விவசாயத்துக்கு அடுத்த படியாக இந்தியாவின் மிகப்பெரிய துறையாகக் கட்டுமானத்துறை விளங்கு கிறது. எண்ணிலடங்காமல் பெருகி வரும் கட்டிடங்களும், கட்டுமானங் களுமே இந்தியா வளர்ச்சியடைந்து வருவதைப் பறைசாற்றுகின்றன. சாமானிய மக்களுக்கான சொந்த வீட்டுக் கனவை நனவாக்குவதற்காக வங்கிக்கடன்கள் எளிமைப்படுத்தப் பட்டதோடு, வானுயர்ந்த அப்பார்ட் மெண்ட்கள், வில்லாக்கள் பெருகிவரு கின்றன.
தமிழ்நாட்டைப் பொறுத்த வரை, சென்னை, கோவை, மதுரை, திருச்சி போன்ற மாநகரங்களில் மட்டுமின்றி சிறுநகரங்களிலும் கட்டுமானத்துறை வெகுவேகமாக வளர்ச்சியடைந்துவருகிறது. பெரிய பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் இத்துறையில் கால் பதித்து, வீட்டு மனை லே-அவுட்டுகள், கட்டிடங்கள் விற்பனையில் கோலோச்சுகின்றன.
பல்லாயிரம் கோடிகள் புழங்கக்கூடிய கட்டுமானத்துறையில், அதற்கேற்ப, பத்திரப்பதிவு, லே- அவுட்டுக்கான அப்ரூவல், கட்டிடம் கட்டுவதற்கான அப்ரூவல் என ஒவ்வொன்றையும் செய்து முடிப்பதில் வலுக்கட்டாயமாக வாங்கப்படும் லஞ்சத்துக்கு குறைவே இருப்பதில்லை. இந்நிலையில், கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட 'பார்ட்டி ஃபண்ட்' லஞ்ச வசூல் முறை, இத்துறையில் ஈடுபடும் நிறுவனங் களுக்குப் பெருத்த சவாலாக அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து, இத்துறை சார்ந்த புரமோட்டர்கள் சிலரிடம் விசாரித்தோம்... "தமிழ்நாட்டில், கடந்த சில ஆண்டுகளுக்குமுன் அறிமுகப்படுத்தப்பட்ட 'பார்ட்டி ஃபண்ட்' என்ற லஞ்ச வசூல் முறை, இத்துறையை அரித்துச் சீரழிக்கும் புற்றுபோல் வளர்ந்துவருகிறது. சென்னை மாநகரின் எல்லைக்குள் கட்டப்படும் பெரிய அளவிலான கட்டுமானங்களுக் கும், உருவாக்கப்படும் பெரிய லே- அவுட்டுகளுக்கும், சி.எம்.டி.ஏ. அமைப்பின் அனுமதியைப் பெற வேண்டியது அவசியம். அதே போல், சென்னையின் எல்லைக்கு வெளியே தமிழ்நாடு முழுவது முள்ள இடங்களில் எழுப்பப்படும் பெரிய கட் டிடங்கள், பெரிய லே-அவுட்டு களுக்கு டி.டி. சி.பி. அப்ரூவல் பெற வேண்டியுள்ளது.
இந்த அப்ரூவல் பெறுவதைக் கவனித் துக்கொள்ள, டி.டி.சி.பி. யைப் பொறுத்தவரை சென்னையில் தலைமை யகம் இருக்கிறது. மாவட்ட அளவில், ஒவ் வொரு மாவட்டத் துக்கும் ஜாய்ன்ட் டைரக்டர் ஒருவர் இருக்கிறார். லே-அவுட் அப்ரூவலைப் பொறுத்தவரை, 5 ஏக்கர் வரை அவரால் அப்ரூவல் கொடுக்க முடியும். கட்டிடங்கள் கட்டுமானத்துக்கு, 40 ஆயிரம் சதுர அடிவரை அப்ரூவல் கொடுக்க முடியும். இதைவிட பெரிய அளவிலான ப்ராஜெக்ட்களுக்கு சென்னையிலுள்ள டி.டி.சி.பி. அலுவலகத்தில்தான் அப்ரூவல் வாங்க முடியும். இதில்தான் இந்த 'பார்ட்டி ஃபண்ட்' சிஸ்டம் தீவிரமாக புகுத்தப்பட்டுள்ளது. இதன்படி, லே-அவுட் அப்ரூவலுக்கு, ஏக்கருக்கு 3 லட்ச ரூபாய் கொடுத்தாக வேண்டும். அதுவே, கட்டிடம் கட்டுவதாக இருந்தால், ஒரு சதுர அடிக்கு 25 ரூபாய் என்ற கணக்கில், கடந்த ஆட்சியில், துறை சார்ந்த அமைச்சர் மட்டத்திலிருந்தே வசூலிக்கப்பட்டது. இதைத்தாண்டி, டி.டி.சி.பி. அலுவலகத்திலுள்ள அதி காரிக்கு ஏக்கருக்கு 1 லட்ச ரூபாயும், கட்டிடம் என்றால் ஒரு சதுர அடிக்கு 7 ரூபாய் என்ற கணக்கீட்டிலும் கப்பம் வசூலிக்கப்பட்டது.
இந்த கப்பத்தை முறையாகச் செலுத்தினால்தான் அந்த ஃபைல் உடனுக்குடன் அடுத்த கட்டத் துக்கு நகரும். அதேபோல, விதிமுறைகளில் சற்று முன்பின் இருந் தாலும் கண்டு கொள்ளப்படா திருக்கும். இப் படியான 'பார்ட்டி ஃபண்ட்' வசூ லால், கட்டிடம் அல்லது லே- அவுட்டின் விலை அதிகரிப்பதால், மார்க் கெட்டிங் செய்வதும் கடினமானது. தமிழக சட்டமன்றத் தேர்த லுக்குப்பின் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் இப்படியான காட்சி மாறுமென்று எதிர்பார்க்கப் பட்டது. ஆனால் இந்த 'பார்ட்டி ஃபண்ட்' வசூலிக்கும் முறையில் மாற்றம் ஏற்பட்டதே ஒழிய, வசூல் வேட்டை குறையவில்லை'' என்கிறார்கள்.
தற்போதுள்ள நடைமுறையை விளக்க, உதாரணத்துக்கு, மதுரையில் ஒருவர், சென்னை டி.டி.சி.பி. அலுவலகத்தில் அப்ரூவல் பெறத்தக்க பெரியதொரு ப்ராஜெக்ட்டைத் தொடங்குகிறார் என்றால், அதற்கான அப்ரூவல் பெறுவதற்கான ஃபைலை மதுரையிலுள்ள அலுவலகத்தின்மூலம் சென்னை டி.டி.சி.பி. அலுவலகத்துக்கு அனுப்பி வைத்தாலும் அது மாதக்கணக்கில் கிடப்பிலேயே போடப்படும். அந்த ஃபைலை மூவ் பண்ணுவதற்கான நடைமுறையைப் பற்றி தீவிரமாக விசாரிக்கையில், அதற்கென இருக்கும் 'ஒரு' குறிப்பிட்ட நபரிடம் பார்ட்டி ஃபண்டைக் கொடுக்க வேண்டுமென்று தெரிவிப்பார்கள். அந்த நபரை செல்பேசியில் தொடர்புகொண்டால், சென்னையில் குறிப்பிட்ட ஒரு இடத்தில், குறிப்பிட்ட நிறக் காரில் தான் இருப்பதாகக் கூறி, அங்கு வந்து தன்னிடம் தரும்படி தெரிவிப்பார். இது கிட்டத்தட்ட கடத்தல் சரக்கைக் கைமாற்ற திரைப்படங்களில் காட்டப்படும் உத்திதான்! அதன்படி அந்த பணத்தைக் கொடுத்த பின் னர் அவர் காணாமல் போவதோடு, அவரது தொடர்பு எண்ணும் தொடர்பு எல்லைக்கப் பால் சென்றுவிடும். அப்படியானால் நாம் கொடுத்த பணம் உரியவர்களிடம் சென்ற டைந்ததா என்பதை எப்படிக் கண்டுபிடிப் பது? அது கொஞ்சம் விசித்திரமானதுதான்!
பணத்தைக் கொடுத்துவிட்டு, சென்னை யிலுள்ள டி.டி.சி.பி. அலுவலக ரிசப்ஷனில் இருப்பவரிடம் நம்மை அறிமுகப்படுத்தும் போது நம்மைப் பார்த்து அவர் புன்னகைத் தால், பணம் சரியாகப் பட்டுவாடா ஆகியுள் ளது என்று புரிந்து கொள்ளலாமாம்! எப்படியெல்லாம் ஐடியா பண்றாங்க! அதன்பின்னர், அந்த அலுவலகத்திலுள்ள அதிகாரிக்குச் செலுத்தவேண்டிய கப்பத்தை முறைப்படி செலுத்த வேண்டும். அதற்கடுத்து மதுரைக்குத் திரும்பி வந்தால், அப்பகுதியிலுள்ள உள்ளாட்சி அமைப்பினருக்கும் படியளக்க வேண்டியிருக்குமாம். அதன்பிறகு தான் அந்த ஃபைல் ஒருவழியாக ஓகே ஆகும் என்கிறார்கள். இதிலும்கூட ஃபைல் விரை வாக மூவ் ஆகுமென்பதற்கு உத்தரவாதம் இல்லை என்கிறார்கள். கடந்த ஆட்சிக்காலத் தில் அமைச்சரின் நேரடித் தலையீடு இருந்ததால், கப்பம் கட்டியபின்னும் ஃபைல் மூவ் ஆகாமலிருந்தால் சம்பந்தப்பட்ட அமைச்சரிடமே, கட்டுமானத்துறை சார்ந்த அமைப்பினர் தகவல் தெரிவித்தால் உடனடியாக அதுகுறித்து விசாரித்து, நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஆனால் தற்போது கப்பத்தைப் பெறும் நபரே புதியவராக இருப்பதால், தொடர்பு எல்லைக்கு வெளியே இருப்பதால், ஃபைல் இப்போது எந்த அளவில் இருக்கிறது என்பதை யாரிடம் கேட்பது என்ற கேள்விக்கு விடையே இல்லை. ஆனால், தற்போது நடைபெறும் பார்ட்டி ஃபண்ட் வசூலில், துறை சார்ந்த அமைச்சரின் தலையீடு இருப்பதாகத் தெரியவில்லை என்கிறார்கள். அதேபோல், இந்த 'பார்ட்டி ஃபண்ட்' வசூல் விவகாரமும், குளறுபடிகளும், முதலமைச்சரின் பார்வைக்கே சென்றிருக்க வாய்ப்பில்லை என்கிறார்கள். அப்படித் தெரியவந்திருந்தால், தொழில் வளர்ச்சியில் அக்கறை காட்டும் முதல்வர், கண்டிப்பாக இதனைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுத்திருப்பார் என்றும் கூறுகிறார்கள்.
இப்படியான குளறுபடிகள் நடந்தால் முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு புகாரனுப்பலாம் என்று முதல்வர் அலுவலகத்திலிருந்து அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. வீடு கட்டும்போது மாமூல் கேட்பது, புதிய குடிநீர்/ கழிவு நீர் இணைப்புகளுக்கு மாமூல் கேட்பது, வீடுகளை காலி செய்ய ரவுடிகளை அனுப்பி மிரட்டுவது, கட்டப்பஞ்சாயத்து செய்வது போன்ற குற்றங்களில் ஈடுபடும் அதிகாரிகள், கவுன்சிலர்கள் மீது முதலமைச்சரின் தனிப்பிரிவில் புகாரளிக்கலாம் என்று அதற்கான தொடர்பு எண் வழங்கப்பட்டுள்ளது. எனவே கட்டுமான நிறுவனங்களிடம் வசூலிக்கப்படும் 'பார்ட்டி ஃபண்ட்' என்பது உண்மையிலேயே உரிய இடத்துக்குச் செல்கிறதா என்றும், முதல்வரின் கவனத்துக்குச் செல்லாமல் தடுக்கப்படுகிறதா என்றும் சந்தேகம் எழுகிறது.
இந்நிலையில், கட்டுமானத் துறையில் இயங்கிவரும் ஜி ஸ்கொயர் நிறுவனத்துக்கு மட்டும் தனிச்சலுகை காட்டப்படுவதாக தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை புதியதொரு குற்றச்சாட்டை வைத்து பரபரப்பேற்றினார். அதற்கு பதிலளித்த வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி, "அனைத்து நிறுவனங் களுக்கும் விதிமுறைகளின்படியே அனுமதி வழங்கப்படுகிறது. ஜி ஸ்கொயர் நிறு வனத்துக்கு குறுகிய காலத்தில் எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை. அண்ணா மலை இனிமேல் உரிய ஆதாரங்களுடன் பேச வேண்டும். அண்ணாமலை சொல்வதை நாங்கள் சாதாரணமாக எடுத்துக்கொள்ள மாட்டோம். ஆனால் அவர் சொல்வது சரியாகவும், உண்மையாகவும், உள்நோக்கம் இல்லாமலும் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் அவரின் ஆலோசனைகளை எடுத்துக்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால் யாரையோ டார்கெட் பண்ணும் வகையில், நடந்து கொண்டால் அவர் மீது கண்டிப்பாக வழக்கு தொடரப்படும்'' என்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார்.
கொரோனா முடக்கத்தின்போது கட்டுமானத்துறை நிறுவனங்களுக்கு ஏற்பட்ட இழப்பு கணக்கிலடங்காதது. தொழிலாளர்கள் பற்றாக்குறை, கட்டுமானப் பொருட்கள் பற்றாக்குறை, விலை உயர்வு, கட்டிய வீடுகளை விற்பனை செய்ய இயலாத சூழல் என அவர்கள் எதிர்கொண்ட சிக்கல்கள் அதிகம். இப்போது மெல்ல மெல்ல மேலெழுந்துவரும் நேரத்தில், சில நபர்களால் நடத்தப்படும் வசூல் வேட்டை குறித்த தகவல்கள் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. இதுகுறித்து கட்டுமானத்துறை சார்ந்த அமைப்பினர் வெளிப்படையாகப் பேசத் தயக்கம் காட்டுகிறார்கள். எனவே இவ்விவகாரத்தில் தமிழக முதல்வர் தலையிட்டு தடுத்து நிறுத்த வேண்டுமென்பதே இத்துறை சார்ந்தவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.