உத்தரப்பிரதேச ரவுடிகளுக்கு நாங்கள் இளைத்தவர்களா என்று கைதுசெய்ய வந்த காவல்துறையினர் மீது நாட்டு வெடிகுண்டை வீசி காவலர் சுப்பிரமணியனைக் கொலைசெய்து, புஜபலம் காட்டியுள்ளனர் தமிழக ரவுடிகள். இந்த மோதலில் ரவுடி துரைமுத்துவும் பலியான நிலையில், துரைமுத்து என்கவுண்ட்டர் செய்யப்பட்டாரா... வெடிகுண்டு விபத்தில் பலியானாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
ஒரு ஃப்ளாஷ்பேக்!
நடப்பு நிகழ்வுகளைப் பார்ப்பதற்குமுன் ஒரு சின்ன ஃப்ளாஷ்பேக்கைப் பார்க்கலாம். கடந்த 2015-ல் தூத்துக்குடி மாவட்டம் ஏரல் காவல் நிலையத்திற்குட்பட்ட மேலமங்கலக்குறிச்சியின் துரைமுத்துவை அவனது நண்பனான தனுஷ்கோடி வேதனைக் குமுறலோடு தேடிவந்திருக்கிறான். மங்கலக்குறிச்சியைச் சேர்ந்த வினோத், தனது மனைவியிடம் தவறாக நடக்க முற்பட்டதை சொல்லிக் கதற, சூடேறிப்போன துரைமுத்து, வினோத்தையும் அவனது சகா ராமச்சந்திரனையும் தனது இடத்துக்கு நைச்சியமாக வரவழைத்திருக்கிறான்.
வந்தவர்களைக் குடிக்க வைத்துப் போதையேற்றிய துரைமுத்துவும் அவனது சகாக்களும் அங்கேயே ராமச்சந்திரனையும் வினோத்தையும் போட்டுத் தள்ளியிருக்கிறார்கள். இதில் ஏ.1 துரைமுத்து ஏ.2 அவனது தம்பி கண்ணன். பாதிக்கப்பட்டவர்களும், கொலைசெய்தவர்களும் இருவேறு தரப்புகள் என்பதால் பதற்றமாகியிருக்கிறது ஏரல் ஏரியா. இந்தச் சின்னப் பொறி பற்றிப் படர்ந்துதான் காவலர் சுப்பிரமணியம் மரணம் எனும் பெருநெருப்பாக வளர்ந்திருக்கிறது.
பழிக்குப் பழி!
102/2015 எஃப்.ஐ.ஆர்.படி பதிவான இந்த இரட்டைக் கொலைவழக்கில் உள்ளே போன துரைமுத்து, கண்ணன்மீது குண்டாஸ் பாய்ந்திருக்கிறது. வஞ்சகமாக நடத்தப்பட்ட இந்தக் கொலையால் ஆவேசமான ராமச்சந்திரன் தரப்பு, தக்க சமயம் பார்த்துக் காத்திருந்தது.
சகோதரர்கள் இருவரும் ஜாமீனில் வெளிவந்தது ராமச்சந்திரன் தரப்புக்கு வாய்ப்பாகிப் போனது. இந்த இரட்டைக் கொலை வழக்கு ஸ்ரீவைகுண்டம் நீதிமன்றத்தில் நடந்துகொண்டிருந்தபோது 2019-ல் விசாரணைக்கு ஆஜராகிவிட்டு துரைமுத்துவும், கண்ணனும் திரும்பிக் கொண்டிருந்தனர். அவர்களைச் சுற்றிவளைத்த ராமச்சந்திரன் தரப்பு தாக்கியதில் துரைமுத்து சொற்ப காயங்க ளோடு தப்பிவிட, கண்ணன் வெட்டிக் கொலை செய்யப்பட்டான். இதனால் ஆத்திரம் தலைக்கேறிய துரைமுத்து, தம்பியின் கொலைக்குப் பழிவாங்கக் கறுவியிருக்கிறான்.
வான்டட் கிரிமினல்!
இந்த இரட்டைக் கொலை யோடு, ஏற்கனவே தொடர்புடைய 302, மற்றும் கொலை முயற்சி என துரைமுத்துவின்மீது குற்றச் செயல்களிருந்ததால் ஏரல் காவல் நிலையம் அவனைப் பக்கா ரவுடி லிஸ்டில் வைத்திருக்கிறது. அந்த நேரத்தில் ஏற்கனவே அவன் மீதுள்ள கொலைவழக்கின் வாரண்ட்டில் உள்ளே போன துரைமுத்து, அண்மை யில்தான் ரிலீஸ் ஆகியிருக்கிறான். தவிர, நெல்லையிலுள்ள பேட்டை நகரின் கொலைவழக்கு, மற்றொரு கொலை முயற்சி வழக்கு இரண்டி லும் பிறப்பிக்கப்பட்ட வாரண்ட்டிற்கு ஆஜராகாத துரைமுத்து, தலை மறைவாகியிருக்கிறான். அதோடு தம்பியைக் கொன்றவர் களைப் பழிகொள்ளும் வெறி.
தயாரான தனிப்படை!
இந்நிலையில்தான் துரை முத்துமீது பெண்டிங்கிலிருக்கும் வாரண்ட்டின் பொருட்டு அவனைப் பிடிப்பதற்காக ஸ்ரீவைகுண்டம் எஸ்.ஐ. முருகப்பெருமாள் தலை மையில் நான்கு பேர்களைக் கொண்ட க்ரைம் பார்ட்டி அமைக் கப்பட்டுத் தேடுதல் வேட்டையில் இறங்கியிருக்கிறார்கள். இவர்களில் 2017-ல் பணியில் சேர்ந்த காவலர் சுப்பிரமணியனும் அடக்கம்.
பழிவாங்கும் திட்டத்தோடு, ரவுடி துரைமுத்து மணக்கரைப் பகுதியின் ரிசர்வ் ஃபாரஸ்ட்டில் வனத் துறைக்குச் சொந்தமான கட்டடம் ஒன்றில் பதுங்கியிருக்கும் தகவலறிந்த போலீஸ், அவனைப் பிடிப்பதற்காக ஆக-18 அன்று மதியம் ஒன்றரை மணிவாக்கில் அங்கு போயிருக்கிறார்கள். அந்த தனிப்படைக்கு ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பி. வெங்கடேசன் தலைமையேற்க, எஸ்.ஐ. முருகப்பெருமாள், ஏட்டுகள் வேம்புராஜ், குணசேக ரன், நாராயணன், காவலர்கள் ஆனந்தராஜ், சுப்பிரமணியன் ஆகியோர் அதில் இடம்பெற்றிருந்திருக்கின்றனர்.
ஆக்ஷன்… ரியாக்ஷன்!
துரைமுத்து தன் சகாக்கள் மூவருடன் மணக்கரை வனத்துறை அலுவலகத்தில் தங்கியிருந்திருக்கிறான். குற்றவாளியைப் பிடிப்பதற்காக அடையாளம் தெரியாமலிருக்க காவலர்கள் மப்டியில் போய் காட்டில் பதுங்கியிருந்த ரவுடி துரைமுத்துவை வளைத்திருக்கிறார்கள். வந்தவர்கள் போலீஸா… தனது எதிர் குரூப்பா என்று தெரி யாமலே முதலில் தப்பியோடியிருக்கின்றனர். அவர்கள் போலீஸ் என்று தெரிந்ததும் வேறுமுடிவுக்கு வந்திருக்கிறான் துரைமுத்து. அருகில் கம்பி வேலியொன்றை தாண்டும்போதும் விடாமல் போலீஸ் நெருக்கி வளைத்ததால் தன்வசமிருந்த வெடிகுண்டை வீசவேண்டிய நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கிறான்.
இந்தச் சேஸிங்கில் இளைஞரான காவலர் சுப்பிரமணியன் படுஸ்பீடாக ஓடியவர்... கிட்டத்தட்ட ரவுடி துரைமுத்துவைப் பிடிக்குமளவுக்கு நெருங்கி விட, பிடிபட்டுவிடுவோம் என்ற பதைபதைப்பில் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டை எடுத்து வீசமுற்பட்டான். ""ஏய்ய்… வீசிறாத...''’என கத்திக்கொண்டே பதட்டமாக விரட்டிய காவலர் சுப்பிரமணியன், தாவிப்பிடித்து வெடிகுண்டை வீசிவிடாதபடி அவனது கைகளை மடக்கி மல்லுக்கட்டியிருக்கிறார்.
ரவுடியை இறுகக் கட்டிப் பிடித்த காவலர் அவனது வெடிகுண்டுக் கையை மடக்கி நெஞ்சுப் பக்கம் உயர்த்திய நேரத்தில் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக வெடிகுண்டு பயங்கர சப்தத்துடன் வெடித்திருக்கிறது.
அந்த வேகத்தில் காவலர் சுப்பிரமணியனின் நெஞ்சில் படுகாயம் ஏற்பட்டதோடு அவரின் தலையும் அடையாளம் தெரியாமல் படுகாயமாகி சம்பவ இடத்திலேயே பலியாகியிருக் கிறார். வெடிகுண்டு, காவலர் சுப்பிரமணியனை மட்டுமின்றி துரைமுத்துவின் மார்பு, முதுகு, கை கால்களையும் சிதைத்திருக்கிறது. அதீதமான ரத்தப் போக்கு, காயங்களால் புரண்ட ரவுடியை சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லுகிற வழியி லேயே அவனது உயிர் பிரிந் திருக்கிறது என்று தொடர்கிறது காவல்துறையின் விளக்கம்.
என்கவுண்டரா... ஆக்சிடண்டா...….
ரவுடி துரைமுத்து விவகாரம் குறித்து விளக்கமளித்துள்ள தென்மண்டல ஐ.ஜி. முருகன், ""போலீசார் போதிய முன்னெச்சரிக்கையுடனும் துப் பாக்கிகளுடன்தான் சம்பவ இடத்துக்குச் சென்றனர். ரவுடிகளுக்கு நெருக்கமாகச் சென்று சுற்றி வளைத்ததால், குண்டு போலீசார் மீதும்படும் சாத்தியக்கூறை கருத்தில்கொண்டு துப்பாக்கி பயன்படுத்தப்பட வில்லை. துரைமுத்து என்கவுண்டர் செய்யப்படவில்லை. தகுந்த எண்ணிக்கையிலோ போதிய பாதுகாப்புடனோ போலீசார் செல்லவில்லை என்று கூறுவதற்கு இடமில்லை'' என்று கூறியுள்ளார். ஆனால், வெடிகுண்டால் காவலர் சுப்பிரமணியன் பலியான நிலையில், என்கவுண்டரில் தான் ரவுடி துரைமுத்து கொல்லப்பட்டதாகவும் முதலில் தகவல்கள் வெளியாகின. காட்டுப் பகுதியில் கூட்டாளிகளுடன் பதுங்கியிருந்த ரவுடியைக் கைது செய்ய போதுமான ஆயத்தங் களுடனும், காவலர்களுடனும் போலீஸார் செல்லவில்லை என்றும் காவலர் தரப்பிலிருந்தே முணுமுணுப்புகள் எழுந்துள்ளது.
முதல் நாட்டு வெடி குண்டை காவலர்மேல் வீசிவிட்டு, அடுத்த நாட்டு வெடிகுண்டை வீசும்போது தவறி தன்மேல் வீசிவிட்டதாக சில தகவல்கள் கூறும் நிலையில், ரவுடி துரைமுத்துவும் காவலர் சுப்பிரமணிய னும் கட்டிப்புரண்டு உருளும் போது குண்டு வெடித்ததாகவும் தகவல்கள் வெளிவருகின்றன. இந்த முன்பின் தகவல்கள் போலீஸ் தரப்பின் விளக்கத்தில் சந்தேகங்களை ஏற்படுத்துகின்றன.
மேலும் இந்த வெடி குண்டுகள் வனத்துறை அலுவலகத்தில் தங்கியிருந்த காலத்திலேயே தயாரிக்கப்பட்டதாகத் தெரியவந்துள்ளது. வெடிகுண்டுக்கான மூலப்பொருட்கள் எங்கிருந்து கிடைத்தன, யார் சப்ளை செய்தார் என்ற கேள்விகளுக்கும் இன்னும் விடை கிடைக்கவில்லை.
""அது சாதாரண நாட்டு வெடிகுண்டல்ல. பாறைகளை உடைக்கப் பயன்படுத்தும் டெட்டனேட்டர் என்பதால் தான் இத்தனை மோசமான காயங்கள்'' என்கிறார்கள் விஷயம் தெரிந்தவர்கள்.
தற்போது கைது செய்யப் பட்டுள்ள துரை முத்துவின் கூட்டாளிகள் மூவரில் வனத்துறை ஊழியரும் துரைமுத்து வின் உறவினருமான கமலக் கண்ணனும் அடக்கம். வனத்துறை அலுவலகமான அரசாங்க கட்டடத்தை ரவுடிகள் பயன் படுத்தியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இறந்த காவலர் சுப்பிரமணியன் கடந்த ஆண்டுதான் ஆழ்வார்திருநகரி காவல்நிலையத்திலிருந்து மாவட்ட தனிப்பிரிவுக்கு மாற்றப்பட்டார். பெரியசாமி- பிச்சம்மாள் தம்பதியின் மகனான சுப்பிரமணியனுக்கு 2 ஆண்டுகளுக்கு முன்புதான் திருமணமாகி 10 மாத கைக் குழந்தை இருக்கிறது. அரசுப் பணியின்போது சுப்பிரமணியன் பலியாகியிருப்பதால் ரூ 50 லட்சம் நிவாரணம் அறிவித்திருக்கிறார் முதல்வர்.
ஜெயராஜ்- பென்னிக்ஸ் விவகாரம், பெரியார்- அண்ணா சிலைகளை சேதப்படுத்தும் குற்றவாளிகளை மனநிலை பாதிக்கப்பட்டவர் என நழுவவிடும் போக்கு, பத்திரிகையாளர்களை இழிவு படுத்துவோரை கைது செய்வதில் கண்டும்காணாத போக்கு என காவல்துறையின் மீது எதிர்மறையான பார்வைகள் அதிகரித்துவரும் நேரத்தில், துரைமுத்து போன்ற ரவுடிகளைக் கூட கைதுசெய்யப் போய்… காவலர் ஒருவரின் உயிரைப் பறிகொடுத் திருப்பது, காவல் துறைக்கு நெகட்டிவ் இமேஜை ஏற்படுத்துகிறது.
-பரமசிவன்
படங்கள் : ப.இராம்குமார்