(82) முடிஞ்சது... ஆனா முடியல!
நான் தயாரித்து இயக்கிய "ராணி மகா ராணி' படத்தை வெளியிடுவதற்குள் நான் பட்ட பாடுகளை, சந்தித்த துரோகங்களை சொல்லிவரு வதை அறிவீர்கள். அந்தத் துயரம் தொடர்கிறது...
"விநியோகஸ்தர்கள் சொல்ற கணக்குப்படி பார்த்தா ஆறு லட்சம் ரூபா வருது. என்ன பண்ணப்போறீங்க, அதை எப்படி சமாளிப்பீங்க லியாகத்?'' என்றார் பி.எல்.எஸ்.
"என்னிடம் பதில் இல்லை... காரணம் என்னிடம் பணம் இல்லை.''
"இப்ராகிம் ராவுத்தரிடம் பேசிப் பார்க்கிறேன்'' என்றார் பி.எல்.எஸ்.
போய்ப் பார்த்தார். அங்கு பேசியதை என்னிடம் சொன்னார்.
"ராவுத்தர் சார், போன தடவை நீங்க கடைசி நேரத்துல மதுரை ஏரியாவை ரிலீஸ் பண்ணாம போனதுனாலயும், அதுக்குண்டான பணம் குடுக்காம விட்டதுனாலயும்தான் இப்ப ஆறு லட்சம் ரூபா பிரச்சினையாயிருச்சு. லியாகத் அலிகான்கிட்ட பணம் இல்ல. மதுரை ஏரியாவுக்கு கொடுக்கிற பணத்தோட ஆறு லட்சம் சேர்த்து நீங்க கொடுத்தீங்கன்னா படம் ரிலீசாகும். இல்லேன்னா மறுபடியும் சிக்கலாயிரும்' என்றிருக்கிறார் பி.எல்.எஸ்.
இப்ராகிம் ராவுத்தரிடம் அவர் தயங்கிப் பேசவேண்டிய அவசியம் இல்லை என்ற கார ணத்தினால் வெளிப்படையாகப் பேசியிருக்கிறார்.
"இல்லண்ணே மதுரை ஏரியாவுக்கு மட்டும் தான் என்னால பணம் கொடுக்க முடியும்' என்றி ருக்கிறார் இப்ரா கிம் ராவுத்தர்.
"நீங்க சும்மா கொடுக்க வேணாம். கடனா கொடுங்க. அவர் உங்க படத்துக்கு வசனம் எழுது வாருல்ல... அந்தச் சம்பளத்துல கழிச்சுக்குங்க' என்று சொல்லியிருக்கிறார் பி.எல்.எஸ்.
"என்கிட்ட இப்ப பணம் இல்லண்ணே' என்று இப்ராகிம் ராவுத்தர் சொல்லியிருக்கிறார்.
"போய்ட்டு வர்றேன்' என்று சொல்லாமல் கூட பி.எல்.எஸ். வெளியே வந்துவிட்டார்.
இதுதான் நடந்தது. "இப்ப என்ன பண்ணப்போறே. இன்னும் ரெண்டு நாள்தான் இருக்கு ரிலீசுக்கு'' என்றார் என்னிடம்.
"முயற்சி பண்றேண்ணே'' என்று மட்டும் கூறினேன்.
இது நடந்தது மதியம். யோசித்து... யோசித்துப் பார்த்து ஒரு முடிவுக்கு வந்தேன்.
அன்று இரவு பிரசாத் ஸ்டுடியோவில் சரத்குமார் சார் ஷூட்டிங். அவரைப் பார்ப்பதற்காக போனேன்.
"வாங்க லியாகத் சார்... எப்படி இருக்கீங்க'' என்றவர்... "நான் லேட்டா வந்துட்டேன்னு தயா ரிப்பாளரும், டைரக்டரும் டென்ஷன்ல இருக்காங்க. அதனால இப்ப வேணாம். நாளைக்கு பகல் ஷூட்டிங் எக்மோர் பிரின்ஸ் பிளாஸாவுல. அங்க வாங்க பேசலாம்'' என்று கூறிவிட்டு அவ சர, அவசரமாக ஷாட்டுக்குப் போய்விட்டார்.
அவர் சொன்னது போல அங்குள்ள சூழ்நிலையில் அவரிடம் விளக்கமாக பேச முடியாது என்று தெரிந்தது. வீட்டுக்கு வந்துவிட்டேன். அவரிடம் கடனாக ஆறு லட்சம் கேட்கலாம் என்றுதான் போனேன். இரவெல்லாம் யோசனை... தூக்கம் வரவில்லை.
சரத்குமார் சார் கொடுப்பாரா? கொடுக்கா விட்டால் என்ன செய்வது? ஏற்கனவே விளம்பரம் கொடுத்து படம் ரிலீஸ்பண்ண முடியாமல் பல பிரச்சினைகள் ஏற்பட்டது. மறுபடியும் ரிலீஸ் பண்ண முடியாமல் போனால் கேவலமாகிவிடுமே என்று மனம் வலித்தது. இதுவரை சேர்த்து வைத்த நல்லபெயர் போய் அவமானமாகி விடுமோ என்று பயம் ஏற்பட்டது. பேசாம தற்கொலை செய்துகொள்ளலாமா என்றுகூடத் தோன்றியது. இந்த மாதிரி சூழ்நிலைகளில் சில தயாரிப்பாளர்கள் என்னிடம் அப்படிச் சொல்லியதுண்டு. அந்த நேரத்தில் அப்படி ஒரு மனநிலை ஏற்படும் என்று சொல்லியிருக்கிறார்கள். அவர் கள் சொன்னது போலவே எனக்கும் தோன்றியது. நாளை சந்திக்கும்பொழுது சரத்குமார் சார் பணம் இல்லையென்று சொன்னால் தற்கொலையைத் தவிர வேறு வழியில்லை என்று என் மனம் சொல்லியது.
மறுநாள் காலை பத்து மணிக்கு எக்மோர் பிரின்ஸ் பிளாஸாவுக்குப் போனேன். வணக்கம் சொல்லி சரத்குமார் சார் முன்னால் போய் நின்றேன்.
"சாரி லியாகத் சார். நேத்து உங்ககூட பேச முடியாம போயிருச்சு... உக்காருங்க'' என்றார்.
உட்கார்ந்தேன். எப்படி பேச்சை ஆரம்பிப்பது என்று தெரியவில்லை.
"ஏன் டல்லா இருக்கீங்க? ஏதாவது பிரச்சினையா?'' என்றார்.
"ஆமா சார்'' என்று கூறி நடந்த அத்தனையும் சொல்லி முடித்தேன். என் கண்கள் கலங்கிப் போய் கைகள் நடுங்கிக்கொண்டிருந்தது.
"ஆறு லட்சம் வேணும் சார், இல்லேன்னா படம் ரிலீசாகாது சார்.''
"ஆறு லட்சம் இப்ப என்கிட்ட இல்லியே... என்ன பண்ணலாம்?'' என்று யோசிக்க ஆரம்பித்தார். எனக்கு மனம் "படக் படக்' என்று அடித்துக் கொண்டது.
"பைனான்ஸியருக்கு பணம் கொடுத்தாச்சா லியாகத் சார்'' என்றார்.
"மெயின் பைனான்ஸியருக்கு கொடுத்தாச்சு சார். சிதம்பரத்துல ஒருத்தர் கிட்ட ஆறு லட்சம் வாங்கியிருக்கேன் அதைக் கொடுக்கணும். ஜெமினி லேப்புக்கு கட்டணும் சார்'' என்றேன்.
"சிதம்பரம் பைனான்சியருக்கு ஆறு லட்ச ரூபாயை ரிலீசுக்கு அப்புறம் கொடுக்க முடியுமா'' என்றார்.
"அவர் ஒத்துக்கணுமே சார். அவருக்கு செட் டில் பண்ணாத்தான் சார் என்.எஸ்.சி. ஏரியாவை ரிலீஸ்பண்ண முடியும். அதை பிளட்ஜ் பண்ணித் தான் ஆறு லட்சம் வாங்கியிருக்கேன்'' என்றேன்.
யோசிக்கவே இல்லை. "அந்த சிதம்பரம் பைனான்சியருக்கு போன்பண்ணி இங்க வரச் சொல்லுங்க'' என்றார்.
பாண்டிபஜாரில் ஒரு லாட்ஜில் ரூம் எடுத்து தங்கியிருந்தார்கள். அவர்களுக்கு போன் பண்ணி னேன். அவர்களும் அரைமணி நேரத்தில் ஷூட் டிங் நடக்கும் இடத்திற்கு வந்து விட்டார்கள்.
அவர்களிடம் சரத்குமார் சார் பேசினார்.
"லியாகத் சார் எல்லா விபரமும் சொன் னாரு. உங்களுக்கு கொடுக்கவேண்டிய ஆறு லட்சத்தை நான் கொடுத்திடுறேன். ஆனா இப்போ இல்ல... ஒரு வாரம் கழிச்சு. அந்தத் தேதி போட்டு இப்பவே நான் உங்களுக்கு செக் குடுக் கிறேன், லெட்டரும் எழுதிக் கொடுக்கிறேன். ஓ.கே.வா?'' என்றார். சரத்குமார் சார் சொன்னதும், அவர்களும் மறுப்பு சொல்லாமல் உடனே "ஓ.கே.' என்றார்கள். நான் சற்று நிம்மதியானேன்.
சிதம்பரம் பைனான்சியரும் அவருடைய பார்ட்னரும் தனியாகப் போய் எதோ பேசினார்கள். பேசிவிட்டு சரத்குமார் சாரிடம் வந்தார்கள்.
"சார் தப்பா நெனைச்சுக்காதீங்க. இப்ப எங்களுக்கு பணம் தேவைப்படுது. மூணு லட்சம் ரூபாய் கேஷா கொடுங்க, மூணு லட்சத்துக்கு வேணும்னா செக் கொடுங்க'' என்றார்கள்.
மறுபடியும் ஒரு சிக்கல்.
மூணு லட்சத்துக்கு என்ன பண்றது என்று யோசித்தார் சரத் சார். அவரே ஆலோசனையும் சொன்னார்.
"லியாகத் சார். ஜெமினி லேப்புக்கு கொடுக்க வேண்டிய பணத்துல மூணு லட்சம் ரூபாயை இவங்களுக்கு கொடுங்க. மூணு லட்சம் ரூபாய்க்கு நான் செக் கொடுத்திர்றேன்'' என்றார்.
"மூணு லட்சம் குறைச்சுக் கட்டுனா ஜெமினி லேப்புல ஒத்துக்கமாட்டாங்களே சார்'' என்றேன்.
"லேப்புக்கு நான் பேசறேன். மூணு லட்ச ரூபாயை நான் ஏத்துக்கறேன்'' என்றார்.
உடனே ஜெமினி லேப்புக்கு போன் செய்தார். அவர் சொந்தமாகத் தயாரித்துக் கொண்டிருந்த "ரகசிய போலீஸ்' படம் ஜெமினி லேப்பில்தான் அக்ரிமெண்ட் போடப்பட்டிருந்தது.
சரத்குமார் போனில் பேசியதும் கட்ட வேண்டிய பணத்தில் 3 லட்ச ரூபாய் குறைத்துக்கொள்ள அவர்களும் சம்மதித்தார்கள்.
"போங்க லியாகத் சார்... போய் நடக்க வேண்டிய வேலைகளைப் பாருங்க'' என்றார்.
கண்கலங்க அவர் கைகளைப் பிடித்துக்கொண்டேன். "எல்லாம் நல்லபடியா நடக்கும் போங்க'' என்றார்.
சிதம்பரம் பைனான்சியரை அழைத்துக்கொண்டு நேரே பி.எல்.எஸ். அவர்களிடம் போய் நடந்த விபரங்களைச் சொன்னேன்.
"கை கொடுக்க வேண்டியவங்க கொடுக்கலேன்னாலும் கடவுள் உங்களைக் கைவிடல'' என்று நெகிழ்ந்தார் பி.எல்.எஸ்.
அன்று மாலை ஒவ்வொரு விநியோகஸ்தர்களாக ஜெமினி லேப் வந்தார்கள். பி.எல்.எஸ்.தான் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டார். அவர்களிடம் இருந்து வாங்கிய பணத்தில் இருந்து சிதம்பரம் பைனான்சியருக்கு மூணுலட்ச ரூபாய் கொடுத்தார். அவர்கள் லேபுக்கு லெட்டர் கொடுத்தார்கள்.
இரவு எட்டு மணி. எல்லா ஊர்களுக்கும் படப்பெட்டி களை அனுப்பும் வேலைகளை ஆரம்பிக்கும்பொழுது லேபில் திடீரென்று முட்டுக்கட்டை போட்டார்கள். "சரத்குமார் சார் சொன்ன 3 லட்ச ரூபாயை கட்டினால்தான் படப்பெட்டிகளை அனுப்புவோம்' என்றார்கள்.
மறுபடியும் அதிர்ச்சி
.(வளரும்...)