alikhan

(88) புயல் போன போக்கில்...!

""உங்களை அறிவாளின்னு நெனச்சேன், முட்டாளா இருந்திருக்கீங்களே...''ன்னு சொன்னார் "அரவிந்தன்' படத்தின் தயாரிப் பாளர் ஜோதிபிரசாத்.

""ராணி மகாராணி படம் தயாரிச்சத வெளியிட முடியாம தவிச்சீங்கள்ல...''

Advertisment

""ஆமா''

""அப்போ கை கொடுத்து காப்பாத்துனவரு சரத்குமார் சார்தானே?

""ஆமா''

Advertisment

""அதுக்கப்புறம் "அரவிந்தன்' படத்துக்கு வசனம் எழுத வாய்ப்பு வாங்கிக் கொடுத்தவரும் அவர்தானே?''

""ஆமா''

""அவர்கிட்ட ஒரு கதை சொன்னீங்களா?''

""அவரு ஹீரோவா நடிக்கணும்கிறதுக் காகச் சொன்னேன். அதுவும் இடைவேளை வரைக்கும்தான் சொன்னேன். செகண்ட் ஆஃப் கதைய இன்னும் அவரு கேக்கல.''

""அவரு கேக்கமாட்டாரு'' என்றார் ஜோதிபிரசாத்.

""ஏன்?'' என்றேன் நான்.

""எப்படிக் கேப்பாரு. உங்க படத்தை ரிலீஸ்பண்ண வச்சு, உங்களுக்கு வசனம் எழுத படமும் வாங்கிக் கொடுத்து உங்களை மறுபடியும் டைரக்ட் பண்ண வைக்கணும், உங்கள பெரிய ஆளா ஆக்கணும்னு ஒரு கம்பெனியில பேசி கரெக்ட் பண்ணி வச்சிருந்தாரு. அதை நீங்க காலி பண்ணிட் டீங்களே லியாகத்அலிகான்'' என்றார்.

""என்ன சார் சொல்றீங்க?''

""ஆமா சார், நீங்க மறுபடியும் ராவுத்தர் பிலிம்ஸ் படம் எழுதப் போயிட்டீங்களாமே? உங்கள நம்பி எப்படி டைரக்ஷன் பண்றதுக்கு சான்ஸ் வாங்கிக் கொடுப்பாங்க. விஜயகாந்த் கூப்பிட்டாருன்னு விட்டுட்டுப் போயிரு வீங்களே...'' என்றார்.

அப்பொழுதுதான் எனக்கு எல்லாம் புரிந்தது. நான் எடுத்த முடிவு என்னுடைய வளர்ச்சியை எப்படி பாதித்தது என்று.

ஜோதிபிரசாத், சரத்குமாருடன் நல்ல பழக்கம் என்று என்னிடம் சொல்லியிருக்கிறார். அதனால்தான் இந்த விஷயம் அவருக்குத் தெரிந்திருக்கிறது. சரத்குமாரோ, அவருக்கு நெருக்கமான யாரோ அவருக்குச் சொல்லியிருக்கிறார்கள்.

""யார் காரணம்கிறதப் பத்தி நான் பேசல. சரத்குமார் உங்கமேல வச்ச அன்பை பயன்படுத்திக்காம விட்டுட்டீங்களே'' என்றார் ஜோதிபிரசாத்.

""இல்ல சார் விஜயகாந்த்...'' என்று நான் சொல்ல ஆரம்பிக்கும்போதே தடுத்துவிட்டார்.

""சும்மா அதையே சொல்லாதீங்க சார். கடவுளை கையெடுத்துக் கும்பிடலாம், கடவுள் சொல்லுச்சேன்னு கண்ணை மூடிட்டு கிணத்துல விழுவீங்களா?''

என்னால் பதில் சொல்ல முடியவில்லை.

alikhan

""மகாபாரதம் படிச்சிருக்கீங்களா?'' என்றார்.

""என்ன இப்படி கேக்குறீங்க?'' என்றேன்.

""ஒரு உதாரணத்துக்குச் சொல்றேன். கர்ணன் எப்படி வீழ்ந்தான்கிறத யோசிச்சுப் பாருங்க'' என்றார்.

""கடவுள் கிருஷ்ண பரமாத்மாவால்தான் வீழ்ந்தான். ஆனா கிருஷ்ண பரமாத்மா நல்லது நடக்கணும்னுதானே தர்மத்தின் பலனை கர்ணனிடம் கேட்டாரு'' என்றேன்.

""கிருஷ்ண பரமாத்மா நல்லதுக்காகத்தானே பண்ணாரு... ஆனா கர்ணனோட வாழ்க்கை போயிருச்சே'' என்றார் ஜோதிபிரசாத்.

""என்ன சார்... இந்த விஷயத்துக்குப் போய் மகாபாரதத்தை உதாரணம் சொல்றீங்க'' என்றேன்.

""எனக்கு என்ன தோணுதோ அதைத்தான சொல்ல முடியும்.''

""சரத்குமார், உங்க மேல வச்சிருந்த நம்பிக்கையை காப்பாத்தியிருந்தா, நீங்க நல்லா இருந்திருப்பீங்க. உங்க வசனத்துக்கு நான் ரசிகன். அந்த அக்கறையில சொல்றேன். நம்ம முன்னேற்றத்த தடுக்கிறதுக்கு சில நேரங்கள்ல அன்பு தடையா வரும். சில நேரங்கள்ல பாசம் தடையா வரும். பல ரூபத்துல வரும். நாமதான் யோசிச்சு செயல்படணும்'' என்றார்.

யோசிக்காமல் விட்டுவிட்டேன் என்பதை அவர் சொன்ன பிறகுதான் நான் யோசிச்சுப் பார்த்தேன். வாழ்க்கையின் தத்துவங்களை, அதன் சூட்சுமங்களை நாம் உணர்ந்துகொள்ள மகாபாரதத்தில் பல சம்பவங்கள் இருக்கிறது, பல கதாபாத்திரங்கள் இருக்கிறது. நான் மகாபாரதம் படித்திருக்கிறேன்... வாழ்க்கையை படிக்காமல் விட்டுவிட்டேன்.

வாழ்க்கை என்று சொன்னதும் "பூம்புகார்' படத்தில் கலைஞர் எழுதி கே.பி.சுந்தராம்பாள் பாடிய பாடல் ஒன்று நினைவுக்கு வருகிறது. அந்தப் பாடல் வரிகளை ஒருமுறை இல்ல... இரண்டு, மூன்று முறைகூட படித்துப் பாருங்கள். சில வரிகளிலேயே நம் வாழ்க்கை சிதறிப் போய் விடுவதற்கு என்ன காரணம் என்பதை சொல்லியிருப்பது போலத் தோன்றும். எப்படி வாழ்ந்தால் நம்மை காப்பாற்றிக் கொள்ளலாம் என்பதும் தோன்றும்.

நீங்கள் பல ஆண்டுகளாக பலமுறை கேட்ட பாடலைத்தான் இங்கே வாசகர் களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

வாழ்க்கை எனும் ஓடம்

வழங்குகின்ற பாடம்

என அந்தப் பாடல் தொடங்கும் அந்தப் பாடலின் இரண்டாவது சரணம், என்னைப் போன்றவர்களுக்கு மிகப் பொருத்தமாக இருக்கும். அது மட்டுமின்றி ஆளுகின்ற அரசுக்கும் பொருந்து கின்ற வரிகள்.

ஒருமுறை அல்ல, என் வாழ்க்கையில் பலமுறை புயல் வந்தபோது அது புயலாக மாறும் என்று தெரிந்தும்கூட அதைத் தடுக்காமல் அந்தப் புயலில் நான் பாதிக்கப்பட்டுவிட்டேன். ஒருவனுக்கு நல்லது, கெட்டதை எடுத்துச் சொல்பவர்கள் அமைய வேண்டும். அது உறவினர்களாகவும் இருக்கலாம், நண்பர்களாகவும் இருக்கலாம். அப்படி அமைந்து அவர்கள் சொல்லியிருந்தால் சிந்தித்துச் செயல்பட்டிருக்கலாம். நாம் எடுக்கின்ற முடிவு எப்படியெல்லாம் மாறும் என்பதை ஆராய்ந்து பார்த்திருக்கலாம். அந்த நேரத்தில் அப்படி ஒருவர் எனக்கு அமையவில்லை. தங்கமாக இருந்தாலும், அது தனக்குத்தானே பட்டை தீட்டிக் கொள்ள முடியாது. யாராவது ஒருவரால் பட்டை தீட்டப்பட வேண்டும். அப்பொழுதுதான் தங்கம் ஜொலிக்கும்.

அதைத்தான் கலைஞர் அவரது பாணியில் எழுதியிருந்தார்.

துடுப்புகள் இல்லா படகு

அலைகள் அழைக்கின்ற திசையெல்லாம் போகும்

தீமையை தடுப்பவர் இல்லா வாழ்வும்

அந்தப் படகின் நிலைபோல ஆகும்....

எவ்வளவு பெரிய உண்மை.

நானும் படகு போல ஆகிப்போனேன். நான் மட்டுமல்ல... நாட்டில் என்னைப் போல பலநூறு படகுகள் இருந்து கொண்டிருக்கும்.

இதைத்தான் திருவள்ளுவர்

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்

கெடுப்பார் இலானும் கெடும்

என்று சொல்லியிருக்கிறார்.

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பும், பல நூறு ஆண்டுகளுக்கு முன்பும் வாழ்க்கையில் நாம் தோற்று விடாமல் இருப்பதற்காக நம் முன்னோர் கள் பலவிதமாக அறிவுரை வழங்கியிருக்கிறார்கள். நாம்தான் அதை பின்பற்றுவதில்லை. சினிமாவில் செய்யக்கூடாத ஒன்று ஒரே காம்பவுண்டில் அடைபட்டு விடக்கூடாது. இவர் இன்னாருடைய ஆள் என்று முத்திரை குத்தப்பட்டு விட்டால் நமது வாழ்க்கை அந்த காம்பவுண்டுக்குள்ளேயே சுருங்கிவிடும்.

(வளரும்...)