மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிரந்தரத் தலைவர் எனக் கட்சியின் பொதுக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட கமல், தனது இயக்கத்தின் 4ஆம் ஆண்டு விழாவில் உற்சாகமாகக் கலந்து கொண்டார். கட்சியினரிடமும் அதே உற்சாகம் இருக்கிறதா? சில வாரங்களுக்கு முன்பு காலில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார் கமல். அதற்கு முன்பு வரை, தி.மு.க.வுடன் கூட்டணி வைத்து வருகிற சட்டமன்றத் தேர்தலை சந்திக்கலாமா? என காங்கிரசின் துணையுடன் யோசித்துப் பார்த்தார். ஆனால் தி.மு.க.விடமிருந்து எந்த சிக்னலும் கிடைக்கவில்லை.
பொதுக்குழுவில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற பழ.கருப்பையா, உலக அரசியலில் சிறந்த தலைவர் கமல் தான் எனப் பாராட்டியபோதும், தி.மு.க.வையும் கலைஞரையும் விமர்சித்த போதும் சரி கமல் முகத்தில் அளவில்லா ஆனந்தம். ஜெயலலிதா- எடப்பாடி அரசுகள் பற்றிய விமர்சனமின்றி முடிந்தது சிறப்புரை.
இந்த நிலையில்தான் தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் தனித்தே நிற்க வேண்டும் என்ற கமலின் நிலைப்பாட்டிற்கு கட்சிக்குள்ளே கடும் எதிர்ப்பு கள் கிளம்பின. காரணம் மாநகரம், நகரங்களில் கட்சிக்கு இருக்கும் ஆதரவு, கிராமப் புறங்களில் சுத்தமாக இல்லை என்ற நிதர்சனத்தை நிர்வாகிகள் சுட்டிக் காட்டிய பிறகு, டெல்லியில் மட்டும் இருக்கும் அர்விந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியுடன் தொடர்பை ஏற்படுத்தினார்.
இதன் பின் 234 தொகுதிகளிலும் என்பது 108 என்றானது. இதற்கும் கட்சியின் உயர்மட்டக் குழுவில் இருக்கும் 18 பேரில் 14 பேர் எதிர்ப்புத் தெரிவித்தனர். தி.மு.க.வுடன் கூட்டணி வைத்து 10-லிருந்து 15 எம்.எல். ஏ.க்கள் அளவுக்கு ம.நீ.ம. சார்பில் சட்டசபைக்குள் நுழையலாம் என்ற நிர்வாகிகளின் யோசனையையும் ரிஜெக்ட் பண்ணிவிட்டார் கமல்.
இதையெல்லாம் மனதில் வைத்துத் தானோ என்னவோ, ""வாரிசு அரசியலை வெறுக்குறேன். சீட்டை வாங்கி விற்பவர்களுக்கு இடமில்லை. அப்படி நினைப்பில் உள்ளவர்கள் இப்போதே வெளியே போகலாம்''’என பொதுக்குழுவில் பேசிய கமல், அரங்கின் வாயில் கதவுகளையும் திறக்கச் சொல்லி திகில் கிளப்பினார்.
இப்படி பல வழிகளிலும் அரசியல் கணக்குடன் அலைபாய்ந்த கமல், ஈயம் பூசுன மாதிரியும் இருக்கணும், பூசாத மாதிரியும் இருக்கணும் என்ற பாலிசிக்கு வந்துள்ளார். அதாவது தி.மு.க.வையும் எதிர்க்கணும், பி.ஜே.பி.யின் பி டீம்னும் சொல்லிடக் கூடாது என்ற பாலிசியுடன் அகில இந்திய மஸ்திதே இத்திவராதல் முஸ்லிம் கட்சியின் தலைவர் அசாதின் ஓவைசியுடன் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளார். ஓவைசியும் சமீபத்தில் நடந்த அக்கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்தில் பேசும்போது தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியில் இடம் கிடைக்கா விட்டால், ம.நீ.ம.வுடன் இணைந்து மூன்றாவது அணி அமைப்போம் எனக்கூறியுள்ளார். அதேபோல் இங்கே எஸ்.டி.பி.ஐ.யுடன் கூட்டணி வைத்தால் இஸ்லாம் சமூக வாக்குகளைக் கவரலாம் என்ற ஐடியாவும் கமலுக்கு உள்ளது.
என்னதான் இந்த ரூட்டில் அரசியல் கணக்குப் போட்டாலும் பிராமணர்கள் அதிகம் வசிக்கும் சென்னை தியாகராய நகர் அல்லது மயிலாப்பூர் தொகுதியில் நிற்கவேண்டும் என்பது தான் கமலின் மனக்கணக்கு.
அனைத்து வேலைகளும் நலமாக போய்க் கொண்டிருந்த போதுதான், கடந்த 20ஆம் தேதி போயஸ் கார்டனில் ரஜினியைச் சந்தித்திருக்கிறார் கமல். இருவருமே பரஸ்பரம் உடல்நலம் மட்டுமே விசாரித்ததாகவும் அரசியல் பேசவில்லை என்றும் மக்கள் நீதி மய்யம் சார்பி லேயே விளக்கம் சொல்லப்பட்டது.
கட்சியின் நான்காம் ஆண்டு துவக்க விழாவில், ரஜினிக்கு அழைப்பு விடுத்தார் கமல்.