மணிப்பூரில் நிர்வாணப் படுத்தப்பட்டு ஊர்வல மாகக் கொண்டு செல்லப்பட்ட அந்த இரு சகோதரிகள் கலவரத்தின்பொழுது போலீசுக்கு செல்ல வில்லையா? சென்றார்கள்... காவல்துறைக்குச் சென்றனர். அதில் ஒரு பெண், கார்கில் போரில் போராடி, நம் மண்ணைக் காப்பாற்றிய ராணுவ வீரரின் மனைவி. எனினும் அந்த வீடியோ வெளியாகும் வரை நடவடிக்கை இல்லை.
சேனல்கள், இணையம் என எல்லா இடத்திலும் பேசிக்கொண்டும் விவாதித்துக் கொண்டும் இருந்த நேரம். எப்படியும் இந்த தீயை அணையவிடக்கூடாது என மனதில் ஒரு உறுதி. அந்த இரு பெண்களுக்கு மட்டுமல்ல, மணிப்பூரில் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு பெண்ணுக்கும் நீதி கிடைக்கவேண்டும். தலைவர்களே ஏதும் செய்யமுடியாத நிலையில் சாமான்யன் என்ன செய்யமுடியும்?
நான் வகுப்புகளில் சொல்வேன், “"முடியாது எனில் முடியாது. முடியும் எனில் முடியும்.' ஏதாவது செய்யமுடியும் என நம்பினேன். இன்றும் நம்புகிறேன்.
இரவு இன்பாக்ஸில் ஒரு செய்தி. அமெரிக்காவிலிருந்து ஷான் சங்கரன் எனும் நண்பர் என்னை ஒரு குழுவில் இணைத்தார். அந்தக் குழுவில் அமெரிக்காவைச் சேர்ந்த நார்த் அமெரிக்க மணிப்பூர் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இருந்தனர். அப்பொழுது ஷான் ஒரு ஜூம் லிங்க் அனுப்பினார். அதில் கலந்துகொண்டபோது, பீட்டர்ஃபடரி(ஷ்)க் என்பவர் ஒரு தீர்மானம் செய்யப்போவதாகச் சொன்னார்.
கலிபோர்னிய மாநிலத்தில் வசிக்கும் ‘ரோ கண்ணாவை நோக்கி, அவர் உண்ணா விரதம் இருக்கப்போவதாக அறிவித்தார். அவர் கலிபோர்னியா தொகுதியின் எம்.பி. போல, அங்கு அதை ரெப்ரசண்டிடேவ் என குறிப்பிடு கின்றனர். அவர், அமெரிக்க காங்கிரஸ் ஃப்ளோரில் (நம் பார்லிமெண்ட்டுக்கு ஒப்பானது) குரல் எழுப்பவேண்டும் என்றார். எனக்கு ஆச்சர்யம். மணிப்பூர் சிக்கலுக்காக எங்கோ இருக்கும் ஒருவர் போராடும்பொழுது நான் ஏன் சும்மா இருக்கவேண்டும்?. பீட்டருக்கு ஆதரவு தெரிவித்து, முக்கியமாய் மணிப்பூர் பெண்களுக்காக நான் உண்ணாவிரதம் இருக்க முடிவுசெய்தேன். ஷானும் அதே முடிவை யெடுத்தார். அவர்கள் இருவரும் அமெரிக்காவி லிருந்தும் நான் பெங்களூரிலிருந்தும் கலந்துகொண்டோம்.
டல்லாஸ், மிக்சிகன், சிக்காகோ என அமெரிக்காவில் ஒவ்வொரு மாகாணமாக மணிப்பூர் மனித உரிமைகளுக்கான போராட்டம் பரவியது. பீட்டருடன் இணைந்து ஜூலை 25லி-ருந்து எங்கள் உண்ணாவிரதம் தொடர்ந்தது. காலை, மாலை அனைவரும் ஜூமில் சந்தித்து அன்றைய நிகழ்வுகளை தீவிரமாக விவாதிப்போம். பல நிகழ்வுகளை தமிழ் அமெரிக்கா டி.வி. நேரடியாக ஒளி பரப்பியது. உலகமெங்கும் உள்ள இந்தியர்கள் போராட்டங்கள் செய்ய ஆரம்பித்தனர். இந்தியாவில் மிசோரமில் வரலாறு காணாத கூட்டம். அங்கிருந்தும் ஆன்லைனில் பலர் பங்கு பெற்றிருந்தனர். இதற்கு நடுவில் லண்டனிலும் போராட்டம் பரவியது.
இப்படி உலகின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் ஜூமில் இணைந்தோம். மிசோரமிலிருந்து ஒருவர். ஆன்லைன் எங்கள் எல்லை களைத் தகர்த்தெறிந்து இருந்தது. டிவிட்டரில் ரோ கண்ணாவை நோக்கி பீட்டர் கேட்டிருந்த கேள்விகளை பலர் பகிர்ந்திருந்தனர்.
இங்கு எனக்கு மூன்றாம் நாள் உண்ணாவிரதத்தின்போது லேசாக மயக்கம் வந்தது. அதற்குள் நாமடா, நார்த் அமெரிக்க மணிப்பூர் அமைப்பு இன்னொரு போராட் டத்தை முன்னெடுக்க ஆரம்பித்தது. ஐ.நா. சபை நியூயார்க் ஆபீஸ் முன்னால் போராட சிலர் தயாரானார்கள். இந்தியாவிலிருந்து நாக மகேஸ்வரி, புவனா, ஜாவேத் என சிலர் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
உண்ணாவிரதத்தின் ஐந்தாவது நாளில் எனக்கு கடும் முதுகு வலி. சனி, ஞாயிறு கார்மென்ட் தொழிலாளிகளுக்கு உணவு முறை ட்ரைனிங் எடுக்கவேண்டும். அவர்களை ட்ரைனர்கள் ஆக்கவேண்டும். உணவு முறை களின் மூலம் உடலை எப்படி ஆரோக்கியமாக வைப்பது என்பதுதான் ட்ரைனிங்.
இதற்கு நடுவில் சென்னையிலிருந்து ஒரு மெசேஜ். ஒரு மருத்துவர் "நாம் ஏன் மணிப்பூர் மக்களுக்காக மெண்டல் ஹெல்த் கேம்ப் நடத்தக்கூடாது?' என பேசினார். உடனடியாக முடிவெடுத்தோம். நண்பர்கள் உதவ, பல குழப் பங்களுக்கு நடுவே டிக்கட்டுகள் தயாரானது.
நீண்டநாட்கள் உண்ணாவிரதம் சிக்க லானது. ஏனெனில் யூரினில் உப்புகள், தாதுக்கள் நிறைய வீணாகும். எனவே பசிக்கிறது என்பதற் காக நீர் அளவுக்கு அதிகமாகக் குடிக்கக் கூடாது. அளவுக்குக் குறைவாக குடித்தால் டிஹைட்ரேஷன் ஆகி மயக்கம் வரும். நடுவில் கனடாவில் இன்னும் சில நகரங்களுக்கு போராட் டம் பரவியது. ஐந்தாம் நாளின் பொழுது அமெ ரிக்க பாராளுமன்றத்திற்கு விடுமுறை வந்தது. அப்ப வும் பீட்டர் உண்ணா விரதத்தை முடிக்க தயாராக இல்லை.
ரோ கண்ணா நடத்திய கூட்டத்தில் பீட்டர் கேள்வி கேட்க, “"ஆகஸ்ட் மாதம் இந்தியா செல்கிறேன், அங்கு பேசுகிறேன்'”என்று மழுப்பியவர் இன்று வரை பேசவில்லை. பீட்டரை உண்ணாவிரதத்தை முடிக்கச் சொல்லி பலர் கேட்டுக்கொண்டனர். அந்தக் கூட்டத்தில் ஷான்சங்கரனையும் பேசவிடவில்லை. வலுக்கட்டாயமாக அந்த உண்ணாவிரத நேரத்திலும் மைக் இல்லாமல் பேசியிருக்கிறார். அது அத்தனை எளிதில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்காக குரல் கொடுக்கவேண்டும் என்ற வேகம் எல்லாரையும் இணைத்திருந்தது.
ஆகஸ்ட் 3, ஆன்லைனில் ஒரு நாள் அமைதிக்கான அடையாள உண்ணாவிரதம் குழுவாய் இருக்கலாம் என முடிவெடுத்தோம். நண்பர் செல்வா ஆர்வமுடன் இணைத் தார். நம்பவே முடியவில்லை, 110 நபர்கள் உண்ணாவிரதம் இருந்து தங்கள் புகைப்படத்தையும் பகிர்ந்திருந்தனர்.
சிறு விஷயமாக ஆரம்பித்த ஒன்று தமிழக இணையவாசிகள் பலரை இணைத்தது. இதற்கு நடுவில் அப்பொழுது ஆஸ்திரேலிய நண்பர்களிடம் இதைச் சொல்ல, அவர்கள் வீறுகொண்டு எழுந்தனர். அக்குழுவில் அரசியல் அறிமுகமுள்ள பலர் இணைந்தனர். அதில் ஒரு குக்கி பெண்ணும் இருந்தார். அவர் குக்கி மொழியைவிட மெய்தி மொழி நன்றாக பேசுவார். அவர் சகோதரிகள், தாய் எல்லாரும் இம்பாலில் வசித்தவர்கள். அங்கிருந்து அவர்கள் தப்பித்ததே பெரிய கதை.
ஆஸ்திரேலிய சிட்னி பார்லிமென்ட் ஹாலில் நிகழ்வு நடைபெற ஏற்பாடு செய்தனர். அதில் அபிஜில் பயோட் என்ற எம்.பி. கலந்துகொண்டு பேசினார். முன்னாள் செனட்டர்கள் பலரும் வந்திருந்தனர். இது நிஜமாகவே பெரிய அளவில் நடந்த வெற்றிகரமான நிகழ்வு. பல்வேறு அரசியல்வாதிகள் மிக நுணுக்கமாக பல்வேறு நாட்டிலிருந்து கவனித்து வருவதை அந்த லைவில் கவனித்தேன். அவர்களுக்கு பல தகவல்கள் முன்பே தெரிந்திருக்கிறது.
பீட்டர் உடல் நிலையும், ஷான் உடல்நிலையும் ஒடுங்க ஆரம்பித் ததைக் கவனித்தேன். அவர்களுக்கு உப்பு நீர் குடிக்கச் சொல்லி பரிந்துரைத் தேன். உப்பு நீர் குடித்தால் இன்னும் சில நாட்கள் தெம்புடன் விரதமிருக்க முடியும். தினம் ஒரு கிளாஸ் உப்பு போட்டு எலுமிச்சை நீரும் எப்சம் சால்ட் குளியலும் என்னை உப்பு இழப்பிலிருந்து காப்பாற்றியது. நாள் முழுக்க அலுவல் வேலை, இரவு மீட் டிங்குகள். இதற்கு நடுவே மணிப்பூர் கிளம்ப ஆயத்தங்கள் வேறு. ஆகஸ்ட் 4 மணிப்பூர் கிளம்பவேண்டும்.
நாங்கள் மணிப்பூர் செல்வது வெளி உலகத்திற்கு தெரியவேண்டாம். அரசியல்ரீதியாக இல்லாமல் களத்திற்காக மட்டும் செல்வதாக ஏற்பாடு. அங்கு அரசியல் பேசுவது உடன்வருபவர்களுக்கு ஆபத்தும்கூட. நண்பர்கள் இணையத்தில் மணிப்பூர் சம்பந்தமாக புகைப்படங்கள் பகிர வேண்டாம் என சொல்லியிருந்தனர். உண்ணாவிரதம் முடிக்கச் சொல்லி அமெரிக்க இண்டர்நேஷனல் காங்கிரஸ் அமைப்பு தலைவரும், ராகுல் காந்தி அவர்களின் நண்பரு மான சாம் பெட்ரோடா என்னிடம் சொன்னார். நடுவில் எம்.பி. மாணிக் தாக்கூர் போன் செய்து உடல்நலம் விசாரித்தார்.
இரு பெண்களுடன் மணிப்பூர் கிளம்பப்போகிறேன். அங்கு இருக் கும் ஆபத்துகள் உணர்த்தப்பட்டன. நான் பத்தாவது நாளாக உண்ணா விரதம் தொடர்ந்துகொண்டிருந்தேன்.
எங்கள் உண்ணாவிரதம் எங்கு முடிந்தது?
(தொடரும்…)