(89) விஜயகாந்த் என்கிற தங்கக்கூண்டு...!
சுதந்திரப் பறவையாக இருக்கவேண்டும். பல இடங்களுக்கு பறந்து கொண்டேயிருக்க வேண்டும். நான் அதைச் செய்யாமல் விஜயகாந்த் என்ற கூண்டுக்குள் அடைபட்டுப் போனேன். நான் அடைபட்டது தங்கக் கூண்டாக இருந்தாலும் அதுவும் கூண்டுதான். "சூப்பர் ஸ்டார்' ரஜினி, "சுப்ரீம் ஸ்டார்' சரத்குமார் என்று மேலும்... மேலும் பல இடங்களுக்கு பறக்கவேண்டிய நான் விஜயகாந்த் என்ற கூண்டுக்குள் அடைபட்டுப் போனேன்.
இந்த நாட்டில் பலபேர் பிழைக்கத் தெரி யாதவன் என்ற பெயரோடு அலைந்து கொண்டி ருக்கிறார்கள். அதில் நானும் ஒருவன். நேர்மைக்கும் விசுவாசத்திற்கும் அந்தப் பெயர்தான் கிடைக்கும் என்றால் அது இருந்துவிட்டுப் போகட்டும்.
"அரவிந்தன்' படத்திற்கு வருவோம். "அம்மா சினி கிரியேஷன்ஸ்' டி.சிவா அப்பொழுதே பெரிய பட்ஜெட்டில் எடுத்த படம். நிறைய நடிகர், நடிகை கள். எப்பொழுதுமே எனக்கு ஒரு குணமுண்டு. நான் எழுதுகின்ற படங்களில் அதிக அக்கறை செலுத்துவேன். கேட்பதை எழுதிக் கொடுத்துட்டுப் போய்விடலாம் என்று நினைக்கமாட்டேன்.
அந்தப் படம் வெற்றி பெற்றால்தான் எனக் கும் புகழ் கிடைக்கும் என்ற சுயநலமும் ஒரு கார ணம். ஸ்கிரிப்ட் நன்றாக வரவேண்டும் என்பதற்காக அந்தப் படத்தின் இயக்குநருடன் நிறைய வாக்கு வாதம் செய்வேன். சில நேரங்களில் சண்டை கூடப் போடுவேன். மிகவும் பிடிவாதமாக இருப்பேன்.
நான் நிறைய புது இயக்குநர்களுக்கு அவர் களின் முதல் படத்திற்கு எழுதியிருக்கிறேன். அதை சிலரிடம் சகோதரர் ஆர்.கே. செல்வமணி சொல்லியிருக்கிறார். "லியாகத் ஸ்கிரிப்ட் விஷயத்தில உங்க கூட சண்டை கூட போடுவாரு, கோபப்படுவாரு, திட்டுவாரு... ஆனா அதெல்லாம் உங்களோட நல்லதுக்காகத்தான்' -இப்படி அவர் சொன்னதாக சில இயக்குநர்கள் என்னிடம் சொல்லியிருக்கிறார்கள்.
"அரவிந்தன்' பட விஷயத்தில், அதுவும் ஒரு விஷயத்தில் நான் பிடிவாதமாக இல்லையோ, அழுத்தம் கொடுக்கவில்லையோ என்று தோன்று கிறது. இயக்குநர் நாகராஜ் என்னிடம் கதை சொல்லும்போது "செகண்ட் ஆஃப்பில் வர்ற கதைய ஃபர்ஸ்ட் ஆஃப்ல பிளாஷ்பேக்ல சொல்லலாம். பர்ஸ்ட் ஆஃப் கதைய செகண்ட் ஆஃப்ல வச்சுக்கலாம்'' என்று சொன்னேன்.
"இல்ல சார், நான் சொன்ன மாதிரியே இருக்கட்டும்... அதுதான் சரியா இருக்கும்'' என்று கூறிவிட்டார்.
நானும் அதில் அதிக அழுத்தம் கொடுக்கா மல் விட்டுவிட்டேன். படத்தின் ஷூட்டிங், டப்பிங் வேலைகள் முடிந்து, ரீ-ரிகார்டிங் முடிந்து டபுள் பாசிட்டிவ் பார்க்கும் பொழுதும் எனக்குத் தோன்றியது. "செகண்ட் ஆப் கதை பர்ஸ்ட் ஆஃப் ஆகவும், பர்ஸ்ட் ஆஃப் கதை செகண்ட் ஆப் ஆகவும் இருந்தால் நன்றாக இருக்கும்' என்று. அப்பொழுதும் இயக்குநர் நாகராஜிடம் என் கருத்தைச் சொன்னேன்.
"இல்ல சார், இப்படி இருந்தாதான் நல்லா இருக்கும். ரொம்ப காலமா என் மனசுல ஊறிப்போன கதை இது'' என்று சொன்னார்.
"ஒரு இயக்குநரின் கற்பனை, அது அவரது உரிமை' என்று விட்டு விட்டேன். வழக்கமாக அப்படி இருக்கமாட்டேன்.
என் பிடிவாதம் எங்கு போனது என்று தெரியவில்லை. தயாரிப்பாளர் டி.சிவாவிடம் கூட இதைப் பற்றி நான் பெரிதாக எடுத்துச் செல்ல வில்லை. ஆனால் என் மனம் மட்டும் சொல்லிக் கொண்டேயிருந்தது.
அரவிந்தன் படம் ரிலீசானது. எடுக்கப்பட்ட படம் அப்படியே ரிலீஸ் ஆனது. நல்ல வரவேற் பையும் பெற்றது. சில நாட்களுக்குப் பிறகு ஒரு செய்தி கேள்விப்பட்டேன்.
கேரளாவில் ரிலீசான தியேட்டர்களில், கேரளாவிற்கு படத்தை வாங்கிய விநியோகஸ் தரும், தியேட்டர் உரிமையாளர்களும் "செகண்ட் ஆப்-ஐ பர்ஸ்ட் ஆப் ஆகவும், பர்ஸ்ட் ஆப்-ஐ செகண்ட் ஆப் ஆகவும் மாற்றித் திரை யிட்டார்கள்' என்று.
அதாவது, இடைவேளைக்கு பின்பு வந்த படத்தை முதல் பாதியாகவும், முதல் பாதி படத்தை இடைவேளைக்குப் பிறகும் அவர்களே தியேட்டர் ஆபரேட் டரை வைத்து மாற்றிக் கொண்டார்கள். அப்பொ ழுது பிலிம் ரோல்கள் என்பதால் அவர்களாகவே மாற்றிக்கொள்வது ஈஸியாக இருந்தது."அரவிந்தன்' படத்திற்கு கேரளாவிலிருந்து வந்த ரிசல்ட் தமிழ்நாட்டு ரிசல்ட்டைவிட நன்றாக இருந்தது.
சில மாதங்கள் கழித்து சன் தொலைக்காட்சியில் அரவிந்தன் திரைப்படம் ஒளிபரப்பப்பட்டது. கேரளாவில் எப்படி மாற்றி அமைத் திருந்தார்களோ அதன்படி ஒளிபரப் பப்பட்டது.
அன்று எனக்கு நிறைய போன் கால்கள் வந்தன.
"அரவிந்தன் சூப்பரா இருக்கு.... அரவிந்தன் ரொம்ப நல்லா இருக்கு.
அந்த போன்கால்களைக் கேட்ட எனக்கு ஒரு மகிழ்ச்சி. ஆரம்பத்தில் "அரவிந்தன்' கதையைக் கேட்டபோதும், ரிலீசுக்கு முன்பு டபுள் பாஸிடிவ் பார்த்த போதும் எனக்கு என்ன தோன்றியதோ, அதுதான் சரியாக இருந்திருக்கிறது. "அரவிந்தன்' படம்போல இன்னொரு படத்திலும் இப்படி நடந்திருக்கிறது. எனது சகோதரரும், நண்பருமான வெள்ளிவிழா இயக்குநர் ஆர்.சுந்தர்ராஜன் அவர்கள் எழுதி இயக்கிய ஏவி.எம். தயாரித்த படம் "மெல்லத் திறந்தது கதவு.' அன்றைய முன்னணி நட்சத்திரங்கள் மோகன், ராதா, அமலா ஆகியோர் நடித்திருப்பார்கள். இந்தப் படத்தின் சிறப்பு மெல் லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன் அவர்களும் இசைஞானி இளையராஜா அவர்களும் இணைந்து இசை அமைத்திருந் தார்கள். எல்லாப் பாடல்களுமே சூப்பராக இருக்கும்.
படம் ரிலீசானதும் மக்கள் கருத்தும், தியேட்டர் உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் கருத்தும் படத்தின் செகண்ட் ஆஃப் முதலிலும், பர்ஸ்ட் ஆப் இடைவேளைக்குப் பிறகும் இருந்தால் நன்றாக இருக்கும் என்பதை ஏ.வி.எம். சரவணன் சார் தெரிந்துகொண்டார். உடனே தமிழ்நாடு முழுவதும் உள்ள தியேட்டர்களில் ஏ.வி.எம். மூலமாகவே அந்த மாற்றம் செய்யப்பட்டது. படமும் பெரிய வெற்றி பெற்றது.
எதைச் சொல்ல வேண்டும் என்பதும் முக்கியம். அதை எப்படிச் சொல்ல வேண்டும் என்பது அதை விட முக்கியம் என்பதற்காகத்தான் இதைச் சொன்னேன். அந்த ஞானத்தை இறைவன் எனக்குக் கொடுத்திருக்கிறான். அது மற்றவர்களுக்கு பயன்பட்டிருக்கிறது. என் வாழ்க்கைக்கு நான் பயன்படுத்த ஏனோ தவறிவிட்டேன்.
நான் வசனம் எழுதி ராம்கி, விஜயசாந்தி நடித்த "தடயம்' படத்தில் ஒரு கோர்ட் சீன்.
ராம்கி குற்றம்சாட்டப்பட்டு குற்றவாளிக் கூண்டிலே நிற்பார். அவரை விசாரிப்பதற்கு முன் அவரிடம் சத்தியம் வாங்குவதற்காக அவர் முன்னே பகவத்கீதை நீட்டப்படும்.
"சொல்லுங்க. நான் சொல்வதெல்லாம் உண்மை. உண்மையைத் தவிர வேறொன்றுமில்லை'' என்று கேட்பார்கள்.
ராம்கி அதைத் திருப்பிச் சொல்லாமல் நீதிபதியைப் பார்த்து கேட்பதுபோல வசனம் எழுதியிருந்தேன்.
ராம்கி, "யுவர் ஆனர். நான் சொல்வதெல்லாம் உண்மை. உண்மையைத் தவிர வேறொன்றுமில்லைன்னு சத்தியம் பண்ணிட்டு நான் எதைச் சொன்னாலும் ஏத்துக்குவீங்களா? ஒரு கொலைகாரனை, அவன் கொலையே பண்ணலேன்னு சொன்னா விடுதலை பண்ணிருவீங்களா? ஒரு நல்லவனை கெட்டவன்னு சொன்னா அவனுக்கு தண்டனை கொடுப்பீங் களா? நான் பொய் சொன்னாலும் அத உண்மையா ஏத்துக்கு வீங்களா? நான் சொன்னதை நம்பி தீர்ப்பு சொல்லுவீங்களா?''
நீதிபதி, "அதெப்படி விசாரணை பண்ணாம தீர்ப்பு சொல்ல முடியும்?''
"அப்புறம் எதுக்கு யுவர் ஆனர் தேவையில்லாம சத்தியம் வாங்கி, கோர்ட் நேரத்தை வேஸ்ட் பண்றீங்க?'' என்று ராம்கி கேட்க... நீதிபதி திகைத்துப் போவார்.
அந்தப் படத்தைப் பார்த்துவிட்டு ஒரு பெரிய வழக்கறிஞர் என்னைப் பாராட்டினார்.
"லியாகத் அலிகான் சார். சரியான கேள்வி கேட்டீங்க. எப்படி சார் உங்களுக்கு இப்படியெல்லாம் புதுசா கேக்கத் தோணுது'' என்றார்.
(வளரும்...)