ff

(80) ரத்தக்கண்ணீர் வடியவிட்ட ராவுத்தர்!

ரத்குமார் அவர்கள் எனக்கு செய்தது எவ்வளவு பெரிய உதவி என்பதைச் சொல்வதற்கு முன்னால் அது சம்பந்தமான சில விஷயங்களை உங்களுக்குச் சொல்லவேண்டும்.

"ராணி மகாராணி' படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்து முதல் பிரதி (First Copy) ரெடியானது. வியாபாரத்திற்காக விநியோகஸ்தர்களுக்கும், சினிமா மீடியாக்களுக்கும் போட்டுக் காட்டினேன். ரசித்துப் பார்த்தார்கள். பல காட்சிகளில் விழுந்து விழுந்து சிரித்தார்கள். மதுரை, ராமநாதபுரம் ஏரியாவைத் தவிர மற்ற எல்லா ஏரியாக்களும் வேகமாக வியாபாரமாகி விட்டது. இப்ராகிம் ராவுத்தர் படத்தைப் பார்த்தார். படத்தை நன்றாக ரசித்தார். அவர் நகைச்சுவையை சிரித்து, சிரித்து கண்களில் நீர் வரும் அளவுக்கு ரசிப்பார்.

Advertisment

"எல்லா ஏரியாவும் போயிருச்சு. மதுரை, ராமநாத புரம் ஏரியா பேசிக்கிட்டிருக்காங்க'' என்றேன் அவரிடம்.

"மதுரை ஏரியாவை நான் வாங்கிக்கிறேண்ணே'' என்றார் உடனே.

அப்பொழுது விஜயகாந்த்தின் அப்பா -அம்மா பெயரில் ஆண்டாள் அழகர் ஆகியோரின் கம்பெனி மதுரையில் இருந்தது. அதன்மூலம் விஜயகாந்த் நடித்த படங்களை ரிலீஸ் செய்ததோடு வேறு படங்களையும் ரிலீஸ் செய்ய நினைத்தார் இப்ராகிம் ராவுத்தர்.

Advertisment

"மதுரை ஏரியாவுக்கு என்ன விலை முடிவு பண்ணி வச்சிருக்கீங்க'' என்றார்.

நான் சொன்னேன்.

"அந்த விலையை நான் கொடுத்துவிடுகிறேன்'' என்றார்.

நானும் "சரி'' என்று சொன்னேன்.

"ரிலீஸ் தேதி முடிவு பண்ணவா?'' என்று கேட்டேன்.

"உடனே ஏற்பாடு பண்ணுங்க'' என்று கூறினார்.

"ராணி மகாராணி' படத்தை வாங்கிய மற்ற ஏரியா விநியோகஸ்தர்களிடம் கலந்து பேசி ரிலீஸ் தேதியை முடிவு செய்து விளம்பரம் கொடுத்தேன். விளம்பரத்தைப் பார்த்ததும், "மதுரை ஏரியாவுக்கு வாங்கிக் கொள்கிறேன்' என்று ஒரு விநியோகஸ்தர் பணத்துடன் வந்தார்.

"லியாகத் அலிகான் சார் மொத்த பணத் தையும் இப்பவே கொடுக்கிறேன்... இன்னிக்கே அக்ரிமெண்ட் போட்டுக்கலாம்'' என்றார்.

"சார், இப்ராகிம் ராவுத்தர் வாங்கிக்கிறேன்னு சொல்லியிருக்காரு. ஆனா அக்ரிமெண்ட்டும் போடல. பணமும் கொடுக்கல. தியேட்டர்களுக்கு கொடுக்க வேண்டிய போட்டோ கார்ட்ஸ் மட்டும் அவர்கிட்ட கொடுத்திருக்கேன். அவர்கிட்ட விபரத் தைச் சொல்லிட்டு போட்டோ கார்ட்ஸையும் வாங்கிட்டு வந்திடுறேன். நீங்க என் ஆபீஸ்லயே இருங்க'' என்று சொல்லிவிட்டு இப்ராகிம் ராவுத்தரை பார்த்து விபரம் சொன்னேன்.

"மதுரை ஏரியாவுக்கு பணத்தோட வந்து வெயிட் பண்றாங்கண்ணே...''

உடனே இப்ராகிம் ராவுத்தர் "நான்தான் வாங்கிக்கிறேன்னு சொல்லிட்டேன்ல. அப்புறம் எதுக்கு இன்னொருத்தருக்கு விக்கணும்னு நினைக்கிறீங்க?'' என்றார்.

"இல்லண்ணே நாம இன்னும் அக்ரிமெண்ட் போடல. அதனாலதான் அவர்கிட்ட பேசினேன்'' என்றேன்.

"ரிலீசுக்கு முதல்நாள் மொத்தப் பணமும் கொடுத்திடுறேன். அப்ப அக்ரிமெண்ட் போட்டுக்க லாம். இல்ல முன்னாடியே அக்ரிமெண்ட் போடுறதா இருந்தாலும் ரிலீசுக்கு முதல்நாள் கொடுத்திடுறேன். அன்னைக்குதானே லேப்ல பணம் கட்டணும்'' என்று சொன்னார்.

நான் திரும்பி வந்து என் ஆபீஸ்ல காத்திருந்த விநியோகஸ்தரிடம் விஷயத்தைச் சொன்னேன்.

"ராவுத்தரே வாங்கிக்கிறேன்னு சொல்லிட் டாருண்ணே... சாரிண்ணே'' என்றேன்.

"நீங்கள்லாம் ஒரே குரூப் சார். மீறிப் பேச முடியாதுல்ல'' என்று கூறிவிட்டு அவர் போய் விட்டார்.

dd

நான் பேப்பரில் ரிலீஸ் தேதி போட்டு விளம்பரம் கொடுத்தவுடனே, படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் நல்ல, நல்ல தியேட்டர்களாக புக் செய்துவிட்டார்கள். அதுவும் பல ஊர்களில் மினி தியேட்டர்களாக புக் செய்துவிட்டார்கள். அந்த தேதியில் எனது "ராணி மகாராணி' படம் மட்டும்தான் ரிலீஸ். அதனால் நல்ல தியேட்டர்கள் கிடைத்தன. ஒரே ஒரு படம் ரிலீஸ் ஆவதால் வசூ லும் நன்றாக இருக்கும் என்று விநியோகஸ்தர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார்கள்.

படம் ரிலீஸ் ஆகும் தேதிக்கு மூன்று நாட்களுக்கு முன்பாக தமிழ்நாட்டில் "ராணி மகாராணி' ரிலீசாகும் ஊர்களில் எல்லாம் போஸ்டர்கள் ஒட்டப்பட்டது. தயாரிப்பாளர் என்ற முறையில் நானும் செய்தித்தாள்களில் விளம்பரம் கொடுத்துக்கொண்டிருந்தேன். படம் ரிலீசுக்கு முதல்நாள் படப்பெட்டிகளை எடுத்துப்போவதற்காக விநியோகஸ்தர்கள் பணத்துடன் சென்னை வந்துவிட்டார்கள்.

ஜெமினி லேப்பில் கட்டவேண்டிய முழுப் பணத்தையும் கட்டினால்தான் படப்பெட்டிகளை கொடுப்பார்கள். எல்லா ஊர்களுக்கும் அனுப்ப முடியும். மதுரை ஏரியாவுக்கு வரவேண்டிய பணம் இப்ராகிம் ராவுத்தரிடம் இருந்து வரவில்லை. மாலை ஆறு மணிக்கு வரச்சொல்லியிருந்தார். போய்ப் பார்த்தேன்.

பணம் கொடுப்பதற்கு பதில் மிகப்பெரிய அதிர்ச்சியைக் கொடுத்தார்.

"அண்ணே மதுரையில நாளைக்கு ரிலீஸ் பண்ணலண்ணே. இரண்டு வாரம் கழிச்சு ரிலீஸ் பண்ணலாம்னு நினைக்கிறேன்'' என்றார்.

"நாளை ரிலீஸ் பண்றதுக்காக தியேட்டர் எல்லாம் முடிவு பண்ணி அக்ரிமெண்ட் போட்டிருப்பீங்களே'' என்றேன்.

"நாளை ரிலீசுக்காக நான் தியேட்டரே எடுக்கவில்லை'' என்றார். அவர் சொன்ன பதில் எனக்கு மேலும் அதிர்ச்சியாக இருந்தது.

"இதை என்கிட்ட சொல்லவே இல்லியேண்ணே. இப்படி ஒரு முடிவுல நீங்க இருந்தா, பணத்தோட வந்த பார்ட்டிக்கு நான் மதுரை ஏரியாவைக் கொடுத்திருப்பேனே. நீங்கதானே வேண்டாம்னு சொன்னீங்க'' என்றேன்.

அவரிடமிருந்து பதில் இல்லை.

"சரிண்ணே. நீங்க இரண்டுவாரம் கழிச்சே படத்தை ரிலீஸ் பண்ணிக்குங்க. நீங்க மதுரை ஏரியாவுக்கு கொடுக்கிறதா சொன்ன பணத்தையும் ஜெமினி லேப்ல கட்டுனாத்தான் மத்த ஊர்களுக்கு படப்பெட்டியை அனுப்புவாங்க. அந்தப் பணத்தை கொடுங்க'' என்று கேட்டேன்.

"படம் எப்ப ரிலீஸ் பண்றேனோ அப்ப கொடுக்கிறேண்ணே. இப்ப நான் பணம் ரெடி பண்ணல'' என்றார்.

எனக்கு தலையில் இடி விழுந்தது போல இருந்தது. வேறு ஆளாக இருந்திருந்தால் என்னுடைய கோபம் வெளிப்பட்டிருக்கும். அவரிடம் எதுவும் பேச முடியவில்லை.

படம் ரிலீசாகும் முறை அவருக்குத் தெரியும். அவரே சொந்தமாகப் படங்கள் எடுத்து அனுபவப்பட்டிருப்பவர். ஒரு ஊருக்கு படப்பெட்டி அனுப்ப வேண்டும் என்றால் கூட லேப்பில் மொத்தப் பணத்தையும் கட்டினால்தான் கொடுப்பார்கள். பைனான்சியர்களுக்கு கொடுக்க வேண்டிய பணத்தையும் கொடுத்து அவர்களிடம் லெட்டர் வாங்க வேண்டும். இது லேபின் நடைமுறை.

என்ன செய்வது என்று தெரியாமல் ஜெமினி லேப் வந்தேன். வெளியூர்களுக்கு படப்பெட்டியை எடுத்துக்கொண்டு போகவேண்டிய விநியோகஸ்தர்கள் டென்ஷனோடு காத்திருந்தார்கள்.

காரில் வந்து நான் இறங்கியதுமே என்னைச் சூழ்ந்து கொண்டார்கள்.

"என்ன சார் எங்க பணத்தை கட்டிரவா. இப்ப பெட்டி கிடைச்சாதான் நாளைக் காலையிலே கரெக்ட் டயத்துக்கு ஷோ போட முடியும்'' என்றார் திருநெல்வேலி விநியோகஸ்தர்.

"கொஞ்சம் பொறுங்க. மேனேஜர்கிட்ட பேசிட்டு வர்றேன்'' என்று கூறிவிட்டு அவரைப் போய்ப் பார்த்தேன்.

"சார். மதுரை ஏரியா ரெண்டு வாரம் கழிச்சு ரிலீஸ் பண்ணப் போறதா ராவுத்தர் சொல்லிட் டாரு. அந்தப் பணத்தை மட்டும் அப்ப கட்றேன், மத்த பணமெல்லாம் இப்பக் கட்டறேன். பெட்டிய குடுங்க சார்'' என்றேன்.

"என்ன லியாகத் அலிகான். நீங்க சினிமாவுக்கு புதுசு மாதிரி பேசுறீங்க. எங்களுக்கு ஃபுல் செட்டில்மெண்ட் வந்தாதான் பெட்டிய லேப்ல இருந்து எடுத்துட்டுப் போகமுடியும்னு உங்களுக்கு நல்லாவே தெரியும்ல'' என்றார்.

அவரிடம் கெஞ்சினேன். மானம், மரியாதை, கௌரவம் போய்விடும் என்று அழாத குறையாகப் பேசினேன்.

(வளரும்...)