aa

(96) சிங்கம் சிறுக்குதோ... யானை பெருக்குதோ...!

விஜயகாந்த்தின் பிறந்தநாளுக்கு அவர் பேசு வதற்காக நான் எழுதியதில்...

"எங்களுக்கு பெண் குழந்தைகள் இல்லை. ஒரு பெண் குழந்தை இல்லையே என்ற ஏக்கம் மற்றவர்களைப் போல எங்களுக்கும் இருந்தது. அந்த ஏக்கத்தை தீர்க்கும் வகையில் இந்த 32 பெண்களையும் எங்கள் சொந்த மகள்களாக நினைத்துதான் இந்தத் திருமணத்தை நடத்தி வைத்திருக்கிறோம். எல்லா நலமும் பெற்று வளமாக வாழ்க என்று அவர்களை வாழ்த்துவதோடு ஒரு அன்பான வேண்டுகோளையும் வைக்கிறேன்.

Advertisment

உங்கள் குழந்தைகளை நல்லவர்களாக உருவாக்குங்கள். உணவு ஊட்டும்போது "தமிழன் என்று சொல்லடா… தலைநிமிர்ந்து நில்லடா' என்று தமிழ் உணர்வையும் ஊட்டுங்கள்''

-இது விஜயகாந்த் பேசுவதற்காக நான் எழுதிய உரையின் ஒரு பகுதி.

ஆகஸ்ட் மாதம் 25-ஆம் தேதி அவருக்குப் பிறந்தநாள் வந்தபொழுது, ஒரு பிறந்தநாளுக்கு என்னை அறிக்கை எழுதச் சொல்லவில்லை. இப்ராகிம் ராவுத்தருக்கு நான் போன் செய்து "எழுதவா' என்று கேட்டபோது, "வேண்டாம்ணே' என்று சொல்லிவிட்டு போனை வைத்து விட்டார்.

Advertisment

இலங்கையில் நடந்துகொண்டிருந்த இனப் படுகொலை காரணமாக அமர்க்களமாக பிறந்த நாள் கொண்டாட வேண்டாம் என்று முடிவெடுத் திருந்த நேரம். ஆனால் "அறிக்கை வெளியிடுவோம். இந்த ஆண்டு அதுவும் இல்லையா?' என்று நினைத்தேன்.

காலை 9 மணி இருக்கும். நான் தேனாம் பேட்டையில் என் அண்ணன் வீட்டில் இருந்தேன். ராவுத்தர் பிலிம்ஸ் அலுவலகம் கோயம்பேடு போகும் வழியில் எம்.எம்.டி.ஏ. அருகில் இருந்தது.

இப்ராகிம் ராவுத்தரிடமிருந்து போன் வந்தது. "அண்ணே 11 மணிக்கு பிரஸ்மீட் இருக்கு. பத்திரிகைகாரங்களுக்கு பிறந்தநாள் அறிக்கை கொடுக்கணும். ரெடி பண்ணிட்டு உடனே ஆபீசுக்கு வாங்க'' என்றார்.

எனக்கு ஒன்றும் புரியவில்லை. நேற்று எழுத வேண்டாம் என்றார். இப்பொழுது உடனே ரெடிபண்ணிட்டு வாங்க என்கிறார். பேப்பரும் பேனாவும் எடுத்துக் கொண்டு ஒரு ஆட்டோவில் ஏறினேன். எழுதிக்கொண்டே தேனாம்பேட்டையில இருந்து 100 அடி சாலையில் இருந்த ராவுத்தர் பிலிம்ஸ் ஆபீசுக்கு போகும்போது மணி பத்து.

இப்ராகிம் ராவுத்தர் அறைக்குப் போனேன்.

"எழுதிட்டீங்களாண்ணே...''

"எழுதிட்டேன். என்ன பிரச்சினை, ஏன் நேத்து வேண்டாம்னு சொன்னீங்க?''

"வேற யாரோ அறிக்கை ரெடிபண்ணிட்டு என்கிட்ட வந்து கொடுத்தாங்க. அதனால உங்களை எழுத வேண்டாம்னு சொன்னேன்.''

காலையிலே விஜிகிட்ட கொடுத்து படிக்கச் சொன்னேன். படிச்சிட்டு "என்ன... லியாகத் அண்ணன் சரியா எழுதல. எப்பவுமே அவரு எழுதற அறிக்கை படிக்கிறப்பவே எமோசனலாக இருக்கும். இது சப்புன்னு இருக்கே... என்னாச்சு அவருக்கு?'' என்று கேட்டார்.

aa

"லியாகத் அண்ணன் எழுதலப்பா'' என்றேன்.

"இது எனக்குப் புடிக்கல. அண்ணனை எழுதிட்டு வரச் சொல்லுன்னு சொன்னான். அதான் போன் பண்ணேன்'' என்றார்.

"அந்த அறிக்கை வேண்டாம்னு நீங்களே சொல்லியிருக்கலாமே'' என்றேன்.

"காரணம் இருக்கு சொல்றேன்'' என்றார். சொல்லி முடிக்கும்போது விஜயகாந்த் ரூமுக்குள் வந்தார்.

"என்னண்ணே… எழுதிட்டீங்களா?''…

வாங்கிப் படித்தார்... அவர் முகத்தில் மகிழ்ச்சி.

"பாத்தியா, எனக்கு என்ன வேணும்னு அண்ணனுக்குத்தாண்டா தெரியும்'' என்றார்.

இப்ராகிம் ராவுத்தர் என்னைப் பார்த்தார். "இந்த வார்த்தை விஜி வாயில இருந்து வரணும் கிறதுக்காகத்தான் நான் அவங்க கொடுத்த அறிக் கையை வேண்டாம்னு சொல்லல'' என்றார். விஜய காந்த்துக்கு, நான் திரைப்படங்களுக்கு மட்டுமே எழுதியிருக்கிறேன் என்று நினைத்துக் கொண்டிருப் பவர்களுக்காக இந்த சம்பவங்களைச் சொன்னேன்.

சரி அரசியலுக்கு வருவோம்...!

அரசியலில் ஆபத் தான ஆயுதம்... ஜாதி… மதத்தை வைத்துக் கொண்டு அரசியல் செய்வதும், ஜாதியை வைத்துக்கொண்டு அரசியல் செய்வதும்.

சிலர் பலூன் வியா பாரிகள் போல செய்து கொண்டிருக்கிறார்கள். பலூன் வியாபாரிகள் என்று நான் சொன்னதற் கும் காரணம் ஊதி ஊதிப் பெரிதாக்குகிறார்களே என்ற வேதனையின் வெளிப் பாடு.

"ஆயிரத்தில் ஒருவன்' படத்தில் எம்.ஜி.ஆர், நம்பியார் இருவரும் பேசிக் கொள்வதுபோல ஒரு வசனம் வரும்.

நம்பியார்: "மதம் கொண்ட யானை என்ன செய்யும் தெரியுமா?''

எம்.ஜி.ஆர்: "சினம் கொண்ட சிங்கத்திடம் தோற்று ஓடும்.''

1965ஆம் ஆண்டு வெளியான படம். அந்த வசனக் காட்சியில் திரை யரங்குகள் தீப்பிடித்தது போல இருக்கும். இன்றுவரை அந்த வசனம் பேசப்படுகிறது.

இன்றைய அரசியலில் மதம் கொண்ட யானையிடம் சிங்கம் தோற்று ஓடுகிறதோ? என்ற தோற்றம்தான் தெரிகிறது.

சிங்கத்தின் சீற்றம் குறைந்துவிட்டதா?… சிங்கம் பலவீனமாகிவிட்டதா?

யானை தன் பலத்தை அதி கரித்துக்கொண்டே போகிறதா?… சிங்கத்தை விட யானைக்கு புத்திசாலித்தனம் கூடி விட்டதா?…

இப்படி... பல கேள்விகள் எழுகிறது.

கோயில் யானை என்றால் கும்பிடலாம், மதம் பிடித்த யானையை என்ன செய்வது? சிங்கங்கள் யோசிக்க வேண்டும். மக்கள் முடிவெடுக்க வேண்டும். "ஆயிரத்தில் ஒருவன்' எம்.ஜி.ஆர். வசனம் என்னை என்னவெல்லாமோ யோசிக்க வைத்து விட்டது.

"மக்கள் பொங்கி எழுந்தால் புரட்சி வெடிக்கும்' என்பார்கள். இன்று நாம் பல வீடுகளில் பார்த்துக்கொண்டிருக்கும் நிகழ்வு. ஒரு நண்பன், இன்னொரு நண்பனின் வீட்டிற்குப் போனால் அவனது தாயை அம்மா என்றுதானே அழைக்கிறான்.

அந்த நண்பன், இந்த நண்பன் வீட்டிற்கு வந்தால் இவனுடைய தாயை "அம்மா' என்றுதானே அழைக் கிறான்.

நட்புக்காக தியாக உணர்வுடன் வாழும் இளைஞர்கள் நாட்டுக் காக தியாகம் செய்ய வேண்டாமா? தியாகம் என்பது உயிரை இழப்பது என்று நான் சொல்லவில்லை. உணர்வுகளை இழக்காமல் இருப்பது.

தமிழ், தமிழ்நாடு, தமிழ் இனம் என்ற உணர்வை இழக்காமல் இருப்பது. இந்தியன் என்பதை இறுமாப்புடன் சொல்வோம். தமிழன் என்பதை தலைநிமிர்ந்து சொல்வோம். அதை ஜாதி, மத வேறுபாடுகளையெல்லாம் உடைத்தெறிந்துவிட்டு உரக்கச் சொல்வோம். யாரும் அறிவுரை சொல்லித் தெரிந்துகொள்ளும் நிலையிலோ, நடந்துகொள்ள வேண்டிய அவசியத்திலோ இன்றைய இளைஞர்கள் இல்லை. அவர்களுக்கு எல்லாமே தெரியும். பல வீடுகளில் பல இளைஞர்களின் அறிவுத்திறனை நான் பார்த்துவிட்டுத்தான் சொல்கிறேன்.

aa

புராணத்தில் ஒரு நிகழ்வு. சுருக்கமாக சொல்கிறேன். எல்லா வல்லமையும் படைத்த சிவபெருமானுக்கு பிரணவ மந்திரத்திற்கு விளக்கம் தெரியல. பிரம்மதேவரிடம் கேட்கிறார்.

"ஓம் என்ற பிரணவ மந்திரத்தின் உட்பொருள் எனக்குத் தெரியவில்லை. நீங்கள்தான் விளக்கமாக கூறவேண்டும்.'

பிரம்மன், அவருக்கும் "தெரியாது' என்று கூறிவிட்டார். பலரிடம் கேட்டும் தெரியாமல் கடைசியில் சிவபெருமான் தனது மகன் முருகப் பெருமானிடம் "தெரியுமா' என்று கேட்டார்.

"தெரியும்' என்றான் சிறுவயது முருகன்.

"அப்படியானால் அதை எனக்கு உபதேசம் செய்' என்றான் சிவபெருமான்.

"தந்தையே… உபதேசம் என்று வந்துவிட்ட பிறகு நான் குரு,… நீங்கள் சிஷ்யன்.… நீங்கள் கைகட்டி, வாய் பொத்திக் கேட்டால் நான் சொல்லித் தரு கிறேன்' என்றான் குறும்புக் கடவுள் முருகன்.

சிவபெருமானும் அப்படியே கேட் டார். முருகன் விளக்கம் சொன்னான்.

ஒரு மலைப்பகுதியில் இது நடந்தது.

சிவபெருமான் தனது மகன் முருகப்பெருமானை உச்சி முகர்ந்து "தந்தைக்கு உபதேசம் செய்த நீ இன்று முதல் சுவாமி நாதன் என்று அழைக் கப்படுவாய். இந்த இடமும் சுவாமிமலை என்று அழைக்கப்படும்' என்றார். அன்று முதல் முருகப்பெருமான் "தகப்பன் சாமி' என்று அழைக்கப்பட்டார் என்று சொல்வார்கள்.

அப்படிப்பட்ட தகப்பன்சாமிகள் இன்று நிறைய இருக்கிறார்கள். அப்பாவுக்கே ஐடியா சொல்லும் இளைஞர்கள் நாட்டில் ஏராளமாக இருக்கிறார்கள்.

அந்த இளைஞர்களுக்கு நான் வைக்கும் அன்பு வேண்டுகோள் மதவெறி, ஜாதி வெறியைத் தூண்டிவிட்டு நமக்குள் பிளவை ஏற்படுத்தி, நமது ஒற்றுமையைக் குலைக்க நினைப்பவர்களுக்கு, நாட்டின் அமைதியைக் கெடுக்க நினைப்பவர் களுக்கு பாடம் கற்றுக் கொடுங்கள். நான் குறிப்பிட்டு எந்தக் கட்சியையும் சொல்லவில்லை. நான் சொன்னது போல இன்றைய இளைஞர்கள் தகப்பன்சாமிகள்.… அவர்களுக்கு யாரும் சொல்லாமலே எல்லாம் தெரியும்.

(வளரும்...)

படம் உதவி: ஞானம்