(94) அரசியல் வசனம் ஆரம்பம்!
என் பிரியத்துக்குரிய மனோபாலா இயக்கிய "தென்றல் சுடும்' படத்திற்கு எழுத லாமா வேண்டாமா என்ற இக்கட்டான சூழ்நிலைக்கு ஆளானேன் நான். திடீரென ஏற்பட்ட பிரச்சினையால் பலமுறை யோசித்து... அந்தப் படத்திலிருந்து விலகிக்கொள்ளலாம் என்று முடிவு செய்து தயாரிப்பாளர் பாபுவைச் சந்தித்து அட்வான்ஸாக வாங்கிய செக்கை திருப்பிக் கொடுத்துவிட்டு வந்தேன்.
கலைஞர் அவர்களிடம் போய் பேசினார் கள். அவரும் சம்மதித்தார். அவர் எழுத்தில் "தென்றல் சுடும்' 1989ஆம் ஆண்டு வெளியானது.
ஆரம்பத்தில் நான் எழுத வேண்டிய படம் என்பது கலைஞர் அவர்களுக்குத் தெரியாது. இடையில் தெரிந்து... "இது லியாகத் அலிகான் எழுத வேண்டிய படமா?'' என்று கேட்டதாக கலைஞருடன் நெருக்கமாக பழகியவர்கள் என்னிடம் சொன்னார்கள்.
இதை எதற்காகச் சொல்கிறேன் என்றால், வாழ்க்கை வரலாறு எழுதுகிற அளவுக்கு நான் பெரிய ஆள் இல்லை. ஆனால் சினிமாத் துறையிலும் அரசியலிலும் நான் சொல்வதற்கு நிறைய விஷயங்கள் இருக்கிறது. அதைச் சொல்லும்போது அந்த வரலாற்றில் கலைஞர் என்ற மந்திரச் சொல் கண்டிப்பாக இடம்பெற்றே ஆகவேண்டும் என்பது எனக்குக் கிடைத்த பெரும் பாக்யம் என்றே கூற வேண்டும்.
1989 மார்ச்சில் "தென்றல் சுடும்' படம் ரிலீசானது. மிக ஆர்வத்துடன் அந்தப் படத்தை பார்த்தேன். கலைஞர் வசனத்தை ரசிக்கும்பொழுதே இந்தக் காட்சிகளுக்கு நானாக இருந்தால் எப்படி எழுதியிருப்பேன் என்று சிந்தித் துப் பார்த்தேன். அதற்காகவே மறுமுறையும் பார்த்தேன்.
"கலைஞர் கலைஞர்தான். கம்பன் வீட்டுக் கட்டுத்தறி... கட்டுத்தறிதான்' என்பது எனக்குப் புரிந்தது.
"பூந்தோட்டக் காவல்காரன்' படம் வெளியாவதற்கு முன் பிரிவியூ ஷோக்கள் நடைபெற்றது. நான் வள்ளுவர் கோட்டத்திற்கு அருகில் உள்ள ஒரு தியேட்டரில் இருந் தேன். ஆந்திரா கிளப் அருகே உள்ள தேவி ஸ்ரீதேவி தியேட் டரிலும் ஷோ நடந்தது.
படம் முடிந்து வெளியே வந்தார் திரு.கலைமணி அவர்கள். மிகச்சிறந்த கதை, வசனகர்த்தா -தயாரிப்பாளரும் கூட. வெளியே வந்தவர் கேட்ட முதல் கேள்வி...
"லியாகத்அலிகான் எங்கே?''
"சார் அவர் குட்லக் தியேட்டர்ல இருக்கார்'' என்று சொல்லியிருக்கிறார்கள். (இப்பொழுது அது ஃபோர் ப்ரேம் தியேட்டர்)
படம் பார்த்துவிட்டு வந்த அத்தனை பேர் முன்னிலை யும் கலைமணி சொன்னாராம். "லியாகத் அலிகான் என்னை ஜெயிச்சுட்டார். நான் பாம்குரோவ் ஹோட்டல்ல 302 ரூம்ல இருக்கேன். என்னை வந்து பாக்கச் சொல்லுங்க.'' எனக்குத் தகவல் சொன்னார்கள். நான் உடனே பாம் குரோவ் ஹோட்டலில் அவர் தங்கியிருந்த 302-க்குப் போனேன்.
"சார் வாழ்த்துக்கள் சார்'' என்று எழுந்து கைகுலுக்க... என்னை கட்டியணைத்துக் கொண்டார். "என்னை ஜெயிச்சுட்டீங்க சார்''
"அண்ணே,… நான் இப்பத்தான் தொடங்கியிருக்கேன்… நீங்க எத்தனை படம் எழுதியிருக்கீங்க. எல்லாமே சூப்பர்ஹிட் படங்கள்ணே.…இயக்குநர் இமயம் பாரதிராஜா சார் முதன்முதலா டைரக்ட் பண்ண "16 வயதினிலே' படத் துக்கு நீங்க வசனம் எழுதுனீங்க. அந்தப் படம் பார்த்துட்டு கைதட்ட ஆரம்பிச்சேன்... இன்னும் நிறுத்தலேண்ணே.… உங் கள நான் ஜெயிச்சுட்டதா சொல்லாதீங்கண்ணே'' என்றேன்.
"நான் எழுதியிருக்கேன்... இல்லேன்னு சொல்லல. நான் சென்ட்டிமெண்ட் படம் பண்ணுவேன். ஆனா ஒரு ஆக்ஷன் படத்துல இப்படி சென்ட்டிமெண்ட் என்னால பண்ண முடியாது.''
எப்பொழுதுமே வெற்றியை பெரிதாகப் பேசாத வெற்றியாளர் அவர்.
அவர் கதை வசனத்தில் "கோபுரங்கள் சாய்வ தில்லை' படம் மூலம் இயக்குநர் மணிவண்ணன் அவர்களை வெற்றிபெற வைத்தவர். அவரது கதை வசனத்தில் "பிள்ளை நிலா' படம் மூலம் இயக்குநர் மனோபாலா அவர்களை வெற்றிபெற வைத்தவர். இருவருமே திரையுலகில் பல படங்கள் டைரக்ட் செய்து கொடிகட்டிப் பறந்தார்கள். அவர்களை வெற்றிப்பட இயக்குநர்களாக்கிய கலைமணி சொன்னார். "லியாகத் சார் என்னோட "எவரெஸ்ட் பிலிம்ஸ்'ல நீங்க டைரக்ட் பண்றீங்க. நான் கதை, வசனம் இல்ல,… நீங்களே எழுதுங்க. நாளைக் காலையில என்னோட ஆபீசுக்கு வந்து அட்வான்ஸ் வாங்கிக்குங்க.
எவ்வளவு பெரிய விஷயம்… என்னையே எழுதிக்கொள்ளுங்கள் என்கிறார்.
அங்கிருந்து நேராக ராஜாபாதர் தெரு போனேன். ரிலீசுக்கு முன்பாகவே "பூந்தோட்டக் காவல்காரன்' படத்திற்கு நல்ல ரிசல்ட் வந்ததால், விஜயகாந்த்தும், இப்ராகிம் ராவுத்தரும் ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தார்கள். தன்னுடைய இரும் புக் கரத்தால் என்னை இழுத்து அணைத்துக் கொண்டார் விஜயகாந்த். கதை இப்ராகிம் ராவுத்தர் என்ற டைட்டிலோடு வந்திருப்பதால் அவர் டபுள் சந்தோஷத்தில் இருந்தார்.
நான் கலைமணி சாரை சந்தித்ததையும், அவர் என்னிடம் சொன்னதையும் சொன்னேன்.
"அதெல்லாம் வேண்டாம்ணே… நீங்க நம்ம கம்பெனியிலதான் முதல்ல டைரக்ட் பண்ணணும்'' என்றார் இப்ராகிம் ராவுத்தர்.
"உங்கள ரைட்டர் ஆக்குனேன். நான்தான் டைரக்டராவும் ஆக்குவேன்'' என்றார் விஜயகாந்த். "பூந்தோட்டக் காவல்காரன்' படம் வெளியானது. பிரமாண்ட வெற்றிபெற்றது. வெள்ளி விழா படமானது.
மதுரையில் பெண்களுக்கென்று தனி ஷோக்கள் போடுமளவுக்கு பெண்கள் கூட்டம் வந்தது. படம் வெளியாகி வெற்றி பெற்றதும் மேலும் சில தயாரிப்பாளர்கள் என்னை இயக்குநராக்குவதற்கு வந்தார் கள். நான் விஜயகாந்த், இப் ராகிம் ராவுத்தர் இருவரிடமும் சொன்னேன். அவர்கள் மீண்டும் சொன்ன பதில் "உங்கள நாங்கதான் டைரக்டராக்குவோம்.'
கலைஞர் படம் பார்த்துவிட்டு பல காட்சிகளைப் பாராட்டினார். பல வசனங்களைப் பாராட்டினார். ஒன்றிரண்டை நினைவு கூர்ந்தால்தான் எனக்கு திருப்தியாக இருக்கும்.
படத்திலே விஜயகாந்த் ஒரு அனாதை. பிளாஷ் பேக்கில் சிறுவனாக இருக்கும்போது "பசிக்கு சோறு தரு கிறேன்' என்று சொன்ன ஒருவன், "நான் சொன்ன இடத் தில் கொடுத்து விட்டு வா' என்று சாராய பாக்கெட்டுகளை கொடுத்து அனுப்புவான். அதில் இருப்பது சாராயம் என்பது தெரியாமல் சிறு வயது விஜயகாந்த் கொண்டுபோவார். வழியிலே போலீஸ் கான்ஸ்டபிள் மடக்கி, சாராயம் கடத்தியதாக சிறுவனை லாக்கப்பில் அடைத்து லத்தியால் அடிப்பான். அப்பொழுது பிளாஷ்பேக் கட் ஆகி பெரிய விஜயகாந்த் பேசுவார்.
"நான் பசியால துடிச்சேன். அந்தப் போலீஸ்காரன் என்னை அடிச்சான். பூட்ஸ் காலால உதைச்சான். நான் கத்துனேன், கதறி அழுதேன். அப்பவும் அவன் என்னை அடிக்கிறத நிறுத்தல. என் அழுகை என்ன தேசியகீதமா. அதைக் கேட்டதும் அவன் அடிக்கிறத நிறுத்தறதுக்கு?'' என்பார். கலைஞர் வாயால் அந்தக் கரகரக் குரலில் அந்த வசனத்தைக் கூறியபொழுது... பாராட்டிய பொழுது அந்த நிமிடங்களை இப் பொழுதும் நினைத்துப் பார்க்கிறேன்.
இன்னொரு வசனத்தை குறிப்பிட்டுச் சொன்னார்.
படத்தில் இப்பொழுது விஜயகாந்த் பெரிய சாராய வியாபாரி.
சின்ன வயதில் அடி வாங்கியதைக் குறிப்பிட்டுச் சொல்வார். "நான் தெரியாம தப்புச் செஞ்சபோது லத்தியால அடிச்ச போலீஸ்காரன், இப்போ தெரிஞ்சே தப்பு பண்றப்ப சல்யூட் அடிக்கிறான்'' இப்படி பல வசனங்களை குறிப்பிட்டுச் சொன்னார்.
அந்தப் படத்திலேயே விஜய காந்த்துக்கான அரசியல் வசனங்களை ஆரம்பித்துவிட்டேன்.
படத்துல லிவிங்ஸ்டன் வில்லன். அவனுடைய ஆதரவாளர் எஸ்.எஸ்.சந்தி ரன் ஒரு எம்.எல்.ஏ. இருவரும் அமர்ந் திருப்பார்கள். எதிரே எம்.என்.நம்பியார் போலீஸ் அதிகாரியாக நின்றுகொண்டி ருப்பார். ஹீரோ விஜயகாந்த்துக்கு சப்போர்ட் பண்ணிப் பேசுவார்.
எம்.எல்.ஏ. எஸ்.எஸ்.சந்திரன், "ஏய்யா… எங்ககிட்டயே அவனைப் பாராட் டிப் பேசறியா?''… என்று கோபப்பட...
எம்.என்.நம்பியார் சொல்லு வார், "நீங்க அரசியல்ல இருந்து செய்யாத நல்ல காரியங்கள எல்லாம் அவர் அரசியல்ல இல்லாமலே செஞ்சுக்கிட்டிருக்கார்.''
அப்பொழுது முதலே எனது பேனா விஜயகாந்த் அவர்கள் கட்சி ஆரம்பிக்க வேண்டும், முதலமைச்சராக வேண்டும் என்பதற்காகவே எழுத ஆரம்பித்தது. அவர் நடித்த மற்ற படங்களின் வசனகர்த்தாக்கள் அந்தக் காட்சிக்காக எழுதி னார்கள். நான் விஜயகாந்த் அவர்களுக்காகவே எழுதினேன்.
(வளரும்...)
படம் உதவி: ஞானம்