தேர்தல் நெருங்க... நெருங்க கூட்டணிக் கட்சிகள் தங்கள் பலத்தை தலைமையிடம் காட்டுவதற்காக மாநாடு போன்ற பிரம்மாண்ட கூட்டங்களை நடத்துவது வழக்கம். அந்த வரிசையில், மேற்கு மண்டலத்திலுள்ள கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, பிப்ரவரி 4ஆம் தேதி, ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் எழுச்சி மாநாட்டை நடத்தியது. இந்த மாநாட்டில் தி.மு.க. அமைச்சர்கள் சு.முத்துசாமி, மா.சுப்பிரமணியன், மு.பெ.சாமிநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
கவுண்டர் சமூகத்தின் பலமாக உள்ளது ஈஸ்வரன் தலைமையிலான கொ.ம.தே.க. கட்சி. இக்கட்சியின் மாநாட்டில், 16 ஆயிரம் பெண்கள் கலந்துகொண்ட வள்ளி கும்மி ஆட்டம் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி கின்னஸ் சாதனைப் புத்தகத்திலும் இடம்பெற்றது. அ.தி.மு.க. தலைவரும், பா.ஜ.க. தலைவரும் தங்களது அடையாளமாக கவுண்டர் சமூகத்தைக் காட்டும் நிலையில், ஒட்டுமொத்த கவுண்டர் சமூகமே தங்கள் கட்சியின் பின்னால் அணி திரள்வதுபோல் காட்டுவதற்காக கொ.ம.தே.க. கட்சியினர் கடுமையாக உழைத்திருக்கிறார்கள்.
கொங்கு மண்டலத்தில் விவசாயம், நெசவு உள்ளிட்ட தொழில்களைக் காப்பாற்றி முன்னேற்ற, தேவையான நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தி 27 தீர்மானங்களை அம்மக்களின் நலன் சார்ந்து நிறைவேற்றியிருக்கிறார்கள். அந்த தீர்மானங்களை கொ.ம.தே.க. இளைஞரணிச் செயலாளர் சூர்யமூர்த்தி வாசித்தார்.
மாநாட்டில் பொதுச்செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன் பேசும்போது, "நாம் நாட்டை ஆண்டவர் களும் அல்ல. ஆளுபவர்களும் கிடையாது. நம்மிடம் அமலாக்கத்துறை, வருமானவரித்துறை கிடையாது. ஆனால் பாசத்துக்காகவே இந்த கூட்டம் கூடியுள்ளது. நமது அமைப்புக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் எழுப்பப்படும் விமர்சனங்கள் மன வேதனையை ஏற்படுத்துகிறது. அனைத்து அவமானங்களையும் தீரன் சின்னமலை பார்த்துக்கொள்வார் என்ற நம்பிக்கையுடன் நான் இருக்கிறேன். நமது சமூகம் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டதால் தமிழகத்தில் டாக்டர்களாகவும், என்ஜினீயர்களாகவும், அரசு அதிகாரிகளாகவும் பணியாற்றுவதற்கு முக்கிய காரணமான கோவை செழியனையும், கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவையையும் மறந்துவிடக்கூடாது. நமது கட்சியில் ஒரு எம்.எல்.ஏ., ஒரு எம்.பி. இருக்கிறோம். கொங்கு மண்டலத்தில் சிறந்த திட்டங்களை நிறைவேற்ற பல எம்.எல்.ஏ.க்கள் வேண்டும். பா.ஜனதாவில் 4 எம்.எல்.ஏ.க்கள் இருந்தும் கொங்கு மண்டல வளர்ச்சிக்காக என்ன செய்தார்கள்?
கொங்கு மண்டலத்தில், ஜவுளி, லாரி, ரிக் வண்டி, என்ஜினீயரிங், கோழிப்பண்ணை என அனைத்துத் தொழில்களும் மத்திய அரசின் தவறான கொள்கை காரணமாக மோசமடைந்து வருகின்றன. இதனால் தங்களது வாரிசுகளை தொழிலில் ஈடுபடுத்த விரும்புவதில்லை. தொழி லைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை வேண்டும்.
குறை சொல்லியே பெயர் வாங்கிய புலவர் பற்றி கூறுவது உண்டு. தமிழகத்தில் அரசியல் கட்சித் தலைவர் ஒருவர் அதுபோன்று பேசி வருகிறார். மராட்டிய மாநிலத்தில் 18 ஆயிரம் கிலோமீட்டர் நீளமுள்ள சாலைக்கு 76 சுங்கச்சாவடிகள் உள்ளன. ஆனால் தமிழகத்தில் 6 ஆயிரத்து 500 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலைக்கு 60 சுங்கச்சாவடிகள் அமைத்து பணம் வசூலிக் கப்படுகிறது. சாயக்கழிவு பிரச்சினைக்கு இதுவரை தீர்வு காணப்படவில்லை. பெருந்துறையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படவில்லை. ஆனால் கொங்கு மண்டலத்தில் மட்டுமே 21 தனியார் புற்றுநோய் மருத்துவமனைகள் உள்ளன. சாயக்கழிவு பிரச்சினையால் மட்டுமே அதிகமாக புற்றுநோய் ஏற்படுகிறது. தமிழகத்தில் சிறிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்ட நிலையிலும், ஈரோடு, கோவை, சேலம் போன்ற பெரிய மாவட்டங்களை பிரிக்க என்ன தயக்கம்?'' எனக் கேள்வி எழுப்பினார்.
கொங்கு எழுச்சி மாநாட்டுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துக் கடிதம் அனுப்பியிருந் தார். அதனை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வாசித்தார். பின்னர் பேசிய அமைச்சர், "கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், இந்த மண்ணுக்கு தேவையான கோரிக்கைகளை அமைச்சர்களிடம் உரிமையோடு கேட்டு செயல்படுத்தி வருகிறார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஈஸ்வரன் கேட்கும் கோரிக்கைகளை செய்து கொடுக்கிறார். இப்பகுதியிலிருந்து ரூ.40 ஆயிரம் கோடி அளவுக்கு ஏற்றுமதி வருவாய் அரசுக்கு கிடைக்கிறது. ஜவுளி, தரமான மஞ்சள் வணிகம் மூலமாக இந்தியாவி லுள்ள முக்கிய தொழில் நகரங்களில் ஒன்றாக ஈரோடு சிறப்புப் பெற்றுள்ளது.
பெருந்துறை பகுதியில் ரோகோ நிறுவனத் தின் சார்பில் தொழில் தொடங்க ரூ.400 கோடி முதலீட்டை ஸ்பெயின் சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈர்த்துள்ளார். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 15 லட்சத்து 15 ஆயிரம் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. பஸ்களில் பெண்களுக்கு கட்டணமில்லா பயணம் அறிமுகப்படுத்தியதால் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 68 சதவீதமாக உயர்ந்துள்ளது'' என்றார்.
அமைச்சர் சு.முத்துசாமி பேசுகையில், "தமிழகத்தில் கடந்த 15 ஆண்டுகளாக தேங்கிக் கிடக்கும் பிரச்சினைகளைத் தீர்க்க அரசு பெரு முயற்சி செய்துவருகிறது. வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை இந்த மாநாடு ஏற்படுத்திக் கொடுக்கும்'' என்றார்.
கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி மேற்கு மண்டலத்தில் பலமாக உள்ளது. அது தி.மு.க. கூட்டணிக்கு வலுச்சேர்க்கும் என்பதை மாநாட்டின் மூலம் காட்டியுள்ளார்கள். கவுண்டர் சமூகத்தின ரின் மொத்த பலமும் கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சிக்கே உள்ளது என்பதை வெளிப்படுத்தி யுள்ளார்கள்.