"தொட்டால் தீட்டு. பட்டால் தோஷம்' என்கிற மேல்தட்டு வர்க்க அடக்குமுறை மட்டுமல்ல, தென்மாவட்டக் குக்கிராமங்களில் பட்டியலின தலித் மக்களுக்கென டீக்கடைகளில் தனி கிளாசும், குடித்த பின்பு அதனை அவர்களே கழுவித்தருகிற வழக்கமும் அம்மக்களுக்கென ஓலைக்குடிசைகளில் சொருகப்பட்டிருக்கும் கொட்டாங்குச்சியில் டீ வழங்கும் முறைகளும் இன்றும் முற்றிலும் அகன்றுவிடவில்லை.

caste

மரணமே வரினும் மண்டியிடாத மாமன்னன், வீரபாண்டிய கட்டபொம்மன் அரசாண்ட கயத்தாறு பகுதியும் ஒடுக்குமுறைக்குத் தப்பவில்லை.

தூத்துக்குடி மாவட்டத்திலடங்கிய கயத்தாறு பக்கம் உள்ளது ஒலைக்குளம் குக்கிராமம். யாதவர், நாயக்கர், தேவர், பட்டியலினத்தவர்கள் என்று பல தரப்பட்ட சமூக மக்கள் சுமார் 250 பேர்களை உள்ளடக்கிய 50 வீடுகளே உள்ளன. தொழில் என்றால் ஓரளவுக்கு விவசாயமிருந்தாலும், அருகிலுள்ள கயத்தாறு, செட்டிக்குறிச்சிப் பகுதிகள் ஆட்டுச்சந்தை கூடுமிடம் என்பதால் ஒலைக்குளம் கிராமத்தில் ஆடுகள் வளர்ப்புடன் அதனைக் கொண்டு வயல்களில் கிடைபோடும் தொழிலே பிரதானமாக இருந்திருக்கிறது.

Advertisment

பட்டியலினத்தவர் உள்ளிட்ட பிற சமூகத்தவர்கள் இணைந்தே தங்களின் ஆடுகளை மேய்க்கும் வழக்கம் இருந்தாலும் கிராமத்தின் நலனோ, பிரச்சினை என்றாலும் போலீஸ்வரை போனால் வீணாக காக்கிச்சட்டைகளின் விசாரணையால் கிராமம் ரெண்டுபட்டுச் சிதைந்துவிடும் என்பதால் தங்களுக்குள்ளேயே சாட்சிகளை முன்வைத்து வெளியே தெரியாமல் விவகாரங்களை முடித்துக்கொள்ளுகிற வழக்கம் உடையவர்கள்.

வீடுகளிலோ அல்லது கிராமத்திலோ எந்தப் பொருள் திருடுபோனாலும் அது லட்சம் தாண்டிய மதிப்பு என்றாலும், திருடியவர் ஒப்புக்கொண்டு திருடு கொடுத்தவரின் முன்பும், சாட்சிகளின் முன்பாகவும் அவர்களின் காலில் மண்டியிட்டு வணங்கினால் தவறை மன்னித்து விட்டுவிடுகிற நடைமுறை அந்தக் காலத்திலிருந்தே இருந்திருக் கிறது. அது மட்டுமல்ல சுற்றுப்பட்டு 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இதே நடைமுறைதான்.

சில மாதங்களுக்கு முன்பு செட்டிக்குறிச்சி பக்கமுள்ள ஒரு கிராமத்தில் லட்சத்திற்கும் மேல் மதிப்புள்ள ஒரு ஜோடி மாடு திருடுபோனதில் மாட்டியவரிடம் அதனைத் திருப்பிக் கொடுப்பதற்கு வழியில்லாததால் இதேபோல் தண்டனையால் மன்னிப்புத் தரப்பட்டுள்ளது. போலீஸைத் தவிர்த்து வருவதால், சாதிய ரீதியிலான பாரபட்சமான நடைமுறைகளும் நிறைய நடப்பது வழக்கம்.

Advertisment

caste

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு ஒலைக்குளத்தின் பட்டியலின தலித் சமூகத்தைச் சேர்ந்த பால்ராஜ் என்பவர் அங்குள்ள சிவசங்கு என்பவரின் மூவாயிரம் மதிப்புள்ள ஆடு ஒன்றைத் திருடிச் சென்று சற்றுத் தொலைவிலுள்ள கிராமத்தில் விற்றிருக்கிறார். சொந்தக்காரர் தேடியும் கிடைக்க வில்லையாம். கடந்த வாரம், தற்செயலாக அங்கு ஆடு வாங்க வந்தவர் மூலம் பால்ராஜ் ஆடு விற்றது தெரியவர... சிவசங்கு மற்றும் ஊர்க்காரர்களும் பால்ராஜை வரவழைத்து விவரத்தைக் கேட்டதில் ஒப்புக்கொண்ட அவரும், "தெரியாமல் செய்துவிட்டேன். திருப்பித்தர தன்னிடம் வழியில்லை' என்று மன்னிக்கும்படி கேட்டுள்ளார்.

ஊர் வழக்கப்படி, அவர் முன்பு சாட்சிகளான சங்கிலிப்பாண்டி, உடையம்மாள், பெரியமாரி, வீரையா, மகேந்திரன் மற்றும் மகாராஜன் போன்றவர்களை முன்வைத்தபடி பால்ராஜ் மண்டியிட்டு கும்பிடு போட்டிருக்கிறார். பட்டியல் இன சமூகத்தவரை இப்படி செய்தது வீடியோவாகி, வைரலாகியுள்ளது. அதில் பால்ராஜின் சாதிப் பெயரை சொல்லித் திட்டுவதும் தெளிவாகப் பதிவாகியுள்ளது. "இது ஆடு திருட்டு சம்பந்தப்பட்ட பிரச்சினையல்ல, ஆடு அங்கு போய் மேய்ந்ததுதான் பிரச்சினை' என்கிறார்கள் பட்டியலின சமுதாயத்தினர்.

"இது கிராமத்து வழக்கம்தானே' என்கிறார்கள் ஒலைக்குளத்தில் உள்ள சிலர். ஆனால் இன்றைக்கு புதிய ஒரு தலைமுறை எழுந்து வந்திருக்கிறது. அவர்கள் காலம் காலமாகத் தங்கள்மேல் சுமத்தப்படும் இழிவை ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. அவர்கள் அரசியலமைப்புச் சட்டம் வழங்கும் தீர்ப்பையும் பாதுகாப்பையும் ஏற்றுக்கொள்ள ஆயத்தமாக இருக்கிறார்கள். கிராம வழக்கம் என்ற பெயரில், மனிதப் பிறப்பின் அடிப்படையிலான ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக உரிமைக் குரல் எழுப்புகிறார்கள்.

பால்ராஜ் விழுந்து கும்பிடுகிற வீடியோ வைரலாக, சுதாரித்த கயத்தாறு இன்ஸ்பெக்டர் முத்து, சிவசங்கு உட்பட மேற்படி சாட்சிகளையும் சேர்த்து 7 பேர்கள் மீது தீண்டாமை ஒழிப்புப் பிரிவான பி.சி.ஆர். வழக்குப் பதிவு செய்திருக்கிறார். டி.எஸ்.பியான கலைக்கதிரவனின் விசாரணையிலிருக்கிறது இந்த விவகாரம்.

இது சம்பந்தமாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் அவர்கள் ஒலைக்குளம் வாதி பால்ராஜ் வீட்டுக்குச் சென்று, அவரிடம் நடந்த விவரங்களை கேட்டறிந்து ஆறுதல் கூறினார். மேலும் ஒலைக்குளத்தில் போலீசார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது, வாதி பால்ராஜுக்கும் தகுந்த போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக வேறு யாரும் இச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனரா எனவும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேற்படி தனிப்படையினர் தீவிரமாக தேடி அக்டோபர் 12 இரவு இவ்வழக்கில் சம்மந்தபட்ட 7 பேரையும் கைதுசெய்தனர். விரைந்து கைது செய்த தனிப்படையினரை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் பாராட்டினார்.

-பரமசிவன்

படங்கள் : ப.இராம்குமார்