியாக.
இதுகுறித்து துறையின் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஜோதிநிர்மலாவின் கருத்தறிய முயற்சித்தபோது அவரது போன் தொடர்பு எல்லைக்கு வெளியிலேயே இருந்தது.
__________
இறுதிச்சுற்று
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தனது 70-வது பிறந்தநாளை முன்னிட்டு தொண்டர்களைச் சந்திப்பதற்காக சென்னை கோயம்பேட்டிலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு வந்தார். விஜயகாந்திற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிப்பதற்காக, தமிழகமெங்குமிருந்தும் தே.மு.தி.க. தொண் டர்கள் கட்சி அலுவலகத்தில் குவிந்தனர். தொண்டர்கள் மற்றும் ரசிகர்களைப் பார்த்து உற்சாகமான விஜயகாந்த், கைகளைக் கூப்பியும், கையசைத்தும், கட்டை விரலை உயர்த்திக்காட்டியும் தொண்டர்களை உற்சாகப்படுத்தினார். அதைக்கண்ட தொண்டர்கள், நெகிழ்ச்சியான மனநிலையில் "கேப்டன் வாழ்க!' என்று கோஷமிட்டும், தங்கள் செல்போனில் படமெடுத்தும் மகிழ்ந்தனர். தே.மு.தி.க. சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.