ஆகஸ்ட் 10 வரை நடக்கவிருக்கும் நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடரில் பாலியல் குற்றங்களுக்கான தண்டனையை அதிகரித்தல், மனித உரிமை ஆணையத்தின் அதிகாரத்தை வலிமைப்படுத்துதல், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் திருத்தம், அணைப்பாதுகாப்பு மசோதா உள்பட 18-க்கும் மேற்பட்ட சட்ட மசோதாக்களை நிறைவேற்றவிருக்கிறார் பிரதமர் மோடி. எதை நிறைவேற்ற வேண்டும் என்றாலும் கூட்டத்தொடர் தடையின்றி நடக்க வேண்டுமே!
ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசு புறக்கணித்ததால், பா.ஜ.க.வுடனான கூட்டணியை முறித்துக்கொண்டது தெலுங்குதேசம். மக்களவையில் பா.ஜ.க. தனிப்பட்ட பெரும்பான்மை பலத்தை இழந்திருப்பதை சுட்டிக்காட்டி, நம்பிக்கை இல்லா தீர்மானத்தைக் கொண்டுவர முந்தைய பட்ஜெட் கூட்டத் தொடரில் முயற்சித்தார் ஆந்திர முதல்வரும் தெலுங்கு தேச கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு. ஆனால், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் தொடர்ந்து அமளியில் அ.தி.மு.க. எம்.பி.க்கள் ஈடுபட்டதால் சபை முழுமையாக நடக்கவில்லை. நம்பிக்கையில்லா தீர்மானத்தையும் கொண்டு வரமுடியவில்லை. தற்போதைய கூட்டத்தொடரில், நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டுவரும் முயற்சியை நாயுடு மீண்டும் கையிலெடுத்திருப்பதாக தெரிகிறது. அதற்கு எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பும் உள்ளது.
இதுகுறித்து தி.மு.க. எம்.பி. திருச்சி சிவாவிடம் பேசியபோது, ‘’ கடந்த முறை, சபை நடக்காததால் தீர்மானத்தை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளும் வாய்ப்பே அமையவில்லை. இதற்கு பல மறைமுக காரணங்கள் அப்போது இருந்தன. இந்த நிலையில், தற்போதைய கூட்டத்தொடரில் மீண்டும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர வாய்ப்பு அதிகம் இருக்கிறது ‘’ என்கிறார் அழுத்தமாக.
இதனை எதிர்கொள்ள மூத்த அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், அருண்ஜெட்லி, நிதின்கட்கரி, பியூஸ்கோயல், பிரகாஷ்ஜவடேகர் உள்ளிட்ட தனது அமைச்சரவை சகாக்களிடமும், பா.ஜ.க.வின் தேசிய தலைவர் அமித் ஷாவிடமும் ஆலோசித்திருக்கிறார் பிரதமர் மோடி. இதுகுறித்து டெல்லி அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, ""முந்தைய தொடரின்போது நாயுடுவுக்கு இருந்த எதிர்க்கட்சிகளின் ஆதரவு இப்போது இல்லை. அதனால் நம்பிக்கையில்லா தீர்மானத்தை அவர் கொண்டு வரமாட்டார். இருப்பினும் தீர்மானத்தை அவர் கொண்டு வரும் பட்சத்தில் அதனை தோற்கடிக்கும் வியூகத்தை ஏற்கனவே அமைத்து வைத்திருக்கிறது பா.ஜ.க. தலைமை'' என்கின்றனர்.
இதற்கிடையே, சபை முழுமையாக நடக்கவும் சூழல்களுக்கேற்ப சில முடிவுகளை செயல்படுத்தவும் அ.தி.மு.க.வின் ஆதரவை நாடியிருக்கிறது பா.ஜ.க. தலைமை. இதுகுறித்து, லோக்சபாவின் துணைசபாநாயகர் தம்பிதுரையும் நாடாளுமன்ற அ.தி.மு.க. தலைவர் வேணுகோபாலும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் விவாதித்துள்ளனர். அவர்களிடம் பா.ஜ.க. மீதான அதிருப்தியை வெளிப்படுத்திய எடப்பாடி, பா.ஜ.க.வின் நிலைப்பாடு குறித்து அ.திமு.க. எம்.பி.க்களின் கூட்டத்தை கூட்டி விவாதிப்பதற்கு முன்பாகவே சீனியர் அமைச்சர்களிடம் விவாதித்துள்ளார்.
இதுகுறித்து நாம் விசாரித்தபோது, ""லோக்சபா, ராஜ்யசபா இரண்டிலும் இருக்கும் அ.தி.மு.க.வின் 50 எம்.பி.க்களின் ஆதரவு தற்போதைய சூழலில் மோடிக்கு மிக முக்கியமானது என்பதை எடப்பாடியிடம் வலியுறுத்தியுள்ளனர் சீனியர் அமைச்சர்கள். தேவைப்படுகிற அத்தனை உதவிகளையும் நம்மிடம் வாங்கிக்கொள்கிற பா.ஜ.க.விடம் நேர்மை இல்லை. பா.ஜ.க.வின் தலைவர் அமித் ஷா, சென்னைக்கு வந்து நமது ஆட்சியை ஊழல் ஆட்சின்னு குற்றம்சாட்டிவிட்டுப் போகிறார். நமக்கு எதிராக ரெய்டு நடத்தி மிரட்டுகின்றனர். எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகிற அளவுக்கு மாநில உரிமைகளைப் பறிக்கின்றனர். நமக்கேற்படும் இத்தகைய அரசியல் நெருக்கடிகளை, ஆட்சி நிர்வாகத்தின் நெருக்கடிகளை அவர்கள் கண்டுகொண்டதாகவே தெரியவில்லை. அணை பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்றக்கூடாது என நீங்கள் கடிதம் எழுதியிருக்கிறீர்கள். அதற்கு எந்த பதிலையும் அனுப்பவில்லை. பல்கலை மானியக்குழுவை கலைத்துவிட்டு அதற்குப் பதிலாக உயர்கல்வி ஆணையத்தை உருவாக்குவதால், தமிழகத்துக்கு பல்வேறு வகையிலும் இழப்பு ஏற்படுவது குறித்து கடிதம் எழுதியும் டெல்லியிலிருந்து பதில் வரவில்லை.
இனியும் பா.ஜ.க.வுக்கு ஆதரவான நிலைப்பாட்டையே எடுக்காமல், பிரச்சனைகளின் அடிப்படையில் பா.ஜ.க.வை எதிர்க்கும் நிலைப்பாட்டை எடுப்பதுதான் சரியாக இருக்கும் என சீனியர் அமைச்சர்கள் எடப்பாடியிடம் வலியுறுத்தியுள்ளனர். எடப்பாடிக்கு இதில் உடன்பாடு இருப்பினும், எம்.பி.க்கள் இதற்கு உடன்படுவார்களா என்கிற சந்தேகம் அவருக்கு இருக்கிறது. காரணம், ஓரிரு எம்.பி.க்களைத் தவிர பெரும்பாலான அ.தி.மு.க. எம்.பி.க்கள் ஏதேனும் ஒரு வகையில் மத்திய அரசுடன், ’இணக்கமாகவே இருப்பதுதான்'' என்று விவரிக்கின்றனர் சீனியர்களுக்கு நெருக்கமானவர்கள்.
இ.பி.எஸ்., ஓ.பி.எஸ்.சுக்கு எதிரான பல நடவடிக்கைகளை மறைமுகமாகவும் நேரடியாகவும் மோடி அரசு எடுத்துவரும் நிலையில், அ.தி.மு.க. தரப்பின் அதிருப்தியையும் கோபத்தையும் டெல்லி பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இந்த நிலையில், எம்.பி.க்களின் ஆலோசனைக்கூட்டத்தில் அணை பாதுகாப்பு மசோதாவையும், பல்கலைக்கழக மானியக் குழுவை கலைப்பதையும் எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும் என எம்.பி.க்கள் சிலர் வலியுறுத்தியுள்ளனர். சூழல்களுக்கேற்ப முடிவெடுக்கலாம் என எடப்பாடியால் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. அ.தி.மு.க. நிலையில் மாற்றம் ஏற்படுமா என்பதை கூட்டத்தொடர்தான் காட்டும் என்கிறார்கள் நம்மிடம் பேசிய கட்சியின் பெருந்தலைகள்.
-இரா.இளையசெல்வன்