ff

செப்டம்பர் 17 அன்று மணிப்பூரிலிருந்து டயாலிஸிஸ் மெஷின் தேவை என போன்கால் வந்திருந்தது. அதில் ஆறு நபர்கள் டயாலிசிஸ் வசதி இல்லாமல் இறந்ததாக தகவல். முறையாக மருத்துவ வசதி இல்லாமல் பலர் இறந்துள்ளார்கள். அதில் இரு பச்சிளம்குழந்தைகளும் அடக்கம்.

மே மாதம் வரை, இம்பால் அருகில் இருப்பதால் எந்த மருத்துவம் தேவையென்றாலும் அங்குசென்று மருத்துவம் பார்ப்பதே இங்குள்ளவர்களின் வழக்கம். நாங்கள் இருந்த மலைப்பகுதியில் ஒரு சிறு ஆரம்ப சுகாதார நிலையம் மட்டுமே உள்ளது. அங்கும் மருத்துவர்களும், மருத்துவ வசதிகளும் மிகக் குறைவு. இவர்களிடம் கையில் ஒரு பைசா இல்லை. மே மாதத் துக்குப் பின் வெளியே செல்லவோ மருத்துவர்களிடம் காட்டவோ முடியாது. தன்னார்வலர்கள் யாராவது கூட்டிக்கொண்டு சென்றால்தான் முடியும். முகாம்களுக்கு மருத்துவ உதவி இன்றுவரை தேவைப்படுகிறது.

அவர்களிடம் பேசிவிட்டு தூரத்திலிருக்கும் முகாமிற்குச் சென்றோம் கடுமையான பாதைகள். முகாம்களுக்குச் சென்றுவருவது அத்தனை எளிதல்ல. ஆரோக்கியமாக இருப்பவர்களால் மட்டுமே பயணம் செய்யமுடியும். அந்த முகாம் ஒரு மலைப்பகுதியின் நடுவில் அமைந்திருந்தது. அந்த ஊர்ப் பெரியவரை மரியாதை நிமித்தமாக சந்திக்கச் சொன்னார்கள். அவரைச் சந்தித்துவிட்டு முகாமுக்குப் போனால் அதிர்ச்சி. தகரக்கொட்டையில் தடுக்கப்பட்டு வரி சையாக அறைகள் உருவாக்கப்பட்டிருந்தது. கழிப்பிட வசதியில்லை. அந்தத் தேவையை நிவர்த்திசெய்து கொள்ள மலை உச்சிக்குப் போகவேண்டும். மழை பெய்துகொண்டே இருக்கிறது. பூச்சிகள் சிக்கல்கள் வேறு. பெண்கள் இரவில் தனியாகச் செல்வதில் சிக்கல்கள் உண்டு. அந்த முகாமின் தலைவியாக ஒரு பெண் இருந்தார். பல இடங்களில் பெண்களே முகாம்களை நடத்துகின்றனர். முழுக்க விறகடுப்பு சமையல். ஒரு பருப்பு, சோறு, இதுதான் உணவு.

Advertisment

பலரின் முகம் வெளிறியுள்ளது. ஆரோக்கியமான உணவு உண்டு பல மாதங்கள் ஆகிவிட்டன. காய்கறி, இறைச்சி, பால் ஏதுமில்லை. பலர் சத்துக்குறைபாட்டால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். குழந்தைகளின் நிறம், முடி வெளிறிப்போயுள்ளது. பலரின் முகங்களில் திட்டுக்கள் தோன்றியுள்ளன.

இன்னொரு முகாம் பள்ளியில் நடந்தது. அந்த முகாமிற்கு மரப்பாலத்தைக் கடந்து செல்லவேண்டும். பல இடங்களில் சாலை வசதி இல்லை அல்லது படுமோசம். பல வருடங்களாக மலைப்பகுதி பாதைகள் செப்பனிடப்படவில்லை என்றார்கள்.

சமீபகாலங்களாக அரசு பட்ஜட்டில் மலைப்பகுதி களுக்காக மிக மிகக் குறைந்த தொகையை அரசு ஒதுக்கியுள்ளது. அதாவது மூவாயிரம் கோடி சமதளப் பகுதிக்கு என்றால் 200 கோடி மலைப்பகுதி வளர்ச்சிப் பணிகளுக்கு ஒதுக்குவார்கள். பிறகெப்படி சாலையைச் செப்பனிடுவது, வளர்ச்சியைக் கொண்டுவருவது?

Advertisment

பள்ளிகள் முகாம்களாக சில இடங்களில் மாற்றப்பட்டுள்ளன. அப்படியெனில் அரசுப் பள்ளிகளின் கதி என்னவாகும்?

mm

அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லை, நிர்வாக மும் இல்லை. ஏன் எனக் கேட்க, பெரும்பாலான ஆசிரி யர்கள் மெய்தி இனத்தைச் சேர்ந்தவர்கள். கலவரத்தால் இங்கு வரமுடியாத சூழல். "சரி, இங்கு இத்தனை பேர் கல்வி கற்றவர்கள் உள்ளனர் இல்லையா.. அவர்களை ஆசிரியர்களாக வைத்து பள்ளியை தற்காலிகமாக நடத்தக்கூடாதா?'' எனக் கேட்டேன். “"பள்ளிகள் இயங்க பணம் தேவை. முன்பு கொடுத்ததில் 25% கொடுத்தால் போதும். நாங்கள் நடத்துகிறோம் என்றால் பதில் வரவில்லை. அதை வாங்கித் தந்தால் போதும். யார் செய்வது?''என்றார்.

பாதிக்கப்படாத வாழ்வோ, பகுதிகளோ இல்லை. முகாம் வாசலில் மிகச்சிறிய பெட்டிக்கடை. பட்டாணி பாக்கெட் மற்றும் ஸ்நாக்ஸ் வாங்கினேன். யாரோ ஒருவர் 5,000 கொடுத்து கடை வைக்க சொல்லியிருக்கிறார். பாதிக்கப்பட்டவரிடமிருந்து முதல் கடை. இளம்பெண் நிர்வகித்தார். டீக்கடையாக மாற பெஞ்சு ரெடி. எல்லாம் அருகில் கிடைக்கும் மரங்கள் அல்லது மூங்கில்களைப் பயன்படுத்தி கட்டுகின்றனர். குக்கி மக்கள் கடும் உழைப்பாளிகள். முகாம்களில் அமர்ந்திருப்பதுபோல கடும் தண்டனை அவர்களுக்கு இல்லை. ஏதாவது செய்தால் பிழைக்க வழியிருந்தால் கிளம்பிவிடுவார்கள். அப்படி இரு பங்கு மக்கள் கிளம்பிவிட்டனர்.

நாங்கள் தங்கியிருந்த இடத்தில் ஒருவர் வாக்கி டாக்கியில் ஏதாவது கேட்டுக்கொண்டே இருப்பார். என்ன வென்று கேட்டபொழுது போன் கனெக்சன் சரியில்லை, இன்டர்நெட்டும் இல்லாமலிருப்பதால் இன்டர்நெட் கிடைக்கும் இடத்திலிருந்து செய்திகள் ஒளிபரப்பாகிக் கொண்டே இருக்கும். அந்த செய்திகளை அவர் கையில் வைத்திருக்கும் வாக்கிடாக்கியின் மூலமாகவோ அல்லது ரேடியோ மூலமாகவோ கேட்டுக்கொண்டே இருப்பார். நாள்முழுக்க வேறு வேலைகள் பார்த்தாலும் அவர் வேலை, செய்திகள் கேட்டுக்கொண்டிருப்பதுதான்.

அவர்களின் பாதுகாப்பு சிஸ்டத்தை அறிந்து கொள்ள, எல்லைப் பகுதிக்கு அழைத்துச் செல்லுங்கள் எனக் கேட் டுக் கொண்டேன். முதலில் கமெண்ட் ஆபீஸ் எனப்படும் ஒரு இடத்துக்கு அழைத்துச்சென்றார். அங்கு எல்லா தகவல் தொடர்புகளும் மையம் கொண்டிருந்தன. மருத்துவ உதவி, என்ன உதவி தேவை என்றாலும் அந்த சென்டருக்கு தகவல் வந்துவிடும்.

mm

ஒரு ஜீப்பில் எங்களை மலைப்பகுதிக்கு அழைத்துச்சென்றனர். அங்கு ஒரு எல்லை போஸ்ட் இருந்தது. அங்கே சிலர் ஆயுதங்களுடன் அமர்ந் திருந்தனர். ஆயுதங்கள் பார்த்து சற்றே ஜெர்க் ஆனேன். அவர்களிடம் "ஆயுதங்களை எடுப்பது தவறல்லவா?'' எனக் கேட்டேன். "நாங்கள் பெரும்பா லும் லைசன்ஸ் துப்பாக்கிகளை வைத்துள்ளோம். நீங்கள் பார்ப்பதெல்லாம் லைசன்ஸ் உள்ள துப் பாக்கிகள். அதுவும் எங்கள் மக்களைப் பாதுகாக்க மட்டுமே. யாரையும் தாக்கவோ சுடவோ இல்லை''’என்றார் அவர்.

அதையும் தாண்டி அழைத்துச்செல்லப்பட்ட போது எரிந்த கிராமம் ஒன்றைப் பார்த்தேன். முன்பு கலகலப்பாக இருந்த இடங்கள், வயல்கள், வீடுகள் எல்லாம் நடமாட்டமிழந்து வெறிச்சோடி யிருந்தன. ஒரு பாதையின் நடுவே ஜீப் நின்றது. வயல்களிலிருந்து துப்பாக்கியுடன் ஓடிவந்தனர். அவர்களைச் சுற்றி வெறும் சேறும் சகதியுமான சாலையில் நின்று காவல் காத்துக்கொண்டிருந்தனர். அவர்களுக்கு அணிய ஷூ இல்லையா? எனக்கு கேட்டபொழுது, அதற்கான பணமில்லை என பதிலளித்தனர். நூற்றுக்கணக்கானவர்கள் எல்லை யைப் பாதுகாக்கின்றனர். அத்தகையவர்களுக்கு ஃப்ராண்ட்லைனர்ஸ் என்று பெயர். ஏதாவது ஆபத்து என்றால் இவர்கள்தான் முதலில் சுடப்படுவார்கள். தங்கள் உயிரை துச்சமாக மதித்து பாதுகாக்கின்றனர். பேசிக் கொண்டே மலையேறினோம்.

முதலில் வந்தது பங்கர் அமைப்பு. பங்கர் என்றால் பதுங்கு குழி. அந்தப் பதுங்கு குழிகளை ஆர்மி அழித்திருந்தது. அங்கிருந்து ஒரு தொலை நோக்கிமூலம் ஆர்மி பாதுகாக்கும் பகுதிகளைக் காட்டினர். அதன்பிறகு அந்தப் பக்கமிருக்கும் மெய்தி கிராமங்களைக் காட்டினர். அதுவும் ஒரு சாதாரண கிராமம்தான். அங்கிருப்பவர்களும் காலையில் எழுந்து விவசாயம் செய்யும் எளிய மக்கள்தான்.

அதிசயமாக போன் ஒலிக்க ஆரம்பித்தது. அப்பொழுதுதான் தெரிந்தது. ரிலையன்ஸ், ஏர்டெல் எல்லா சிக்னல்களும் எல்லையில் கிடைத்தன. மிக மகிழ்வாக இருந்தது. "எப்படி எல்லையில் மட்டும் போன் வேலை செய்கிறது?'' என்று கேட்டேன். "இம்பால் பகுதியில் எல்லா போன் சிக்னல்களும் எடுக்கும். ஆனால் மலைப்பகுதியில் எடுப்பதில்லை'' என்று கூறினார். அதுபோல் ஆபத்துக் காலங்களில் போன் சிக்னல்கள் போய்விடும் என்பதையும் தெரிவித்தார்.

மேலும் உயரம் சென்று பார்த்தால் காவல் காப்பவர்கள் காணப்பட்டனர். துப்பாக்கியுடன் படுத்துக்கொண்டே மணிக்கணக்கில், நாட்கணக்கில் எதிர்ப்பக்கம் கவனிக்கவேண்டும். மிக அலர்ட்டாக இருக்கவேண்டும். தூங்குவது சாப்பிடுவது எல்லாம் அங்கேயே. சாப்பாடு மட்டும் கீழேயிருந்து செல்கிறது. தண்ணீர் குடிக்க ஒரு தார்ப்பாலினை பைபோல் கட்டிவைத்துள்ளனர். தேங்கும் மழைநீரை... கொசு பூச்சி எல்லாம் உட்காரும் அதனை வடிகட்டித்தான் குடிக்கின்றனர். தொற்று ஆபத்து உள்ளதை உணர்ந்தேன். ஏதும் சொல்ல முடியவில்லை. ஷிப்ட் பார்த்து வேலை செய்கின்றனர். இல்லாவிடில் நீண்ட நாட்கள் பாதுகாப்பது சாத்தியமில்லாத ஒன்று.

கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டருக்கு மேல் சேறு, சகதியில் மலையேறி வந்திருந்தோம். மிகக் கடினமான ஏற்றம் அது. தினமும் இதில்தான் அவர்கள் சென்று வருகின்றனர். பலகைகளை அடித்து அதன்மேல் ஒரு பையன் தூங்கிக்கொண்டிருந்தார்.

அந்தப் பையன்....

(தொடரும்)