விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகேயுள்ள கீழஉப்பி-குண்டு கிராமத்தில், சேதுராமன் என்பவர் பெயரில் கல்குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்குவாரியில் மே 1 தொழிலாளர் தினத்தன்று, அங்கு பணிபுரியும் மதுரை மாவட்டம் புதுப்பட்டியைச் சேர்ந்த கந்தசாமி, கோவில்பட்டியைச் சேர்ந்த பெரியதுரை மற்றும் குருசாமி ஆகிய மூன்று பேரும் கல்குவாரிக்குள், வெடி மருந்து லாரிகளிலிருந்து குடோனுக்கு வெடி பொருள்களை மாற்றிக்கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக கண்ணிமைக்கும் நேரத்தில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வெடி விபத்தில், இவர்கள் மூவருமே சிக்கி, உடல் சிதறி உயிரிழந்தனர். இந்த வெடிச்சத்தம், சுற்றியுள்ள கிராமங்களை அதிரச்செய்ய, அப்பகுதி முழுக்க தீப்பிழம்பும், புகைமூட்டமுமாகக் காட்சி தந்தது. தகவலறிந்து ஆவியூர் போலீசார், மாவட்ட எஸ்.பி. பெரோஸ்கான் அப்துல்லா, மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் மற்றும் அருப்புக்கோட்டை கோட்டாட்சியர் வள்ளிக்கண்ணு உள்ளிட்டோர் நேரில் வந்து ஆய்வு செய்தனர். காவல்துறை யினர், வருவாய்த் துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர், உடல்கள் சிதறிக்கிடக்கும் இடத்திற்கு சென்று, உடல்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டனர். அவ்விடத்தில் பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. மதுரை மாநகர் வெடிபொருள் தடுப்பு மற்றும் செயலிழப்புப் பிரிவு போலீசார், வேறு ஏதேனும் வெடி பொருட்கள் உள்ளதா என ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த வெடிவிபத்து குறித்த விசாரணையில் இறங்கி னோம். அனைத்து விவசாயிகள் கனிமவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கத்தைச் சேர்ந்த திருமலை, "இந்த வெடிச்சத்தம் 10 கிலோமீட்டர் சுற்றளவுக்கு கேட்டது. 50க்கும் மேற்பட்ட வீடுகளில் விரிசல் விழுந்து கட்டடமே ஆடியது. எதிரி நாட்டு ராக்கெட் குண்டுதான் நம்ப ஊரில் விழுந்துவிட்டதோ என்று பயந்துவிட்டோம். 100 கிலோ வெடிபொருள் ஒரே நேரத்தில் வெடித்தா என்ன ஆவது?
கல்குவாரி உரிமையாளர் சேதுராம னின் வெடிபொருள் குடோன், ராஜபாளை யத்தைச் சேர்ந்த ராஜ்குமார் உள்ளிட்ட 5 பேர் பெயரில் இயங்கி வருவதாகக் கூறப்படுகிறது. இந்த ராஜ்குமார், இதேபோல் பல்வேறு இடங்களில் வெடிமருந்து குடோன் வைத்துள்ளார். ஒரு குடோனில் மாதத்திற்கு 1,500 கிலோ வெடிமருந்து தான் ஸ்டாக் வைக்க வேண்டும். அதற்குத்தான் லைசன்ஸ் கொடுக்கப் படும். ஆனால் இங்கு வாரத்திற்கு 10 ஆயிரம் கிலோ வரை சப்ளை செய்யப்படுகிறது. அதேபோல் தமிழ்நாடு கனிமவள அலுவலகம், ஒரு வாரத்திற்கு 50 நடை கனிமங்களை மட்டுமே லாரிகளில் எடுத்துச்செல்ல டோக்கன் வழங்குகிறது. ஆனால் விருதுநகர் மாவட்டத்திலிருக்கும் 200 குவாரிகளிலிருந்து, 500 நடை கனிமங்களை சட்டவிரோதமாக லாரிகளில் எடுத்துச் செல்கின்றனர். இதனால்தான் அனுமதித்ததைத் தாண்டி பல ஆயிரம் டன் வெடிமருந்து சப்ளை செய்யபடுகிறது. லாரியிலிருந்து வெடி மருந்தை குடோனுக்கு மாற்றுகை யில்தான் கோர வெடிவிபத்து நடந்து மூவர் பலியாகியுள்ளனர்.
விருதுநகரில் கல்குவாரிகள் அனைத்துமே கிராமங்களில்தான் இருகின்றன. விதிமீறல்களோடு தான் செயல்படுகின்றன. இவற்றால் விவசாயம் பாதிக்கப்படுவது குறித்து மாவட்ட நிர்வாகம் கண்டுகொள்வதில்லை. வெடிமருந்து மூலப் பொருட்களை கல்குவாரிகளில் பதுக்கி சப்ளை செய்ய யார் அனுமதித்தது? வெளிமாவட்டங் களுக்கு லாரிகளில் சப்ளை செய்வதை கண்டுகொள்ளாதிருப்பதால், லாரிகளில் உராய்வு ஏற்பட்டும் வெடிவிபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. இனியாவது தமிழ்நாடு முழுக்க கல்குவாரிகளை தமிழ்நாடு அரசு ஆய்வுசெய்து அவற் றை முறைப்படுத்த கடுமையான சட்ட மியற்ற வேண்டும்'' என்றார்.
இச்சம்பவம் குறித்து காரியா பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, சேது ராமன், ராஜ்குமார், ராம்ஜி, ராமமூர்த்தி ஆகியோரை கைது செய்தனர். இந் நிலையில் கல்குவாரி நிர்வாகத்தின் சார்பில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு தலா 12 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டது. திருமங்கலம் தி.மு.க. மாவட்ட செயலாளர் மணிமாறன், தலா ஒரு லட்சம் வழங்கினார். முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்ததோடு, மீட்புப்பணிகளைத் துரிதப்படுத்தியுள்ளதாகவும், உயிரிழந்தோரின் வாரிசுகளுக்கு தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று விரைவில் நிவாரண உதவி வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். கல்குவாரி விபத்துக் களுக்கு முடிவுகட்டப்படுமா?