அடிக்கடி ஜாதியரீதியிலான முட்டலும் மோதலும் நடக்கும் நெல்லை மாவட்டத்தில், நாங்குநேரியில் மாணவன் சின்னத்துரையும், அவனது சகோதரியும் கோரமாக வெட்டப்பட்டது தமிழக அளவில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது..
நாங்குநேரி பெருந்தெருவில் வசித்துவரும் ஆதிதிராவிட வகுப்பைச் சேர்ந்த முனியாண்டி- அம்பிகா தம்பதியினரின் மகன் சின்னத்துரை (17), மகள் சந்திராசெல்வி (12). அதேபோல் இவர்களின் பக்கத்து ஊரில் வசிக்கும் மற்றொரு சமுதாயத்தைச் சேர்ந்த சுப்பையா (17), செல்வரமேஷ் (17), சுரேஷ் வானு (16) ஆகியோர் வள்ளியூரிலுள்ள கண்கார் டியா மேல்நிலைப்பள்ளியில் படித்துவருகிறார்கள். இதில் சின்னத்துரை, சுப்பையா, செல்வரமேஷ் மூன்று பேரும் ஒரே வகுப்பில் 12ஆவது படித்துவருகிறார்கள். சுரேஷ்வானு 11- ஆம் வகுப்பு படித்துவருகிறான்.
சுப்பையா, செல்வரமேஷ், சுரேஷ் வானு மூன்றுபேரும் சேர்ந்து பள்ளியில் வைத்து தொடர்ந்து சின்னத்துரையை ஜாதிரீதியாக வன்கொடுமை செய்து துன்புறுத்தி மனஉளைச்சலை ஏற் படுத்திவருவதாக சின்னத்துரையும், அவருடைய தாயார் அம்பிகாவும் பள்ளி நிர்வாகத்திடம் புகார் கொடுத்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த மூன்று மாணவர்களும் கடந்த 9-ஆம் தேதி இரவு 9.45 மணிக்கு அவர்களுடைய உறவினர்களான செல்வத் துரை, கல்யாணி, வான்முத்து ஆகியோருடன் சேர்ந்து வெட்டுக்கத்தி மற்றும் அரிவாளுடன் சின்னத்துரையின் வீடுபுகுந்து அவரின் கைகள், வலது கால், மார்பு, தலை என உடலெங்கும் கொடூரமாக வெட்டிக் காயப்படுத்தி வீட்டையே ரத்தக்களறியாக்கியுள்ளனர். இதைத் தடுக்கவந்த சின்னத்துரையின் சகோதரி சந்திராசெல்வியின் கையையும் கொடூரமாக வெட்டியுள்ளனர்.
கண்ணிமைக்கும் நேரத்தில் இந்த கொடூர செயலை செய்துவிட்டு அந்த 6 சிறார்களும் தப்பியோடினார்கள். இந்த கொடூர சம்பவத்தை நேரில் பார்த்த அதே தெருவைச் சேர்ந்த கிருஷ் ணன் (50) சத்தம் போட்டபடியே தெருவில் கீழே விழுந்து இறந்தார். வீட்டிற்குள் ரத்த வெள்ளத்தில் போராடிக்கொண்டிருந்த சின்னத்துரையையும், சந்திரா செல்வியை யும் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். பதட்டத்தைத் தவிர்க்க போலீசார் அந்த 6 சிறார்களையும் கைது செய்தனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்த சின்னத்துரையையும், சந்திரா செல்வியையும் சபாநாயகர் அப்பாவு, அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் நேரில் சென்று பார்வை யிட்டு ஆறுதல் கூறியதோடு, தி.மு.க. சார்பில் 2 லட்சம் நிதியுதவியையும் தாயார் அம்பிகாவிடம் கொடுத்தனர்.
இந்த சம்பவம் குறித்து சின்னத்துரையின் தாயார் அம்பிகா கூறும்போது, “""எனது மகளுக்கு 2 வயது இருக்கும்போது கணவர் எங்களைவிட்டு பிரிந்து சென்றுவிட்டார். நாங்குநேரி அம்பேத்கர் அரசு நடுநிலைப்பள்ளியில் சமையல் பாத்திரங் களைக் கழுவியும், பக்கத்திலுள்ள வீடுகளில் வீட்டு வேலைகளையும் செய்துவருகிறேன். அதில் கிடைக் கிற கொஞ்ச வருமானத்தில்தான் பிள்ளைகளை படிக்கவைத்து வளர்த்து வருகிறேன். சின்னத்துரை 8 நாளாட்டு பள்ளிக்கூடத்துக்கு போகல. ஏன்னு கேட்டதுக்கு உடம்பு சரியில்லைனு சொன்னான். மறுபடி அவனே, நான் இனி பள்ளிக்குப் போகல. சென்னைக்கு வேலைக்குப் போறேன். என் ப்ரெண்ட் கூப்பிட்டான். தங்கச்சியை அவள் ஆசைப்படி படிக்க வையினு சொன்னான். அதுக்கு சம்மதிக்காமல் நீயும் படிக்கணும். இன்னும் 6 மாசம் நீ படிச்சா சென்னையிலுள்ள காலேஜுக்கே படிக்க போகலாம். இப்பம் நீ வேலைக்கு போகக்கூடாதுன்னு கண்டிப்பா சொன்னேன்.
இந்த நிலையில்தான் அவன் எங்ககிட்ட சொல்லாமல் 8-ஆம் தேதி சென்னைக்குப் போக ரயில் நிலையத்தில் நின்ன அவனை விவேக் என்கிற பையன் பார்த்து தடுத்து வீட்டுக்கு கூட்டிட்டு வந்தான். வீட்டுக்கு வந்தவன் அழுதுகிட்டே சொன் னான், "நான் ஏன் பள்ளிக்கூடத்துக்குப் போக லைன்னா என்னை ஜாதியைச் சொல்லி கிண்ட லடிச்சி அடிமையா நடத்துறாங்க. பள்ளியில் எல்லாருக்கு முன்ன மோசமாக நடத்தி அடிக்கி றாங்க. நான் நல்லா படிக்கக்கூடாதாம். படிச்சா உயிரோடு விடமாட்டோம்னு மிரட்டுறாங்க'னு சொன்னான்.
இதைக்கேட்டு அதிர்ச்சியான நான் ஊர் நாட்டாமைகிட்ட சொல்லி மறுநாள் 9-ஆம் தேதி பள்ளி தலைமையாசிரியரிடம் சின்னத்துரையையும் கூட்டிட்டுப்போய் நடந்ததைச் சொன்னோம். அவர்கள் சின்னத்துரையிடம் புகாராக எழுதி வாங்கினாங்க. அதன்பிறகு பள்ளி நிர்வாகமும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குறோம்னு சொல்லியதோடு, "இதுபோன்ற சம்பவம் இனி நடக்காது'னு சொல்லி உத்திரவாதம் தந்து எங்களை அனுப்புனாங்க. அன்னைக்கு இரவு நோட்டு புத்தகங்களையெல்லாம் எடுத்து வச்சிட்டு தரையில் உட்கார்ந்து சாப்பிட்டுக்கிட்டு இருந்தான். நான் வீட்டுக்குள் பாத்திரம் கழுவிட்டு இருந்தேன்.
அந்த நேரத்துல வீட்டுக்குள்ள அரிவாளோடு புகுந்த அவனுங்க 6 பேரும் என் மகனின் கை, கால், தலை, மார்பு என ஒரு இடம் மிச்சமில்லாமல் கொடூரமா வெட்டினாங்க. இதைத் தடுக்கப்போன மகளையும் கையில் வெட்டினாங்க. அலறல் சத்தம் கேட்டு நான் போவதற்குள் ரெண்டு பேரின் உயிரை மட்டும் விட்டுட்டு ஓடிட்டானுங்க''’என கதறினார்.
சகோதரி சந்திரா செல்வியிடம் பேசியபோது, ""வீடு புகுந்து அண்ணனை வெட்ட வந்தபோதுகூட ஜாதியைச் சொல்லி கெட்டவார்த்தை பேசி, எங்களப் பற்றி ஸ்கூல்ல கம்ப்ளைன்ட்டா கொடுக் கிற. உன்ன கொலை செய்யுறோம்'னு வெறித்தனமா வெட்டினாங்க. ஒருத்தன் அண்ணனின் கழுத்தில் வெட்ட முயன்றபோது நான் தடுத்ததால் என் கையில் அந்த வெட்டு விழுந்தது. இல்லையினா அவனை கொலை செய்திருப்பாங்க''’என்றார் பதட்டத்துடன்.
சின்னத்துரையிடம் நாம் கேட்டபோது, ""நான் 1-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை நாங்குநேரி அம்பேத்கர் அரசு தொடக்கப்பள்ளியில் படிச்சேன். அதன்பிறகு 6 முதல் 8 வரை திசையன்விளை சுவிசேஷ புரத்தில் ஹாஸ்டலிலிருந்து படித்தேன். இப்பம் 9 முதல் 12-ஆம் வகுப்பு வள்ளியூர் கண்கார்டியா மேல்நிலைப் பள்ளியில் படிக்கிறேன். வகுப்பறையில் சுப்பையாவும் செல்வரமேசும் எனக்கு பின்னால் உட்கார்ந்திருப்பாங்க. ஆசிரியர்கள் பாடம் எடுக்கும்போது சத்தம் போடு வாங்க. அப்போது அவர்களுடன் சேர்ந்து நானும் சத்தம் போடலைனா, உடனே பின்தலையில் ஓங்கி அடிப்பாங்க. டெஸ்ட் நடக்கும்போது நான் எழுதிய தைக் காட்டணும். அவர்களுக்கு நோட்டு எழுதிக் கொடுக்கணும். வகுப்பில் சும்மா இருக்கும்போதும் நேரம் கிடைக்கும்போதும் நான் ஏதாவது பாடத்தை படிச்சுக்கிட்டிருப்பேன். அப்படி படிக்கக்கூடாதுனு என் புத்தகத்தை எடுத்து மறைச்சு வைச்சுடுவாங்க.
நான் 10-ஆம் வகுப்பில் 400 மார்க் எதிர்பார்த் தேன். ஆனால் இவர்களுடைய டார்ச்சரால 280 மார்க் தான் எடுக்கமுடிந்தது. இதில் இருந்துதான் எனக்கு தொந்தரவு அதிகம் கொடுத்தனர். நீ எங்களைவிட இவ்வளவு மார்க் அதிகம் எடுத்து இருக்கிறியே உனக்கு படிப்பு தேவையா? நீ எல்லாம் பன்றி மேய்க்கிற வகையைச் சேர்ந்தவன் தானேன்னு எப்பவும் ஜாதியைச் சொல்லி கெட்டவார்த்தை பேசு வாங்க. நான் படிக்கக்கூடாதுனு நோட்டில் எழுதிய பக்கங்களை கிழிச்செறிவாங்க. நீ மட்டும் படிச்சிட்டியனா ஊருல உள்ள உங்க ஜாதிக் காரங்க (கெட்ட வார்த்தையோடு ஜாதிப் பெய ரைச் சொல்லி) முன்னேறி விடுவானுங்களேன்னு தரக்குறைவா பேசுவாங்க. என்னால் இரண்டு ஊருக்கும் பிரச்சினை வந்துவிடக்கூடாதுனு தான் இதை வீட்ல சொல்லாம இருந்தேன்'' என் றான். அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் கூறும்போது, ""நாங்குநேரியில் பெண்கள் தனியாகவும், ஆண்கள் -பெண்கள் சேர்ந்தும் படிக்கிறது என இரண்டு பள்ளிகள் உள்ளன. இங்கு சுமார் 1800 மாணவ -மாணவிகள் படிக் கிறார்கள். இந்த இரண்டு பள்ளிகளும் குறிப் பிட்ட அந்த ஆதிக்க சமூகத்தினரின் கட்டுப் பாட்டில் உள்ளது. அந்த குறிப்பிட்ட சமுதாயத் திலுள்ள சில மாணவர்களின் மனநிலை சமீபகாலமாக ஜாதிரீதியாக மாறக் காரணம், ஆறுபங்கு நாட்டார்கள் என்ற கண்ணுக்குத் தெரியாத ஒரு அமைப்புதான். அந்த குறிப்பிட்ட ஆதிக்க ஜாதியை சேர்ந்த முக்கியமானவர்களை சேர்த்து ஆறுபங்கு நாட்டார் என்ற அமைப்பை அந்த மடம் உருவாக்கியுள்ளது.
அங்கு இந்த ஆறுபங்கு நாட்டார் சொல்வதுதான் சட்டம். மொத்த ஊருக்கும் இந்த அமைப்புதான் நாட்டாமைபோல் செயல்படுகிறது. இவர்களுக்கு பணம் அந்த மடம் மூலம் வந்துசேருகிறது. போலீஸ்கூட இவர்களை ஒண்ணும் செய்யமுடியாது. இவர்களைப் பார்த்துதான் பெற்றோருக்கு அடங்காத இப்போதுள்ள சில இளைய தலைமுறையினரும் தங்களை மாற்றிக்கொள்கிறார்கள்.
சின்னத்துரையை வீடு புகுந்து வெட்டி யவர்களில் செல்வத்துரை, வான்முத்து, கல்யாணி ஆகிய 3 பேரும் இந்த ஆண்டு +2 படித்துவந்த நிலையில், பள்ளியில் சக மாணவர்களுக்கு தொடர்ந்து தொந்தரவை கொடுத்துவந்ததால் அவர்கள் பள்ளியிலிருந்து நீக்கப்பட்டார்கள். அதன்பிறகு இவர்களை பெற்றோர்கள் கண்டுகொள்ளாததால், அந்த 3 பேரும் தற்போது ஆறுபங்கு நாட்டார் கட்டுப்பாட்டில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த அமைப்பின் சப்போர்ட் இருக்கிற மாணவர்கள்தான் அரிவாளைத் தூக்குகிறார்கள்''’என்றார்.
இவ்விஷயத்தில் அரசு தீவிரமாக செயல்பட்டு, ஜாதி தீண்டாமையை வேரறுக்க முயற்சிக்க வேண்டும்.
-மணிகண்டன்
படங்கள்: இராம்குமார்