ss

(91) அரசியல் அஸ்தி(வா)ரம்!

புரட்சிக் கலைஞர் விஜய காந்த் "தேசிய முற்போக்கு திராவிட கழகம்' எனும் அரசியல் இயக்கத்தை மதுரை மாநகரில் 2005ஆம் ஆண்டு செப்டம்பர் 14ஆம் தேதி தொடங்கினார்.

அதற்கு ஒரு ஆண்டுக்கு முன்பாக 2004ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி பிறந்தநாளுக்கான அறிக்கையை என்னிடம் தான் எழுதச் சொன்னார். இடையிலே பல வரு டங்கள், பல பிறந்தநாள் விழாக்கள்... அறிக்கைகள் அதையெல்லாம் விட்டு விட்டு...

Advertisment

இதைச் சொல்வதற்குக் காரணம் இருக்கிறது. அறிக்கை யின் சில பகுதிகளை மட்டும் சொல்கிறேன்....

"இன்று எனது பிறந்தநாள்! என் தமிழ் மக்களுக்கு உழைப்பதற்காக தமிழ் மண்ணிலே பிறந்ததை நினைத்து, நினைத்து நான் மகிழும் நாள். ஏழை களுக்கு உதவுகின்ற நாளாக என் ரசிகர் மன்றத்து தம்பிகள் உறுதி எடுத்துக்கொண்ட நாள்.

தமிழர்கள் தரம் பார்க்கத் தெரிந்தவர்கள், நிறம் பார்க்கத் தெரிந்தவர்கள். தலை போனாலும் விலை போகாதவர்கள். நல்லவர்களை மதிப்பவர்கள், தீயவர்களை மிதிப்பவர்கள் என்பது உலகிற்கே தெரியும். அந்தத் தமிழர்கள் தலைநிமிர்ந்து நிற்க வேண்டும் என்ற கொள்கையோடும், முயற்சிகளோடும் என் கலையுலக வாழ்வைக் கடந்து வந்திருக்கிறேன்.

Advertisment

என் முயற்சிக்கெல்லாம் நல்லவர்கள் ஆசி தந்தார்கள். என் ரசிகர் மன்றத்தினர் தோளோடு தோளாக இருந்தார்கள். சில நேரங்களில் அராஜகத்தை அழிக்கின்ற வாளாக இருந்தார்கள். புரட்சி தீபம் ஏந்தி, புதிய அரணாக இருந்தார்கள், ஆணி வேராக இருந்தார்கள். தினம், தினம் அவர்கள் செய்துகொண்டிருக்கும் நற்பணிகளை இந்த நாடு அறியும். எத்தனையோ நலத் திட்டங் கள், உதவிகள் செய்துவந்தாலும் பொதுப் பிரச்சினையில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டி ருந்தாலும் இந்தப் பிறந்தநாளில் அவர்களுக்கு எனது கனிவான வேண்டுகோள்.

இனிமேல்தான் நீங்கள் ஆற்றவேண்டிய பணிகள் ஏராளமாக இருக்கிறது. தமிழர்களின் கல்வித் தரத்தை உயர்த்தி, அவர்கள் வாழ்வில் ஒளியேற்றுவதற்காக ஊர்தோறும், கிராமம்தோறும் இரவுப் பள்ளிக்கூடங்கள் ஆரம்பியுங்கள். ஐந்து மாணவர்கள் என்றாலும் கூட ஆர்வத்தோடு கற்றுக்கொடுங்கள். நமது மன்றத்திலேயே படித்தவர்கள் இருப்பார்கள், அவர்களை பாடம் நடத்தச் சொல்லுங்கள். அப்படி இல்லாத இடத்தில் ஆசிரியர்களை அமர்த்துங்கள். இன்னும் எத்தனை யோ பிரச்சினைகள் இந்தச் சமுதாயத்தில் தீர்க்கப் படாமல் இருக்கின்றன. அதற்காக நீங்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வந்திருக்கிறீர்கள். அந் தக் குரல் ஓங்கி ஒலிக்கவேண்டிய நேரம் வந்திருக் கிறது. இன்றைய சூழ்நிலையில் எத்தனையோ பிரச்சினைகளையும், எதிர்ப்புகளையும் சந்தித்து, அவற்றையெல்லாம் உண்மை, உழைப்பு, நேர்மை, மக்கள் பணி போன்றவற்றால் தவிடுபொடியாக்கி, வெற்றிவாகை சூடி இந்தத் தருணத்தில் எந்தப் பிரச்சினைக்கும் மனம் சோர்வடையாமல் உறுதியுடன் இருந்து மக்கள் பிரச்சினைகளுக்காக, மக்களில் ஒருவராக ஒவ்வொரு ரசிகர் மன்றத் தினரும் போராட வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

நான் கனிவான வேண்டுகோள் என்று சொன் னாலும், அதை கட்டளையாக ஏற்று செயல்படுவீர் கள்... கடமையாக நினைத்துப் பணியாற்றுவீர்கள் என்று எனக்குத் தெரியும். அதற்கான பணிகள் இந்தப் பிறந்தநாளில் தீவிரமாகட்டும்...''

-இப்படிப் போகும் அந்த அறிக்கை. 2004-ல் ஆகஸ்ட் மாதம் வந்த அறிக்கை. இதைக் கவனித் தால் தெரியும். விரைவில் கட்சி தொடங்கப் போகிறேன் என்பதை சூசகமாகச் சொல்லியிருக்கும் அறிக்கை.

விஜயகாந்த் எனக்கு அன்புக் கட்டளையிட்டு அவரது ரசிகர்களுக்கு அன்புக்கட்டளையாக நான் எழுதி வெளிவந்த அறிக்கை...!

ஒரு பிரபலமான நாளிதழ் நடத்தும் யூடியூப் சேனலில் என்னிடம் எதுவும் கேட்காமல் அவர்களாகவே என்னைப் பற்றிய விவரங்களையும், விஜயகாந்த் அவர்களுடன் எனக்கிருந்த நட்பையும், நெருக்கத்தையும் சொல்லியிருந்தார்கள். அதில் அவர்கள் கொடுத்திருந்த தலைப்பு "புரட்சிக் கலைஞரின் இதய தளபதி லியாகத்அலிகான்'.

அவர்கள் குறிப்பிட்டபடி 2004 வரைக்கும் இருந்த நான், 2005-ல் அவர் கட்சி தொடங்கும் போது அவருடன் இல்லை. அதற்குக் காரணம் என்ன என்பதை நான் சொல்லவேண்டும்.

அதைச் சொல்வதற்கு முன் அவரது பிறந்தநாளைக் கொண்டாட முடிவு செய்தோமே... அது எப்படி நடந்தது என்பதைச் சொல்கிறேன்.

தமிழ்நாடு முழுவதும் விஜயகாந்த்தின் பிறந்தநாள் போஸ்டர்கள் ஒட்டப்பட்டது. ராஜா பாதர் தெரு அலுவலகம் அலங்கரிக்கப்பட்டது. கார்களிலும், வேன்களிலும், பஸ்களிலும் தமிழ்நாடு முழுவதிலுமிருந்து ரசிகர்கள் வந்து குழுமிவிட் டார்கள். ராஜாபாதர் தெரு முழுவதும் ரசிகர் வெள் ளம். அந்தப் பகுதியையும் தாண்டி ரசிகர் கூட்டம். பாண்டிபஜாரை ஒட்டிய தெரு என்பதால் பாண்டி பஜாரிலும் திருவிழா போன்ற ஒரு தோற்றம்.

என்ன காரணம்,… எதற்காக இந்தக் கூட்டம் என்று தெரிந்தவர்கள் பிரமித்துப் போனார்கள். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு சிறப்புண்டு. கரகாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை, தவில், நாதஸ்வரம், வாடிப்பட்டி கொட்டு, மேளம் என ஒவ்வொரு மாவட்டத்தைச் சேர்ந்த ரசிகர் மன்றத்தினரும் வாசித்தபடி, ஆடியபடி அமர்க்கள மாக வந்த காட்சிகள் இன்றும் கண்ணுக்குள்ளேயே இருக்கிறது.

aa

இந்த ஆரவாரங்கள் தொடங்குவதற்கு முன்பே அதி காலையில் எழுந்து, குளித்து விட்டு புத்தாடை அணிந்து கோவிலுக்குப் போய் சாமி கும்பிட்டுவிட்டு வந்தார் விஜய காந்த். உடன் நானும் போயிருந் தேன். கோவிலுக்கு போய்விட்டு திரும்பி ராஜாபாதர் தெரு வரும்போதே காரில் அவர் இருப்பதைத் தெரிந்து கொண்ட ரசிகர்களின் உற்சாகம் இருக்கிறதே...… "கரை புரண்டு ஓடும் வெள்ளம் போல' என்று சொல்வார்களே… அப்படி ஒரு மகிழ்ச்சி...… வாழ்த்துக் கோஷம்... வெறித்தன மான அன்பு...… வேகத்தடை இல்லாத பாசம் எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம். அலுவலகத்தில் உள்ளவர்கள் மிகப்பெரிய மாலையை இப்ராகிம் ராவுத்தரின் கையில் கொடுத்தார்கள்.… ஒருபுறம் அவர் பிடித்துக் கொண்டு மறுபுறம் என்னைப் பிடிக்கச் சொன்னார்.… முதல் மாலையை நாங்கள் இருவரும் விஜயகாந்த்துக்கு அணிவித்தோம்.

"அண்ணே,… விஜியை விட்டு நகரவே கூடாது'' என்று எனக்கு கட்டளை யிட்டுவிட்டு இப்ராகிம் ராவுத்தர் உள்ளே போய் விட்டார். அதற்குப் பிறகு ரசிகர் மன்றத்தைச் சேர்ந்தவர்கள் வரிசையாக வந்து மாலை, சால்வை, மலர்க்கிரீடமெல்லாம் அணிவித்து மகிழ்ந்தார்கள். விஜயகாந்த்தின் முகத்தைப் பார்த்ததும் ரசிகர்களின் முகத்தில் ஆயிரம் வால்ட் பல்பு எரிந்தது போல அப்படியொரு பிரகாசம் தெரிந்தது. ஏராளமான பெண்களும் வந்திருந்தார்கள். அவர்கள் வீட்டுப் பிள் ளைக்கு பிறந்தநாள்போல ஒரு பெருமிதம் அவர்களின் முகங்களில்.… பார்க்கப் பார்க்க ஆனந்தமாயிருந்தது. வாழ்த்து கோஷம் அந்தப் பகுதியையே கிடுகிடுக்க வைத்துக் கொண்டிருந்தது. திரையுலகைச் சேர்ந்த பலர் நேரில் வந்து வாழ்த்துச் சொன்னார்கள். காலை பதினோரு மணியைத் தாண்டியும் கூட்டமும் குறையவில்லை. ரசிகர்களின் வருகையும் வரிசையும் நீண்டு கொண்டே யிருந்தது.

அதற்கு மேல் ஜெமினி மேம்பாலம் அருகே இருக்கும் லிட்டில் பிளவர் கான் வென்டுக்குப் போனோம். கண் பார்வையற் றோர், காது கேளாதோர் குழந்தைகள் பள்ளி அது. அந்தக் குழந்தைகளுக்கு பிரியாணி வழங்கினார் விஜயகாந்த். அவரே பரிமாறி னார். அந்தப் பள்ளிக்காக நன்கொடை வழங்கினார். விஜயகாந்த்தை வாழ்த்தி அங்குள்ள குழந்தைகள் பாடினார்கள். கலங்காத கண்கள் கூட கலங்கிவிடும். அங்கிருந்து ராமா வரம் எம்.ஜி.ஆர். தோட்டத்துக்குப் போனோம். லிட்டில் பிளவர் கான்வென்ட்டைப் போலவே அங்கும் ஒரு பள்ளி இருந்தது. எம்.ஜி.ஆர். அவர்களின் உறவினர் லதா ராஜேந் திரன் அவர்களும், அவருடன் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு வேண்டியவர்களும் அதை நடத்திக் கொண்டிருந்தார்கள். அங்குள்ள குழந்தைகளுக்கும் விஜயகாந்த் பிரியாணி பரிமாறினார். அந்தப் பள்ளிக்கும் நன்கொடை கொடுத்தார். அன்று பிற்பகல் நாலுமணிக்கு பல ஊர்களில் இருந்து வந்த ரசிகர்களை சந்திக்க, அவர்கள் மத்தியில் விஜயகாந்த் பேச நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்திருந்தோம். அந்தக் கூட்டத்திற்கு ரூமிலிருந்து கிளம்பும்போது இப்ராகிம் ராவுத்தர் ரெடியாகாமல் இருந்தார்.

"அண்ணே… நேரமாச்சு… ரெடியாகலியா'' என்று கேட்டேன்.

அவர் சொன்னார்.

(வளரும்...)

bb