1948-ல் ஜவஹர்லால் நேரு ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது, இந்தியா வின் யூனியன் அமைச்சராக இருந்தவர் சந்தானம். 1964-ல் சுதந்திரமான விஜிலென்ஸ் கமிஷனை ஜவஹர்லால் நேரு தலைமையிலான மத்திய அரசு அமைத்தது. அதன் பின்னர் அனைத்து மாநிலங்களிலும் இந்த விஜிலென்ஸ் துறை அமைக்கப்பட்டு அதற்கென்று ஒரு ஆணையரை நியமித்தது.
இத்துறையின் பிரதான நோக்கமே, அரசு அதிகாரிகளால் பொதுமக்கள் நேரடியாக பாதிக்கப்படும்போது, அவர்களுக்கான நீதியைக் கிடைக்கச் செய்வதாகும். ஊழல் நோக்கங்களுக் காக, ஒரு அரசு ஊழியர் தனது அதிகாரங்களைப் பயன்படுத்துவது குறித்தான எந்தவொரு தகவலின் மீதும் விசாரணையை மேற்கொள்ள ஆணையத்திற்கு அதிகாரம் உள்ளது. பொது நிர்வாகத்தில் ஊழலைக் கண்டறிவதற்காக, விஜிலென்ஸ் மற்றும் ஊழல் தடுப்பு இயக்குநரகத்தை (டி.வி.ஏ.சி.) தமிழ்நாடு அரசு அமைத்தது. டி.வி.ஏ.சி. அமைப்பு, பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தங்கள் துறையில், அரசின் நிர்வாகக் கட்டுப்பாட்டின்கீழ் வருகிறது.
1964-ல், தமிழ்நாடு அரசு விஜிலென்ஸ் மற்றும் ஊழல் தடுப்புப்பிரிவின் முதல் ஆணையராக மகாதேவன் நியமிக்கப்பட்டார். இன்றுவரை மொத்தம் 31 ஐ.பி.எஸ் அதிகாரிகள் இதற்கு ஆணையராக பதவி வகித்துள்ளனர். ஒருமுறை 2002 முதல் 2003 வரை திலகவதி ஐ.பி.எஸ் இத்துறையின் ஆணையராகப் பதவி வகித்துள்ளார்.
தமிழகத்தை தென் மண்டலம், மேற்கு மண்டலம், மத்திய மண்டலம் என்று 3 மண்ட லங்களாகப் பிரித்துள்ளனர். அதில் மேற்கு மண்டலத்தில் 14 மாவட்டங்களும், தென் மண்ட லத்தில் 15 மாவட்டங்களும், மத்திய மண்டலத் தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள் ளிட்ட 3 மாவட்டங்கள் மட்டும் அடங்கியுள் ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு துணை கண்காணிப்பாளர் நியமிக்கப்பட்டு, அவர்களுக்கு கீழ் ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள் என்று இதன் வடிவமைப்பு அமைக்கப்பட்டுள்ளது.
முக்கிய பிரமுகர்கள் வீடுகளில் சோதனை செய்வதை வைத்து அந்த சமயத்தில் மட்டும் அதிகம் செய்திகள் வெளியே வருவதால், பலருக்கு ஊழல் தடுப்பு பிரிவு என்ற ஒரு துறை இருப்பது தெரிய வாய்ப்பில்லை.
கடந்த 2016-ல் இவர்களுடைய சோதனையில், 3 பேர் மீது முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதேபோல், 2017-ல் 14 பேர், 2018-ல் 4 பேர், 2019-ல் 12 பேர், 2020-ல் 8 பேர், 2021-ல் தற்போதுவரை 2 பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. 2017-ம் ஆண்டில் மட்டும் 7 இடங்களில் அதிரடியாகச் சோதனை செய்யப்பட்டு பல அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 2018-ல் 34 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு ஊழலில் தொடர்புடைய அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 2019-ல் 15 இடங்களிலும், 2020-ல் 81 இடங்களிலும், 2021-ல் இன்றுவரை 69 இடங்களிலும் சோதனை நடத்தப் பட்டு ஊழல்வாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த அக்டோபர் மாதம் 29-ஆம் தேதி, மின்சார வாரியம், போக்குவரத்து அலுவலகம், பத்திரப்பதிவுத் துறை, தீயணைப்புத் துறை, வணிகவரித் துறை, காவல்துறை, வட்டார வழங்கல் துறை, டாஸ்மாக், கிராமப்புற வளர்ச்சித் துறை, போதைத் தடுப்புப் பிரிவு, மாநகராட்சி அலுவலகங்கள் என மொத்தம் 33 இடங்களில் அதிரடியாக சோதனை செய்தனர். அதில், கணக்கில் காட்டப்படாத 18 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் ரொக்கமும், 6 லட்சத்து 47 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள டாஸ்மாக் பாட்டில்களும், 36 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள வெடிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
அக்டோபர் மாதத்தில் மட்டும் பெரிய அளவிலான 11 சோதனைகளைச் செய்துள்ளனர். அதிலும் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்ச ருக்குச் சொந்தமான இடங்களில் சோதனை செய்யப்பட்டுள்ளது. முன்னாள் தமிழக முதல்வர் எடப்பாடிக்கு நெருக்கமானவர்களுக்குச் சொந்த மான இடங்களில் சோதனை நடைபெற்றுள்ளது. தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையின் இயக்குநராக நியமிக்கப்பட்ட கந்தசாமி ஐ.பி.எஸ். தலைமையில் 24 அதிரடிச் சோதனைகள் நடைபெற்றுள்ளன.
தனது துறையின் செயல்பாடுகள் குறித்து மிகுந்த கவனம் செலுத்தும் கந்தசாமி ஐ.பி.எஸ், ஊழலுக்கு எதிராகத் தொடர்ந்து நடவடிக்கை களை எடுத்துவருகிறார். அதிலும், உயர் பதவியில் இருக்கும் அரசு அதிகாரிகளை மட்டுமே கவனிக்கும் இந்த துறையினர், தீபாவளி சமயத்தில், அனைத்துத்துறை ஊழல் அதிகாரிகளின் பட்டியலை வைத்துக்கொண்டு கண்காணித்தனர். பல அரசு அலுவலகங்களில் இவர்களின் அதிரடிச் சோதனைகளுக்குப் பயந்து லஞ்சம் வாங்குவதைத் தவிர்த்தாலும், இடைத்தரகர்கள் மூலம் லஞ்சம் வாங்குவது தொடரத்தான் செய்கிறது.
தற்போது, ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையினர், லஞ்சம் வாங்குவதும் குற்றம், கொடுப்பதும் குற்றம். எனவே லஞ்சம் வாங்குபவர்களை இனம்கண்டு களையெடுக்க வாருங்கள் என்று, கல்லுரி மாணவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த ஆரம்பித்துள்ளனர். பொதுமக்கள் துணிந்து முன்வாருங்கள், இது உங்களை மட்டுமல்ல, உங்கள் சந்ததியையும் லஞ்சம் இல்லாத சமுதாயமாக மாற்றும் என்ற நம்பிக்கை யை விதைக்க முயற்சித்து வருகின்றனர்.