தமிழ்மொழி மீது மிகுந்த பற்றும், தமிழர்கள் மீதும் நிறைந்த அன்பும் இருப்பதாக அண்மையில் ‘"மனதின் குரல்'’ எனப்படும் மன்கிபாத் உரையில் அடித்து விட்டார் பிரதமர் நரேந்திர மோடி. உடனே தரையிலே தாமரையை மலரச்செய்யும் தந்திரசாலிகள் "பார்த்தீர் களா எங்கள் ஜீயின் தமிழ்ப்பற்றை, கண்டீர்களா எங்கள் ஜீயின் கருணை மனத்தை'' என்று புளகாங்கித மொழிகளால் புல்லாங்குழல் ஊத ஆரம்பித்துவிட்டனர்.
ஆனால் உண்மை நிலை என்ன?
எதையும் கேள்வி கேட்கும் இதயங்கள் நிறைந்த தமிழ் மண்ணில், ஜீ அவர்கள் வலிந்து வாயால் சுடும் வடை கள் எல்லாம் போணியாகாமல், அவர் களைக் குத்தும் ஆணியாகி விடுகின்றன.
மோடி ஜீ அரசு தமிழுக்கு என்ன செய்திருக்கிறது என்று பார்க்கும் முன், சவப்பெட்டியில் சவாரி செய்யும் சமஸ்கிருதத்திற்கு என்ன செய்திருக்கிறது என்று பார்க்கவேண்டும்.
ஏன் பார்க்கவேண்டும்? தமிழின் நேரெதிர் மொழியாக சமஸ்கிருதத்தைத் தான் வரலாறு கட்டமைத்திருக்கிறது.
எடுத்துக்காட்டாக, ‘நீராருங் கடலுடுத்த’ என்று தொடங்கும் நமது தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலின் எஞ்சிய பகுதிகள், சமஸ்கிருதத்தின் மீதான சாடலாகவே அமைந்துள்ளன.
"ஆரியம் போல் உலக வழக்கு அழிந்து ஒழிந்து சிதையா உன்
சீரிளமைத் திறம் வியந்து
செயல் மறந்து வாழ்த்துதுமே..
"சதுமறை ஆரியம் வரும் முன்
சகம் முழுதும் நினதாயின்
முதுமொழி நீ அனாதி என
மொழிகுவதும் புகழாமே"
"வள்ளுவம்செய் திருக்குறளை
மறுவற நன்கு உணர்ந்தோர்கள்
உள்ளுவரோ மனுஆதி,
ஒரு குலத்துக்கு
ஒரு நீதி"
என்று மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை, சமஸ்கிருத மேலாதிக்கத்தை வெளுத்து வாங்கியுள்ளார்.
இந்திய அரசியல் நிர்ணய அவையில் சமஸ்கிருதத்தை இந்தியாவின் ஆட்சி மொழியாக்கிட, கோயங்காக்கள் குரல் கொடுத்த நேரத்தில் தான், பச்சைத் தமிழரான கண்ணியமிகு காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிப், "நனித்தொன்மையும், தனித்தன்மையும், அரசுகளை நடத்திய பான்மையும் கொண்ட,
மேலும்,
இன்றும் உயிரோடிருக்கிற என் தாய்மொழியான தமிழுக்கே இந்தியாவின் ஆட்சிமொழியாகும் தகுதி உண்டு'' என்று முழங்கினார். எனவே, தமிழ் மீது பற்றிருப்பதாகப் பசப்புபவர்கள் தமிழையும், சமஸ்கிருதத்தையும் எவ்வாறு நடத்தி வருகின்றனர் என்பதை ஒப்பிட்டு ஆய்வு செய்தாலே உண்மைகள் விளங்கி விடும்.
நாடாளுமன்றத்தில் சிவசேனை உறுப்பினர் தரியா ஷீல் உள்ளிட்ட ஐவர் கடந்த மூன்று ஆண்டுகளில் ஒன்றிய பா.ஜ.க. அரசு சமஸ்கிருதத்திற்கு எவ்வளவு செலவிட்டுள்ளது, பிற செம்மொழிகளுக்கு எவ்வளவு செலவிட்டுள்ளது, என்று வினா தொடுத்துள்ளனர்.
அதற்கு விடையளித்துள்ள ஒன்றிய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர், "2017 ஏப்ரல் 3 முதல் 2020 மார்ச் 31 வரை சமஸ்கிருதத்திற்கு ஒன்றிய பா.ஜ.க. அரசு 643.84 கோடி செலவிட்டுள்ளது" என்று கூறியுள்ளார்.
தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஒடிசா என ஐந்து மொழிகளுக்கும் சேர்த்து வெறும் 29 கோடி ரூபாயை ஒன்றிய பாஜக அரசு செலவிட்டுள்ளது.
தாய்மொழியாகவும், வாய்மொழியாகவும், வாழும் மொழியாகவும் இல்லாத சமஸ்கிருதத்தைத் தேவபாஷை(?) என்கிறது ஆரியம். அதனால் அதற்கு 643.84 கோடி மக்கள் பணத்தை ஒன்றிய பா.ஜ.க. அரசு செலவிடுகிறது என்றால் யாரைத் திருப்திப்படுத்த, யாருடைய வழிகாட்டலில் ஒன்றிய அரசு செயல்படுகிறது என்று உணரலாம்.
ஐந்து மொழிகளும் கணிசமான அளவு மக்களால் பேசப்படுபவை.
அதிலும் தமிழ்மொழி உலகளாவிய பெருமைக்கு உரிய மொழி. ஐந்து மொழிகளுக்குள் தமிழும் ஒன்று என்று அடக்கி, 29 கோடி ரூபாயை வீசி எறிவதற்குப் பெயர்தான் ஜனநாயகமா?
இதைவிட 22 மடங்கு அதிகமாக சமஸ்கிருத மொழிக்கு ஒன்றிய அரசு செலவிடுவது எந்தவகையில் நியாயம்?