(98) ராவுத்தரின் தனி கம்பெனி!
1993ஆம் ஆண்டு விஜயகாந்த் நடித்த "ஏழை ஜாதி'... நான் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கிய படம். ஒரு ஜாதி தலைவர், அவர் ஜாதிக்காரர்கள் வசிக்கும் பகுதிக்கு வந்து அவர் களுடன் கோபமாகப் பேசி தூண்டிவிடுவதுபோல் காட்சி. மனோரமா, எம்.என்.நம்பியார் இருவரும் அந்தக் காட்சியில் நடித்திருப்பார்கள். ஜாதி தலைவருடன் விஜயகாந்த் பேசிக்கொள்வது போல அந்தக் காட்சியின் வசனம் அமைந்திருக்கும்.
ஜாதி தலைவர்: இங்க பாருங்க தம்பி. நான் என் ஜாதிக்காரங்ககிட்ட பேசிக்கிட்டிருக்கேன். நீ ஊடால வர்றது நல்லா இல்ல,…பேசாம போயிரு. நாங்கள்லாம் ஒரே குடும்பம்,… ஒரே ஜாதி.… என் ஜாதிக்காரங்க எனக்காக உயிரையே கொடுப்பாங்க.
விஜயகாந்த்: உங்களுக்காக உயிரையே கொடுப்பாங்க... நான் இல்லேன்னு சொல்லல. அப்படி உயிரைக் கொடுக்கிறவங்களுக்கு நீங்க என்ன பண்ணியிருக்கீங்க. எங்க ஜாதிக்காரங்க, எங்க ஜாதிக்காரங்கன்னு ஏமாத்தி இருபது வருஷமா இந்த தொகுதியில எம்.எல்.ஏ.வா இருக்கீங்களே,…என்ன வசதி பண்ணிக் கொடுத்திருக்கீங்க? எங்க ஜாதிக்காரங்களை மேல கொண்டுவரப் போறேன், மேல கொண்டு வரப்போறேன்னு மேடை போட்டுப் பேசறீங்களே...… உங்க ஜாதியில எத்தனை ஏழைப் பொண்ணுங்க இருக்காங்க. வரதட்சணை குடுக்க முடியாம வறுமையில வாடித் தவிச்சுக்கிட்டிருக்காங்க. அவங்கள்ல ஒரு பொண்ணுக்காவது உங்க செலவுல நீங்க கல்யாணம் பண்ணிக் கொடுத்திருக்கீங்களா? இல்ல உங்க ஜாதி சங்கம்தான் கல்யாணம் பண்ணிக் கொடுத்திருக்கா?
உங்க ஜாதியில பண வசதியில்லாம, படிக்க வசதியில்லாம எத்தனை ஏழை மாணவர்கள் இருக் காங்க. அவங்கள்ல யாரையாவது உங்க செலவுல படிக்க வச்சிருக்கீங்களா? பட்டம் வாங்கிக் கொடுத் திருக்கீங்களா? இல்ல… போராட்டம்,… போராட் டம்னு புத்திய மாத்தி ஜெயிலுக்கு அனுப்பியிருக் கீங்க.… அவங்க குடும்பத்தையெல்லாம் சீரழிச்சு நடுத் தெருவுல நிறுத்தியிருக்கீங்க. என்னோட ஒவ்வொரு நரம்பும், உடம்புல ஓடுற ரத்தமும் என் ஜாதிக்காக, என் ஜாதிக்காகன்னு பரபரப்பா பத்திரிகையில அறிக்கை கொடுக்கறீங்களே... உங்க வீட்டு சமையல்காரன் உங்க ஜாதியா? கார் டிரைவர் உங்க ஜாதியா? மேனேஜர் உங்க ஜாதியா? உங்க மகனுக்கு கோடீஸ்வரன் வீட்டுல பொண்ணு எடுத்தீங்களே, அந்தப் பொண்ணு உங்க ஜாதியா? ஏன்...… நீங்க வச்சிருக்கிற சின்னவீடு உங்க ஜாதியா? ஓட்டு வாங்கறதுக்காக ஜாதிவெறியைத் தூண்டி விடுவீங்க.
விஜயகாந்த்தின் ஆக்ரோஷமான இந்த நடிப்பிற்காக, ஜாதிவெறிக்கு எதிராக மடை திறந்த வெள்ளம் போல அவர் பேசியதற்காக விழுந்த கைத்தட்டல்கள் என்றுதான் நினைத்தேன்.
2001ஆம் ஆண்டு… நான் கதை, திரைக்கதை, வசனம் எழுதி விஜயகாந்த் நடித்த "வாஞ்சிநாதன்' திரைப்படம் வெளியானது. ஒரு ஜாதி தலைவரின் தூண்டுதலால் அவரது அடியாட்கள் பஸ்ஸை எரிப்பார்கள். போலீஸ் அதிகாரியான விஜயகாந்த், அவர்களைப் பிடித்து வந்து விசாரித்துக்கொண்டி ருப்பார். அந்தக் காட்சியில் நான் எழுதிய வசனம்...
அடியாள்: "என் தலைவனையா தப்பா பேசறே?''
விஜயகாந்த்: "இந்த நாடு நல்லா இருக்கணும்னு நெனைக்கிறவன்தான்டா தலைவன்.… நாசப்படுத்த நினைக்கிறவன், அராஜகம் பண்றவன் எல்லாம் இனிமே கோட்டைக்குப் போக முடியாது. அவங்க போகவேண்டிய இடமெல்லாம் சென்ட்ரல் ஜெயில், வேலூர் ஜெயில், பாளையங்கோட்டை ஜெயில்தான்டா'' -என்று கூறி மீண்டும் அடியாட் களை அடிக்கும்பொழுது அந்த ஜாதி தலைவர் கோபத்துடன் தனது ஆட்களுடன் அங்கு வருவார்.
ஜாதி தலைவர்: இப்ப என் ஆளுங்கள விடப்போறியா, இல்லையா?
விஜயகாந்த்: "ஏய்...… யாரடா விடச் சொல்ற? ஊழல்பண்ண அரசியல்வாதிகளுக்கு கோர்ட் தண்டனை கொடுத்தா பஸ்ஸ எரிப்பீங்க.… இங்க உள்ள தலைவர் கார் மேல வேற ஸ்டேட்ல கல்லெறிஞ்சா, இங்க உள்ள பஸ்ஸ எரிப்பீங்க. எவனுக்கோ, எவன் மேலயோ உள்ள கோபத்தை தீர்த்துக்குறதுக்காக, அரசாங்க பஸ்ஸ எரிப்பீங்க. அதுல வர்ற அப்பாவிகளையும் சேர்த்து எரிப்பீங்க...…போலீஸ் பொத்திக்கிட்டுப் போகணுமா?
ஒரு முஸ்லிம் கிரிமினலை இந்து இன்ஸ்பெக்டர் அடிச்சா... ஒரு இந்து கிரிமினலை முஸ்லிம் இன்ஸ் பெக்டர் அடிச்சா மதப்பிரச்சினை ஆக்கிருவீங்க. ஒரு கீழ் ஜாதி கிரிமினலை மேல் ஜாதி இன்ஸ்பெக் டர் அடிச்சா, மேல் ஜாதி கிரிமினலை கீழ் ஜாதி இன்ஸ்பெக்டர் அடிச்சா ஜாதி பிரச்சினை ஆக்கிருவீங்க. நாங்கள்லாம் லா அண்ட் ஆர்டரை கையில வச்சுக்கிட்டு நொட்டிக்கிட்டிருக்கணுமா?
நான் எந்த ஜாதிக்காரங்களுக்கும் விரோதி இல்ல. உண்மையிலேயே உன் ஜாதிக்காரங்களுக்கு நல்லது பண்றதுக்காக நீ கட்சி ஆரம்பிச்சிருந்தா, உனக்கு நான் மரியாதை கொடுத்திருப்பேன். ஆனா தேர்தல்ல எந்தக் கட்சிகூட கூட்டணி வச்சுக்கலாம், எத்தன சீட் வாங்கலாம், எவ்வளவு சம்பாதிக்க லாம்னு திட்டம் போட்டு கட்சி ஆரம்பிச்சு... இந்த நாட்டோட அமைதிய அழிக்கிறவங்க யாரா இருந்தாலும் பயப்படமாட்டேன். இன்னும் அஞ்சு நிமிஷத்துல நீ இங்க இருந்து போகல...… உன்னை நான் சுடமாட்டேன்... உன் ஜாதிக்காரன் சுடுவான்''
-இப்படியெல்லாம் மத வெறிக்கும், ஜாதி வெறிக்கும் எதிராக எழுதியவன் நான்.… இந்த வசனங்களையெல்லாம் துணிச்சலாகப் பேசியவர் விஜயகாந்த். இரண்டு பேருக்குமே ஜாதி, மத ஒற்றுமையை வலியுறுத்த வேண்டும் என்ற நோக்கம் இருந்தது. அதுவும் எத்தனை ஆண்டுகளுக்கு முன்பு இதையெல்லாம் எழுதினேன் என்பதை இன்றைய இளைஞர்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே இவற்றை நினைவுபடுத்தினேன்.
ஒரு நிம்மதியான விஷயம். பல ஆண்டுகள் முயற்சி செய்தாலும் பலர், பலவிதமாக முயற்சி செய்தாலும், பலபேர் முயற்சி செய்தாலும் தமிழ்நாட்டின் மத நல்லிணக்கத்தையும் ஜாதி வேறுபாடுகளின்றி வாழும் சகோதரத்துவத்தையும் இதுவரை யாராலும் சிதைக்க முடியவில்லை.
இதற்காகத்தான் நான் எழுதினேன். இதற் காகத்தான் விஜயகாந்த் பேசினார்.
இப்ராகிம் ராவுத்தரும், நானும் அடிக்கடி நைட்ஷோ சினிமாவுக்குப் போவோம் என்று சொல்லியிருந்தேன். அது போகப் போக குறைய ஆரம்பித்தது. ஆனால் அவரும் நானும் இரவு நேரத்தில் மெரினா பீச்சுக்குப் போவது நிற்கவில்லை. ஒருநாள் "பீச்சுக்குப் போகலாம்ணே'' என்று அழைத்தார். அவர் பீச்சுக்கு அழைத்தால் பொதுவாக மூன்று காரணங்கள் இருக்கும். எதாவது ஒரு விஷயத்தைப் பற்றி ஆலோ சனை செய்வதற்காக இருக்கும். புதிதாக ஒரு முடிவெடுத்திருப் பார். அதைப்பற்றி சொல்வதற்காக இருக்கும். இல்லையென்றால் மூடு அவுட்டாகியிருப்பார். சினிமா சம்பந்தமான மூடுஅவுட் கூட சிலருக்கு தெரியலாம். அவர் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி எனக்குத்தான் அதிகமா தெரியும். அன்று எதற்காகக் கூப்பிடுகிறார் என்பது தெரியாமல் அவருடன் போனேன். வழக்கமாக ஒரு இடத்தில் அமர்வோம். அங்கே அமர்ந்ததும் சிறிதுநேரம் அமைதியாக இருந்தார். "புதுசா ஆரம்பிக்கப் போற படக் கம்பெனிக்கு ஒரு பெயர் வைக்கணும்ணே'' என்றார்.
"வச்சிரலாம்ணே...''…
"நல்லதா ஒரு பேர் சொல்லுங்க'' என்றார்.
"விஜி அண்ணன் பேரு, உங்க பேரு ரெண்டும் சேர்ந்து வர்றமாதிரி ஒரு பேர் வைக்கலாம்'' என்றேன்.…
"இல்லண்ணே...… வேற எதாவது சொல்லுங்க''
"விஜி அண்ணனோட அம்மா பேர்ல ஆரம்பிக்கலாம்ணே''
"இல்லண்ணே...… ராவுத்தர் பிலிம்ஸ்னு வச்சா எப்படி இருக்கும்?''
"நீங்க, உங்களுக்காக வச்சுக்கிட்ட மாதிரி ஆயிறாதா?''…என்றேன்.
என்னிடம் ஏற்கனவே சொன்ன விஷயங்களை நினைவுபடுத்தினார்.
"அண்ணே...… உங்ககிட்ட முன்னாலயே சொல்லியிருக்கேன். நானும் விஜியும், தேவர் பிலிம்ஸ் ஆபீசுக்கு போனப்ப உள்ளேயே நுழைய விடாம அசிங்கப்படுத்திட்டானுக. அப்ப மனசுல நெனச்சேன். நாமளும் சினிமாவுல பெரிய ஆளாகி "ராவுத்தர் பிலிம்ஸ்'னு வச்சு படமெடுக்கணும்னு.''
"சொல்லியிருக்கீங்கண்ணே...…தப்பு ஒண்ணுமில்ல. விஜி அண்ணன்கிட்டே பேசிட்டீங்களா?''…
"ஏண்ணே… விஜி வேண்டாம்னு சொல்லிருவான்னு நினைக்கிறீங்களா?'' என்று கேட்டார். அப்பொழுது பிளாஷ் கட் போல எனக்கு சில விஷயங்கள் வந்துபோனது.
விஜயகாந்த், இப்ராகிம் ராவுத்தர் மீது அதிகமான நட்பும், நம்பிக்கையும் வைத்திருந்தது விஜயகாந்த் குடும்பத்தைச் சேர்ந்த சிலருக்கு பிடிக்கவில்லை. இருவரிடமும் நான் நெருங்கிப் பழகிக் கொண்டிருப்பதால் என்னிடம் தங்களது வருத்தத்தை சொல்வார்கள்.
இதேபோல வேறு சிலருக்கும் இப்ராகிம் ராவுத்தருக்கு இருந்த முக்கியத்துவம் பிடிக்காமல் இருந்ததும் எனக்குத் தெரியும். "ராவுத்தர் பிலிம்ஸ் என்று வைப்பதிலிருந்தே இப்ராகிம் ராவுத்த ரோட சுயநலம் உனக்கு தெரியவில்லையா? என்று விஜயகாந்த் திடம் பேசக்கூடும். அவர் மனதைக் கலைக்க முயற்சிப்பார்கள். அதனால் சில பிரச்சினைகள் உருவாகலாம்' என்று நான் நினைத்தேன்.
(வளரும்...)