திருச்சி மாநகரைக் கடந்துசெல்லும் காவிரியாற்றின் மீது கட்டப்பட்டுள்ள நேப்பியர் பாலம் அருகே மண் அரிப்பு ஏற்படுவதை தடுக்கத் தடுப்பணை கட்டப்பட்டிருந்தது. மொத்தம் 850 மீட்டர் நீளத்தில், 6.5 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட இந்த தடுப்பணை (River Bed Protection wall), சில மாதங்களுக்குமுன் திறக்கப்பட்டது. சமீபத்தில் மேட்டூரிலிருந்து திறக்கப்பட்ட 1.6 லட்சம் கன அடி தண்ணீர் கரைபுரண்டு ஓடியது. இந்நிலையில் கொள்ளிடத்தில் 60 ஆயிரம் கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டது. இதில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், புதிய தடுப்பணை, 200 மீட்டர் தூரத்திற்கு தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டது.
இதுகுறித்து திருச்சி மாவட்ட நெடுஞ் சாலைத்துறையின் மண்டல பொறியாளராகப் பணியாற்றி, தற்போது திருவண்ணாமலைக்கு பணியிட மாறுதலில் சென்றுள்ள கிருஷ்ண சாமியிடம் பேசியபோது, "அந்த தடுப்புச்சுவர் கட்டியதற்கு காரணமே, அந்த இடத்தில் மணல் வந்து சேர்ந்தால் பாலத்தைத் தாங்கிநிற்கும் தூண்கள் சேதமடையாமல் இருக்கும் என்பதற் காகத்தான். கம்பரசம்பேட்டையில் தடுப்பணையை 2011-ல் 32 கோடி செலவில் 500 மீ தூரத்திற்கு கட்டினோம். தற்போது கொள்ளிடத்தில் மணல் அரிப்பை தடுப்பதற்கு கட்டப்பட்டுள்ள பாதுகாப்பு சுவரை தடுப்பணை போல கட்டியிருந்தால் 50 கோடி செலவாகியிருக்கும். ஆனால் இந்த தடுப்புச் சுவருக்கு 6.5 கோடி தான் செலவாகி உள்ளது. இதனை பி.கே.ராஜன் என்ற ஒப்பந்ததாரர் கட்டியுள்ளார். தண்ணீரின் வேகத்தால் மண் அரிப்பு ஏற்பட்டு தடுப்புச்சுவர் உடைந்துள்ளது. விரைவில் அதைச் சரிசெய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
திருச்சி மாவட்ட மாநில நெடுஞ் சாலைத்துறையின் முதன்மைப் பொறியாளர் கண்ணன் கூறுகையில், "தண்ணீர் முழுமையாக வடிந்த பிறகு பாதிப்பின் அளவைக் கண்டறிந்து, அதனை மீண்டும் கட்டுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இந்த தடுப்புச்சுவர் கட்டப்பட்டுள்ள இடத்தில் 700 மீட்டர் தூரத்திற்கு மணல் தேங்கியுள்ளது. ஆனால் தடுப்புச் சுவர் இடிந்த இடத்தில் மணல் பரப்பே இல்லை. விரைவில் பாதிக்கப்பட்ட சுவர் சரிசெய்யப்படும்" என்றார்.
அ.தி.மு.க. திருச்சி வடக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பரஞ்ஜோதி தலைமையில் அ.தி.மு.க.வினர் அப் பகுதியைப் பார்வையிட்ட பின், மாஜி பரஞ்ஜோதி பத்திரிகையாளர்களிடம், "கொள்ளிடம் ஆற்றில் நேப்பியர் பாலத்திற்கு கீழே அமைக்கப்பட்ட தடுப்புச்சுவர், சாதாரண வெள்ளத்திற்கே உடைந்திருக்கிறது. இதில் நடந்துள்ள முறைகேடுகளை கண்டறிய ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில், சிறந்த பொறியாளர்களை கொண்ட குழு விசாரிக்க வேண்டும். இல்லையேல் அ.தி.மு.க. சார்பில் திருச்சியில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்'' என்றார்.