திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் பேரூராட்சிக்குள் ஊரின் மையத்தில் அமைந்துள்ளது அந்தோணியார் நகர். இங்கு சுமார் 150 வீடுகளில் அருந்ததியர் சமூகத்தை சேர்ந்த சுமார் ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். செருப்பு தைப்பது, சோபா தைப்பது போன்ற வேலைகளை செய்து வருகிறார்கள். ஒரே ஒரு குடும்பத்தால் நாங்கள் கடந்த 20 வருடங்களாக பயந்து பயந்து வாழ்கிறோம் என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய மதன், "இங்கு 7 தலைமுறைகளாக நாங்கள் வசித்து வருகிறோம். எங்க சமூகத்தைச் சேர்ந்த சகோதரர்களான மொண்டிவர்னான், ராயப்பன், அயோத்தி ஆகியோர் குடும்பத்துடன் ஒரே வீட்டில் குடியிருந்தாங்க. எங்க ஏரியாவுக்கு அருகில் கறி வெட்டி விற்றுவந்தவரான பறையர் சமூகத்தைச் சேர்ந்த குப்பன், மொண்டி வர்ணனுக்கு கறியும், சாராயமுமாகத் தந்துதந்து, அவர்கள் குடியிருந்த வீட்டை அபகரித்து கறிக்குத் தரவேண்டிய பணத்துக்கு சரியாப்போச்சி எனக்கூறி துரத்திவிட்டு, 20 ஆண்டுகளுக்குமுன் இங்கு குடும்பத்தோடு குடியேறினார் குப்பன். அந்தாளு முன்பு யாரும் உட்காரக்கூடாது, சத்தமா ரேடியோ, டிவி வைக்கக்கூடாது. சாயந்தரத்தில் குடிபோதையில் வந்து அடிப்பார். அந்தாளுக்கு பயந்துக்கிட்டு எங்காளுங்க பலரும் ஊரைவிட்டே போய்ட் டாங்க. குப்பன் இறந்து 9 வருடங்களாகிறது, அவருக்கு குணசெல்வன், குணசீலன், குருமூர்த்தி என மூன்று மகன்கள். இவர்களில் குணசீலனின் அட்டகாசம் மட்டும் அருந்ததியர் காலனியில் தொடருது'' என்றார்.
ஊரிலிருந்து சென்றுவிட்ட ஏசுதாஸ் நம்மிடம், "குப்பன் வீட்டுக்கு பக்கத்தல தான் எங்க வீடு இருந்தது. எங்கம்மா வீட்டுக்கு வெளியில உட்காரக்கூடாது, வீட்டுக்குள்ள சிரிச்சி பேசக்கூடாது, தெருவுல துணி துவைக்கக்கூடாதுன்னு சொல்லி மிரட்டி வைப்பாங்க. எங்க மாமா செல்வராஜ், மெயின் ரோட்ல சோபா தைக்கிற கடை வச்சியிருந்தாரு. பொறாமையில அவர்கூட சண்டை போட்டு அடிச்சிட்டே இருந்ததால அவரு ஊரை விட்டே போய்ட்டாரு. இப்படி ஊரைவிட்டுப் போனவங்க, நல்லது கெட்டதுக்கு சொந்தத்தைப் பார்க்க வைந்தால், நீ எப்படி இங்க வரலாம்னு சண்டை போட்டு அடிப்பான்'' என்றார்.
அருந்ததியர் மக்கள் நல உரிமை சங்கத்தின் தலைவர் சங்கர், "எங்கள் வீடுகளில் காதுகுத்து, கல்யாணம், இறப்பு, திருவிழா எது நடந்தாலும் குடிச்சிட்டு வந்து பிரச்சனை செய்வான். எங்க பெண்களை இழிவா பேசுவான், பாலியல் அச்சுறுத்தல் செய்வான். இரண்டு மாதத்துக்கு முன்பு ஸ்கூல் படிக்கற பொண்ணோட மார்மேல கை வச்சு பிரச்சனையானதும், அந்த பொண்ணோட நிர்வாண வீடியோ இருக்குன்னு மிரட்டினான். சுவத்துல அந்த பொண்ணு பெயரை எழுதி, அந்த பொண்ணை லவ் பண்றதா சொல்லி அசிங்கப்படுத்தினான். எங்க சமூகத்திலேயே ஒரு பொண்ணு போலீசா இருக்கு. இவன் அந்த பொண்ணையும் அசிங்கமா வாடி போடீன்னு கூப்பிட்டு அசிங்கப்படுத்தினான். பாலியல் வக்கிரத்தோட எங்க பொண்ணுங் களை இழிவுபடுத்தி பேசுறான். அவனுக்கு சப்போர்ட்டா அவங்க சமூகத்து ஆளுங்க திரண்டு வந்து எங்காளுங்களை அடிக்கிறதாலதான் நாங்க பயப்பட வேண்டியிருக்கு. தீபாவளிக்கு முன்னாடி குமுதா என்ற பெண்மணியிடம் வேட்டியை அவிழ்த்து ஜட்டி போடாத தன் இடுப்பை நிர்வாணமாகக் காட்டி, வாடி ஒதுங்கலாம்னு தெருவுல நின்னு கூப்பிட்டு அசிங்கப்படுத்தினான். அப்பத்தான் அவன் மேல தைரியமா காவல் நிலையத்தில் புகாரளிச்சோம். இப்ப கலெக்டர்கிட்ட எங்க தெரு மக்கள் திரண்டுவந்து புகாரளிச்சிருக் கோம். போலீஸ் விசாரணை நடந்துகிட்டிருக்கு. என் மேலயே புகார் தந்துட்டீங்களான்னு இப்ப எங்களை மிரட்டிட்டு இருக்கான்'' என்றார் அச்சத்துடன்.
இதுபற்றி தலித் விடுதலை இயக்கத்தின் மாநில தலைவர் கருப்பையா, மா.செ. நதியா நம்மிடம், "இந்த காலத்தில் இப்படி நடப்பது அதிர்ச்சியாகவும், வேதனையாகவும் இருக்கிறது. எங்களுக்கு தகவல் தெரிந்ததும் நேரடியாகச் சென்று விசாரித்தபோது, காட்டுமிராண்டிகூட இப்படி செய்யமாட்டான். அப்படிப்பட்ட செயல்களை கடந்த 20 ஆண்டுகளாக செய்துவருவதைக் கேட்டு அதிர்ச்சியாகிடுச்சி. வேதனையாலும், துய ராலும் அவர்கள் அந்தத் தெருவை விட்டு வெளியே வரவேயில்லை. அவர் களுக்கு ஆறுதல் சொல்லவும், தைரியம் தரவும் யாருமில்லாத சூழ்நிலை. அம்மக்களின் நிலைகுறித்து எஸ்.பி.க்கு, மனித உரிமை ஆணையத்துக்கு புகாரளித்துள்ளோம்.
காவல்துறை விசாரணை நடத்திவருகிறது. இச்செயலை செய்பவனை குண்டர் சட்டத்தில் கைது செய்யவேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளோம். நடவடிக்கை எடுக்க வில்லையென்றால் போராட்டத்தில் இறங்க முடிவெடுத்துள்ளோம்'' என்றார் ஆவேசமாக.
ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்கள், தங்களை ஒடுக்கும் சாதியினருக்கு எதிராகப் போராடுவதை விட்டுவிட்டு, தங்களுக்கு கீழே இன்னொரு சாதியை ஒடுக்க நினைக்கும் துயரத்தை என்னவென்று சொல்வது!