சேலத்தை அடுத்த கருப்பூர் அருகே, கோட்டகவுண்டம்பட்டியில் பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ், சேலம் கோட்ட தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் 216 அடுக்குமாடி வீடுகள் கட்டப்பட்டுள்ளன.
இந்த குடியிருப்பு கட்டுமானப் பணிகள், எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது, திருச்செங்கோட்டைச் சேர்ந்த நடராஜன் என்பவருக்குச் சொந்தமான கட்டுமான நிறுவனத்துக்கு 13.65 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் விடப்பட்டது. கட்டுமானப் பணிகள் 4.3.2016-ஆம் தேதி தொடங்கியது. 11.12.2020ம் தேதி முதல் பயனாளிகளுக்கு வீடு ஒதுக்கும் பணிகள் தொடங்கின. இதற்காக பயனாளிகள் அரசுக்கு தலா 2.045 லட்சம் ரூபாய் பங்குத்தொகை செலுத்தியுள்ளனர்.
இந்நிலையில், போதிய அடிப்படை வசதிகள் செய்துதராமலேயே பயனாளிகளிடம் அவசர கோலத்தில் வீடுகள் ஒப்படைக்கப்பட்டதாகவும், சிமெண்ட் பூச்சுக்கலவை ஆங்காங்கே 'பொலபொல'வென உதிர்ந்து விழுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.
இதுதொடர்பாக கோட்டகவுண்டம் பட்டி அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கும் பாஸ்கர், சரசு, ராணி, சாந்தா ஆகியோர் நம்மிடம் பேசினர். "சேலம் -கோட்ட கவுண்டம்பட்டி அடுக்குமாடி குடியிருப்பை பயனாளிகளுக்கு ஒதுக்கி மூன்று ஆண்டுகளாகியும், நல்ல தண்ணீருக்கான பொதுக்குடிநீர் இணைப்பு வழங்கப்படவில்லை. இதனால், கேன் குடிநீரை விலைக்கு வாங்கிப் பயன்படுத்தும் நிலை உள்ளது. தண்ணீரை விலைகொடுத்து வாங்க வசதி இல்லாதவர்கள், ஒரு கி.மீ. தூரம் சென்று நல்ல தண்ணீரை எடுத்துவருகிறோம்.
ஒவ்வொரு வீடும் தலா 400 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. எல்லா வீடுகளிலும் சமையல் அறையை குறுக்கே சுவர் வைத்து ஏனோதானோவென கட்டியுள்ளனர். இதனால் பயனாளிகள் எல்லோருமே 20 ஆயிரம் ரூபாய் செலவு செய்து சமையல்கட்டை திருத்திக் கட்டியிருக்கிறோம்.
216 வீடுகளுக்கும் சேர்த்து ஒரே ஒரு செப்டிங் டேங்க் மட்டுமே உள்ளது. அதையும் கடந்த ஓராண்டாக சுத்தம் செய்யவில்லை. 6 வீட்டுக்கு ஒரு உறிஞ்சுகுழி வீதம் அமைக்கப் பட்டுள்ளதால் அவை சீக்கிரம் நிரம்பி கழிவுநீர் வெளியேறுகிறது.
"பி' பிளாக் முதல் தளத்திலுள்ள சுவர்களில் பெரிய அளவில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. கட்டடத்தைத் தாங்கிநிற்கும் தூண்களில் எங்கு தொட்டாலும் சிமெண்ட் பூச்சு பெயர்ந்துவிழுகின்றன'' என்று குமுறுகின்றனர் கோட்டகவுண்டம்பட்டி அடுக்குமாடி குடியிருப்புவாசிகள்.
இதுதொடர்பாக ஆர்.டி.ஐ. ஆர்வலர் சிவராமன் கூறுகையில், "இந்த குடியிருப்பில் விதிகளை மீறி சொந்த வீடு உள்ளவர்கள், காவல்துறை உள்ளிட்ட அரசுப்பணியில் உள்ளவர்களுக்கும்கூட கையூட்டு பெற்றுக் கொண்டு வீடுகளை ஒதுக்கியுள்ளனர். சேலம் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரிகள், ஒவ்வொரு வீட்டு உரிமை யாளரிடமிருந்தும் பராமரிப்புச் செலவுக்காக மாதம் 250 வீதம், 54,000 ரூபாய் சந்தா வசூலிக்கின்றனர். அதற்கு இணையாக தமிழக அரசும் மானியம் வழங்குகிறது. இந்தக் குடியிருப்பில் எந்த ஒரு பரா மரிப்புப் பணியையும் மேற் கொள்ளாத துறை அதிகாரிகள், சந்தா தொகையை மொத்தமாக சுருட்டிக் கொள்கின்றனர்.
கட்டுமான ஒப்பந்ததார ரும், அதிகாரிகளும் கூட்டு சேர்ந்துகொண்டு தரமற்ற கட்டடத்தைக் கட்டியுள்ளனர். இந்த குடியிருப்பை ஓமலூர் ஊராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்காமல் மாவட்ட நிர்வாகம் இழுத்தடித்து வருகிறது. இதனால், ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீர் இணைப்பு வழங்கமுடி யாத நிலை உள்ளது. இந்தக் கட்டடத்திற்கு எப்படி தரச்சான்றி தழ் வழங்கப்பட்டது என்று தெரியவில்லை. இதன் கட்டுமானப் பணிகளில் நடந்துள்ள ஊழல் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்தவேண்டும்'' என்கிறார்.
இந்த புகார்கள் குறித்து சேலம் கோட்ட நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய செயற்பொறியாளர் விஜயமோகனிடம் விளக்கம் பெற்றோம். "கோட்டகவுண்டம்பட்டி அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒதுக்கீடு கேட்டுப் பெறப்பட்ட விண்ணப்பங்கள், அவர்களின் வருமானச் சான்றிதழ் மற்றும் சுய உறுதிமொழி ஆவணம் ஆகியவற்றைப் பெற்று மாவட்ட ஆட்சியரிடம் ஒப்ப டைப்பதோடு எங்கள் பணி முடிந்தது. பயனாளிகளின் ஆவணங்களின் உண்மைத் தன்மை உள்ளிட்ட இதர விவரங்களை வருவாய்த்துறைதான் ஆய்வு செய்திருக்கவேண்டும்.
ஜல் ஜீவன் திட்டத்தில் குடிநீர் இணைப்பு வழங்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ஆனால், சேலம் நகர் ஊரமைப்புத்துறை தரப்பில் சாதாரண காரணங்களைக்கூறி கட்டடத்திற்கான நிறைவுச் சான்றிதழ் தராமல் இழுத்தடித்து வருவதால், சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைப்பதில் சிக்கல். ஊராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டால் குடிநீர் இணைப்பு கிடைத்துவிடும்.
கட்டடத்தின் உறுதித்தன்மை குறித்து புகார் வந்தபோது, கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரி வல்லுநர்கள் மூலம் சுவர்களில் "ரீபவுண்ட் ஹேமர் டெஸ்ட்' செய்யப்பட்டதில், கட்டடம் உறுதித்தன்மையுடன் இருப்பது தெரியவந்துள்ளது. சில சுவர்களில் மேற்பூச்சு மட்டுமே உதிர்ந்துவிழுகிறது.
வீடு ஒதுக்கீடு பெற்று நீண்ட காலமாக குடியேறாதவர்கள், உள்வாடகைக்கு விட்டுள்ளவர்கள் என மொத்தம் 150 வீடுகளுக்கு விளக்கம்கேட்டு நோட்டீஸ் அளித்துள்ளோம். ஓரிரு மாதங் களில் அவர்களை அப்புறப் படுத்திவிட்டு தகுதிவாய்ந்த பய னாளிகளுக்கு வீடுகள் ஒதுக்கப் படும். உள் வாடகைக்கு கொடுத்த வர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார். செயற்பொறியாளரின் குற்றச்சாட்டு குறித்து, சேலம் மாவட்ட நகர் ஊரமைப்புத்துறை உதவி இயக்குநர் சஹானாவிடம் கேட்டபோது, "கோட்டகவுண்டம்பட்டி குடியிருப்பு கட்டுமானப் பணிகள், நிறைய விதிகள் தளர்த்தப்பட்ட பிறகே தொடங்கின. தளர்த்தப்பட்ட விதிகளுக்கு உட்பட்டும்கூட கட்டுமானப் பணிகளை முடிக்கவில்லை. குடியிருப்பைச் சுற்றிலும் இன்னும் எல்லை வரையறை செய்யப்படவில்லை. மேல்தளத்தில் ஹெட் ரூம் கட்டப்படவில்லை என்பது உள்ளிட்ட மேலும் சில முக்கியக் குறைபாடுகள் உள்ளதால்தான் நிறைவுச் சான்றிதழ் தரப்படவில்லை'' என்றார்.
தரமற்ற கட்டுமானம், தகுதியற்றவர்களுக்கு வீடு ஒதுக்கீடு என எல்லாவற்றிலும் விதிகள் அப்பட்டமாக மீறப்பட்டுள்ள நிலையில் கோட்டகவுண்டம்பட்டி குடியிருப்பு விவகாரம் குறித்து விசாரணைக்குழு அமைக்கவேண்டும் என்பதே குடியிருப்புவாசிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.