dd

(92) பச்சைக் குதிரையும் பச்சை உண்மையும்!

விஜயகாந்த் தின் பிறந்தநாளுக்காக நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதா னத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்திற்கு "நேரமாச்சு… நீங்க ரெடியாகலியாண்ணே'ன்னு ராவுத்தரிடம் நான் கேட்க...

"எனக்கும் சேர்த்துதாண்ணே நீங்க இருக்கீங்க'' ன்னு ராவுத்தர் சொல்லும்போது விஜயகாந்த்தும் அருகில் இருந்தார்.

Advertisment

"நீங்க பாத்துக்குங்கண்ணே.…விஜி என்ன பேசணும்னு சொல்லுங்க... நீங்களும் பேசுங்க'' என்றவர், சில ஆலோசனைகளையும் சொன்னார்.

நான் சொல்வது மிகையாகக்கூட இருக்கலாம். அப்பொழுது விஜயகாந்த் மனசுக்குள்ள இப்ராகிம் ராவுத்தரும், லியாகத் அலிகானும் மிகஆழமாக இருந்தார்கள் என்பதுதான் உண்மை.

நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானம் போய் மேடை ஏறினோம். அப்பொழுதே, அதாவது 1988ஆம் ஆண்டே மிகப்பெரிய கூட்டம். ராமுவசந் தன் பேசினார். தொடர்ந்து நான் பேசினேன். விஜயகாந்த்தின் அன்பைப் பெற்றவன் என்பதற்காக எனக்கு பெரிய கைதட்டல் கிடைத்தது.

Advertisment

தொடர்ந்து விஜயகாந்த் பேசினார். ரசிகர்கள் அவரைப் பேசவே விடவில்லை. வாழ்க கோஷம்...… விசில் சத்தம். ஒய்.எம்.சி.ஏ. மைதானமே ஆடிப்போனது. சில நிமிடங்கள்வரை அந்த ஆரவாரம் அடங்கவே இல்லை.

"என் பேச்சைக் கேக்கறதுக்காக நீங்க வரல்லேங்கிறது தெரியுது'' என்றார் விஜயகாந்த், தொண்டர்களைப் பார்த்து.

பிறகு என் பக்கம் திரும்பி, "என்னண்ணே பேசவே விடமாட்டேங்கிறாங்க'' என்றார்.

நான் பல தலைவர்களின் கூட்டங்களில் பார்த்திருக்கிறேன். இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் கூட்டத்தை அமைதிப்படுத்தி, தன்வசப்படுத்தி எப்படியெல்லாம் சமாளித்திருக்கிறார்கள் என்று கவனித்திருக்கிறேன். அப்படி ஒரு யுக்தியை விஜயகாந்த்திடம், அவருக்கு மட்டும் கேட்கும்படி சொன்னேன்.

அவர் ஆரம்பித்தார்...

"என்னைப் பாக்கறதுக்கு மட்டும் தான் வந்திருக்கீங்கன்னு நெனைக்கிறேன்...''

கூட்டத்தில் சலசலப்பு.

"என் பேச்சைக் கேக்கறதுக்காக நீங்க வரலேங்கிறது தெரியுது'' என்றார்.

அவ்வளவுதான்... "பேசுங்க தலைவா... பேசுங்க தலைவா...'' என்ற குரல்கள் ஒலிக்க ஆரம்பித்தது.

"நீங்க அமைதியா இருந்தாத்தானே என்னால பேச முடியும்'' என்று அவர் சொன்னதும் அந்தக் கூட்டம் அமைதியானது. ஒரு மாயாஜால வித்தை போல இருந்தது. பிறகு பேசினார்.… பேச்சுக்கு இடையிடையே விண்ணை முட்டும் கைதட்டல் என்பார்களே,…அப்படி ஆனது அந்த மைதானம். அன்று ஆரம்பித்த "தலைவா... தலைவா...' என்ற கோஷம் ஓயவேயில்லை.

அதற்குப் பிறகு பல பிறந்தநாள் விழாக்கள். இதேபோன்ற கூட்டங்கள்.…அவர் நினைப்பவற்றை அவரது எண்ணங்களை அவரது எதிர்காலத் திட்டங் களை, ரசிகர்களுக்கு சொல்லவேண்டியதை, தமிழக மக்களுக்குத் தெரிவிக்கவேண்டியதை சொல்லு கின்ற உரிமையை எனக்கு கொடுத்திருந்தார்கள் விஜயகாந்த்தும், இப்ராகிம் ராவுத்தரும். அதை என் தலையாய கடமையாக நினைத்துச் செய்தேன்.

aa

ஸ்ரீராமருக்கு பாலம் கட்ட அணில் உதவியது போல என்று ஒருநாள் சொன்னேன். "கொஞ்சம் மாற்றிச் சொல்லுங்கள்' என்றார். அவரே சொல்ல வும் செய்தார். "ஸ்ரீராமருக்கு பாலம் கட்ட அணில் உதவியது, ஆனால் நான் நினைத்ததை எல்லாம் செய்வதற்கு அண்ணன் உதவுகிறார்' என்றார்.… எத்தனைபேர் இருந்தாலும், அத்தனைபேர் முன்னாலேயும் என்னைப் பற்றி இப்படித்தான் சொல்வார்.… எந்தப் பத்திரிகையில் இருந்தாவது கட்டுரை வேண்டும் என்று கேட்டால் அவரே சொல்லிவிடுவார், "லியாகத் அண்ணன்கிட்ட நான் சொன்னேன்னு கேட்டு வாங்கிடுங்க'ன்னு. அந்தப் பத்திரிகையாளர்களுக்கும் தெரியும். நான் விஜய காந்த்தின் மனசாட்சிப்படி செயல்படுபவன் என்று.

இந்தத் தொடர் ஆரம்பிக்கும் பொழுது...

"நான் சொல்வதெல்லாம் உண்மை, உண்மை யைத் தவிர வேறொன்றுமில்லை' என்று உறுதி யளித்துவிட்டுத்தான் ஆரம்பித்தேன். அதை நிரூபிப்பதற்காக ஒரு நிகழ்வைச் சொல்கிறேன்.

நடிகர், இயக்குநர், நான் மதிக்கும் அன்புச் சகோதரர் பார்த்திபன் அவர்களின் மேனேஜர் ஒருநாள் என்னைப் பார்க்க வந்தார். 2005ஆம் ஆண்டின் இறுதியில் என்று நினைக்கிறேன்.

"பார்த்திபன் சார் சொந்தமா எடுக்கிற படத்துல நீங்க நடிக்கணுமாம். கேட்டுட்டு வரச் சொன்னாரு'' என்றார்.

"என்ன கேரக்டர்?'' என்று கேட்டேன்.

"அது தெரியாது. நீங்க சார்கிட்டயே கேட்டுக்குங்க.''

போனில் ஆர்.பார்த்திபன் சாரை தொடர்புகொண்டு பேசினேன்.

"சார் ரொம்ப ஹேப்பி. என்னை நடிக்க கூப்பிட்டதுக்கு என்ன கேரக்டர் சார்?''

"கேரக்டர் என்னன்னு சொன்னாத்தான் நடிப்பீங்களா? ஷூட்டிங் வர்றப்ப சொல்றேன்'' என்றார். நானும் "சரி'' என்று சொல்லிவிட்டேன்.

படத்திற்குப் பெயர் "பச்சைக் குதிரை'.

இரண்டு நாட்கள் கழித்து ஷூட் டிங் நடக்கும் இடத்திற்குப் போனேன். திருவல்லிக் கேணியில் குடி யிருப்பு பகுதிகள் நிறைந்த ஏரியாவில் படப்பிடிப்பு.

அங்கு போனதுமே ஆர்.பார்த்திபன் சாரிடம் கேட்டேன். "இப்பவாவது சொல்லுங்க சார் என்ன கேரக்டர்,… என்ன சீன்'' என்று கேட்டேன்.

"இப்பவும் சொல்ல மாட்டேன். மேக்கப் போட்டுட்டு வாங்க'' என் றார். மேக்கப் போட்டார்கள். பேண்ட், சர்ட் கொடுத்தார் கள். ஒரு வீட்டில் ஷூட்டிங்…. அங்கே பார்த்திபன் இருந் தார். கேமராமேன் லைட் டிங் பண்ணிக்கொண்டி ருந்தார். வீட்டிற்கு வெளியே ஒரு பெயர்ப் பலகை மாட்டியிருந்தது.

"லியாகத் அலிகான் -திரைப்பட வசனகர்த்தா' என்று.

எனக்கு ஆச்சரியம். "என்ன சார்'' என்றேன்.

"நீங்க நீங்களாவே நடிக்கிறீங்க.…படத்திலயும் நீங்க லியாகத் அலிகான் தான்'' என்றார். கேரக்டர் தெரிஞ்சுப் போச்சு.… "என்ன சீன் சார்'' என்றேன்.

"அது நடிக்கும்போது தெரியும்'' என்றார்.

ஏன் இவ்வளவு சஸ்பென்ஸ் வைக்கிறார் என்று புரியவில்லை. நான் எனது அறையில் அமர்ந்து எழுதிக்கொண்டிருப்பேன். எனக்கு பின்னால் சுவரில் பல ஹீரோக்களின் போட் டோக்கள் மாட்டப்பட்டி ருக்கும். இரண்டு, மூணு பேர் உள்ளே வருவார்கள்.

"என்னய்யா கம் பெனியில் இருந்து டயலாக் வாங்கிட்டு வரச் சொன்னாங்களா? பணம் குடுத்து விட்டாங்களா?'' என்று நான் கேட்பேன்.

அவர்கள் பதில் சொல்லா மல் என் வாயைப் பொத்தி என்னை தூக்கிப் போக முயற்சி செய்வார்கள். "ஏய்... யார்றா நீங்க?… என்னை எதுக்குடா தூக்கறீங்க?' என்று கத்துவேன்.

"உன்னைக் கடத்தப்போறோம்,…கத்தாம வா' என்று மிரட்டுவார்கள்...

- "இதுதான் காட்சி...' என்றார் பார்த்திபன் சார். அதேபோல என்னை கடத்தியதுபோல காட்சி எடுத்து முடிக்கப்பட்டது.

"இப்பொழுதாவது சொல்லுங்கள் சார்… எதற்காக நான் நானாகவே நடிக்கிறேன்.''

படத்தின் கதையைச் சொன்னார் பார்த்திபன் சார்.

படத்திலே அவர் ஒரு ரவுடி. அடிதடி, வெட்டுக்குத்து என்று யாருக்கும் அடங்காமல் திரிபவர். பெரிய தலைவ ராக வேண்டும் என்பது அவரது ஆசை. ஒரு மேடையில் பேசக்கூடிய சூழ்நிலை வருகிறது. அவ ருக்கு பேச முடியவில்லை... பேசத் தெரியவில்லை. அவ ரது வலது கை மாதிரி ஒரு கேரக்டர் "பேசத் தெரிஞ்சா தான் பெரிசா வளர முடி யும்… இந்த நாட்ல நல்லாப் பேசத் தெரிஞ்சவங்கதான் தலைவர்களாகியிருக்காங்க' என்பான்.

"எனக்கு பேசத் தெரியலியேடா'' என்பார் பார்த்திபன்.

"கவலைப்படாதே... அத நான் பார்த்துக்கிறேன்'' என்பான் வலது கை.

"இதுதான் சார் சீன்... இப்ப புரியதா கதை'' என்றார்.

"என்னை எதுக்காக கடத்துன மாதிரி எடுத்தீங்க. அது புரியலியே'' என்றேன்.

"இப்ப எடுக்கப் போற சீன்ல புரிஞ்சுக்குவீங்க'' என்று, எடுக்கப்போகும் காட்சியை விபரமாச் சொன்னார். நான் யோசிக்க ஆரம்பித்தேன்.

"சார், என்ன சார் இப்படி ஒரு சீனை சொல்றீங்க தப்பாயிரும் சார்'' என்றேன்.

"முதல்ல சொன்னா நீங்க நடிக்கமாட்டேன்னு சொல்லிவிடுவீங்கன்னுதான் சொல்லல. ஆனா இந்த சீனுக்கு நீங்க தேவை. சும்மா நடிங்க சார்... நான் ஒண்ணும் பொய்யா இந்த சீனை வைக்கலியே,… உண்மையத்தான் வச்சிருக்கேன்.''

பார்த்திபன் சார் சொன்ன சீனில் நடிக்க நான் தயங்கியதற்குக் காரணம்....?

(வளரும்...)