சமூக ஆர்வலரான ராஜேஷ் நம்மிடம் "சிவகாசி சிவன் கோயில் கவர்மென்ட் கோயில்தானே?''’என்று கேட்டார்.
"அதிலென்ன சந்தேகம்? தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் வரும் கோவில்களில் இதுவும் ஒன்று. இக்கோவிலின் முழுப்பெயர், ஸ்ரீ விஸ்வநாத சுவாமி ஸ்ரீ விசாலாட்சி அம்மன் திருக்கோவில்''’என்றோம்.
"அப்படின்னா.. கவர் மென்ட் கோயிலா இருந்தும், நாலு வாசல்லயும் இருக்கிற கேட்ல குறிப்பிட்ட ஜாதிப் பெயரைப் பெரிசா போட்டிருக் காங்க. முழுக்க முழுக்க அறநிலையத் துறை கட்டுப்பாட்டுல இருக்கிற கோயில்கள்ல, உபயதாரரா இருந்தாலும், இந்த மாதிரி சாதி அடையாளமோ, தனியார் பெயரோ தெரியுற மாதிரி எதுவும் இருக்கக்கூடாதுன்னு, அப்ப அறநிலையத்துறை கமிஷனரா இருந்த குமரகுருபரன் ஸ்ட்ரிக்டா உத்தரவு போட்டாரு. ஆனா.. அனைத்து சாதி மக்களுக்கும் பொதுவான அரசாங்க கோயில்ல, ஒரு சாதியை முன்னிறுத்தி, எல்லா கேட்லயும் சாதிப் பெயரைப் பெரிசா பொறிச்சு வச்சிருக் காங்க''’என்று குறைபட்டுக்கொண்டார் ராஜேஷ்.
என்ன விவகாரம் இது?
சிவகாசி என்ற ஊர்ப் பெயருக்குக் காரணமாக விளங்குகிறது இச்சிவன் கோவில். 16ஆம் நூற்றாண்டில் பாண்டிய மன்னர் ஹரிகேசரி பராக்கிரம பாண்டியனால் காசியிலிருந்து கொண்டுவரப்பட்ட சிவலிங்கம் இங்கு நிறுவப்பட்டது. பிற்காலத்தில் மதுரை நாயக்க மன்னர்களால் இக்கோவிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்து சமய அறநிலையத்துறை மற்றும் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவி லின் திருவிழாக்களை நடத்திவரும் 11 சமுதாய மண்டகப்படிதாரர்களாக சைவ வேளாளர், அகம்படியார், சேனைத்தலைவர், நாயக்கர், நகரத்தார், இல்லத்துப் பிள்ளைமார், ஜங்கம் குலத்தார், கட்டளைப்பட்டிவாழ் யாதவர், ரெட்டியார், செங்குந்தர், வாணிப வைசிய செட்டியார் மற்றும் விஸ்வகர்மா சமுதாயத்தினர் உள்ளனர்.
சிவகாசியில் பெரும்பான்மையாக உள்ள நாடார் சமுதாயம் இச்சிவன் கோவில் மண்டகப்படிதாரராக இல்லை. இதன் பின்னணியில், அந்தக்கால தீண்டாமைக் கொடுமை உள்ளது. அப்போது நாடார்களும், தாழ்த்தப்பட்ட மக்களும் சிவன் கோவில் வாசலில் நின்றே வழிபடும் நடைமுறை கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. 1895ல் நாடார்களுக்கும், அவர்களைத் தீண்டத்தகாதவர் களாக நடத்திய சாதியினருக்கும் பெரிதாக விரிசல் ஏற்பட்டது. நாடார்களையும் சிவன் கோவில் அறங்காவலர் குழுவில் உறுப்பின ராக்கவேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்பட வில்லை. 1898, ஜூலை 16-ல் சிவன் கோயிலின் பூட்டை உடைத்து விட்டு நாடார்கள் உள்ளே நுழைந்துவிட்டதாகத் தகவல் பரவியது. அன்றிரவு நாடார்களின் பத்ரகாளியம்மன் கோவில் நந்தவனத்துக்கு ஒரு சாதியினர் தீவைத்தனர். அதனால் கொதித்தெழுந்த நாடார் தரப்பினர், சிவன் கோவில் நுழைவாயில் கதவை உடைத்து கைதாகி, பிறகு அவ்வழக்கிலிருந்து விடுதலையானார்கள். இதன் தொடர்ச்சியாக, 1899, ஜூன் 6-ல் பெரும் கலவரம் ஏற்பட்டு, நாடார் வீடுகளுக்குத் தீவைக்கப்பட்டு 24 பேர் பலியானார்கள். இரண்டு மணி நேர சூறையாடலை எதிர்கொண்ட நாடார்களில் ஆயிரக்கணக்கானோர் பதிலடி கொடுக்க, அச்சாதியினர் பின்வாங்கினர். ராணுவம் வந்து தலையிட்ட பிறகே, கலவரம் முடிவுக்கு வந்தது. 1939, ஜூலை 8-ல் நாடார்களும், தாழ்த்தப்பட்ட மக்களும் மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் வைத்தியநாத அய்யர் தலைமையில் கோவில் நுழைவுப் போராட்டம் நடத்தி உள்ளே சென்றனர். அப்போராட்டத்தின் எதிரொலியாக தமிழ்நாடு முழுவதும் உள்ள கோவில்களுக்குள் அம்மக்கள் சென்று வழிபாடு நடத்த முடிந்தது.
2011-ல் நாடார் சமுதாயத்தைச் சேர்ந்த காகா ஏ.எஸ்.ராஜப்பன் தலைமையில் குழு அமைத்து, பத்து சமுதாயங்களையும் ஒருங்கிணைத்து, பொதுமக்களின் ஆதரவுடன், இச்சிவன் கோவிலில் பிரம்மாண்டமாக கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அப்போது அனைத்து சமுதாயத்தினரையும் கவுரவப் படுத்தும் விதத்தில், அவரவர் பங்களிப்புக்கு ஏற்ப கோவிலுக்குள் கல்வெட்டுகள் வைக்கப் பட்டன.
நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகு சிவகாசி சிவன் கோவில் புனரமைக்கப்பட்டு, 2024 ஏப்ரல் 26ஆம் தேதி புனராவர்த்தன அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக விழா நடந்தது. பழமை மாறாமல் புனரமைக்கப்படும் என உத்தரவாதம் அளித்துவிட்டு, 30 ஆண்டுகளுக்கு முன் பொருளுதவி செய்தவர்களது பெயர்கள் இடம்பெற்ற கல்வெட்டுகள் உள்ளிட்ட அனைத் துக் கல்வெட்டுகளையும் அகற்றிவிட்டனர். 90 ஆண்டுகளுக்குமுன் மூடப்பட்ட வடக்கு வாசல் தற்போது திறக்கப்பட்டுள்ளது. அங்கு வைக்கப்பட்டிருக்கும் இரும்பு கேட்டிலும் ‘உபயம்: சிவகாசி தேவமார் மகாஜனங்கள்’ எனப் பொறிக்கப்பட்டுள்ளது. சேனைத்தலைவர் சமுதாயமும் தங்கள் பங்குக்கு கோவில் முகப்பில் "சிவ சிவ'’போர்டை மாட்டி, உபயம்: சிவகாசி சேனைத்தலைவர் உறவின்முறை சங்கம் என்று எழுதி வைத்துள்ளது.
ஆளும்கட்சி பிரமுகரும் சிவபக்தருமான சுப்பையா "சிவன் கோயில்ல உபயதாரர்கள் பெயர் எதுவும் இருக்கக்கூடாதுன்னு.. பதிச்சிருந்த எல்லா கல்வெட்டை யும் உடைச்சு எடுத்துட்டாங்க. ஆனா பாருங்க.. நாலு கேட்லயும் தேவர் சமுதாயத்தோட பேரு இருக்கு. சேனைத்தலைவர் சமுதாயமும் போட்டிக்கு, சின்னதா எழுதி போர்டு வச்சிருக்காங்க. இந்த ரெண்டு சாதிகளுக்கும் ஒரு நியாயம்.. மற்ற சாதிகளுக்கு ஒரு நியாயமா? அறநிலையத்துறை ஆபீஸ்ல முறையிட்டுப் பார்த்தேன். ரெஸ்பான்ஸ் இல்ல. எல்லா சமுதாய மக்களும் சாமி கும்பிடப் போகும்போது, அறநிலையத்துறை கோயில் கேட்ல சாதிப் பெயர் இருக்கிறத உறுத்தலாத்தான் பார்க்கிறாங்க. அவங்கவங்க சொந்தமா கோயில் கட்டி சாதிப் பெயரை வச்சா யாரு கேட்கப் போறாங்க? 1899ல் மட்டுமில்ல.. 1997லயும் வீரன் சுந்தரலிங்கம் போக்குவரத்துக்கழகம்னு பேரு வச்சதுக்காக, சிவகாசில தொடர்ந்து சாதிக் கலவரம் நடந்துச்சு. உயிர்களைக் காவு வாங் குச்சு. மீண்டும் கோயில்ல சாதி தலைதூக்குது. சாதிங்கிற பேச்ச எடுத்தாலே நடுக்கமாத்தான் இருக்கு. அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கணும்''’என்றார் அக்கறையுடன்.
இந்து சமய அறநிலையத்துறையின் மதுரை மண்டல இணை ஆணையர் செல்லத் துரையைத் தொடர்புகொண்டோம். தொடர்ந்து அவர் நமது லைனுக்கு வராத நிலையில், சிவ காசி ஸ்ரீ விஸ்வநாத சுவாமி திருக்கோயிலின் செயல் அலுவலர் ரேவதியைச் சந்தித்தோம்.
"ஆமாங்க, எங்க ஜே.சி.கூட சேனைத்தலை வர் பெயர் போட்டிருக்கிற சிவசிவ போர்டை எடுக்கணும்னு சொல்லிருக்காரு. பிரச்சனை வரும்னா.. இரும்பு கேட்ல இருக்கிற தேவமார் பெயரை வெல்டு வச்சு எடுத்துறலாம். அதுக்கு முன்னாடி, அவங்ககிட்ட சொல்லி, அவங்க சைடுல உள்ள பெரிய ஆளுங்ககிட்ட பேசி, அவங் களையே அதைப் பண்ணச் சொல்லிறலாம்''” என்றார்.
திருப்பணி கமிட்டி செயலாளரும் தேவர் சமுதாயப் பிரமுகருமான ஆனந்தயுவராஜிடம் பேசினோம். "இரும்பு கேட்ல இருக்கிற தேவமார் பேரை வெல்டு வச்சி எடுத்தாங்கன்னா பெரிய பிரச்சனை ஆயிரும். மற்ற எல்லாரும் கேள்வி கேட்பாங்க. யாரும் சம்மதிக்கமாட்டாங்க. நாங்க மீட்டிங் வச்சு பதில் சொல்லமுடியாது. எதுன்னாலும் முறையா மனு கொடுத்து செய்யட்டும். ஆனா.. பிரச்சனைலதான் முடியும். சிக்கல்ல வந்து நிற்கும். 2011ல ராஜப்பன் கும்பாபிஷேகம் நடத்துனப்ப கேட்ல மாற்றம் பண்ணப் போறோம்னு சொன்னாங்க. நம்ம பழைய ஆளுங்க விடல. நாங்களே ஆல்ட்ரேஷன் பண்ணித் தர்றோம்னு சொல்லிட்டு திருப்பி வச்சோம். எங்க அம்மா, அப்பாவே கேட்டை எடுக்கவிடல. நாங்க எப்படி விடுவோம்? நம்ம சமுதாயம் இன்னும் மாறல''’என்றார் உறுதியுடன்.
"கோவிலுக்கு வெளியே நுழைவாயிலில் தானே பிரச்சனை? நான் பாட்டுக்கு சிவனேனு இருந்துக்கிறேன்...!’என்று நெற்றிக் கண்ணைத் திறக்காமலே இருக்கிறார், லிங்க வடிவிலான மூலவர்.