aa

(101) தெரிந்தே ஏமாந்தவன்!

"என்னுயிர் கண்ணம்மா' பட வசனத்தை தயாரிப்பாளர் ரசித்தாலும், ஒரு ஸீனும் புடிக்கல' என சிவச்சந்திரன் சொன்னது, எனக்கு அதிசயமா இருந்தது.

அப்பொழுதுதான் நான் யோசித்தேன். "அதெப்படி எந்த ஸீனும் புடிக்காம போகும். ஒரு சீன் கூட நல்லா எழுதத் தெரியாத முட்டாளா நானு?'' என்றேன் சற்று கோபத்துடன்.

Advertisment

"ஏன் கோபப்படறே… உண்மையச் சொல்லு... நேத்து வெளியவா போயிருந்தே?'' என்று கேட்டார்.

"ஆமா வெளியதான் போயிருந்தேன்''

"நீ கோயம்புத்தூர் போகல?''

Advertisment

நான் சற்று ஷாக்காகி அவரைப் பார்த்தேன்.

"நீ கோயம்புத்தூர் போனது எனக்குத் தெரியும், ஏன் பொய் சொன்னே?''

"உழவன் மகன்' படத்துல புரொடக்ஷன் மேனேஜராக வேலை பார்த்த பாகனேரி ராஜேந்திரன், சிவச்சந்திரனுக்கு மிகவும் வேண்டியவர். நான் கோவை வந்த விஷயத்தை யதார்த்தமாக சொல்லிவிட்டார் என்பது எனக்குத் தெரியாது.

"பணம் கொண்டுபோய்க் கொடுக்க ஆளு இல்ல...…அதான் போனேன்.''

"உன் மனைவிகிட்ட சொல்லிட்டுப் போனே...… அவங்க அப்படிச் சொன்னாங்க ஓ.கே. இப்ப நான் கேட்டப்ப, நீ உண்மைய சொல்லியிருக்கலாமே...…ஏன் சொல்லல?'' என்றார்.

"தப்புதான்.… நேத்து நாம சந்திக்கிற மாதிரி புரோக்கிராமே இல்லியே,… அதான் போனேன்''

"நீ ஒரு ரைட்டர். நாளைக்கு டைரக்டரா வேற ஆகப்போற. நீ போய் இந்த வேலையெல்லாம் செய்யலாமா?'' என்றார்.

"ராவுத்தர் பிலிம்ஸ் என் கம்பெனி மாதிரி. விஜயகாந்த், இப்ராகிம் ராவுத்தர் ரெண்டு பேருக்காகவும் நான் போனேன். அதுக்காக நான் எழுதுன வசனம் எதுவுமே சரியில்லேன்னு சொன்னா எப்படி?''

"சரி… நிறைய கரெக்ஷன் இருக்கு... மாத்தி எழுதணும்''

"நீங்க எத்தனை தடவை மாத்தச் சொன்னாலும் மாத்தி எழுதித் தர்றேன்''

"எழுதி முடிக்கிற வரைக்கும் நீ வேற எங்கேயும் போகக்கூடாது'' என்றார் சிவச்சந்திரன்.

எனக்குப் புரிந்துவிட்டது.… விஜயகாந்த் கால்ஷீட் கொடுக்கவில்லை என்ற கோபம் இப்பொழுது வெளிப்படுகிறது.

"அவங்க கால்ஷீட் கொடுக்காததுக்கு நீ கோபப்படறதுல ஒரு நியாயம் இருக்குன்னு அன்னிக்கு நான் சொன்னேன்ல...…அவங்க மேல உள்ள கோபத்தை நீங்க என் வசனத்து மேலே காட்றதுல என்ன நியாயம் இருக்கு. எந்த ஒரு வசனகர்த்தாவும் எல்லா ஸீனுமா நல்லா இல்லாம எழுதுவான்?'' என்றேன். "ஸாரி...… நீ பொய் சொன்ன கோபத்துல பேசிட்டேன். ஆனா... உன்னைப் பயன்படுத்திட்டு என்னிக்காவது ஒருநாள் உன்னைத் தூக்கி எறியறாங்களா இல்லியான்னு பாரு'' என்றார் சிவச்சந்திரன்.

விஜயகாந்த்தான் முக்கியம் என்று கூறி நான் வேண்டாம் என்று சொல்லிவிட்டு வந்தபிறகு எனது வசனங்களை வைத்துதான் ஆரூர்தாஸ் அவர்கள் சில திருத்தங்களுடன் அந்தப் படத்திற்கு வசனம் எழுதினார்.

விஜயகாந்த்துக்காக அந்த ஒரு படத்தை மட்டும் நான் இழக்கவில்லை. பல படங்களை இழந்திருக்கிறேன். விஜயகாந்த்துக்காக, இப்ராகிம் ராவுத்தருடைய அர்ப்பணிப்புகளையும், எனக்கு ஏற்பட்ட இழப்புகளையும் நான் சொல்லித்தான் ஆகவேண்டும்.

"இழப்பு' என்ற வார்த்தையைக் கூட நான் சொல்வது தவறு. எனக்கு ஏற்பட்ட இழப்பையும் அவருக்கான அர்ப்பணிப்பாகவே நான் எடுத்துக்கொள்கிறேன். விஜயகாந்த் என் மேல் வைத்திருந்த அன்பிற்கு விலை மதிப்பே இல்லை. அதற்கு முன்னால் நான் இழந்ததெல்லாம் ஒரு பொருட்டே இல்லை என்றுதான் நான் நினைத்தேன். விஜயகாந்த்துக்காக நான் விட்டது எத்தனை படங்கள் என்று நினைத்தால் எனக்கு வியப்பாகவும் இருக்கிறது, வேதனையாகவும் இருக்கிறது. எல்லாவற்றையும் சொல்வதை விட சிலவற்றை மட்டும் சொல்கிறேன்.

சொல்வதற்கு முன் எனக்கு அனுபவம் கற்றுத் தந்த பாடத்தைச் சொல்லி விடுகிறேன். ஒருவருக்காக நாமே நமக்கு இழப்பு ஏற்படுத்திக் கொள்ளும்பொழுதோ, வேறொருவர் சொல்லைக் கேட்டு நாம் எடுக்கும் முடிவுகளால் நமக்கு ஏற்படும் ஏமாற்றங்களை, சறுக்கல்களை, பின்ன டைவுகளை, தோல்விகளை நம்மால் ஏற்பட்டது என்று நாம் ஏற்றுக் கொள்வதில்லை.

அவரால் ஏற்பட்டது, இவரால் ஏற்பட்டது, அவர் சொல்லைக் கேட்டுப் பண்ணிவிட்டேன், நட்புக்காக செய்தேன், அன்புக்காக செய்தேன், பாசத்துக்காக செய்தேன், விசுவாசத்துக்காக செய்தேன் என்று குமுறு கிறோம், கொந்தளிக்கிறோம், மனம் வேதனைப்படுகிறோம். பல நாட்கள், பல மாதங்கள், பல வருடங்கள்... ஏன் வாழ்நாள் முழுவதும் கூட நினைத்துக் கொண்டே இருக்கிறோம். இவை எதற்கும் மற்றவர்கள் காரணம் இல்லை. நாம்தான் காரணம். மற்றவர்கள் நமக்கு நல்லது செய்வதுபோல அவர்களுக்கு நல்லது செய்துகொள்கிறார்கள். அதை நாம் உணரத் தவறிவிடுகிறோம்.

aa

நமது வாழ்க்கையை பிறர் கையில் கொடுத்துவிட்டு, அவர்களின் முடிவுக்கு கட்டுப்பட்டு வாழ்ந்துவிட்டு அவர்களை ஏன் குறை சொல்லவேண்டும். ஏன் நமக்கு முடிவெடுக்கத் தெரியாதா?…நமக்கு அதற்கான அறிவில்லையா,… ஆற்றல் இல்லையா? இருந்தும் நாம் அதைப் பயன்படுத் தாமல் விட்டுவிட்டு அவர்களை ஏன் குறைசொல்ல வேண்டும். சில விஷயங்களில் நமக்கு தெளிவில்லாமல் இருக்கலாம். அதற்காக சிலரிடம் கருத்துக் கேட்கலாம். யோசனை கேட்கலாம். ஆனால் முடிவெடுப்பது நாமாக இருக்கவேண்டும். அதை செய்யத் தவறிவிட்டு அவர்களை ஏன் குறைசொல்ல வேண்டும். இது நமக்கு ஞானம் வந்தபிறகு அடிபட்டு அனுபவங்கள் வந்தபிறகு, வயதான பிறகு… ஒரே வரியில் சொல்வதென்றால் நொந்து நூலான பிறகுதான் நமக்குத் தோன்றும். இது பின்னால் தோன்றுவது.

ஆனால் எல்லோரும் இதயமுள்ள மனிதர்கள்தான். ஒருவரை நம்பித்தான் பயணம் செய்கிறோம். அவர்கள் நம்மை ஏமாற்றும்பொழுதோ, இல்லை நாம் ஏமாறும் பொழுதோ நாம் அதற்குக் காரணமானவர் கள் மீதுதான் கோபப்பட வேண்டும். அவர்கள் மீதுதான் குறை சொல்ல வேண்டும். குறை சொல்லித்தான் நம்மை ஆற்றிக்கொள்ள வேண்டும்.

நம்மை தேற்றிக்கொள்ள வேண்டும், அதுதான் நியாயம். அதுகூட நமக்கு ஏற் பட்ட அனுபவங்கள், மற்றவர்களுக்கு குறிப் பாக, இன்றைய இளைஞர்களுக்கு ஒரு பாடமாக, வழிகாட்டியாக அமையும் என்ற நம்பிக்கை.

அதனால் அந்தந்த நேரங்களில் நமக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கு காரணமானவர் களை நினைத்து நாம் வருத்தப்படுவதோ, கோபப்படுவதோ தவறே இல்லை என்பது எனது தாழ்மையான கருத்து.

அதிலும் குறிப்பாக திரைப்படத்துறை யிலும், அரசியலிலும் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இரண்டிலுமே நல்லவர் களும் இருக்கிறார்கள், வல்லவர்களும் இருக்கிறார்கள். அவர்களுக்குள்ளே சுயநல மும் இருக்கிறது. அவர்களுக்காக உழைக்கின்ற நம் நலமா, அவர்களின் நலமா என்று வரும் போது அவர்களின் நலம்தான் வெல்லும்.

இரண்டு துறைகளிலுமே உண்மையான முகங்களுக்கு இடையே நிறைய பொய் முகங்கள் இருக்கின்றன. இதை அடையாளம் கண்டுகொள்பவர்கள் வெற்றியடைகிறார்கள். கண்டு கொள்ள முடியாதவர்கள் திறமையிருந் தாலும் நினைத்த வெற்றிகளை அடைய முடிவதில்லை.

அடையாளம் தெரிந்துகொள்ளும் அளவுக்கு எனக்கு அறிவும் தெளிவும் இருந்தும் நான் ஏமாந்திருக்கிறேன். தெரியாமல் ஏமாறுவது விதி என்றுகூட விட்டு விடலாம். தெரிந்தே ஏமாறுவதற்கு என்ன பெயர் சொல்வது?

தெரிந்தே ஏமாறுவதில் அப்பொழுது ஒரு இன்பம் இருந்ததே, அதை என்னவென்று சொல்வது?

அப்படி நான் இழந்த படங்களில் சூப்பர் ஸ்டார் ரஜினி படங்கள், அல்டிமேட் ஸ்டார் அஜித் படம், சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் படம்… இப்படி நிறைய இருக்கிறது.

யாருக்காக இழந்தேன்.... விஜயகாந்த்துக்காக!…

இப்ராகிம் ராவுத்தரும், லியாகத் அலிகானும், விஜயகாந்த்துக்காக பலவற்றை இழந்திருக்கிறோம்.

"என்னை நம்பிக் கெட்டவர்கள் யாரும் இல்லை நம்பாமல் கெட்டவர்கள் நிறைய உண்டு' என்று ஒரு படத்தில் சொன்னார் எம்.ஜி.ஆர்.

எம்.ஜி.ஆரு.க்குப் பின்னால் எம்.ஜி.ஆர். போல் உண்மையோடு இருக்கும் எம்.ஜி.ஆர். போன்றவர்கள் யாருமே இல்லையா?

(வளரும்)