dd

(81) என் சட்டையைப் பிடிக்கும் அளவுக்கு....!

"ராணி மகாராணி' படப்பெட்டியை வெளியூர்களுக்கு எடுத்துக்கொண்டு போகவேண் டிய விநியோகஸ்தர்கள் டென்ஷனோடு காத்திருந்தார்கள்.

என்ன செய்வது என்று தெரியாமல் ஜெமினி லேப் வந்தேன். "மேனேஜர்கிட்ட பேசிட்டு வர்றேன்'' என்று கூறிவிட்டு அவரைப் போய்ப் பார்த்தேன்.

Advertisment

அவர் என்ன செய்வார். சம்பளம் வாங்கிக் கொண்டு வேலைபார்க்கும் மேனேஜர். "நடைமுறை என்னவோ அதை மீறி எதுவும் செய்ய முடியாது' என்று கூறிவிட்டார்.

வெளியே வந்து என் உதவி இயக்குநரை அழைத்தேன். விஷ யத்தைச் சொன்னேன். படப்பெட்டி போகாது. படமும் நாளை ரிலீசா காது. இந்த விபரத்தை விநியோகஸ்தர்களிடம் சொன்னால் கொதித்துப் போவார்கள். இங்கேயே என்னை அசிங்கப்படுத்திவிடுவார்கள். அடிக்கப் பாய்ந்துவிடுவார்கள். லேபில் வைத்து இப்படி நடக்கவேண்டாம் என நினைக்கிறேன். அவர்களி டம் எதையாவது சொல்லிவிட்டு நான் வெளியே போய்விடுகிறேன். நான் போன பிறகு நீ அவர்களி டம் விஷயத்தைச் சொல். நாளைக் காலையில் அவர்களை நம் ஆபீசுக்கு வரச் சொல் என்று சொல்லிவிட்டு விநியோகஸ்தர்களுக்குத் தெரியாமல் லேபிலிருந்து வெளியே போய்விட்டேன்.

இரவு ஒன்பது மணிக்கு என் உதவி இயக்குநர் நான் இருக்கும் இடத்திற்கு வந்தார்.

Advertisment

"லேபில் ஒரு பூகம்பமே நடந்தது'' என்று சொன்னார்.

தியேட்டர்களை ஒப்பந்தம் செய்து ஊரெல்லாம் போஸ்டர் ஒட்டி கட் அவுட் வைத்து படப் பெட்டியுடன் அவரவர் ஊர்களுக் குப் போகலாம் என்று நினைத்து வந்தவர்கள், ஏற்கனவே என்னிடம் ஒப்பந்தம் போட்டு பாதிப்பணம் வரை கொடுத்து விட்டு மீதிப் பணத்தோடு வந்தவர்கள். அவர்கள் மனநிலை எப்படி இருக்கும்? மறுநாள் "ராணி மகாராணி' என்று விளம்பரம் செய்திருந்த தியேட்டர்காரர்களை அவர்கள் எப்படிச் சமாளிப்பார்கள்.

அங்கு நடந்தவைகளை என் உதவியாளர் சொன்னார். அவர்களின் கோபத்தை, ஆத்திரத்தை, வேதனையை, எல்லாவற்றையும்விட அவர்கள் பக்கம் இருந்த நியாயத்தை வெறும் வார்த்தைகளில் சொல்லி விளக்கிவிட முடியாது. அதேபோல நான் மனம் நொறுங்கிப் போய், நிலைகுலைந்து போனதையும் வார்த்தைகளால் சொல்ல முடியாது.

aa

விநியோகஸ்தர்கள் என் வீட்டிற்குத் தேடி வந்தாலும் வந்துவிடுவார்கள் என்று அன்று இரவு நான் வீட்டில் தங்கவில்லை.

மறுநாள் காலை விநியோகஸ்தர்கள் என் அலுவலகம் வந்தார்கள். வார்த்தைகளால் சுட் டெரித்துவிட்டார்கள். ஒருசிலர் என்னை சட்டை யைப் பிடிக்கும் அளவுக்கு ஆவேசமானார்கள்.

"இன்னிக்குப் படம் ரீலிசாகியிருந்தால் வசூல் சூப்பரா இருந்திருக்கும். வேற எந்தப் படமும் ரிலீஸ் இல்ல. எல்லாத்தையும் கெடுத்திட்டீங்களே...''

"என்ன...க்கு படம் எடுக்க வந்தீங்க'' என்றுகூட ஒருவர் திட்டினார்.

அவர்கள் பேசியதோ, நடந்து கொண்டதோ எனக்குத் தவறாகத் தெரியவில்லை. அவர்கள் வியாபாரிகள். என்னை நம்பி பணம் கொடுத்து அக்ரிமெண்ட் போட்டவர்கள். நான் சொன்னபடி படப்பெட்டியை கொடுக்கவில்லை. சொன்ன தேதியில் படத்தை ரிலீஸ் செய்யவில்லை. ஒரு தயா ரிப்பாளராக நான் சொன்னபடி நடந்துகொள்ள வில்லை. வாக்குத் தவறிவிட்டேன். அதனால்தான் அவர்கள் வாய்க்கு வந்தபடி பேசுகிறார்கள்.

"போஸ்டர் ஒட்டி, விளம்பரம்பண்ணி லோக்கல் பேப்பர்ல விளம்பரம் கொடுத்து நிறைய பணம் செலவழிச்சுட்டோம். அதுக்கெல்லாம் என்ன பதில் சொல்லப் போறீங்க?''

"சரி... மறுபடியும் படத்தை எப்ப ரிலீஸ் பண்ணப் போறீங்க?''

"பண்ணுவீங்களா. மாட்டீங்களா..?''

"எங்களுக்கு உங்க படமே வேணாம். நாங்க குடுத்த அட்வான்ஸ் பணத்தை திருப்பிக் கொடுத் திருங்க'' -இப்படி மாறி மாறிப் பேசினார்கள்.

எதற்குமே பதில் சொல்ல முடியாதவனாக அமர்ந்திருந்தேன்.

நான் வாய்விட்டுக் கதறவில்லை.

எப்படி என்னை கட்டுப்படுத்திக் கொண்டேன் என்றே தெரியவில்லை.

சிறிது நேரம் என் அலுவலகம் அமைதியாக இருந்தது.

நான் எல்லோரிடமும் நன்றாகப் பழகியிருந் தேன். அன்பு, பணிவு, எளிமை சாதாரணமானவர் களைக் கூட சமமாக மதித்து நடக்கின்ற விதம். இதையெல்லாம் கடைப்பிடித்து வாழ்ந்தவன். அதனால் சிறிது நேரத்தில் சூழ்நிலை மாறியது.

என் மீது கோபப்பட்டு ஆத்திரப்பட்டு பேசிய விநியோகஸ்தர்கள் எல்லாரும் எனக்கு ஆறுதலாகப் பேச ஆரம்பித்தார்கள்.

"லியாகத் அண்ணே... நீங்க என்ன பண்ணு வீங்க. நம்பி ஏமாந்துட்டீங்க. எங்க மனசே கொதிச் சுப் போயிருக்கு. உங்க மனசு எப்படி கொதிச்சுப் போயிருக்கும். நாங்க தப்பாப் பேசியிருந்தா சாரிண்ணே. படத்தை எப்போ ரிலீஸ் பண்றதுன்னு முடிவு பண்ணி சொல்லுங்க. முதல்ல மதுரை ஏரியா விவகாரத்தை முடிங்க. அதனாலதான் உங்களுக்கு இந்தப் பிரச்சினையே வந்துச்சு...''

என்னைக் குத்திக் காயப்படுத்தியவர்களே மருந்து போடுவது போல பேசினார்கள்.

தலைக்கனமும், ஆணவமும் இல்லாமல் வாழ்ந்தால் அதுவே நம்மை கேடயமாக இருந்து காப்பாற்றும் என்பதை நான் உணர்ந்த தருணம் அது. மீண்டும் ரிலீஸ் தேதியை முடிவு செய்ய வேண்டும். அதற்கு சரியாக திட்டமிட வேண்டும். என்ன செய்வது என்று யோசித்தேன்.

என் நினைவுக்கு வந்தவர் பி.எல்.எஸ். அவரை சுருக்கமாக அப்படித்தான் அழைப்பார்கள். சினிமா வில் அனுபவமிக்க, திறமையான, நம்பிக்கையான மீடியேட்டர் என்று மதிக்கப்படுபவர். அவரைச் சென்று சந்தித்தேன். என் நிலைமைக்காக வருத்தப்பட்டார்.

"அண்ணே "ராணி மகாராணி' படத்தை ரிலீஸ் பண்ற பொறுப்பை உங்ககிட்ட கொடுக் கிறேன். நீங்க யார்கிட்ட பேசணுமோ, என்ன பேசணுமோ பேசி படத்தை நல்லபடியா ரிலீஸ் பண்ணிக் கொடுத்து என்னைக் காப்பாத்துங் கண்ணே'' என்றேன்.

"ஏன் லியாகத் கலங்குறே. உன் கையில் பேனா இருக்கு. யார் காப்பாத்தலேன்னாலும் அது உன்னைக் காப்பாத் தும்'' என்றார். பட ரிலீஸ் விஷயத்தில் மறுபடியும் எந்தக் குழப்பமும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக பி.எல்.எஸ்.ஐ தேடிப்போனேன். அவர் சொன்ன வார்த்தைகளால் நிம்மதியாகத் திரும்பி வந்தேன்.

பி.எல்.எஸ். அவர்கள் மட்டும் தனியாகப் போய் இப்ராகிம் ராவுத்தர் அவர்களைச் சந்தித்தார்.

"ராவுத்தர் சார். தப்பா நெனைக்காதீங்க. மதுரை ஏரியா விஷயத்துல நடந்த குழப்பத்துனாலதான் "ராணி மகாராணி' படம் ரிலீஸ்லயும் குழப்பமாயிருச்சு. படம் ரிலீசாகல. பாவம் லியாகத் அலிகான் ரொம்பவும் மன உளைச்சலுக்கு ஆளாயிட் டாரு. பரவாயில்ல. போனது போகட்டும். இப்ப ரிலீஸ் பண்ணிக் கொடுக்கிற பொறுப்பை என்கிட்ட கொடுத்திருக்காரு. எப்ப ரிலீஸ் பண்ணலாம்னு சொல்லுங்க. அந்த தேதியிலேயே ரிலீஸ் பண்ணலாம்' என்று பி.எல்.எஸ். கேட்டிருக்கிறார். காலண்டரை புரட்டிப் பார்த்துவிட்டு ஒரு தேதி சொல்லியிருக்கிறார் இப்ராகிம் ராவுத்தர்.

(அந்தத் தேதி 23-06-1995) பி.எல்.எஸ். அதற்குச் சம்மதம் சொல்லிவிட்டு என்னிடம் வந்தார். நடந்ததைச் சொன்னார்.

"அவர் விருப்பப்படியே ஏற்பாடு செய்யுங்கண்ணே'' என்றேன்.

ராணி மகாராணி படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களி டம் போனில் பேசி சம்மதம் வாங்கினார் பி.எல்.எஸ். ரிலீஸ் தேதியைப் போட்டு செய்தித்தாள்களில் விளம்பரம் கொடுத்தேன். மறுபடியும் தேதி போட்டு விளம்பரம் கொடுத்து விட்டீர்கள். இந்த முறையாவது சொன்னபடி ரிலீஸ் பண்ணிருவீங்களா என்று என் நலம் விரும்பிகள் கேட்டார்கள். சினிமா நண்பர்களும் கேட்டார்கள்.

ரிலீசுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு பி.எல்.எஸ். என்னை அவசரமாக அழைத்தார்.

"என்னண்ணே. எதுவும் பிரச்சினையா?'' என்றேன்.

"பிரச்சினைதான் தம்பி. ரிலீசுக்கு முதல் நாள் காலையிலேயே பணத்தோட வந்திருங்கன்னு எல்லா விநியோகஸ்தர்களுக்கும் போன் பண்ணேன். போன தடவை ரிலீஸ் தேதி போட்டு விளம்பரம் பண்ணதுனால நாங்க போஸ்டர் ஒட்டினோம். லோக்கல் பேப்பர்ல விளம்பரம் குடுத்தோம். அந்த செலவெல்லாம் கழிச்சுட்டுதான் கொடுப்போம்னு எல்லாருமே சொல்றாங்க'' என்றார்.

அதிர்ச்சியோடு "எவ்வளவுண்ணே குறைச்சுக் கொடுப்பாங்களாம்?'' என்றேன்.

"அவங்க சொல்ற கணக்குப்படி பார்த்தா ஆறு லட்சம் ரூபா வருது. அதை எப்படி சமாளிப்பீங்க?'' என்றார். (1995ல ஆறு லட்சம் பெரிய தொகை)

நினைக்கும்போதே எனக்கு திக்கென்றிருந்தது.

சரத்குமாரிடம் கடன் கேட்டுப் போனேன்...

(வளரும்...)