(87) Cheque கொடுத்து check வைத்தார்கள்!
"நான் ஷூட் டிங் முடிந்து வரும்போது நீங்கள் ராவுத்தர் பிலிம்ஸ் அலுவலகத்தில் இருக்க வேண்டும்'' என்று விஜயகாந்த் எனக்கு அன்புக் கட்டளை யிட்டதால், ராவுத்தர் பிலிம்ஸ் அலுவலகத் திற்குப் போனேன்.
இப்ராகிம் ராவுத் தரைப் பொறுத்தவரை காலையில் அலுவலகம் வருவார், மதியம்வரை இருப்பார். அதற்குப் பிறகு வரமாட்டார். நான் போகும்போது அவர் கார் அலுவலகத்தின் வெளியே நின்றிருந்தது. அவருடைய டிரைவர் "லியாகத் அண்ணே எப்படி இருக் கீங்க?'' என்று விசாரித்தபடி உள்ளே அழைத்துப்போனார்.
என்னை வரச் சொல்லியிருப்பதை விஜயகாந்த் சொல்லியிருப்பார் என்று நினைத்தேன். என்னைப் பார்த்ததும் அங்கிருந்தவர்களின் முகங்களில் எல்லாம் மகிழ்ச்சி. விஜயகாந்த்-இப்ராகிம் ராவுத்தர்-லியாகத் அலிகான் என்பது ஒரு வரலாறு என்பதை அறிந்தவர்கள் அவர்கள்.
இப்ராகிம் ராவுத்தருக்கு என்று தனியாக ஒரு அறை இருக்கிறது. நான் அங்கு போகவில்லை...
ஹாலில் அமர்ந்தேன்.
"உள்ளே போங்கண்ணே'' என்றார்கள் ஹாலில் இருந்தவர்கள்.
"அண்ணன் வரட்டும்'' என்றேன்.
"அவரு வந்துட்டாருண்ணே, ரூம்லதான் இருக்காரு'' என்றார்கள்.
"நான் சொன்னது விஜியண்ணனை''… என்றேன்.
அந்தப் பதிலை அவர்கள் எதிர்பார்க்க வில்லை.
ஷூட்டிங் முடிந்து ராவுத்தர் பிலிம்ஸ் அலுவலகத்திற்கு விஜயகாந்த் வந்தார். ஹாலில் நான் அமர்ந்திருந்ததைப் பார்த்து, "என்னண்ணே இங்க உக்காந்திருக்கீங்க. இப்ராகிமை பாத்தீங்களா, பேசுனீங்களா?'' என்றார்.
"இல்லண்ணே உங்களுக்காகத்தான் வெயிட் பண்ணிக்கிட்டிருந்தேன்''
"வாங்கண்ணே'' என்று என் கையைப் பிடித்துக் கொண்டு இப்ராகிம் ராவுத்தர் இருந்த அறைக்கு அழைத்துப் போனார்.
அவர் முகத்தை நான் நேருக்கு நேராகப் பார்க்கவில்லை. என் முகத்தை அவர் பார்த்தாரா என்று எனக்குத் தெரியாது.
"உக்காருங்கண்ணே'' என்றார் விஜயகாந்த்.
உட்கார்ந்தேன்.
"ஏம்பா,…அண்ணன் வெளிய உக்காந்திருக் காரு... கூப்புட்டுப் பேசாம இருக்க''
இப்ராகிம் ராவுத்தர் பதில் சொல்லவில்லை.
"டேய் நான் கேக்குறேன்ல?'' என்றார் விஜயகாந்த் கோபமாக.
"அவரப் பார்க்கத்தான் ஆபீஸ் வந்திருக்கேன்'' இப்ராகிம் ராவுத்தர்.
என்னிடம் அவர் என்ன பேசுவார்... என்ன பேச முடியும்?
"அண்ணே ஆரம்ப காலங்கள்ல நாம மூணு பேருதான் தனியா உக்காந்து பேசியிருக்கோம். நிறைய பேசியிருக்கோம். அதையெல்லாம் நான் என்னைக்கும் மறக்கமாட்டேன். அன்னிக்கு சாதாரண விஜயகாந்த்தா இருந்தேன். இப்போ பெரிசா வளர்ந்திருக்கேன். நான் வளர்ந்தது மாதிரி உங்கமேல நான் வச்சிருக்கிற பாசமும் வளர்ந்திருக்கு. அது என்னைக்கும் மாறவே மாறாது. மனசுல எவ்வளவு வருத்தமிருந்தாலும் எனக்காக அதையெல்லாம் மறந்திருங்க'' என்றார் விஜயகாந்த்.
அவர் அழைத்ததால்தான் போனேன். "எனக்காக மறந்திருங்க' என்று சொன்னது சாதாரண விஜயகாந்த் இல்லை. சாதனை படைத்த விஜயகாந்த். பல லட்சம் ரசிகர்கள் கொண்டாடிக் கொண்டிருக்கும் விஜயகாந்த். பல கோடி தமிழர்களின் இதயங்களில் இடம் பிடித்திருக்கும் விஜயகாந்த்.
அப்படிப்பட்டவர் என்னை சாதாரணமாக நினைக்கவில்லை. ஒரு சகோதரனாக நினைத்தார். அதனால்தான் என்னிடம் உரிமையோடு கேட்டார்.
அவர் எனக்காக என்னவெல்லாம் செய்தார் என்பதை நான் மறக்கவில்லை.
அதேபோல நான் அவருக்காக என்ன வெல்லாம் செய்தேன் என்பதை அவரும் மறக்கவில்லை.
அதனால்தான் பாசத்தோடு சொன்னார். "மனசுல வருத்தமிருந்தால் மறந்திருங்கண்ணே''
நான் மௌனமாக இருந்தேன்.
என் மௌனத்தை சம்மதமாக எடுத்துக் கொண்டார். இப்ராகிம் ராவுத்தர் டேபிள் மீது இருந்த ஒரு செக்கை எடுத்து நீட்டினார்.
"வாங்கிக்கங்கண்ணே'' என்றார்.
வாங்கிப் பார்த்தேன். என் பெயரில் எழுதப்பட்ட செக். எதற்காக என்று எனக்குப் புரியவில்லை.
" "ஆசைத்தம்பி' படத்துக்கு நீங்கதான் வசனம் எழுதணும். அதுக்கு அட்வான்ஸ்ணே'' என்றார்.
நான் ராவுத்தர் பிலிம்ஸுக்கு வராமல் இருந்த நேரத்தில் அருண்பாண்டியன், அப்பாஸ் இருவரும் நடிக்கும் "ஆசைத்தம்பி' என்ற படத்திற்கு பூஜை போடப்பட்டிருந்தது. வேறு ஒரு வசனகர்த்தா எழுதுவதாக இருந்தது. இப்பொழுது நான் வந்துவிட்டதால் என்னை எழுதச் சொன்னார்கள்.
"ஏற்கெனவே ஒரு வசனகர்த்தாவுக்கு அட்வான்ஸ் கொடுத்திருப்பீங்க. அவரையே எழுதச் சொல்லுங்க. அவருக்கு கிடைச்ச வாய்ப்பை நான் கெடுக்க விரும்பல'' என்றேன்.
"நீங்க எங்கமேல வருத்தப்பட்டு வராம இருந்ததுனாலதான் அவரை எழுதச் சொன்னோம். அதனால அவரு வருத்தப்படமாட்டாரு. அவரை நாங்க பார்த்துக்கறோம்'' என்றார்.
"அண்ணே ஆசைத்தம்பி படத்துல நான் நடிக்கல. ஆனா நான் சொல் றேன். ஓ.கே.ன்னு சொல்லுங்க'' என்றார் விஜயகாந்த்.
அவருடைய அன்புக்காக சம்மதித்தேன். அன்பு என்பது வலிமையான ஆயுதம். அதை வைத்து எதை வேண்டுமானாலும் சாய்த்து விடலாம்.
வீட்டிற்கு வந்து இப்ராகிம் ராவுத்தர் கொடுத்த செக்கை என் மனைவியிடம் கொடுத்தேன். பொதுவாக கணவன்மார்கள், வருமானம் கொண்டு வந்து கொடுத்தால் மனைவிகள் மகிழ்ச்சியடைவார்கள். என் மனைவி அந்த செக்கைப் பார்த்து மகிழ்ச்சியடையவில்லை. மாறாக ருத்ரதாண்டவம் ஆடிவிட்டார். நான் முன்பே அங்கே போனதையோ, இப்ராகிம் ராவுத்தரிடம் செக் வாங்கியதையோ என் மனைவி விரும்பவில்லை. அவருடைய கோபத்தையும் விஜயகாந்த் என் மீது வைத்திருந்த அன்புதான் மாற்றியது. எனக்கும் என் மனைவிக்குமிடையே நடந்த வாக்குவாதத்தை நான் இங்கு சொல்லவில்லை. ஆனால் மனைவி ஒரு மந்திரி என்று சொல்வது எவ்வளவு பெரிய உண்மை என்று பின்னால்தான் புரிந்துகொண்டேன்.
இப்ராகிம் ராவுத்தரிடமிருந்து நான் வாங்கி வந்தது எனக்கு கொடுக்கப்பட்ட செக் அல்ல, எனக்கு வைக்கப்பட்ட செக் என்பதையும் புரிந்துகொண்டேன். புரிய வேண்டிய நேரத்தில் புரியாமல் போனதினால் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் அவர்கள் என் மீது வைத்திருந்த அன்பையும், நம்பிக்கை யையும், நட்பையும் இழந்தேன்.
அதேபோல சொல்ல வேண்டிய விஷயத்தை சொல்ல வேண்டிய நேரத்தில் சொல்லிவிட வேண்டும். காலம் தாழ்த்தி சொல்வதால் ஏற்படும் இழப்புகள் சில நேரங்களில் மிகப்பெரியதாகி விடும்.
இப்ராகிம் ராவுத்தரிடமிருந்து செக் வாங்கிய விபரத்தையும், மீண்டும் அவர்களுக்கு எழுதப் போகிறேன் என்பதையும் சரத்குமாரிடம் நான் உடனே சொல்லியிருக்க வேண்டும். சொல்லாமல் இருந்துவிட்டேன்.
"அரவிந்தன்' பட ஷூட்டிங் தொடங்கியது. அதிலும் கலந்துகொண்டேன். அந்த காலகட்டத்தில் விஜயசாந்தி லேடி சூப்பர் ஸ்டாராக கலக்கிக்கொண்டிருந்தார். அவர் நடிப்பில் "தடயம்' என்ற நேரடித் தமிழ்ப்படம் ஒன்றிற்கு நான் வசனம் எழுத ஒப்பந்தமானேன். அந்தப் படத்தின் தயாரிப்பாளர் ஜோதி பிரசாத் என்னிடம் மிகவும் பிரியமாகப் பழகுவார்.
அவர் ஒருநாள் என்னிடம் கேட்டார்.
"லியாகத் அலிகான் சார்... உங்களை அறிவாளின்னு நெனச்சேன். முட்டாளா இருந்திருக்கீங்களே...!''
அவர் கேட்டது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. நான் பதில் சொல்வதற்கு முன்னால் அவரே அடுத்தடுத்து கேள்விகளையும் கேட்டார்.
(வளரும்...)
படம் உதவி: ஆசைத்தம்பி