sவிருதுநகர் மக்களவைத் தொகுதியைப் பொறுத்தமட்டிலும், எந்தவொரு வேட்பாளரும் வெற்றிபெறுவது, அவருடைய தனிப்பட்ட தகுதியையோ, கட்சியையோ சார்ந்திருக்காது. அதேநேரத்தில், பல தேர்தல்களில் வேட்பாளரின் சாதியும்கூட, வெற்றியைத் தீர்மானிப்பதாக இருந்துள்ளது.

உதாரணத்துக்கு, விருதுநகர் பாராளுமன்றத் தொகுதிக்குள் அடங்கியுள்ள விருதுநகர் சட்டமன்றத் தொகுதியின் 1967 தேர்தல் முடிவுகளைச் சொல்லலாம். பெருந்தலைவர் என்று கொண்டாடப்பட்ட மண்ணின் மைந்தர் காமராஜர், தி.மு.க. வேட்பாளரான பெ.சீனிவாசனோடு போட்டியிட்டு வெற்றி வாய்ப்பினை இழந்தார். அன்றைய சூழலில், மாநிலம் முழுவதும் நிலவிய காங்கிரஸ் எதிர்ப்பு, இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தின் தாக்கம், பணப்பட்டுவாடா போன்றவை காமராஜரின் தோல்விக்கான காரணங்கள் எனப் பட்டியலிடப்பட்டாலும், காமராஜ் நாடார், சீனிவாசன் நாயக்கரிடம் தோற்றுப்போனார் என்பதே நிஜ நிலவரம் என்று இப்போதும் பேசுபவர்கள் உண்டு. அந்தத் தேர்தலில், விருதுநகர் தொகுதியின் மெஜாரிட்டியான கிராமப்புற நாயக்கர் சமுதாய வாக்குகள் சீனிவாசனுக்கும், நகர்ப்புற நாடார் சமுதாய வாக்குகள் காமராஜருக்கும் விழுந்தன.

vv

விருதுநகர் பாராளுமன்றத் தொகுதி வாக்காளர்கள் வித்தியாசமானவர்கள். பார்லிமெண்ட் டைகர் என்று போற்றப்படும் வைகோ, தன்னுடைய வாதத்தை முன்வைக்கும்போது சிங்கம்போல் கர்ஜிப்பார். ஆனால், இத்தொகுதி 2009 பாராளுமன்றத் தேர்தலில் புது முகமான மாணிக்கம்தாகூரைத் தேர்ந்தெடுத்து டெல்லிக்கு அனுப்பியது. சிவகாசி பாராளுமன்றத் தொகுதியாக இருந்தபோதும், விருதுநகர் பாராளுமன்றத் தொகுதி யாக மாறியபோதும், மொத்தம் நான்கு தடவை வைகோ வெற்றி வாய்ப்பை இழந்துள்ளார். அப்போது அவருக்கு வாக்களித்த லட்சக்கணக்கான வாக்காளர்கள் ‘நல்லதுக்குக் காலமில்லை’ என்று புலம்பியதெல்லாம் நடந்திருக்கிறது. 1972-ல் அ.தி.மு.க.வைத் தொடங்கிய எம்.ஜி.ஆரை, 1977 சட்டமன்றத் தேர்தலில் எம்.எல்.ஏ.வாக்கி, தமிழ்நாட்டின் முதலமைச்சர் நாற்காலியில் அமரவைத்தது, விருதுநகர் மாவட்டத்திலுள்ள அருப்புக்கோட்டை தொகுதிதான்.

Advertisment

இந்தத் தேர்தலில், விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் சிட்டிங் காங்கிரஸ் எம்.பி.யான மாணிக்கம் தாகூர் மீண்டும் போட்டியிடுகிறார். ஆளும்கட்சியான தி.மு.க.வோடு கூட்டணி என்பதும், பத்தாண்டுகள் மோடி ஆண்டது போதுமென்ற தமிழக மக்களின் மனநிலையும், தேர்தலின் முடிவில் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, தேசம் காங்கிரஸ் பிரதமர் வசமாகும்போது, ஒன்றிய அமைச்சராகும் வாய்ப்பு உள்ளவர் என்பதும் மாணிக்கம் தாகூரின் பலம். முக்குலத்தோர் வாக்குகள், இத்தொகுதியில் மெஜாரிட்டியாக இருப்பது கூடுதல் பலம். விருதுநகர் மாவட்ட தி.மு.க. அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்., தங்கம் தென்னரசு, மதுரை மாவட்ட அமைச்சரான மூர்த்தி ஆகியோரின் அனுபவ வழிகாட்டுதல், மாணிக்கம் தாகூருக்கு பெரிய அளவில் கை கொடுக்கும். அதேநேரத்தில், தொகுதிக்கு என்ன செய்தார் எம்.பி. என்ற கேள்விக்கு மாணிக்கம் தாகூரின் மதுரை மற்றும் விருதுநகர் மாவட்ட அலுவலகங்கள் பெரிய பட்டியலே வைத்திருக்கின்றன.

vv

அ.தி.மு.க. கூட்டணியின் தே.மு.தி.க. வேட்பாளராகப் போட்டியிடுகிறார் விஜயபிரபாகரன். கடந்த 2019 பாராளுமன்றத் தேர்தலில் இதே கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்து இரண்டாமிடத்தைப் பெற்ற தே.மு.தி.க. வேட்பாளர் அழகர்சாமி பெற்ற வாக்குகள் 3,16,329. தற்போது, அ.தி.மு.க. கூட்டணியில் பா.மக., பா.ஜ.க., த.மா.கா., புதிய நீதிக்கட்சி. என்.ஆர்.காங்கிரஸ் போன்ற கட்சிகள் இல்லாதது, அ.தி.மு.க. கூட்டணியின் வாக்கு வங்கியில் சரிவை ஏற்படுத்தியுள்ளது. இத்தொகுதியில் இரண்டாவது இடத்திலுள்ள நாயுடு சமுதாய வாக்குகளை, விஜய பிரபாகரனால் மொத்தமாகக் கவர்ந்துவிட முடியாது. கேப்டனின் சொந்த மாவட்டம் என்பதும், அவருடைய மகன் என்ற சென்டிமென்டும், கேப்டனின் மறைவால் மாநில அளவில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய அனுதாபமும் வாக்குகளாக மாறுமா? எனக் கேள்வி எழுகிறது. கே.டி.ராஜேந்திரபாலாஜி, ஆர்.பி.உதயகுமார் போன்ற முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர்கள் முழுமூச்சுடன் களப்பணியாற்றி, இரட்டை இலை வாக்கு வங்கியை சிந்தாமல் சிதறாமல் விஜயபிரபாகரன் பக்கம் திருப்பினால், வெற்றிக்கோட்டை அவரால் தொட்டுவிட முடியும்.

Advertisment

இத்தொகுதியின் நட்சத்திர வேட்பாளராகப் பார்க்கப்படுகிறார் பா.ஜ.க.வால் களமிறக்கப்பட்டுள்ள ராதிகா சரத்குமார். தொகுதியில் இரண்டாவது இடத்திலுள்ள நாயுடு சமுதாய வாக்குகளையும், நான்காவது இடத்திலுள்ள நாடார் சமுதாய வாக்குகளையும், ராதிகா சரத்குமார் கணிசமாகப் பெற்றுவிடுவார் என்பது பா.ஜ.க.வின் சாதிரீதியிலான தேர்தல் கணக்கு. 2019 பாராளுமன்றத் தேர்தலில், முக்குலத்தோர் சமுதாயத்தவரான அ.ம.மு.க. வேட்பாளர் பரமசிவ ஐயப்பன் பெற்ற வாக்குகள் 1,07,615. இந்த வாக்குகள், முழுக்க முழுக்க ஜாதிப் பற்றுள்ள வாக்காளர்களிடமிருந்து அறுவடை செய்யப்பட்டவை. இந்தத் தேர்தலில் பா.ஜ.க. கூட்டணியில் டி.டி.வி.தினகரனின் அ.ம.மு.க. இடம்பெற்றாலும், நாயுடு சமுதாயத்தைச் சேர்ந்த ராதிகா சரத்குமாரை, முக்குலத்தோர் முழுமனதுடன் ஏற்றுக்கொள்வார்களா என்பது சந்தேகமே.

சினிமா மற்றும் சின்னத்திரை பிரபலம் என்பதால், பெண்களின் வாக்குகளை எளிதாகக் கவர்ந்துவிடமுடியும் என்ற கவர்ச்சிக் கணக்கும் ஒருபக்கம் ஓடிக்கொண்டிருக் கிறது. ஒவ்வொரு பாயின்டிலும், தொடர்ந்து அடிவயிற்றி லிருந்து பா.ஜ.க.வினர் உரக்க எழுப்பும் "பாரத் மாதா கி ஜே'’ கோஷமே, முற்றிலுமாக அவர்களை தமிழ் மண்ணிலிருந்து அன்னியப்படுத்திவிடுகிறது. அதனாலோ என்னவோ, சிவகாசியில் ராதிகாவும் சரத்குமாரும் பிரச்சாரம் செய்தபோது, பா.ம.க., அ.ம.மு.க. மற்றும் ஓ.பி.எஸ். அணி நிர்வாகிகளில் ஒருவர்கூட கண்ணில் தென்படவில்லை.

‘தமிழ்நாட்டிலுள்ள அனைத்துத் தொகுதிகளிலும், தேசப்பணிக்காக எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், சேவை செய்துவரும் கரைபடியாத கரங்களைக்கொண்ட அடிமட்டத் தொண்டருக்கு பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு கிடைக்கும் என்று சொன்னாரே மாநிலத் தலைவர்? தமிழ்நாட்டில் பா.ஜ.க. வேட்பாளர் தேர்வு விஷயத்தில் எல்லாமே தலைகீழாக நடந்திருக் கிறது. காத்திருந்தவன் பொண் டாட்டியை நேற்று வந்தவன் கூட்டிட்டுப்போன கதையாக, விருது நகர் பாராளுமன்றத் தொகுதியிலும் நடிகை ராதிகாவை வேட்பாளராக்கி விட்டனர். பா.ஜ.க. தொண்டர்களின் இக்குமுறல் போஸ்டர்களாக ஒட்டப்பட்டுள்ளன.

ஒருபக்கம் எம்.ஜி.ஆரைப் புகழ்கிறார் மோடி. இன்னொரு பக்கம் எம்.ஜி.ஆரை சுட்ட எம்.ஆர். ராதா மகளுக்கு சீட் கொடுக்கிறார். ஓ.பி.எஸ். பாணியில் நானும் மோடி அணி வேட்பாளராக ராதிகாவை எதிர்த்து நிற்பேன் என்று தனது எக்ஸ் பக்கத்தில் எம்.ஜி.ஆரை சுட்டா.. பா.ஜ.க.வில் சீட்டா?’ என பதிவிட்டுள்ளார் டாக்டர் வேதா. ஆக, பா.ஜ.க.வில் உட்கட்சிப் பூசல்களுக்கும் பஞ்சமில்லை. இத் தொகுதியில் நா.த.க. வேட்பாளராகப் போட்டியிடுகிறார் கௌஷிக்.

ஒன்றாக நடித்தபோது கேப்டன் மீது காட்டிய பேரன்பால், தற்போது மகன் ஸ்தானத்தில் பார்க்கின்ற விஜயபிரபாகரனை, போட்டியாளராக எதிர்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் ராதிகா சரத்குமார். பேசுபொருளாகி விட்ட இரு நட்சத்திர வேட்பாளர் களுக்கு மத்தியில், நம்பிக்கையுடன் திடமாக இருக்கிறார் மாணிக்கம் தாகூர்.

வாக்கு வங்கி அடிப்படையில் பா.ஜ.க.வுக்கு மூன்றாவது இடம் என்று கணிக்கப்பட்டாலும், ‘சினிமாவில் கிழக்கே போன ரயில், தேர்தலில் வெற்றிபெற்று வடக்கே போகுமா?’ என்னும் சுவாரஸ்யக் கேள்வியே, தொகுதியெங்கும் எதிரொலிக்கிறது.