"குறிஞ்சி மலர் 12 வருஷத்துக்கு ஒருமுறைதான் பூக்கும். மக்களுக்கு பாடுபடற நல்ல தலைவன் ரொம்ப வருஷத்துக்கு ஒரு தடவைதான் தோன்றுவான்'... அது இவர்தான்.
-இது "ஏழை ஜாதி' பட வசனம். இப்படி இடம் கிடைக்கும்பொழுதெல்லாம் காட்சியை விட்டு வெளியே போய், மீண்டும் காட்சிக்கு வரும் நான் எழுதும் வசனம்.
"உளவுத்துறை' படத்தில் விஜயகாந்த் ஒரு டிரைவர் வேலைக்கு வரும்போது வாட்ச்மேன் தடுத்துவிடுவார். "உன்னை முதலாளி வேலைய விட்டுத் தூக்கிட்டாரு உள்ளே விடவேண்டாம்னு சொல்லிட் டாரு.''
"ஏன் வேலைய விட்டுத் தூக்குனாரு.''
"தெரியாது'' என்பார் வாட்ச்மேன். விஜயகாந்த் உள்ளே போக முயற்சிப்பார். வாட்ச்மேன் தடுப்பார். அவரைத் தள்ளிவிட்டு உள்ளே முதலாளி அறைக்குப் போவார் விஜயகாந்த்.
"ஏன் வேலைய விட்டு தூக்குனீங்க?'' என்று விஜயகாந்த் கேட்க வேண்டும். முதலாளி காரணம் சொல்ல வேண்டும். இல்லையென்றால், சொல்ல முடியாது என்று சொல்லவேண்டும். இப்படித் தானே வசனம் எழுதவேண்டும்.
நான் என்ன எழுதினேன் தெரியுமா?
விஜயகாந்த்: "என்னை வேலைய விட்டுத் தூக்கிட்டதா வாட்ச்மேன் சொன்னான்.''
முதலாளி: "அத அவன் சொல்லலேன்னா அவனை வேலைய விட்டுத் தூக்கியிருப்பேன்.''
விஜயகாந்த்: "திடீர்னு வேலைய விட்டுப் போகச் சொன்னா எங்க சார் போறது?''
முதலாளி: "எங்கயாவது போ.… உன்னை யார்யா டிரைவர் வேலை பாக்கச் சொன்னது? கட்டட வேலைக்கு போ, கல்லு உடை, கை வண்டி இழு, மூட்டை தூக்கு...''
விஜயகாந்த்: நீங்க சொல்ற எந்த வேலையும் கேவலமும் இல்ல. அதைச் செய்ற யாரையும் நான் கேவலமா நெனைக்கிறதும் இல்ல… பிச்சை எடுக்கிறவங்களையும் லஞ்சம் வாங்கறவங்களையும் தவிர உழைச்சுப் பிழைக்கிற எல்லாருமே இந்த நாட்டுல உசந்தவங்கதான் சார்.
முதலாளி: "பரவாயில்லயே… நல்லா பேசுற...… பேசாம அரசியல்வாதி ஆயிரு.''
விஜயகாந்த்: "மக்களோட ஆதரவும், ஆண்டவனோட முடிவும் அப்படி இருந்தா நிச்சயம் நான் அரசியலுக்கு வருவேன்.''
முதலாளி: "அந்த விஷயத்தை பொறுத்த வரைக்கும் வேணும்னா முடிவு ஆண்டவனோடதா இருக்கலாம். உன்னோட வேலை விஷயத்தைப் பொறுத்தவரைக்கும் முடிவு என்னோடது. கெட் அவுட்.''
விஜயகாந்த்: "முதலாளி...''
முதலாளி: "என்கிட்ட மோதற அளவுக்கு நீ பெரிய ஆளு இல்ல...… சாதாரண டிரைவர்.''
விஜயகாந்த்: "என்னப் பத்தி உங்களுக்கு தெரியாது. இப்ப சொல்றேன். நான் நல்லவங்களுக்கு மத்தியில பொறுமையா இருப்பேன். பொல்லாதவங்களுக்கு புயலா இருப்பேன். நியாயமா நடக்கிறவங்க காலுக்கு செருப்பா இருப்பேன். அநியாயம் பண்றவங்களுக்கு நெருப்பா இருப்பேன்'' -இப்படி எழுதினேன்.
1998ஆம் ஆண்டில்... "மக்களோட ஆதரவும், ஆண்டவனோட முடிவும் அப்படி இருந்தா நிச்சயம் நான் அரசியலுக்கு வருவேன்.''
எந்த ஒரு திட்டமும் இல்லாமல், அதற்கான முயற்சிகள் இல்லாமலா நான் எழுதினேன்?
"விஜயகாந்த்துக்காக நான் எழுதிய வசனங்களை மட்டும் தனியாக புத்தகமே போடலாம்' என்று ஒரு நண்பர் என்னிடம் போனில் சொன்னார். வேறு பல போன்கள் வந்துகொண்டிருக்கின்றன.
"விஜயகாந்த் முதலமைச்சர் ஆவார் என்று நினைத்தீர்கள். அது ஏன் நடக்காமல் போனது?… ஏன் அந்தக் கட்சி செல்வாக்கை இழந்தது?… உங்க ளுடைய கணிப்பில் எப்படி செயல்பட்டிருந்தால் வீழ்ச்சியடையாமல் வளர்ச்சி அடைந்திருக்கும், அதை எழுதுங்கள்' என்று கேட்கிறார்கள்.
வேறு பல போன்கள்... "ஓ.பி.எஸ். நடத்திய தர்மயுத்தத்தில் என்ன நடந்தது?… தமிழ்நாட்டின் தனிப்பெரும் தலைவராக உருவெடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஓ.பி.எஸ். ஏன் பின்னடைவைச் சந்தித்தார்? எங்கே தவறு நடந்தது,… யாரால் தவறு நடந்தது? இதைப் பற்றியெல்லாம் எழுதுங்கள்' என்று பலர் கேட்கிறார்கள்.
"விஜயகாந்த் அவர்களுடன் நான் பல ஆண்டுகள் பயணம் செய்ததால், அவர் கூடவே இருந்து பல படங்கள் எழுதியிருப்பதால் அப்படி எழுதச் சொல்கிறார்கள்.
அதேபோல ஓ.பி.எஸ். உடன் பல ஆண்டுகள் நான் இருந்ததால் தர்ம யுத்தத்தில் என்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டதால் அதை எழுதச் சொல்கிறார்கள்.
சினிமாவிலும் நான் விஜயகாந்த்தின் அரசியலை எழுதியிருக்கிறேன். அதனால்தான் "பூந்தோட்டக் காவல்காரன்' படத்திலிருந்த அரசியலைச் சொன்னேன். அதிலிருந்து தொடங் கிய விஜயகாந்த்தின் அரசியலைச் சொன்னேன். அந்தப் படத்திற்கு முன்பே சில படங்களில் அரசியல் பேசியிருக்கிறாரே என்று சிலர் கேட்கலாம். நான் எழுதியது விஜயகாந்த்துக்கான அரசியல்.
"பூந்தோட்டக் காவல்காரன்' படத்தில் விஜயகாந்த் ஒரு அனாதை.… அடைக்கலம் தேடி வந்த காதலர்களுக்கு, வில்லனை எதிர்த்துப் போராடி திருமணம் செய்து வைப்பார். படத்தில் மட்டுமல்ல,…நிஜ வாழ்க்கையில் எத்தனையோ ஏழை ஜோடிகளுக்கு அவர் செலவில், அவரது மன்றத்தினரின் முயற்சியில் திருமணம் செய்து வைத்திருக்கிறார்.
ஒருமுறை சென்னையில 32 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கும் நிகழ்ச்சி.
விஜயகாந்த் பேசுவதற்காக நான் தயாரித்த உரையில் சில விஷயங்களை இன்றைய இளைஞர்கள் கட்டாயம் படிக்க வேண்டும்.
"பசியில் தவிப்பவர்களுக்கு உணவு கொடுத்தால் உயிர் கொடுத்தது போல. கல்வி கொடுத்தால் கண் கொடுத்தது போல. அந்த மகிழ்ச்சியை விட பெரிய மகிழ்ச்சி… ஏழைப் பெண்களுக்கு நடத்தி வைக்கின்ற இதைப் போன்ற திருமணங்கள்தான்.
ஒவ்வொரு ஆணின் வாழ்க்கையிலும், ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையிலும் திருமணம் ஒரு திருப்புமுனை.
ஒரு ஆண் திருமணம் ஆன பிறகுதான் முழு மனிதன் ஆகிறான். அவனை நல்வழி யில் செலுத்தி அவனுடைய உயர்வுக்கு காரணமாக இருப்பவள்தான் மனைவி.
அப்படிப்பட்ட மனைவியை இன்றைய இளைஞர்கள் எப்படி தேர்வு செய்கிறார்கள். பெண்களைப் பெற்ற தாய், தந்தையின் இதயத்தில் ரத்தம் வர வைத்த பின்புதானே தாலி கட்டுகிறார்கள்.
பெரும்பாலான இளைஞர்கள் வரதட்சணை வாங்கிக் கொண்டுதானே திருமணம் செய்கிறார்கள். கல்லூரியில் இடம் வேண்டும் என்றால் பணம் கொடுத்து வாங்குகிறார்கள். படித்து முடித்தபின் வேலை வேண்டுமென்றால் பணம் கொடுத்து வாங்குகிறார்கள். தேர்தலில் சீட்டு வேண்டு மென்றால் பணம் கொடுத்து வாங்குகிறார்கள். ஓட்டு வேண்டுமென்றால் பணம் கொடுத்து வாங்குகிறார்கள். ஆனால் இன்பத்திலும் துன்பத்திலும் பங்கு பெறும் மனைவியை மட்டும் பணம் வாங்கிக்கொண்டு ஏற்றுக் கொள்கிற கொடுமை இந்த நாடு முழுவதும் நடந்து கொண்டிருக்கிறது.
பெண், தெய்வத்திற்கு சமம் என்று சொல்வார்கள். ஏனென்றால் பெண் ணில்தான் தாய் இருக்கிறாள். ஒரு பெண்ணுக்கு எத்த னை பெருமைகள் இருந்தாலும் மிகப்பெரிய பெருமை தாய்மை அடைவது தான்.
ஆனால் ஏழைக் குடும் பங்களில் பிறந்த பெண்களுக்கு?
தான் பெற்ற மகளுக்கு ஒரு வாழ்க்கை அமைத்துக் கொடுக்க முடியவில்லையே என்ற தவிப்பும், வேதனையும் அந்தப் பெண்ணைப் பெற்றவர்களுக்குத்தான் தெரியும். அந்தத் தவிப்பும், வேதனையும் இல்லாமல் மனமெல்லாம் மகிழ்ச்சி யோடு இங்கே 32 ஜோடி களுக்கு திருமணம் நடந்து முடிந்திருக்கிறது. சென்னை யில் நடப்பதால் இந்தத் திருமணம் எனது இல்லத் திருமணம் போல அமைந்து விட்டது. தாலி வாங்க,… புடவை வாங்க,… சீர்வரிசை சாமான்கள் வாங்குவதற்காக என் மனைவி ஓடி, ஓடி வேலை செய்தபோது, இந்த வேலைகளை எல்லாம் நீயே செய்ய வேண்டுமா என்று கேட்டேன்.
"32 ஜோடிகளுக்கும் அம்மா, அப்பா ஸ்தானத்தில் இருந்து நடத்தப்போவது நாம்தானே. அதனால் நான்தானே இதையெல்லாம் செய்ய வேண்டும்' என்று என் மனைவி சொன்ன பதிலைக் கேட்டு என் கண்கள் மட்டு மல்ல...…இதயமே கலங்கிவிட்டது.''
(வளரும்...)