(3) தமிழை தலைநிமிர வைத்த தலைவன்!
அந்த தயாரிப்பாளரிடம் உறுதியாகச் சொன்னேன்... "என் தாய், தந்தை வைத்த பெயர் லியாகத் அலிகான். அந்தப் பெயரில் எழுதுவ தாக இருந்தால் உங்கள் படத்தை ஏற்றுக் கொள் கிறேன். இல்லையென்றால் உங்கள் படமே வேண்டாம்'' என்று சொன்னேன். இன்னொன்றையும் அவரிடம் அழுத்தமாகச் சொன்னேன்.
"வசனம் மு.கருணாநிதி / வசனம் கலைஞர் மு. கருணாநிதி என்று வெள்ளித்திரையில் வரு வதைப் போல வசனம் லியாகத் அலிகான் என்று வரவேண்டும் என்று கனவு கண்டவன் நான். அப்படி ஒரு கற்பனையை வளர்த்துக்கொண்ட வன் நான். எதற்காகவும் யாருக்காவும் மாற்றிக் கொள்ளமாட்டேன்'' என்று உணர்ச்சிவசப் பட்டுச் சொன்னேன்.
"கலைஞரைப்போல உன்னால் எழுத முடியுமா?'' என்று அவர் வேகமாகக் கேட்டார். அவர் கேட்ட பிறகுதான் கொஞ்சம் அதிகமாகப் பேசிவிட்டேனோ என்று தோன்றியது.
"கலைஞர் அளவுக்கு என்னால் எழுதமுடி யாது. அவரைப் போல விரைவாகவும் எழுத முடியாது வீரியமாகவும் எழுத முடியாது. ஆனால் "கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவி பாடும்' என்பதைப்போல நானும் எழுதுவேன், ஜெயித்துக் காட்டுவேன்'' என்று சொன்னேன்.
"ஜெயித்துக் காட்டு'' என்று கோபமாக அனுப்பிவைத்தார்.
ஒரு வாரமாக என் கற்பனைகளை வாங்கிக் கொண்டு ஒன்றும் தராமல் அனுப்பிவைத்தார். கையில் ஒன்றுமில்லாமல் வந்தாலும் மனதில் வைராக்கியம் நிறைந்திருந்தது. "கொஞ்சம் அதிகமாகப் பேசிவிட்டேனோ' என்று நினைத்த வாறு வெளியே வந்தேன்.
அதிகமாகப் பேசிவிட்டேன் என்று சொன் னது கலைஞரைப் பற்றி... அவரைப்போல திரையில் பெயர் வரவேண்டும் என்று ஆசைப்பட்டது பற்றி.
அதில் என்ன தவறு.?
கலைஞர் போல எழுதவேண்டும் என்று நினைத்தது ஒரு லட்சியம்தானே! வெற்றி பெற்ற ஒவ்வொரு மனிதனும் ஒரு லட்சியத்தை நோக்கித்தானே நடைபோட்டிருப்பான். ஒரு இலக்கு என்று இருந்தால்தானே அதை நோக்கி முயற்சி இருக்கும்.
அந்தத் தயாரிப்பாளரிடம் நான் தோற்றேனா? இல்லை அந்தத் தயாரிப்பாளர் என்னிடம் தோற்றாரா...? அவரிடம் நான் தோற்றதாக ஏன் நினைக்கவேண்டும்? அவர்தான் என்னிடம் தோற்றார் என்ற கம்பீரத்துடன் நடந்துவந்தேன்.
எங்கு போவது... வீட்டுக்கா...? இல்லை விஜயகாந்த் அவர்களைப் பார்ப்பதற்கா? இந்த சம்பவம் நடக்கும்பொழுது விஜயகாந்த் அவர்களிட மும், இப்ராஹிம் ராவுத்தர் அவர்களிடமும் மிகவும். நெருக்கமான அன்புக்கு ஆளாகியிருந்தேன்.
அந்த தயாரிப்பாளருக்கும் எனக்கும் நடந்த வாக்குவாதத்தை விஜயகாந்த் அவர்களிடம் சொன்னால் பாராட்டுவாரா.... இல்லை கோபித்துக் கொள்வாரா...
கலைஞரைப் போல என்று நான் சொன்னதை அவர் ரசிப்பாரா?
எனக்குள் தோன்றிய இந்த கேள்விகளுக்கெல் லாம் காரணம்... விஜயகாந்த் அவர்கள் வெறித்தனமான எம்.ஜி.ஆர். ரசிகர்.
விஜயகாந்த், எம்.ஜி.ஆரின் வெறித்தனமான ரசிகர் என்பதற்காக மட்டும் நான் யோசிக்கவில்லை. அதுவரை விஜயகாந்த், கலைஞர் அவர்களைச் சந்தித்ததே இல்லை. அது மட்டுமல்லாது அந்தத் தயாரிப்பாளருக்கு வசனம் எழுதப்போன விஷயத் தை விஜயகாந்த் அவர்களிடம் நான் சொல்ல வில்லை. அட்வான்ஸ் வாங்கிய பிறகு ஆனந்த அதிர்ச்சியளிப்பது போல சொல்லலாம் என்று நான் நினைத்திருந்தேன். இப்பொழுது நானே அதிர்ச்சி யில்... கோபத்தின் உச்சிக்கே போயிருந்தேன்.
ஜாதி, மதம் பார்க்கின்ற இவர்களெல்லாம் மனிதர்கள்தானா என்று ஓங்கி அறைய வேண்டும் போல இருந்தது. இதைப் பற்றியெல்லாம் நான் வசனகர்த்தா ஆனவுடன் துணிச்சலோடு எழுத வேண்டும் என்ற வேகம் எனக்குள் எழுந்தது.
(அதேபோல பல படங்களில் நான் எழுதியிருக்கிறேன். அதைப்பற்றி விரிவாகப் பின்னால் எழுதுகிறேன்.)
இந்த இடத்தில் வாசகர்களுக்கு ஒன்று தோன்றலாம். இவன் ஏன் வசனம் எழுதுவதற்கு இவ்வளவு துடிக்கிறான் என்று. அது நியாயமான சந்தேகம்தான். திரைப்படத் துறைக்கு வருபவர்கள் நடிகனாக வேண்டும் என்ற ஆசையில் வருவார்கள். டைரக்டர் ஆகவேண்டும், பாடலாசிரியராக வேண்டும் என்ற லட்சியத்தோடு வருவார்கள். ஆனால் நான் வசனம் எழுதவேண்டும் என்ற எண்ணத்தோடுதான் திரைப்படத்துறைக்கு வந்தேன் அதற்குக் காரணம்... கலைஞர்.
திரைத்துறையிலே சாதனை புரிந்த வசன கர்த்தாக்கள் நிறைய இருக்கிறார்கள். இயக்குனர் களாக இருந்தவர்கள் கூட மிகச்சிறந்த வசன கர்த்தாக்களாக இருந் திருக்கிறார்கள். அது தமிழ் திரைப்படத் துறைக்குக் கிடைத்த பெருமை என்று கூடச் சொல்லலாம்.
ஒவ்வொருவரைப் பற்றியும் ஒரு புத்த கமே வெளியிட லாம். அந்த அளவுக்கு புகழ் பெற்றவர்கள், பெருமை பெற்றவர்கள்... அவர்களில் முதன்முதலாக மின்னலாகப் பளிச்சிட்டவர் பேரறிஞர் அண்ணா. அதற்குக் காரணம் அவர் ஒரு அரசியல்வாதியாக, அரசியல் கட்சியின் தலைவராக இருந்ததால்கூட இருக்கலாம். இன்றைய இளைய தலைமுறை அவரைப் பற்றி தெரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காகவே எழுதுகிறேன்.
அண்ணா என்றதுமே அவரது அள்ள அள்ளக் குறையாத அறிவு நினைவுக்கு வரும்.
அவரது சிறிய உருவத்துக்குள் நிறைந்திருந்த ஆற்றல் நினைவுக்கு வரும் .
அவரது இதயத்தில் எப்பொழுதும் நிறைந்திருக்கும் இனிமை நினைவுக்கு வரும் .
தமிழ்நாட்டு அரசியலில் அவர் ஏற்படுத்திய அதிசயம் நினைவுக்கு வரும்.
அவரது அடுக்குமொழி தமிழ் நினைவுக்கு வரும்.
அவர் நடத்திய உலகத் தமிழ் மாநாடு நினைவுக்கு வரும்.
காங்கிரஸ் இயக்கம் கவிழ்ந்துபோய் திராவிட இயக்கம் ஆட்சிக்கு வந்தது நினைவுக்கு வரும்
பேரறிஞர் அண்ணா... தமிழுக்கு பெருமை சேர்த்த தலைவர், தமிழுக்கு புகழ் சேர்த்த தலைவர் , தமிழுக்கு கௌரவம் தேடித்தந்த தலைவர், தமிழை தலைநிமிர வைத்த தலைவர், தமிழால்... தமிழ்த் திரையுலகையும் ஆண்ட தலைவர். திரைப்படங்களுக்கு அவர் எழுதிய வசனங்கள் சமுதாய மறுமலர்ச்சிக்கு வித்திட்டது. மக்களுக்கு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியது புரட்சிக் கருத்துக்களை பரவச் செய்தது "தணிக்கை செய்யாமல் படத்தை வெளியிடுவதாக இருந்தால், ஒரே திரைப்படத்தின் மூலம் ஆட்சியைப் பிடித்து விடுவேன்'' என்று அவர் சொன்னார்.
அவர் சொன்னது போலவே பேரறிஞர் அண்ணாவின் வசனங்களும், கலைஞரின் வசனங் களும் தமிழ்நாட்டில் திராவிட இயக்க ஆட்சி மலர் வதற்கு முக்கிய காரணமாக இருந்தது என்பதை மறுக்க முடியாது. அண்ணாவின் வசனங்களில் அர சியல் மட்டும் இருக்காது. "இரும்புப் பெட்டிக்கும் இதயத்திற்கும் இடைவெளி அதிகம்.' அதாவது... பணம் இருப்பவனிடம் இளகிய இதயம் இருக்காது என்பதை இப்படிச் சொல்லியிருப்பார் ஒரு படத்தில்.
ஒருவனால் கெடுக்கப்பட்டு கர்ப்பமான பெண் அவனிடம் வாழ்க்கை தரவேண்டி நிற்பாள்.
அவள் சொல்லுவாள்
"நான் முழுகாம இருக்கேன்''
அவன் சொல்லுவான்
"நான் உன்னை முழுகிட்டேன்''
இரண்டே வரிகளில் அவளுடைய நிலையையும், அவனுடைய முடிவையும் சொல்லியிருப்பார் ஒரு திரைப்படத்தில். சாதாரணமாகப் பேசும் போதும், கேள்விகளுக்கு பதில் சொல்லும்போதும் கூட வார்த்தைகள், வசனம் மாதிரியே வந்தது.
ஒருமுறை பிரபல நடிகை ஒருவருக்கும் அண்ணா அவர்களுக்கும் தொடர்பு இருப்பது போல சிலர் பேசினார்களாம். அவர்களுக்கு அண்ணா சொன்ன பதில்...
"நான் புத்தனும் இல்லை... அவர் பத்தினியும் இல்லை''
இது நான் கேள்விப்பட்ட செய்தி.
இந்த பதிலுக்குள் எத்தனை அர்த்தங்கள். கேள்வி கேட்டவர்களை, கேலி செய்தவர்களை அவதூறு பரப்பியவர்களை அடக்கியது அந்த இரண்டு வரி வசனம். அதை வசனமாகத்தான் நான் நினைத்துக்கொண்டேன்.
அண்ணா அவர்களுக்குப் பிறகு, வசனங் களால் என் மனதைத் தொட்டவர்கள் நிறையபேர் இருந்தாலும், அதில் முதல் மூன்றுபேர், கலைஞர், கே.எஸ். கோபாலகிருஷ்ணன், கே. பாலசந்தர். மூவரிலும் முதல்வரும் கலைஞர்தான், மூலவரும் கலைஞர்தான்.
என்னைத் தடுத்தார் கலைஞர்?
(வளரும்...)