aa

(84) முயற்சி நம்முடையது... முடிவு அவனுடையது!

"ராணி மகாராணி' படத்தை சொந்தமாக தயாரித்து இயக்கி, அதை வெளியிடுவதற்கு நான்பட்ட அவஸ்தைகளிலிருந்தும், என மன விரக்தியிலிருந்தும் என்னை மீட்டவர் சரத்குமார் சார் அவர்கள். எனக்கு அவர் உயிர் கொடுத்திருக்கிறார்.

அவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களை ரசிப்பவர். ரசிப்பவர் என்பதை விட நேசிப்பவர். எதாவது ஒரு நிகழ்ச்சியில் அவர் பாட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம் உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலைவணங்காமல் நீ வாழலாம் என்ற எ.ஜி.ஆர் பாடலைத்தான் உணர் வோடு பாடுவார். அதனால்தான் கொடுக்க வேண்டும் என்ற உணர்வு அவரோடு கலந்திருந்தது. ஆனால் எனக்குக் கொடுக்கும் அளவுக்கு அவருக்கு நான் பெரிதாக என்ன செய்து விட்டேன்.

Advertisment

"புலன் விசாரணை' படத்தில் வில்லனாக நடித்தார். நான் அவருக்கு வசனம் எழுதினேன்.

"கேப்டன் பிரபாகரன்' படத்தில் விஜயகாந்த்தின் நண்பனாக நடித்தார். நான் அவருக்கு வசனம் எழுதினேன்.

"தாய்மொழி' படத்திலே கதாநாயகனாக நடித்தார். நான் அவருக்கு வசனம் எழுதினேன்.

Advertisment

என் எழுத்தை நேசித்தார். அதனால் என்னையும் நேசித்தார். அதனால்தான் நான் உதவி என்று கேட்டதுமே கொடுத்தார்.

கேட்டதும் கொடுப்பவனே

கிருஷ்ணா… கிருஷ்ணா…

கீதையின் நாயகனே

கிருஷ்ணா… கிருஷ்ணா…

என்று இந்து மதம் சொல்கிறது.

தட்டுங்கள் திறக்கப்படும்

கேளுங்கள் கொடுக்கப்படும்

கேளுங்கள் கிடைக்கும் என்றார்

இயேசு கேளுங்கள் கிடைக்கும் என்றார்.

என்று கிறிஸ்துவ மதம் சொல்கிறது.

இறைவனிடம் கையேந்துங்கள்

அவன் இல்லையென்று சொல்லுவதில்லை

பொறுமையுடன் கேட்டுப் பாருங்கள்

அவன் பொக்கிஷத்தை மூடுவதில்லை

என இஸ்லாமிய மதம் சொல்கிறது.

மூன்று மதங்களையுமே நேசித்தவர் சரத்குமார். அதனால்தான் நான் கேட்டதுமே கொடுத்தார்.

"ராணி மகாராணி' படம் ரிலீ சான மகிழ்ச்சியைத் தொடர்ந்து என்னிடம் தெலுங்கு மொழியின் உரிமையை வாங்கிய தயாரிப் பாளரைச் சந்திக்க வேண்டும். அக்ரிமெண்ட் போட்டு பணம் வாங்க வேண்டும். கடனை அடைக்க வேண்டும் என்ற முயற்சியில் இறங்கினேன். இறங்கிய பிறகுதான் தெரிந்தது நான் நம்பி ஏறியது மண்குதிரை என்று.

இரண்டு பார்ட்னர் களில் ஒருவரைச் சந்தித் தேன். அவர் சொன்னார். ""லியாகத் சார். நானும் அவரும் பிரிஞ்சிட்டோம். எங்களுக்குள்ள ஒரு பிரச்சினையாயிருச்சு. இப்ப நாங்க இரண்டு பேரும் சேர்ந்து எடுத்துக்கிட்டிருக்கிற படமே முடியுமான்னு தெரியல. அதனால உங்களோட "ராணி மகாராணி' படத்தின் ரீமேக் ரைட்ஸை வாங்க வாய்ப்பில்ல சார்'' என்றார்.

aa

சில லட்சங்கள் கிடைக்கும் என்று போனேன். அதிர்ச்சித் தகவலோடு திரும்பி வந்தேன்.

ஸ்ரீதேவியை வைத்து தெலுங்கு, இந்தி என இரண்டு மொழிகளில் எடுப் பதற்கு உரிமை கேட்டு வந்த தயாரிப் பாளரை திருப்பி அனுப்பினேன். அவருக்கு கொடுத்திருந்தால் எத்த னையோ லட்சங்கள் கிடைத்திருக்கும். வெறும் ஆயிரம் ரூபாய் அட்வான்ஸ் வாங்கிக்கொண்டு, "கொடுத்த வாக்கிலிருந்து தவறமாட்டேன்' என்று அவரிடம் எனது நேர்மையைப் பற்றிப் பேசினேன். எல்லாமே தலைகீழாகிப் போனது.

"முயற்சி செய்வது மட்டும்தான் நாம். முடிவு செய்வது இறைவன்' என்று சொல்வது எவ்வளவு உண்மை என்பதை உணர்ந்து கொண்டேன்.

"ராணி மகாராணி' ரிலீசாவதற்கு முன்னால் இந்த செய்தியைக் கேட்டிருந்தால் எனக்கு பெரிய அதிர்ச்சியாக இருந்திருக்கும். சரத்குமார் செய்த உதவியில் மிகப்பெரிய கண்டத்திலிருந்து தப்பியதால் இந்த அதிர்ச்சி என்னை பெரிதாகப் பாதிக்கவில்லை. இழந்தது பணம் மட்டும்தானே என்று என்னை எளிதாகத் தேற்றிக்கொண்டேன்.

சோதனையான காலங்களில் மட்டுமே ஒன்று நினைவுக்கு வரும்.

இறைவன் கொடுப்பதை யாரும் தடுக்க முடியாது, இறைவன் தடுப்பதை யாரும் கொடுக்க முடியாது.

மனிதர்களை ஆறுதல்படுத்துவதற்காக மதங்களும், புரா ணங்களும், இதிகாசங்களும் இலக்கியங்களும் எவ்வளவோ சொல்லியிருக்கின்றன. நல்வழிப்படுத்துவதற்காகச் சொன்ன பலவற்றை அரசியலும், சில அரசியல்வாதிகளும் தவறாகப் பயன்படுத்திக்கொண்டிருக் கிறார்கள்.

ராணி மகாராணி படத்தால் எனக்கு ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு, வேதனைகளுக்கு, இழப்புகளுக்கு யார் காரணம்.… நாகரிகம் கருதி மேலோட்டமாக சொல்லியிருக் கிறேன். எல்லாவற்றையும் வெளிப் படையாக சொல்வதால் எனக்கு எந்த நிவாரணமும் கிடைத்து விடப் போவதில்லை. எந்த ஆதாயமும் கிடைத்து விடப் போவதில்லை. சிலருடைய வருத்தத்திற்கு ஆளாகலாம். ஆனால் ஒரு திரைப் படைப் பாளி மன உறுதியோடு இல் லாமல் இருந்தால், சரியான திட்டமிடல் இல்லாமல் இருந் தால் என்னவெல்லாம் சோத னைகளைச் சந்திக்க வேண்டி வரும் என்பதை இன்றைய இளைஞர்களுக்கு சொன்னது போல இருக்கும். அதனால்தான் சொல்கிறேன். "ராணி மகாராணி' படத்தால் ஏற்பட்ட அத்தனை கசப்பான அனுபவங்களுக்கும் காரணம், நான் "எங்க முதலாளி' படத்தை இயக்குவதற்கு சம்மதம் சொன்னதுதான். சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களின் படத்தை எழுதி இயக்கும் வாய்ப்பு வந்திருந்த நேரத்தில், அதை விட்டுவிட்டு "எங்க முதலாளி'யை நான் ஏற்றுக் கொள்ளாமல் இருந்திருந்தால் என் வாழ்க்கைப் பாதை மாறியிருக்காது.

அந்த இடத்தில்தான் நான் தோற்றுவிட்டேன். என்னைப் போல நினைத்ததை சொல்ல முடியாமல், நினைத்ததைச் செய்ய முடியாமல் எத்தனையோ திறமையான இயக்குநர்கள் வெற்றியை இழந்திருக்கிறார்கள். மிகச்சிறந்த அறிவாளி, பெரிய சாதனை படைப்பார் என்று நானே வியந்து பழகிய பலபேர் வேறு சில ரின் தலையீட்டை தடுக்க முடியாமல், மன உறுதியோடு இல் லாமல் போய் வெற்றியை இழந்திருக்கிறார்கள். காரில் போன வர்கள் பஸ்ஸில் போகும் நிலைமைக்கு ஆளாகியிருக்கிறார்கள்.

என்னைக் காப்பாற்ற சரத்குமார் வந்ததைப் போல எல்லோருக்கும் வர மாட்டார்கள். அதையும் தாண்டி நான் அடிப்படையில் எழுத்தாளன், என் கையில் பேனா இருக்கிறது. அதனால் என் பயணம் தொடர்ந்துகொண்டிருக்கிறது. அந்தப் பேனாதான் "ராணி மகாராணி' படத்தால் ஏற்பட்ட மனப்புண்ணுக்கு மருந்து போட்டது.

"ராணி மகாராணி' படம் ரிலீசாகி நான்கு மாதங்களுக் குப் பிறகு அன்புச் சகோதரர் ஆர்.கே.செல்வமணியும் நானும் இணைந்த "மக்களாட்சி' படம் வெளியானது. ஏற்கெனவே ஆர்.கே. செல்வமணிக்காக நான் எழுதிய "புலன் விசாரணை', "கேப்டன் பிரபாகரன்' இரண்டு படங்களுமே மிகப்பிரமாண்ட வெற்றியை பெற்றிருந்தன. அதைப்போலவே "மக்களாட்சி' படமும் பெரிய வெற்றியைப் பெற்றது. அந்தப் படத்தில் எனக் குக் கிடைத்த பாராட்டுகளும், கைதட்டல்களும்தான் எனக்கு ஆறுதலாகவும் மனதிற்கு உற்சாகத்தையும், உத்வேகத்தையும் கொடுத்தது. அந்தப் படம் பல அரசியல்களை பகிரங்கமாக சொல்லிய படம். அன்றைய ஆட்சியைப் பற்றி, அன்றைய அரசியல்வாதிகளின் செயல்பாடுகள், ஏமாற்று வேலைகளையெல் லாம் துணிச்சலாக எடுத்துக்காட்டிய படம். மக்கள் எப்படியெல் லாம் ஏமாறுகிறார்கள், ஏமாற்றப்படுகிறார்கள் என்பதைச் சொன்ன படம். மக்களிடம் எழுச்சி ஏற்பட்டால்தான் உண்மை யான மக்களாட்சி மலரும் என்பதை உரக்கச் சொன்ன படம்.

நான் ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன். எனக்கும், ஆர்.கே.செல்வமணிக்கும் ஒரே நோக்கம், ஒரே சிந்தனை இருந்தது. எங்களுக்குள்ளே ஈகோ இல்லை. எங்கள் இருவருக்கும் யாரிடமும் எந்தப் பயமும் இல்லை. அதனால்தான் நாங்கள் இருவரும் இணைந்த படங்கள் புரட்சியான படங்களாக தவறு செய்யும் அரசியல்வாதிகளுக்கு மிரட்சியான படங்களாக வந்தன.

""யோவ்... "மக்களாட்சி' படம் பார்த்துட்டியாய்யா...? பார்க்கலேன்னா உடனே போய் பாருய்யா...'' என தன்னை சந்திக்க வந்த கட்சிக்காரர்களிடம் சொல்லியிருக்கிறார் கலைஞர்.

(வளரும்...)

படம் உதவி: ஞானம்